திருப்பூவணம்


பண் :

பாடல் எண் : 1

வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

சோலைகள் விளங்கும் திருப்பூவணத்தை உகந்தருளியிருக்கும் புனிதராகிய சிவபெருமான் பக்கல் , அடியார்களுடைய மனக்கண்முன் கூர்மை பொருந்திய மூவிலைச் சூலமும் , நீண்ட சடைமீது அணிந்த பிறையும் , நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய முடி மாலையும் , காதுகளில் கலந்து தோன்றும் குழையும் , தோடும் , இடிபோல ஒலித்து வந்த யானையின் தோலாகிய போர்வையும் , அழகு விளங்கும் முடியும் , திருநீறணிந்த அப்பெருமானுடைய திருமேனியும் காட்சி வழங்குகின்றன .

குறிப்புரை :

வடி ஏறு - கூர்மை பொருந்திய , ` வடிவு ஏறு ` எனவும் பாடம் ஓதுவர் . திரிசூலம் - இலை மூன்றாகிய வேல் . கடி ஏறு - புதுமை பொருந்திய . ` குழையுந் தோடும் கலந்து தோன்றும் ` என்பது , தானும் தன் தேவியுமாய் நிற்றல் குறித்தது . ` குழையும் சுருள்தோடும் ` ( தி .8 திருவாசகம் , திருக்கோத்தும்பி 18) என்று அருளிச்செய்ததுங் காண்க . இடி ஏறு - இடிபோலுங் குரல் பொருந்திய . முடி - சடைமுடி . பொடி - நீறு .` பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கு ` என்பதனை . முதற்கண் வைத்துரைக்க . ` தோன்றும் ` என்பன , இங்கு ` உளதாகும் ` என்னும் பொருளவாய் , ` மலை நிற்கும் ` என்பதுபோல , முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கையை ( தொல் . சொல் . 240.) உணர்த்தும் .

பண் :

பாடல் எண் : 2

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
ஊணாகி யூர்திரிவா னாகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேல்
சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் ஆணும் பெண்ணுமாகிய வடிவும் , அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதம் போன்று இனிமை தரும் செயல்களும் , உணவுக்காக ஊர்களில் திரியும் காட்சியும் , ஒற்றை வெண்பிறையும் , பகைவருடைய மும்மதில்களையும் நீண்ட பாம்பினை மலையாகிய வில்லில் நாணாகப் பூட்டி எரித்த செயலும் , இறந்தவருடைய எலும்புகளால் உடம்பில் பொருந்துமாறு பூண்ட மாலையும் அரைஞாணும் அடியவர் மனக்கண்களுக்கு விளக்கமாகக் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

` அமுதமாகித் தோன்றும் ` திரிவானாகித் தோன்றும் . என்பவற்றிற்கு ` அவ்வடிவு ` என்னும் எழுவாய் வருவிக்க . ` ஊணாகி ` என்பதில் உள்ள ` ஆகி ` என்பதனை , ` ஆக ` எனத்திரிக்க , ஊண் ஆக - உணவு உண்டாதற்பொருட்டு . ` திரிவான் ` என்புழி , ` ஆதல் ` என்பது எஞ்சிநின்றது . பற்றார் - பகைவர் ; திரிபுரத்து அசுரர் . ` மேல் ` என்பது , ஆகுபெயராய் , மேலிடத்துத் ( வானில் ) திரியும் மதில்களை யுணர்த்தும் . சேண் நாகம் - நீண்ட பாம்பு , ` நாகவில் ` என இயைத்து , ` நாகத்தை உடைய வில் ` என உரைக்க . ` வாசுகியென்னும் பாம்பாகிய நாணையுடைய மலையாகிய வில் ` என்றதாம் . பூண் நாண் வினைத் தொகை . இதன்கண் , ` நாண் ` என்றது , மாலையை . ` செய்த ` என்னும் அடை , ` பூண்நாண் ` என்பதை மட்டுமே சிறப்பித்து நின்றது .

