திருக்கருகாவூர்


பண் :

பாடல் எண் : 1

குருகாம் வயிரமாங் கூறு நாளாம்
கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையாடியாம்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூரில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் குருத்துப்போன்ற மெல்லிய பொருள்களாகவும் , வயிரம் போன்ற வலிய பொருள்களாகவும் விண்மீன்கள் , ஞாயிறு முதலிய கிழமைகளுக்குரிய கிரகங்கள் என்பனவாகவும் உள்ளான் . பருகாமலேயே , மலத்தைப் போக்கும் அமுதமாவான் . பாலில் நெய்போலவும் பழத்தில் சுவை போலவும் எங்கும் நீங்காது பரவியுள்ளான் . பாட்டில் பண்ணாக உள்ளான் . ஒருநிலையில் பார்வதி பாகனாக உள்ளான் . நாவின் உள்ளே பொருந்தி மொழியைப் பேசுவிப்பவனாவான் . முதற் பொருளாய் உலகத்தோற்றத்து முன்னேயும் இருப்பவன் , முன்னே தோன்றி நின்று எல்லோரையும் நடத்தும் கண் போன்றவன் .

குறிப்புரை :

குருகாம் - நிறத்தைத் தாங்குகின்ற ; ` காவும் ` என்னும் பெயரெச்சத்து ஈற்று உயிர்மெய்கெட்டது . எதுகை நோக்கிக் ககர ஒற்று மிகாதாயிற்று . அன்றி , குருகு , வெண்மை என்றலும் ஒன்று . இனி , ` குருகு ஆம் வயிரம் ` எனக்கொண்டு ` கைவளையாதற்குரிய வயிரம் ` என்றுரைத்தலும் ஆம் . ` வயிரம் ஆம் ` முதலியவற்றில் ` ஆம் ` ` ஆவான் ` என்னும்பொருட்டு . நாள் - நட்சத்திரம் . கோள் - கிரகம் . ` கோளே ` என்னும் ஏகாரம் தேற்றம் . தான் , அசைநிலை . பருகா அமுதம் ` விலக்குருவகம் . பருகிய பின்னர் மிருத்யுவை ( மரணத்தை ) ப் போக்கும் அமுதம்போலாது , பருகாமலே ( மலத்தைப் ) போக்கும் அமுதமாய் உள்ளவன் ` என்பதாம் . இரதம் - சுவை . பாலின் நெய் முதலிய மூன்றும் சுட்டிக் கூறா உவமங்கள் . ஆக்கங்கள் உவமை குறித்தன . ` வயிரமாம் ` என்புழியும் ` ஆம் ` அன்னது . ` மற்றொருகால் தனியனுமாம் ` என்பதைத் தழுவிநிற்றலின் ` பாகனுமாம் ` என்னும் உம்மை , எதிரது தழுவிய எச்சம் ; இறைவன் , உலகத்தைத் தொழிற் படுத்துங்கால் ` தானும் , தன் சத்தியும் ` என இருதிறப்பட்டு நிற்றலும் , அவை அனைத்தும் ஒடுங்கியபின்னர் வாளாவிருக்குங்கால் , சத்தி தன்னிடத்தில் அடங்கியிருப்பத் தான் ஒருவனாயே நிற்றலும் உடையன் என்க . ` பெண்ணுரு ஒருதிறனாகின்று ; அவ்வுரு - தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும் ` ( புறம் . கடவுள் வாழ்த்து .) என்றதுங் காண்க . மீள வுலகத்தைத் தொழிற்படுத்த நினையுங்கால் இருதிறனாய் நிற்பன் ஆதலின் , ` ஓருரு வாயினை ; மானாங் காரத்து - ஈரியல்பாய் ` என்றருளிச்செய்தார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் . ( தி .1 திருவெழுகூற்றிருக்கை .) உள் - வாயினுள் . ` உரையாடி ` என்பது , ` நா உரையாடுதற்கு ஏதுவாய் உள்ள முதல்வன் ` என்னும் பொருள தாய் , கிழமைப் பொருளில் வந்த , ` நாவிற்கு ` என்னும் நான்காவதற்கு முடிபாயிற்று . கரு - முதல் . ` உலகுக்கு ` என்பது , தாப்பிசையாய் , முன்னருஞ் சென்று இயைந்தது . ` கண் ` என்றது , நடாத்துவோனாதல் பற்றி . ` முன்னே தோன்றிநின்று நடாத்துவான் ` என்பது பொருளாகலின் , ` முன்னே தோன்றும் ` என்றது , உடம்பொடு புணர்த்தல் . இத் திருப் பாட்டுள் , ` வயிரம் ` என்றதனால் , இறைவனது சிறப்பினையும் , ` நாள் , கிழமை , கோள் ` என்றவற்றால் , அவன் காலமாய் நின்று அதனை நடாத்தி , உலகினைத் தொழிற்படுத்துதலையும் , ` அமுதம் ` என்றதனால் , அவனது இன்பம் , அருள் , ஆற்றல் என்பவற்றையும் , ` பாலின் நெய் ` முதலிய மூன்றாலும் , அவன் , உடலில் உயிர்போல உலகத்தோடு ஒன்றாய் நிற்றலையும் , ` உமைபாகனும் ` என்றதனால் , அவனது , ` தடத்தநிலை , சொரூபநிலை ` என்னும் இருநிலைகளையும் , ` நாவிற்கு உரையாடி ` என்றதனால் , எல்லாப் பொருள்களையும் இயக்குதலையும் அருளிச் செய்தவாறாம் .

