திருக்கன்றாப்பூர்


பண் :

பாடல் எண் : 1

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா
மதிசூடீ வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும்
நைஞ்சுருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு
வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்
காதன்மையால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

பார்வதி பாகனே! வேதம் ஓதும் நாவனே! பிறை சூடியவனே! தேவர்கள் தலைவனே! என்று புகழ்ந்து நாடோறும் மனம் இளகி உருகி, வஞ்சகமில்லாத அன்பு மிகுந்து, முப்பொழுதும் வாசனை மிக்க நீரும் பூவும் கொண்டு மறவாது வாழ்த்திப்புகழ்ந்து அன்போடு தொழும் அன்பருடைய மனத்தினுள்ளே கன்றாப்பூரில் நடப்பட்டமுளை வடிவினனாய் உள்ள பெருமானைக் காணலாம்.

குறிப்புரை :

பரவி - துதித்து. `வாசனை` என்னும் வடமொழிப்பதம் `வாதனை` எனவும் திரிந்து வருவதாம். வாதனையால் - வாசனையோடு; இங்கு, `விளங்க` என ஒரு சொல் வருவிக்க. இது பூவிற்கு உரியதாக அருளப்பட்டது. `வைகலும் (நாள்தோறும்)` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. மறவாமை ஒன்றே வேண்டப்படுவ தாகலின், வாழ்த்தல் முதலியன வைகலும் செய்ய வேண்டுவவாயின. காதன்மை - அன்பு; காதல் பண்பாதலாலும் பண்பிற்குப் பண்பின்று ஆதலாலும், இதுபோலும் இடங்களில் வரும் பண்புணர்த்தும் மை விகுதி பகுதிப்பொருள் விகுதியேயாம். ``காதன்மை கந்தா`` (குறள் - 507) என வருவதும் காண்க. `தொழுமிடத்து, அன்பு ஒன்றே இன்றியமையாதது` என்பதனை வலியுறுத்துதற்கு, இறுதிக்கண் மறித்தும் காதன்மையால் தொழும் அடியார்`` என்றும், புறத்துப் பிற இடங்களில் விளங்குதல் பொதுவாக, அகத்து அன்பில் விளங்குதலே உண்மையாகலின், ``நெஞ்சினுள்ளே காணலாம்`` என்றும் அருளிச் செய்தார். ``நெஞ்சினுள்ளே`` என்னும் ஏகாரம் உண்மை வகையை நோக்குங்கால் பிரிநிலையாம்; பொதுவகையை நோக்குங்கால் தேற்றமாம். நெஞ்சினுள் விளங்குதல் உண்மையாதல் உணர்த்துவார், ``காணலாம்`` என்றருளினாராகலின், நெஞ்சினைக் காண்டல் கூடுமாயின் அதனுள் காணலாம் என்பதே கருத்தாம். இத் தலத்துள் கன்று கட்டுதற்கு நடப்பட்டதறிதானே சிவனுருவாயினமையின், இங்குச் சிவபிரானை ``நடுதறி`` என்றே அருளிச்செய்தார். இதனுள், நாள்தொறும் தொழுதல் சிறப்பாகப் பணித்தருளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

விடிவது, `விடிதல்` எனத் தொழிற் பெயர்; `தொழிற் பெயர் உம்மை ஏற்று வினையெச்சமாம்` என்பது, `வருதலும் போயினான்` எனறாற் போல்வனவற்றுட் காண்க. விடிதல் - பொழுது புலர்தல். ``மெய்யில் (உடம்பில்)`` என விதந்தோதினமையால், நீர்மூழ்கல் முதலியன முன்னரே அமைந்து கிடந்தனவாம். தற்று - இறுக உடுத்து. ``தெய்வம் - மடிதற்றுத் தான்முந் துறும்`` (குறள் - 1023) என்றது காண்க. கீளொடு கோவணம் தற்று` என்றார். துறந்தார்க்கு இவ்வொழுக்கம் சிறப்பாக உரியதாகலின். செடி - கீழ்மை. கடி - வாசனை. இதனுள், விடியலில் வழிபடுதல் சிறப்பாகப் பணித் தருளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பிநோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