பண் :

பாடல் எண் : 3

கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களுக்கு மனக்கண் முன்னர் , அவர் கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும் , மேம்பட்ட மறைகளை ஓதும்சனகர் முதலிய முனிவர் நால்வர்க்கும் வேத நெறிகளைச் சொற்களால் விளக்கியமை போல மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும் , அவர் உடலைச் சுற்றுமாறு அணிந்த பாம்புகளும் ஏந்திய மான் குட்டியும் , அறத்தின் உண்மையை உணர்ந்தவன் அல்லாத காலனை ஒறுத்த காட்சியும் , தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும் , யாவரும் அருவருக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

ஆல் நிழலில் எழுந்தருளியிருந்து நான்கு முனிவர்கட்கு நான்கு வேதங்களை அருளினார் என்பதில் நால்வராவார் பெயர் திருமுறைகளில் எங்கும் சொல்லப்படவில்லை . சனகர் முதலிய நால்வர்கட்குக் கல்லால் நிழலிலிருந்து அருள்புரிந்ததாகக் கந்த புராணம் கூறும் வரலாற்றில் வேதத்தை ஓதிய பின்னர் உண்டாகிய ஐயத்தை நீக்கியருளியது சொல்லப்படுகின்றதேயன்றி , வேதத்தை அருளியது சொல்லப்படவில்லை . ஆகவே , அந்நால்வரை இவ் வரலாற்றிற்கொள்ளுதல் பொருந்து மாறில்லை . அன்றியும் சனகர் முதலிய நால்வர்க்கு இறைவன் மோன நிலையில் இருந்து அருளியதே சிறந்தெடுத்துக் கூறப்படுகின்றது ; இங்கு அவ்வாறின்றி , ` சொல்லாகச் சொல்லியவா தோன்றும் தோன்றும் ` எனப்பட்டது . ` விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் ` ( தி .4. ப .7. பா .8.) ` ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு - மொழிந்த வாயான் ` ( தி .1. ப .53. பா .6.) என்றாற்போலப் பிற இடங்களிலும் இவ்வாறே ஓதியருளினமை காண்க . நெறிகள் - அறம் முதலிய நான்கையும் அடையும் வழிகள் . அல்லாத காலன் - அறத்தின் உண்மையை உணர்ந்தவன் அல்லாத இயமன் , அறத்தின் உண்மை யாவது , உலகர்க்கு விதிக்கப்பட்ட . விதி , இறைவன் அடியார்க்குப் பொருந்தாது என்பது . ஐவகை - ஐந்து நிறம் . அவை படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றல்களைக் குறிக்கும் . இவ்வைவகை ஆற்றல்களே ஒருங்கு நிற்குமிடத்து , ` ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் ` என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும் . தனித்தனி பிரிந்து நிற்குமிடத்து , ` மனோன்மனி , மகேசுவரி , உமை , இலக்குமி , வாணி ` என்னும் தேவியராய் நிற்ப , இறைவனும் அவர்களையுடைய , ` சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , மால் , அயன் ` என்னும் தேவர் களாய் நிற்பன் . அமர்தல் - விரும்புதல் ; மேற்கூறிய உண்மையை யெல்லாம் உணர்பவரே , மெய்யுணர்வுடையோராகலின் அவரிடம் இறைவன் அருளைமிகச் செய்வான் என்றருளியபடி . பொல்லாத எலும்பு - யாவருக்கும் அருவருப்பாய் உள்ள எலும்பு .

பண் :

பாடல் எண் : 4

படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையி னொலிதோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமும் கீளுந் தோன்றும்
மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களுடைய மனக்கண்முன்னர்ப் படைக்கலமாம் நன்மை நிறைந்த மழுவும் , அவர் ஏந்திய மானும் , அருகில் இருக்கும் பன்னிரண்டு கைகளை உடைய முருகப்பெருமான் வடிவும் , விரைந்து செல்லும் காளையும் , அக்காளை வடிவம் எழுதிய கொடியும் , நான்மறையின் ஒலியும் , முக்கண்களும் , உடையாக அமைந்த கீளும் கோவணமும் , பற்களை உடைய வெள்ளிய மண்டை ஓட்டு மாலையும் , அவரைச் சுற்றிக் காணப்படும் பூதங்களின் மகிழ்வும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