பண் :

பாடல் எண் : 2

வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம்
தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

வித்து , முளை , வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற உருவத்தன் . தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன் . செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன் . தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும் தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம் தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன் .

குறிப்புரை :

` வித்து , முளை , வேர் போல்வான் ` என்றது , முறையே , உலகிற்கு ` முதற்காரணப் பொருளாயும் , உலகமாகிய காரியப் பொருளாயும் , அக்காரியப் பொருள் நிலைத்து நிற்றற்கு ஏதுவாயும் நிற்பவன் ` என்பதை விளக்கிநின்றன . இறைவன் உலகிற்கு முதற் காரணப் பொருளாய் நிற்றலாவது , வித்திற்கு நிலம்போல மாயைக்குச் சிறந்த நிலைக்களமாய் நிற்றல் . ` தாரகமாம் அத்தன் தாள் ` ( சிவஞான போதம் - சூ .1. அதி .2 .) என்றருளிச்செய்தார் , மெய்கண்ட தேவ நாயனார் . எனவே , நிலம் ஈரமாகிப் பதப்பட்ட பின்பே விதை அதனுள் அடங்கிப் பக்குவப்பட்டு முளையைத் தோற்றுவித்தல்போல , இறைவன் எண்ணங்கொண்ட பின்பே , மாயை பக்குவப்பட்டு உலகத்தைத் தோற்றுவிக்கும் என்க . உண்மையில் மாயையே முதற் காரணமாயினும் , அதற்கு இன்றியமையாத நிலைக்களமாய் நிற்றல் பற்றி , பான்மை வழக்கால் இறைவனை முதற்காரணமாகக் கூறுவர் . இறைவன் உலகமாகிய காரியப் பொருளாய் நிற்றலாவது உடல் உயிர் போல உலகிற் கலந்து நிற்றல் . உலகம் நிற்றற்கு இறைவன் ஏதுவாதலாவது , அத்தன்மைத் தாய ஊழினை அவன் இயக்கிநிற்றல் . எனவே , அவ்வூழே இங்கு வேரோடு உவமிக்கப்பட்டதென்க . ஊழ் உலகத்தைப் பற்றி வேறாகாது கிடத்தலின் , அதற்கு முளையின் வேறாகாதவேர் உவமையாயிற்று . ` வேண்டும் உருவம் ` என்பதில் , ` உருவம் ` என்பது , ` உருவினன் ` என அவற்றை உடையவன்மேல் நின்றது . ` இறைவன் தனது இச்சையால் , நினைத்த வடிவத்தினைக் கொள்வன் ` என்பதாம் . ` நிறுத்திடு நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே ` ( சிவஞான சித்தி சூ .1 - 45) என்றதும் காண்க . பத்து - அடியார் இலக்கணம் பத்து . அவை , ` கண்டம் விம்மல் , நாத்தழுதழுத்தல் , நகை முகங்காட்டல் , உடல் நடுங்கல் , மயிர்சிலிர்த்தல் , வெயர்த்தல் , சொல்லின்மை , வசமழிதல் , கண்ணீர் அரும்பல் , வாய்விட்டழைத்தல் ` என்பன . இவ்வாறு உபதேச காண்டத்துட் கூறப்பட்டது . ` பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே ` ( தி .4. ப .18. பா .10.) என சுவாமிகளும் , ` பத்துடையீர் ஈசன் பழவடியீர் ` ( தி .8 திருவெம்பாவை . 3) என ஆளுடைய அடிகளும் அருளினமை காண்க . இனி , ` பற்று ` என்பது , ` பத்து ` என மருவிற்றாகவும் உரைப்பர் . ` பாங்கனுமாம் ` என்பது , காரண ஆக்கப் பெயராய் , ` துணையாய் உடன்நிற்பவன் ` எனப் பொருள் தந்தது . ` பாங்கனுமாம் ` என்பதற்கு , ` தோழனும் ஆவான் ` என்றும் உரைத்தலுமாம் . ` ஓத உலவா ஒருதோழன் ` ( தி .8 திருவெம்பாவை . 10) என்றார் ஆளுடைய அடிகளும் . பால்நிறமும் ஆம் - ( செம்மை நிறமேயன்றிப் ) பால்போலும் வெண்மை நிறத்தனும் ஆவான் . வெண்மை நிறமும் சிவபிரானுக்குச் சொல்லப்படும் என்க . அன்றி , ஐந்து முகங்களில் மேல்முகமாகிய ஈசானமுகம் வெண்மையது ஆதலைக் குறித்தது எனினுமாம் . பரஞ்சோதி - மேலான ஒளி . ` தான் ` இரண்டும் அசைநிலைகள் . தொத்து - கொத்து ; குழு ; ` பதினெண் வகைப்பட்ட குழுக்களாகிய அமரர் கணம் ` என்க . கருத்து - பொய் ; கரவு , ` அமரர் போற்ற அவர்களுக்குத் தோன்றாது என் உள்ளத்துள் மறைந்து நின்ற கரவினை யுடையன் ` என்க . காணா காட்டும் - கண்டறியாதவற்றைக் காட்டும் .