``தாம்`` என்பது அசைநிலையாதலின், `எவரேனுமாக` என்க. ``எவரேனும்`` என்றது, `எவ்வகைக் குற்றமுடையராயினும்` என்றபடி. இலாடம் - நெற்றி. சாதனம் - துணைப்பொருள்; என்றது, உருத்திராக்கம் முதலிய பிற வேடங்களை. திருநீறு` ஒன்றேயும், திருவேடமாதற்கு அமையும் என்றற்கு அதனைப்பிரித்தோதி யருளினார். இனி, உருத்திராக்கத்தையே சாதனம் என்றல் மரபு` என்பாரும் உளர். உள்கி - (திருவேடத்தின் பெருமையை) நினைந்து. உவராதே - வெறுத்தல் இல்லாமலே; அஃதாவது, `எவரேனும் என்பதனாற் குறிக்கப்பட்ட குற்றங்களை நினைந்து வெறுத்தல் சிறிதும் இன்றி` என்றபடி. திருவேடங்கள் பலவகையினவாதல் தோன்ற அவற்றை உடையவரை, `அவரவர்` என்றருளினார். ``கண்ட போதே என்னும் பிரிநிலை ஏகாரம் விரைவு குறித்தது. குற்றியலுகரங் கெடாது நிற்றல் சிறப்பின்மையின், `கண்டபோது` என்னும் பாடம் சிறவாமை யறிக. உகந்து - திருவேடத்தில் உள்ள விருப்பம் எழப்பெற்று. அடிமைத் திறம் நினைந்து - அடியராவார், தலைவனது அடையாளப் பொறியை (முத்திரையை)க் கண்டவுடன், அதனைப் பணிந்தேற்றல் அல்லது, அதனைக் கொணர்ந்தாரது குணங்குற்றம் நோக்கலாமையை உணர்ந்து. உவந்து நோக்கி - திருவேடம் கிடைக்கப் பெற்றமைக்கு மகிழ்ச்சி மிக உடையராய் முகமலர்ந்து நோக்கி. ``இவர்`` என்றது திருவேடம் உடையாரையும், ``அவர்`` என்றது இறைவரையும். ``தேவர்`` என வந்த இரண்டிடத்தும் தெரிநிலை ஓகாரங்கள் தொகுத்தலாயின. இரண்டு ஆட்டாது - உள்ளத்தை இருதலையாகச் செலுத்தாது; என்றது, ஆராயாது என்றபடி `இரண்டாக ஆட்டாது` என ஆக்கம் வருவித்துரைக்க. ``ஒழிந்து`` என்றது, துணிவுப் பொருட்டு. ஈசன் திறமே பேணி - இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே பேணிச் செய்து. கவராதே - அங்ஙனம் செய்யுமிடத்து ஒருஞான்றும் மனம் இரண்டுபடாமலே; கண்டதுமுதல், எதிர்கொண்டு வழிபாடுகள் பலவும் செய்து விடுக்குங்காறும், விடுத்த பின்பும் எப்பொழுதும், திருவேடமுடையாரைச் சிவனெனவே கோடலிற் பிறழாமை வேண்டும் என்பார், `உவராதே` என்பது முதலாக, ``கவராது`` என்பது காறும் அவ்வவ்விடத்தும் அதனை எடுத்தோதி வலியுறுத்தருளினார். இதனால், திருவேடந் தொழுதல் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டது, `திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்` என்றதனால் அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 4

இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு
மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

யாம் பொருள் இல்லாதேம் இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்` என்று மனத்தில் தளர்ச்சியுறாமல், பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டு, நல்லவழியில் பிறழாமல் நின்று, இறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்கு, பயன் கருதாமல் செய்யும் அன்பை மேற்கொண்டு, பொய்யை விடுத்து, மெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