படை மலிந்த - படைக்கலமாம் தன்மை நிறைந்த , ` பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை ` என்பதும் பாடம் , ` மலிந்த விடை ` என்பது , ` கொடி ` என்பதனோடும் இயையும் . ஊர்தி வால் வெள் ளேறே சிறந்த - ` சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப ` ( புறம் - கடவுள் வாழ்த்து ) என்றதுங்காண்க . நயனம் - கண் ; இதனை எடுத்தோதினமையால் , ஏனையோரது கண்களின் வேறுபட்ட தென்பது பெறப்படும் . ` ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் ` என்னும் உபநிடதம் . வேறுபடுதலாவது , நெற்றியில் மேல்நோக்கி இருத்தல் . உடை - உடுத்தல் , ` உடையாய் மலிந்த ` எனலுமாம் . ` கீள் ` என்பது , கோவணத்தோடு இணைத்துத் தைத்து அரைநாணாகக் கட்டுவது , மூரல் - நகைப்பு ; தசைமுதலிய நீங்கிக் கிடக்கின்ற தலை பற்களோடு தோன்றுதல் , நகைப்பது போல்வதாயிற்று . புடை - பக்கம் .

பண் :

பாடல் எண் : 5

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களுடைய மனக்கண் முன்னர்த்தம்மிடம் பேரன்பு கொள்ளும் அடியவர்களுக்கு அவர் அருள் செய்யும் செயலும் , அழுக்கற்ற சிவந்த சடையின் மேல் அணிந்த பிறையும் , பிச்சை ஏற்கும் அவருக்கு அடியவர்கள் வழக்கமாக இடும் பிச்சையை அவர் ஏற்கும் காட்சியும் , பெரிய கடலில் நஞ்சினை உண்டதனால் இருண்ட கழுத்தும் , கயல்கள் பாயுமாறு விரைவான கலங்கல் வெள்ளமாக ஆயிரமுகத்தோடு வானிலிருந்து இறங்கிய கங்கை தன்னுள் அடங்குமாறு சிவபெருமான் விரித்த சடையின் அழகும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

மயல் - காதல் ; பேரன்பு . ` ஏற்றல் இயல்பாகத் தோன்றும் ` என இயைக்க . கலுழி - பெருக்கம் . ` கலுழியை உடைய கங்கை ` என்க . ` வானில் ( வானிலிருந்து ) தோன்றும் ` என்பதில் உள்ள , ` தோன்றும் ` என்பது எச்சம் . அது , ` புயல் ` என்னும் பெயரொடு முடிந் தது . ` புயல் ` என்றது , கருத்தா ஆகுபெயராய் மழையைக் குறித்தது . ` புயல்போலப்பாய ` என உவம உருபு விரிக்க . பாய - பாய்ந்து ஒழுகுமாறு .

பண் :

பாடல் எண் : 6

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண்களின் முன்னர் அழகுக் கடலாய் உள்ள தாமரை மலர் போன்ற அழகிய நிறத்தை உடைய திருவடிகளும் , அத்திருவடிகளின் மீது பூமண்டலத்திலுள்ளவர்கள் துதித்து அருச்சித்த பல மலர்களும் , காட்டிய புகைகளும் , ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரை உடைய இராவணனுடைய உடலை அழித்த திருமாலுடைய துன்பம் தரும் தீவினையைப் போக்கி அவருக்குச் சக்கரம் வழங்கிய அழகிய செயலும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

` பாராகிய ஆழி வட்டத்தார் ` என்க ; ` பூமண்டலத்தில் உள்ளவர் ` என்பது பொருள் . ஆழி வட்டம் - கடலாற் சூழப்பட்ட வளையம் . பரவி - துதித்து . சீர் ஆழித்தாமரை - அழகென்னுங் கடலாய் உள்ள தாமரை மலர் . திருந்திய - செம்மையான . ஓர் - ஒப்பற்ற . ` இலங்கை வேந்தனை அழித்தவன் திருமால் ` என்பது வெளிப்படை யாதலின் , அப்பாவத்தைக் கெடுப்பித்து , ஆழி ( சக்கரம் ) ஈந்தமை ` இன்னார்க்கு ` என்பது சொல்ல வேண்டாதாயிற்று .