பண் :

பாடல் எண் : 3

பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்
ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

பூவும் , பூவின் நிறமும் அதன் மணமுமாய் நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதி பாகன் . ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன் . தன்னை வழிபடாதவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து காலனால் அச்சம் நிகழா வண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான் .

குறிப்புரை :

` பூத்தானாம் , கோத் தானாம் ` என்பவற்றில் உள்ள ` தான் ` அசைநிலை . நிறத்தான் - நிறமாய் நிற்பவன் . ` பூக்குளால் ` என்பதில் , ` ஆல் ` அசைநிலை . வாசம் - மணம் . கோ - தலைவன் . ` சமயத்தார் கொண்ட தேவனாகி ` என மாற்றுக . ` யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகியாங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர் ` என்றது ( சிவஞான சித்தி சூ .2.25) காண்க . ` இடரே ` என்னும் எண்ணேகாரம் , ` துன்பம் ` என்பதனோடும் இயையும் . இடர் - இடையூறு . துன்பம் - மனக்கவலை . ` ஏத்தாதார்க்கு இடரையும் துன்பத்தையும் ஈவான் ` என்றதனால் , ஏத்துவார்க்கு அவை இரண்டையும் நீக்கியருளுவானாதல் பெறப்படும் . ` காலன் அடையாவண்ணம் காத்தான் ` என்க . ` கண்ணாம் ` என்பதற்கு , ` எனக்கு ` எனவும் , ` உலகுக்கு ` எனவும் ஆங்காங்கு ஏற்குமாற்றாற் கூறுக .

பண் :

பாடல் எண் : 4

இரவனாம் எல்லி நடமாடியாம்
எண்திசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்ல லறுப்பானுமாம்
ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறும்
குரவனாங் கூற்றை யுதைத்தான் தானாங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கரவனாங் காட்சிக் கெளியா னுமாங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை , இராப்பொழுதாகவும் , இரவில் கூத்தாடுபவனாகவும் எண்திசைக்கும் உரிய தேவனாகவும் , என் உள்ளத்தில் உறைபவனாகவும் , பாம்பினை அணிபவனாகவும் அடியார்களுடைய துன்பங்களைத் துடைப்பவனாகவும் , ஆகாயத்தையே வடிவாக உடையவனாகவும் , இடபத்தை இவரும் தலைவனாகவும் , கூற்றினை உதைத்தவனாகவும் தன் புகழ் கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர்களுக்கு என்றும் மறை பொருளாகவும் , அடியார்களின் மனக்கண்களுக்கு எளியவனாகவும் அவர்களுக்குக் கண்ணாகவும் உள்ளான் .

