திருப்பாண்டிக்கொடுமுடி


பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 1

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

கற்றவர்கள் வணங்கித் துதிக்கின்ற புகழையுடைய கறையூரில் உள்ள , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நல்ல தவவடிவினனே , எனக்கு வேறு துணையில்லையாகும்படி , உனது திருவடியையே துணையாக மனத்தில் துணியப்பெற்றேன் ; அவ்வாறு துணியப்பெற்ற பின்பே , நான் மனிதனாய்ப்பிறந்தவனாயினேன் ; அதுவன்றி , இனியொரு பிறப்பிற் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப்பெற்றேன் ; இனி உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` அங்ஙனஞ் சொல்லுமாறு பயில்வேன் ` என்றவாறு ` இல்லையாக ` என்பது , ` இன்றி ` எனத் திரிந்தது . ` பெற்றலும் ` என்றதில் றகர ஒற்று , விரித்தல் . ` பெறலும் ` எனப் பின்னர் வருகின் றமையின் , ` பாவித்தேன் ` என்றதற்கு , ` பாவிக்கப்பெற்றேன் ` என்பது பொருளாயிற்று . ` கறையூர் ` என்பது தலத்தின் பெயர் ; ` பாண்டிக் கொடிமுடி ` என்பது கோயிலின் பெயர் ; ` கறையூர் ` என்பதனையும் வைப்புத்தலம் என்றார் உளர் ; இவ்வாறே பலவற்றையும் கூறுதல் அவர்க்கு இயல்பென்க . ` நமச்சிவாய ` என்னும் சொல் , தன்னையே உணர்த்தி நின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 2

இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாறு , வளைவாக மேலால் விளங்க இடப்படும் மாலையைக் கொணர்ந்து உன் திருவடியை வணங்கித் துதிக்கின்ற . ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , தோழமை கொண்டவனே , உன்னால் விரும்பப்பெற்றவனாகிய யான் , உன் திருவடியைத் துதிக்கின்ற அடியவர்களால் ` இவன் நிலையில்லாத மனத்தை யுடையவன் ` என்று இகழப்பட்ட நாள்களும் , அங்ஙனம் அவர்கள் இகழ்தற்கு ஏதுவாக நான் உன்னை மறந்துவிட்ட நாள்களும் ஆகிய இவைகளை , அடியேன் அழிந்த நாள் என்று கருதுவதன்றி வேறாகக் கருதமாட்டேன் ; ஆதலின் , நான் உன்னை மறக்கினும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` இட்டனுன்னடி ` என்பது , ` நுன்னடி ` என்றும் ` உன்னடி ` என்றும் பிரித்தற்கு ஏற்புடையதாதல் அறிக . ` இட்டனும்மடி ` என்பது பாடம் அன்று . காவிரி நதி , பல பூக்களையும் , மணிகளையும் கரையில் நிரைபடக்கொணர்ந்து ஒதுக்குதலை , வாசிகை கொண்டு வந்து வழி படுதலாக அருளினார் ; இது , தற்குறிப்பேற்றம் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 3

ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

மேலான ஒளியாய் உள்ளவனே , மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாற்றினது பரந்த வெள்ளம் வந்து பாய்கின்ற , ` திருப் பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நா வன்மை யுடையவனே , அடியேன் உன்னை நினையா தொழிந்த நாள்களை , என் உணர்வு அழிந்த நாள்களும் , உயிர்போன நாள்களும் , உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களும் என்னும் இவைகளாகக் கருதுதல் அன்றி , வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன் ; ஆதலின் , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

தாம் வாழும் நாளளவும் உள்ள நிகழ்ச்சிபற்றிக் கூறு கின்றாராகலின் , செய்யுமென்னும் வாய்பாட்டாற் கூறினார் . ` புனல் ` இரண்டனுள் , பின்னது , ` வெள்ளம் ` என்னும் பொருளில் வந்தது . மறைகளையும் , மறைகளின் பொருளையும் சொல்பவனாதல் பற்றி , இறைவனை , நாவலன் என்று அருளினார் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 4

எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

எல்லையில்லாத புகழையுடைய எம்பெருமானே , எந் தந்தைக்கும் தலைவனே , என் பொன்போல்பவனே , என் மணி போல்பவனே , மணிகளைத் தள்ளிவந்து , எவ்விடத்திலும் செல்வத்தை மிகுதியாகச் சொரிந்து பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் . நல்லவர்களால் வணங்கித் துதிக்கப்படுகின்ற , புகழையுடைய கறையூரில் உள்ள , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந் தருளியிருக்கின்ற எல்லாம் வல்லவனே , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை இடை யறாது சொல்லும் .

குறிப்புரை :

` என் ` என்றதனை , ` மணி ` என்றதற்குங் கூட்டுக . ` கரைவாய் ` என மாற்றி யுரைக்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 5

அஞ்சி னார்க்கர ணாதி என்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

ஊட்டப்பட்ட பஞ்சினை உடைய மெல்லிய அடிகளையுடைய பாவைபோலும் மகளிர் காவிரித்துறைக்கண் மூழ்கி விளையாடுகின்ற , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனே , நீ அச்சமுற்று வந்து அடைந்தவர்க்குப் பாதுகாப்பாவாய் என்று அறிந்து , அடியேனாகிய யானும் மிகவும் அச்சமுற்று வந்து உன்னை அடைந்தேன் ; அதனையறிந்து நீ அவ்வண்ணமே ` அஞ்சேல் ` என்று சொல்லி அணைத்து , அடித்தொண்டனாகிய எனக்கு உன் திருவருளை அளித்தாய் ; அதனால் உனக்குக் கெடுகின்றது ஒன்றின்மையைக் கண்டேன் ; இன்ன பெருமையும் முதன்மையும் உடைய உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` அஞ்சுதல் ` என்பது , இரண்டிடத்தும் , அஞ்சி அடைதலின் மேற்று . ` என் ` என்றது . ` இல்லை என்னும் பொருட்டு ; அதனைத் தாம் கண்கூடாக அறிந்தமையைத் தெரிவித்தல் கருத்தாகலின் , அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 6