இலம் - (யாம்) பொருள் இலம். காலம் செல்லா நாள் - இக்காலம் எம்மால் ஒன்றும் இயலாத காலம்; `என்றெல்லாம் எண்ணி நெஞ்சகத்தில் இடையாதே (சிறிதும் தளர்ச்சியுறாமல்)` என்க.
``இலங்காலம்`` என்றற்கு இவ்வாறன்றி, ``இலம்படுபுலவர்`` (மலைபடுகடாம் - 576.) என்புழிப்போல, `இன்மையுட்பட்ட காலம் என உரைக்க` எனின், `இன்மை` என்னுங் குறிப்புணர்த்தும், `இலம்` என்னும் சொல்லின் ஈற்று மகரங்கெடாது நிற்றல் வருமொழி வினையாய விடத்தே என்பது, ``இலமென் கிளவிக்குப் படுவரு காலை`` (தொல். எழுத்து - 316) என, வருமொழியை எடுத்தோதி யதனாற் பெறபடுதலின், அங்ஙனம் உரைக்கலாகாமை யறிக. ``இலம் படு`` என்றாற்போல்வனவற்றை, `இலம்பட்ட (இன்மை உண்டாகிய)` என அல்வழியாக விரிப்பின், பின்னர் வருகின்ற, ``புலவர்`` என்றாற் போலும் பெயர்களோடு இனிது இயையாமையின், `இலத்துக்கட்பட்ட, (இன்மைக்கட்பட்ட) என்றாற்போல, வேற்றுமையாக விரிக்க` என்பார். அதன்கண் ஐயம் நிகழாதவாறு, பொது விதியால், மரக்கோடு என்றாற்போல மகரங்கெட்டே முடிதலையும், ``மெய்பிறிதாகிடத்து`` (தொல். எழுத்து. 157) என்னும் நூற்பாவினுள் தன்னின முடித்தலால், ``கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்`` (பு. வெ. மா. 176) ``புலம்புக் கனனே புல்லணற் காளை`` (புறம். 258) என்றாற்போல மகரங்கெட்டுங் கெடாதும் உறழ்ந்து முடிதலையும் விலக்கி, ஈண்டு மகரங் கெடாதே நிற்றல் வேண்டும்` என யாப்புறுத்தற் பொருட்டு, மேற்காட்டிய நூற்பாவினை ஓதினார் ஆசிரியர்; அஃது உணராமை யால், உரையாளர், ஆண்டுப்பெரிதும் இடர்ப்பட்டு உரை உரைத்தனர்; அவையெல்லாம் ஈண்டுத் தோன்றக்கூறிற் பெருகும். ``இலம்பாடு (இன்மை உண்டாதல்) (தொல். சொல் - 260) என்றாற்போல அல்வழியாய், அமைவன, ``அல்வழியெல்லாம் மெல்லெழுத் தாகும்`` (தொல். எழுத்து - 314) என்றதனானே முடியும் என்க.
பசி தீர்க்கப்படுதற்கு, பசித்துவந்து இரந்தார் அனைவரும் உரியராகலின், ``யாவர்க்கும்`` என்றருளினார். ``நல்விருந்தோம்பு வான்`` (குறள் - 84) என விருந்தினைச் சிறப்பித்துக் கூறினாற் போலாது, ``அற்றா ரழிபசி தீர்த்தல்`` (குறள் - 226) என வாளா கூறியதுணர்க. ``நெறி`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``விலங்காதே`` என்றார். அறிவு - இறைவன் எல்லாநலங்களையும் தானே தரும் பெருங்கருணையாளனாதலை அறியும் அறிவு. மெய்யன்பு - பயன் கருதாது செலுத்தும் அன்பு; `அதனை வருந்தியேனும் பெறுக` என்பார், ``புகப் பெய்து`` என்றருளினார். பொய் - பயன் கருதி அன்பு செய்தல். அவ்வாறு செய்தல் வழிமுறையிற் பயன் தருவதாயினும், இறைவன் நெஞ்சினுள்ளே விளங்கித் தோன்றுதலாகிய ஈண்டுக் குறிக்கும் பயனை நேரே தாராமை, பற்றி ``நீக்கி` என்றருளினார். துலங்காமெய் - மெய்துலங்கா; மெய்யுணர்வு விளங்கப்பெறாத (வானவர் என்க) `துலங்காமே` என்பது பாடம் அன்று. கலங்காதே மனம் சிறிதும் தடுமாற்றம் இன்றி; நன்னெறியைத் தெளிந்து, இதனால், உயிர்களிடத்து இரக்கமுடைமை சிறந்தெடுத்துப் பணித்தருளப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