குறிப்புரை :

இரவன் - இராப்பொழுதாய் இருப்பவன் . எல்லி - இரவு . என் உள்ளான் - எனது உள்ளத்திருப்பவன் . அரவன் - பாம்பை அணிந்தவன் . ` எண்டிசைக்கும் தேவனாம் , ஆகாச மூர்த்தியாம் ` என்பன , முறையே , ` மண்ணிற்கும் விண்ணிற்கும் முதல்வனாய் நிற்பவன் ` என்றருளியவாறு . ` ஆகாச மூர்த்தியாம் ` என்பதற்கு , ` ஆகாயத்தையே வடிவாக உடையவன் ` என்றுரைப்பினும் அமையும் ; ` ஆகாய வண்ண முடையாய் போற்றி ` ( ப .57. பா .3) என்று அருளிச் செய்தல் அறிக . குரவன் - குரு . ` ஆனேறு ஏறும் குரவன் ` என்றது , உடம்பொடு புணர்த்தலாகலின் , ` ஆனேறு ஏறுவானாம் ; குரவனாம் எனக்கொள்க . குயலர் - வஞ்சகர் . ` குய்யம் ` என்பது ஈறுதிரிந்து , இடைக்குறைந்து , ` குயல் ` என நின்றது . அதனடியாய்ப் பிறந்த ` குயலர் ` என்பது வாளா பெயராய் நின்றது . ` குயலர் - தேர்ந்தவர் ` என்பது தமிழ்ப் பேரகராதி . காட்சிக்கு எளியனாதல் , வஞ்சம் இல்லாத மெய்யன்பர்க்கு என்க .

பண் :

பாடல் எண் : 5

படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் தானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக
மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

உலகைப்படைத்த பிரமனும் , அதனை ஊழி வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப் பிழம்பாய் நின்ற கருகாவூர் எந்தை , பகைவருடைய மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன் . சூலத்தையும் மழுவையும் ஏந்திப் பாம்பினை இடையில் இறுகக் கட்டிக் காளை மீது இவர்ந்தவன் . வஞ்சனை உடையவர் நெஞ்சத்தைக் கலக்கிக் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன் .

குறிப்புரை :

` பாரை ` என்பது தாப்பிசை , இடத்தல் - பெயர்த்தல் ; படைத்தவனாகிய பிரமனாகியும் , இடந்தவனாகிய திருமாலாகியும் நிற்பான் ` என்றதாம் . பரிசு - ( தனது ) தன்மை . ` ஒன்று ` என்பதற்கு , ` ஒன்றாக ` என உரைக்க . ` அளவற்ற தன்மைகளை உடையவன் ` என்றபடி . ` அழலால் ` என்பதனை , ` அழலை ` எனத்திரித்துக்கொள்க . ஒருக்கி - ஒருங்கு கூட்டி . ` ஒருக்கி நின்று உடைத்தானாம் ` என்க . அடைத்தான் - ( தன்னை ) அடையச் செய்தான் ; தாங்கி நின்றான் . ` சூலம் மழு அடைத்தான் ` என்க . அசைத்தல் - கச்சாகக் கட்டுதல் ; ` கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி ` ( ப .55. பா .2.) என்றருளிச் செய்தல் காண்க . ` ஆனேற்றாற் பயன்கொள்வோர் , இரண்டு ஆனேறு உடையராதல்வேண்டும் ; அவ்வாறன்றி , ஓர் ஆனேற்றினாலே பயன்கொள்கின்றான் ` என்றபடி . ` கடைந்தானாம் ` என்பது , வலித்தலாயிற்று . கடைந்தான் - கலக்கினான் ; ` கடைதான் ` என்பது விரித்தலாயிற்று எனக்கொண்டு , ` விரும்பாத பொருளாய் இகழ நிற்பவன் ` என , உரைத்தலுமாம் . கள்ளம் வல்லாரை , ` அறிவார் ` என்றது , புகழ்தல்போல இகழ்ந்தது .