பண் :

பாடல் எண் : 7

தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர் தம் அடியவர்களுக்கு அருள்புரிந்த மேம்பட்ட செயலும் , பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கிய செயலும் , மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதியை இடப் பாகமாகக் கொண்ட வடிவும் , யானைத்தோலை விரும்பிப் போர்த்திய வனப்பும் , செறிந்த சடைமீது கங்கை , பாம்பு , பிறை போன்ற இவற்றை வைத்துப் பொன்போன்ற திருமேனி பொலிந்து தோன்றும் வனப்பும் தோற்றம் வழங்கும் .

குறிப்புரை :

தகவு - தகுதி ; அவை வரலாறுகளும் , அவற்றிற்கேற்ற வடிவு நிலைகளுமாம் . கால சங்காரர் , சண்டேசானுக்கிரகர் முதலிய வடிவுநிலைகளை நோக்குக .

பண் :

பாடல் எண் : 8

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்
திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியவர்களின் மனக் கண் முன்னர் அப்பெருமானுடைய செறிந்த வீரக்கழலும் , திருவடிகளும் , முப்புரங்களை அழித்த வில்லும் , நால்வருக்கு உண்மை நெறியை மோனநிலையில் விரித்துரைத்த நுண்மையும் , நெற்றிக்கண்ணும் , வாகனமாம் காளையும் , அடியார்களுடைய மறுபிறவியை நீக்கி அருள் செய்கின்ற கூறுபாடும் , பார்வதியின் வடிவும் , கங்கையும் , புள்ளிகளை உடைய பாம்பும் , பிறைச் சந்திரனும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

` கழலும் அவற்றையணிந்த திருவடியும் ` என்க . நால்வர்க்கு நெறி காட்டினமை மேலும் குறித்தருளப்பட்டது . ( பா .3.) நேர்மை - நுண்மை . மறுபிறவி அறுத்தருளல் , ஆகாமியத்தைத் தடுத்தல் , ` மலிந்தது ` என்னும் தொழிற்பெயர் குறைந்து நின்றது .

பண் :

பாடல் எண் : 9

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
அணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்க் கோங்குஅரும்பினை ஒத்த முலையை உடைய பார்வதிக்கு வழங்கிய இடப்பாகமும் , இடியைப் போல அழிக்கும் ஆற்றலுடைய மகாவராகத்தினுடைய மணி வயிரக் கோவையைத் தோற்கச் செய்யும் ஒளியை உடைய மருப்பும் , வையை நதிக் கரையில் நிற்கும் காட்சியும் , உமாதேவி மகிழ்தற்குக் காரணமாக அவர் ஆடிய அழகிய கூத்தும் , சிவந்த வானத்தினும் ஒளிமிக்கு விளங்கும் , மலைகளைத் தம் திண்மையால் தோற்கடிக்கும் வலிய புயங்களும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

` அரும்பு ` என்பது , ` அருப்பு ` என வலித்தலாயிற்று . ஓட்டும் - தோற்றோடச் செய்யும் . ` அணிகிளரும் மணி ` என இயைத்துரைக்க . உரும் - இடி . அடர்க்கும் கேழல் - கொல்லும் பன்றி . உருமு , அழித்தற் பண்பு பற்றிய உவமை . மருப்பு - கொம்பு . ` அதனை மறைக்கின்ற வயிரக்கோவை ` என்க . ` மணம் ` என்பது மணாட்டியை உணர்த்திற்று . மலிந்த - மகிழ்ந்த , அம்மை மகிழ ஆடும் நடனம் என்றவாறு . ` வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறம் ` மண் சுமந்த திருவிளையாடல் . அது தோன்றுதல் , உளத்திற்கு என்க . இவ்வாறுரைக்கற் பாலனவும் சில உளவாதலறிக . இதற்கு வேறுபொருள் கற்பிப்பார் , பிறிதோர் எண்ணம் உடையர் என்க . திகழ்ந்த - திகழ்ந்தது போன்ற . ` சோதிப் புயம் ` என இயையும் . பொருப்பு ஓட்டி - மலையை வென்று .