விருத்தன் - யாவரினும் முதிர்ந்தவன். உலக மூர்த்தி - உலகம் முழுவதற்கும் ஒருவனாகிய கடவுள். பொருத்தன் - உறவினன். `பொருந்து` என்னும் முதனிலை திரிந்த `பொருத்து` என்பது `உறவு` என்னும் பொருள் தந்தது. ``புலம்பி`` இரண்டனுள் முன்னது, `முறையிட்டு` என்னும் பொருளது, பின்னது, `பிறிது பற்றின்றி` என்னும் பொருளது. `கருத்து` என்றது விருப்பத்தினை. இதனால், முறையீடும் பற்று நீங்குதலும் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

பொசி - கசிவு; என்றது, செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றை. பொதிந்த - மூடிய. பொல்லாத - இழிந்த. நிலாசும் - நிலைபெற்றிருக்கும்; `நிலாவும்` என்பதே பாடம் போலும்! ``ஈட்டி`` என்பதற்குப் பொருளை என்பது வருவிக்க. வசி - வசப்படுத்தல். வீழ்தல் - மெலிதல். அஞ்சு - அஞ்செழுத்து. கசிவு - நெகிழ்ச்சி: அன்பு. வானவர்கோன் - சிவபிரான். இதனால். இளமை நிலையாமை கருதி விரைந்து இறைவனை வழிபடுதலும். திருவைந்தெழுத்தை ஓதுதலும் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

குறிப்புரை :

ஐ - கோழை. மிடறு - குரல். ``ஆவியார்`` என்றது. நிலையாமை பற்றிய இழித்தற் குறிப்பு. கண்ணை மையினால் எழுதி என்க. இதனால், யாக்கை நிலையாமையை அறிந்து, சிவபிரானை விரைந்து தொழுதல் பணித்தருளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

திருதி - மன உறுதி; `மன உறுதியாகிய பண்பினால் என்றபடி. ஐவர் - ஐம்பொறிகள். காவல் ஏவி - காவலில் வைத்து. திகையாதே - மனங் கலங்காமலே, சுருதி - மறை; மந்திரம். `மானதமாகக் கணிக்கப்படுவது` என்பார், ``சிந்தைச் சுருதி`` என்றருளினார்; ``சுருதிதனை`` என்பதைச் சுருதிதன்னால்` எனத் திரிக்க. துயக்கு - மயக்கம். `சுருதி தன்னால் துயக்கறுத்து` என்க. `மிகக் கருதி` என மாறிக் கூட்டுக. கருதி - தியானித்து. இதனால், திருவைந்தெழுத்தை ஓது முறைமை அருளப்பட்டது. இத்திருப்பதிகத்தின் ஒன்பதாம் திருத்தாண்டகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்
கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

தனஞ்சயன் - அருச்சுனன். தசக்கிரிவன் - இராவணன். முரண் - வலிமை. `தாளையும் தோளையும் முரண் அழித்து` என்றதனை, `பசுவைப் பால் கறந்தான்` என்பது போலக்கொள்க. கனிந்து - அன்பு கொண்டு. இதனால், இறைவன் புகழைப் பேசுதல், சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டது.
சிற்பி