பண் :

பாடல் எண் : 6

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாம்
சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாம்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

முதற்பொருளாய் வடிவு கொள்வோனாய் , எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டவனாய் , என்றும் மூப்படையாத மேனியனாய் , முக்கண்ணினனாய் , நற்பண்புகளுக்கு இருப்பிடமாய்த் தன்னை அடைந்தவர்களின் துயர்தீர்க்கும் செல்வனாய் , கருகாவூர் எந்தை , சூரியனுக்கும் ஒளி வழங்குபவனாய்த்தன் திருமேனியில் ஒருபாகத்தைத் திருமாலுக்கும் மற்றொரு பாகத்தை உமாதேவிக்கும் வழங்குபவனாய் , மன்றங்களில் கூத்தாடுபவனாய் , தேவர்களுக்கு எல்லாம் இறுதிக்காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்தவனாய் , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் .

குறிப்புரை :

மூலன் - முதற் பொருளாய் உள்ளவன் . இது மூர்த்திமானாதலையும் குறித்தல் காண்க . மூர்த்தி - வடிவமாய் நிற்பவன் , முன் - காலவயப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன் . சீலன் - ஒழுக்கமுடையவன் ; தவவேடம் உடையவன் . செஞ்சுடர் - சூரியன் ; ` அவனுடைய ஒளிக்கும் காரணமாய் உள்ளவன் ` என்றபடி . ` ஓர் பங்கு மாலனும் ` என்பது கருத்தாகக் கொள்க . ` ஓர்பங்கு மாயோனை உடையவனுமாவான் ; மங்கையை உடையவனுமாவான் ` என்றபடி , ` எல்லாம் ` என்பதில் , எச்சத்தோடு உயர்வு சிறப்பாய்நின்ற உம்மை விரிக்க . ` காலனாங்காலன் ` இறுதிக் காலமாய் நிற்கும் கூற்றுவன் .

பண் :

பாடல் எண் : 7

அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டு ( ஆல நிழலில் தங்கி ) ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு , ஆகாய கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறை சூடி , தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான் . அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய் , பார்வதிபாகனாய் , உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் .

குறிப்புரை :

ஆலத்தான் - ஆல் நிழலில் இருப்பவன் . விடம் உண்டவனும் ஆம் . அண்டம் - விண்ணுலகம் . ` வானோர் ` என்றது , வாளா , ` தேவர் ` என்னும் பொருட்டாய் நின்றது . திங்களான் - சந்திரனை யணிந்தவன் . ` நாசன் ` என்புழி ` ஆம் ` என்பது தொகுத்தலாயிற்று . உரைசேர் உலகத்தார் - நாத்திகம் முதலான பலவற்றையும் நாத்தழும் பேறப் பேசும் உலகத்தார் . ` என் உள்ளத்தினும் உள்ளான் ; அவர் உள்ளத்தினும் உள்ளான் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 8

துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
படிதானாம் பாவ மறுப்பா னாகும்
பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாம்
கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கடியானாங் காட்சிக் கரியா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை உடுக்கையாகவும் உடுக்கையின் முழக்கமாகிய ஒலிகளாகவும் , அவ்வொலியிலிருந்து தோன்றிய மொழிகளைப் பேசுவாருடைய சொற்களின் வாய்மை பொய்ம்மைகளைச் சோதிப்பவனாகவும் , நன்னெறியாகவும் , பாவத்தைப் போக்குபவனாகவும் , வெள்ளிய நீறணிந்த பரஞ்சோதியாகவும் கொடிய கூற்றுவனை உதைத்தவனாகவும் , உண்மை கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர் கிட்டுதற்கு அரியனாய் , அவர்களை ஒறுப்பவனாகவும் , அடியார்க்கு வழிகாட்டும் கண்ணாகவும் உள்ளான் .

குறிப்புரை :

துடி - ` உடுக்கை ` என்னும் பறை . இதனை , படைத்தற் றொழிலுக்கு அடையாளமாக இறைவன் ஏந்தி நிற்றலின் , சிறந்தெடுத்து அருளிச்செய்தார் . ` தோற்றம் துடியதனில் ` ( உண்மை விளக்கம் - 36.) என்றது காண்க . ஒலியினும் நுட்பமாய்க் கலந்து நிற்றலின் , ` துடியின் முழக்கந் தானாம் ` என்றருளினார் . ` ஓசை ஒலி யெலாம் ஆனாய் நீயே ` ( ப .38. பா .1.) என அருளிச்செய்தல் காண்க . சொற்களைச் சோதித்தலாவது , அவை வாய்மையாதலையும் , பொய்ம்மையாதலையும் உணர்தல் . படி - நெறி . ` கொடியானாம் கூற்று ` என்க . கடியான் - ஒறுப்பவன் . காட்சிக்கு அரியனாதலும் குயலர்க்கே .