பண் :

பாடல் எண் : 10

ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங்
குழற்கணிந்த கொள்கையொடுகோலந் தோன்றும்
பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்த் தம்மைச் சரணமாக அடைந்து சண்டேச நாயனாருக்கு அருள் செய்து தாம் முடிமேல் சூடிய மாலையை அவருக்கு வழங்கிய காட்சியும் , தம்பக்கல் அடைந்து தொண்டு செய்யும் அடியவர்களுக்கு அருள் செய்து அவர்களுடைய பல பிறவிகளையும் போக்கும் தன்மையும் , கோங்கு வில்வம் ஊமத்தம் மலர் என்பவற்றை அணிந்த அழகும் , பூக்களை அம்புகளாக உடைய மன்மதனுடைய உருவத்தை அழித்த வனப்பும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

சண்டேசுர நாயனார்க்குத் தனது முடியிலிருந்த கொன்றைமாலையைச் சிவபிரான் அணிவித்தமையைப் பெரிய புராணத்துட் காண்க . பல பிறவி அறுத்தருளல் , சஞ்சிதத்தை அழித்தல் , கோங்கமலரும் இறைவற்கு உரியதென்க . கூவிளை - வில்வம் , மத்தம் - ஊமத்தை , இது மயக்கத்தை உண்டாக்கும் என்பதுபற்றி , ` மதமத்தம் ` எனப்படும் . ` குழல் ` என்றது சடையை ; ஆடவர் தலை மயிர்க்கும் ` குழல் ` என்பது பெயராகும் . கொள்கை - விருப்பம் .

பண் :

பாடல் எண் : 11

ஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை
மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவந் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை யரக்கர் கோனை
நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியவர்களின் மனக்கண் முன்னர்த் தம்மை ஒன்றிய உள்ளத்தோடு தியானிப்பவர் உள்ளத்தில் அவர்கள் தியானித்த அதே வடிவில் இருக்கின்ற காட்சியும் , கச்சின்மேல் அணிகலன்களை அணிந்த தனங்களை உடைய பார்வதியை ஒருபாகமாக வைத்து மகிழ்ந்த வடிவமும் , நீர் நிறைந்த வடிவுடைய கடலால் சூழப்பட்ட இலங்கையின் மன்னனான இராவணன் உடம்பினை நெறு நெறு என்னும் ஓசை ஏற்படுமாறு நசுக்கிய நிலையும் , போரிடும் வடிவத்தை உடைய கூற்றுவனை உதைத்த அழகிய செயலும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

உருவ - ஊடுருவ ; ஊன்ற . உள்குவார் - நினைப்பார் . ` அவர் உள்ளத்துள்ளே ` எனச் சுட்டுப்பெயர் வருவிக்க . ` ஆரொருவர் ` என்பதும் பாடம் . ` அவ்வுரு ` என்றது , அவர் உள்கிய உருவத்தை ; இதனானே அன்பர் நினைத்த வடிவாதலன்றித் தனக்கென ஒரு வடிவம் இலனாதல் விளங்கும் . ` மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே ` ( பரிபாடல் . 4 அடி . 56 .) என்றார் சான்றோரும் . வார் - கச்சு . ` கச்சினை ஊடுருவுகின்ற அத்தன்மையையுடைய பூண் அணிந்த முலை ` என்க . இனி , ` உருவம் , அழகு ` எனக்கொண்டு , ` கச்சினையுடைய அழகிய , பூண் அணிந்த முலை ` என்று உரைத்தலும் ஆம் . ` நன்மங்கை ` என்று அருளிச்செய்தார் , அவரது அருளே அவளாகலின் . நீர் உருவக் கடல் - நீர் மயமான கடல் . போர் உருவக்கூற்று - போர்க் கோலத்துடன் வந்த இயமன் . ` போர் ` என்றது மார்க்கண்டேயர்மேற் சினந்து எழுந்தமையை .
சிற்பி