ஏடு வான்இளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்ப தரைக்க சைத்த
அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

கொல்லுகின்ற புலியினது தோலின் மேல் , ஆடுகின்ற பாம்பை , அரையின்கண் கட்டியுள்ள அழகனே , அழகிய , ஆழ்ந்த காவிரியாற்றினது , ஒலிக்கின்ற குளிர்ந்த நீர் வந்து பாய்கின்ற , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற மேலான ஒளியாய் உள்ளவனே , பெருமையுடையவனே நீ , வானத்தில் தோன்றுகின்ற , பூவிதழ்போலும் இளந்திங்களை முடியிற் சூடினாய் ; அதன்பின் சான்று சொல்லவேண்டுவது என் ! அதனால் , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` சந்திரனைச் சடையிற் சூடியது ஒன்றே , நீ , குறைந்து வந்து அடைந்தாரை ஆழாமற் காப்பவன் என்பதற்குப் போதிய சான்றாம் ` என்றபடி , புலித்தோலாடையும் , பாம்புக் கச்சும் உனது ஆற்றலை உணர்த்தும் என்பது குறிப்பு . ` சேடன் ` என்றதற்கு , யாவும் ஒடுங்கிய பின் , எஞ்சியிருப்பவன் ` என்றும் பொருள் கூறுவர் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 7

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

தென்னங் குரும்பைபோலும் , மெல்லிய கொங்கை களையுடைய கன்னியர் மூழ்கி விளையாடுகின்ற காவிரியாற்றினது , வளப்பமான சோலைகள் நெருங்கிச் சூழ்ந்து அழகுண்டாக நிற்கின்ற கரைக்கண் உள்ள , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , விரும்பப்படுபவனே , அடியேன் , உனது மலர் போலும் திருவடிகளையே விரும்பி நினைந்தேன் ; அதனால் , நீங்குதற் கரிய வினைகளும் நீங்கின ; இனி , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` வினைகளும் ` என்னும் உம்மை இழிவு சிறப்பு . ` வினைகளும் விண்டனன் ` என்றும் பாடம் ஓதுவர் . ` நம்பன் ` என்பதனை , ` விரும்பன் ` என்று அருளினார் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 8

செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக
மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

செம்பொன்போலும் சடையையுடையவனே , திரி புரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே , மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்து , காவிரி யாற்றினது கரையின்கண் உள்ள , சோலைகளில் கிளைகளின்மேற் குயில்கள் கூவ , சிறந்த மயில்கள் ஆடுகின்ற , ` திருப்பாண்டிக்கொடு முடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனே , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` அமர்ந்து ` என்றது , அதன் காரியந் தோற்றி நின்றது . நம்பன் - விரும்பத் தக்கவன் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 9

சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை
தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் வணங்குகின்ற , கறையூரில் உள்ள , ` திருப்பாண்டிக்கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற முதல்வனே , அளவற்ற தேவர் ; ` எமக்குப் புகலிட மானவன் ; எம்தந்தை ; எம்தலைவன் ; எம் தந்தைக்கும் தலைவன் ; எங்கள் பொன் ; எங்கள் மணி ` என்று சொல்லி , உன் பெயர்கள் பலவற்றையும் பிதற்றி நின்று , உன்னைப் பிரியமாட்டார் ; இன்ன பெரியோனாகிய உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

சாரணன் - ` அடைக்கலம் ` எனப் பொருள் தரும் ` சரண் ` என்பதனடியாக வந்த தத்திதப் பெயர் . ` என் பொன் ` என்பது பாடம் அன்று . ` எண்ணாயிரகோடி ` என்றது , அளவின்மை குறித்த வாறு . காரணன் - எல்லாக் காரியங்கட்கும் முன்னிற்பவன் ; முதல்வன் . இத் திருப்பாடலின் முதலடி ஒருசீர் மிகுந்து வந்தது அடி மயக்கம் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

கோணி யபிறை சூடி யைக்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே.

பொழிப்புரை :

வளைந்த பிறையைச் சூடினவனும் , தலைக் கோலம் உடையவனும் . பேரருள் உடையவனும் , பிறப்பில்லாதவனும் , இசையோடு உலாவுகின்ற வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் கொன்றைப் பூமாலையை அணிந்தவனும் ` படத்தையுடைய பாம்பாகிய அரைநாணை உடையவனும் ஆகிய கறையூரில் உள்ள , ` திருப்பாண்டிக்கொடுமுடி ` என்னும் கோயிலை விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற பெருமானை , அவன் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுபவர்க்குத் துன்பம் இல்லையாம் .

குறிப்புரை :

இறுதிக்கண் நிற்றற்பாலதாய , ` கறையூரிற் பாண்டிக் கொடுமுடி பேணிய பெருமானை ` என்றது , செய்யுள் நோக்கி , இடைநின்றது . ` பண் ` என்பது நீண்டது ; இதன்பின் , ஓடுவுருபு விரிக்க .
சிற்பி