பண் :

பாடல் எண் : 9

விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை செந்நிற ஒளிவீசும் சோதியனாய் , தேவர்களும் அறியாத நிலையினனாய் , தன்னால் கொல்லப் பட்ட யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய் , பலபலதாளத்திற்கு ஏற்பக் கூத்தாடுபவனாய் , அட்டமூர்த்தியாய் , எண்தோளனாய் , என் தலையின் உச்சி மேலானாம் எம் தலைவனாய் , இளைய வடிவினை உடைய மன்மதனைக் கோபித்தவனாய் , அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் .

குறிப்புரை :

உருவம் - நிறம் , சூழல் - நிலை . ` யானையினது பட்டுப் போன்ற மெல்லிய தோலை உரித்தவன் ` என்க ; ` நகம் பட்டு உருவுமாறு உரித்தவன் ` எனினுமாம் . பாணி - தாளம் ; ` பல பல தாளத்தில் நடிப்பவன் ` என்பதாம் . எட்டு உருவம் - அட்ட மூர்த்தம் ; அவை ஐம்பூதங்கள் , சூரியசந்திரர் , ஆன்மா என்பன . மூர்த்தி - தலைவன் . கட்டு உருவம் - இளமையான ( அழகிய ) உருவம் ; இது கூறவே , ` கடியான் ` என்றது , மன்மதனை விளக்கி நின்றது . ` கடியானைக் கட்டுருவங் காய்ந்தானாகும் ` என்க .

பண் :

பாடல் எண் : 10

பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி
யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

தன்னை இடபமாய்த் தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப் போக்கிய கருகாவூர் எந்தை , தன்னைப் பகைத் தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன் . தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த கையனாவான் . நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் .

குறிப்புரை :

பொறுத்திருந்த - இடபமாய்ச் சுமந்திருந்த . சிவபிரான் மாயோனது உள்ளத்தில் வீற்றிருந்து அவனது மனக்கவலையை மாற்றியருளுதலை . ` பையஞ் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தான் ` ( தி .4. ப .4. பா .10.) என அருளிச் செய்தமையான் அறிக . திருவாரூர்த் தியாகேசரது வரலாறு இதனை இனிது விளக்கும் . செறுத்திருந்த - சினந்திருந்த . ` மதில்கள் ` என்புழி உம்மை விரிக்க . ` மூன்று ` என்றது . அம்மதில்களால் சூழப்பட்ட ஊர்களை , ` வேவ மூட்டும் ` என இயையும் . குனிய - வளைந்து நிற்க . ` ஒரு தலையை , தெரிய நோக்கி , அறுத்திருந்த கையான் ` என இயைக்க . தெரிய நோக்கி - ( அவன் செருக்குக் கொண்டமையை ) விளங்க உணர்ந்து . ` ஆம் , ஆகும் ` என்பவற்றிடையே , ` போலும் ` என்றருளினார் . அவற்றிற்கு ஈடாக இஃது இயையினும் பொருந்தும் என்றற்கு .

பண் :

பாடல் எண் : 11

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகும்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன் . தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக்கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன் . பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான் , பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன் . கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன் . அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான் .

குறிப்புரை :

` மூன்றும் , பத்தும் , அஞ்சும் ` என்பவற்றில் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது . ` மாட்டி ` ` அடக்கி ` என்னும் எச்சங்களுக்கும் பயனிலைகள் முன்னே நின்றன . உடனே - கயிலையை எடுத்த உடனே . வைத்து - கால்விரலை வைத்து . எண்ணான் - மதியாதவன் ; இராவணன் . இசைந்தான் - அவனுக்கு அருள்புரிய நேர்ந்தான் ; அதனால் கேட்டான் என்க . அஞ்சு - ஐம்புலன் . ஆகாய மந்திரம் - ஆகாயமாகிய கோயில் ; வீட்டுலகம் , ஆனான் - பொருந்தினான் , கறுத்தான் - வெகுண்டான் .
சிற்பி