திருப்புறம்பயம்


பண் :

பாடல் எண் : 1

கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோளூர் தண்வளவி கண்டியூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

கொடிகள் கட்டப்பட்ட மாட வீடுகளைக் கொண்ட நீண்ட தெருக்களை உடைய கூடல் , கோட்டூர் , கொடுங்கோளூர் , வளவி , கண்டியூர் , கூத்து நிகழ்த்தும் சிறந்த மருகல் இவற்றில் நாளும் தங்கி அழகிய ஒற்றியூர் ஒற்றிவைக்கப்பட்டது என்னும் பொருளைத் தருதலில் அதனை நீங்கிச் சூரியன் மறையும் மாலையிலே வண்டுகள் ஒலிக்கும் பழனம் , பாசூர் , பழையாறு , பாற்குளம் என்னும் இவற்றை நீங்கி இன்று திருநீறு அணிந்த மேனியராய்ப் பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எங்களுடைய ஊர் புறம்பயம் என்று கூறி எம்பெருமானார் சென்று விட்டார் .

குறிப்புரை :

கூடல் - மதுரை . இதுமுதலாகப்பலதலங்கள் இதன்கண் அருளிச்செய்யப்பட்டன . அவற்றுள் , கொடுங்கோளூர் , வளவி , பாற்குளம் என்பன வைப்புத்தலங்கள் . வைகி - தங்கியபின் , ஒற்றியாக - ஒற்றியாகையால் . இங்கு , ` நீங்கி ` என ஒரு சொல் வருவிக்க . ` வைகி , கைவிட்டு ` என்பன , அவர் அன்றன்று கூறியதனைக் கூறியவாறே தெளிந்து கூறியன . ` இந்நாள் , ` நம் ஊர் புறம்பயம் ` என்று ( சொல்லிப் ) போயினார் ` என்க . முன்பெல்லாம் கண்ட நாள்களை இறந்த காலமாக மறந்து , இறுதியிற் கண்ட நாளையே நிகழ்காலமாக நினைந்துநின்று கூறுகின்றாளாதலின் , அதனை , ` இந்நாள் ` என்றாள் . ` மீண்டு வந்திலர் என்பது குறிப்பெச்சம் . இதனால் தனது விதுப்பு ( விரைவு ) அறிந்து தோழி தூது விடுவாளாதல் பயன் என்க . இறைவனை அடையப் பெறாது வருந்துவார்க்கு அவரது ஆற்றாமையை அறிந்து இறைவன் திருப்புறம்பயத்தில் வெளிநின்றருளல் இதன் உண்மைப்பயன் ; ஆகவே , அதன்பொருட்டு இத்திருப்பதிகம் வெளியாயிற்றென்க .

பண் :

பாடல் எண் : 2

முற்றொருவர் போல முழுநீ றாடி
முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல உறங்கு வேன்கை
ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணு கின்றார்
மற்றொருவ ரில்லைத் துணையெ னக்கு
மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

தவம் முற்றிய ஒருவரைப்போல உடல் முழுதும் திருநீறு பூசி , பிறைசூடி , முந்நூல் அணிந்து ஒற்றுவதற்கு வந்த ஒருவர் போலப் பொய் உறக்கம் கொண்ட என்கையிலிருக்கும் ஒளி பொருந்திய வளையல்களை ஒன்றொன்றாக எண்ணுகின்றார் . எனக்கு இவரன்றித் துணைவர் வேறு யாரும் இல்லை . இவருடைய செயலைக் கண்டு பித்துப்பிடித்தவரைப் போல மயங்குகின்ற என்னிடத்தில் ` எங்களுடைய ஊர் திருப்புறம்பயம் ` என்று கூறிப் பாம்பினைக் கச்சாக அணிந்த எம்பெருமான் பூதங்கள் தம்மைச்சூழ என்னைவிடுத்துப் போய் விட்டார் .

குறிப்புரை :

முற்று ஒருவர் - ( தவம் ) முற்றிய ஒருவர் . முழுநீறு - நீற்றுக்குரிய தன்மை நிறைந்த நீறு ; அது , மிக வெள்ளியதாதல் - ஒற்று ஒருவர்போல உறங்குதலாவது , மறைந்துநின்று உண்மையை , கண்டும் கேட்டும் உணர்கின்ற ஒற்றர் ஒருவர் , அதன்பொருட்டுப் பொய்யாக உறங்குதல்போல உறங்குதல் . ` ஒற்று ஒருவர் ` என்பதும் , ` முற்றொருவர் ` என்றதுபோல வினைத்தொகை . இறைவரது கருத்தினையறிதற் பொருட்டு அவ்வாறுறங்கினாள் என்க . வளையை ஒன்றொன்றா எண்ணியது நலம்பாராட்டி . ` எண்ணுகின்றார் ` என்றது , இறப்பில் நிகழ்வு . ` மற்றொருவர் இல்லைத் துணை எனக்கு ` என்பதனை இறுதிக் கண் கூட்டுக . மால் - பித்து . ` உறங்குவேன் , மயங்குவேன் ` என்பன , இறப்பின்கண் , முந்நிலைக்காலமுந் தோன்றும் இயற்கை உணர நின்றன . ( தொல் - சொல் . 240)

பண் :

பாடல் எண் : 3

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்
திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

தீங்கு தருகின்ற விடத்தை நுகர்ந்த , மாலையின் செந்நிறத்தை உடைய பெருமான் , ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய தோளின் மீது மேலாடையாக அணிந்து , ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி , எம் இல்லத்து வந்து ` திருவே ! உணவு இடு ` என்று கூற , உணவு கொண்டுவர உள்ளே சென்றேன் . உணவுகளோடு யான் மீண்டு வரக் குழம்போ சோறோ ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து , பூதங்கள் சூழப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

ஆகாத - தீங்கு தருகின்ற . ஏகாசம் - மேலாடை . ` ஏந்திவந்த ` தென , அளபெடையாகவும் பாடம் ஓதுப . ` திருவேபலி இடு ` என்றியைக்க . திரு - திருமகள் . பிச்சை ஏற்போர் அதனை இடுவாளை , ` திருமகளே ` என்றழைத்தல் வழக்கு . பாகு - குழம்பு , பலி - சோறு . கண் உள்ளே - கண்ணினது உள்ளிடத்தையே . ` பற்றி ` என்றது , ` கண்ணிற் கருமணியினுள்ள பாவையே யாகி ` என்றதாம் . ` கருமணியிற் பாவாய்நீ போதாய் யாம்வீழும் - திருநுதற் கில்லை இடம் ` ( குறள் 1123) என்பதனை நோக்குக . ` கண்ணுளே ` என்பதும் பாடம் . ` போகாத வேடத்தார் ` என்றது . ` அவரது வேடம் என் கண்ணி னின்றும் நீங்காத இயல்பினது ` என்றதாம் . ` வேடத்தராய்ப் போயினார் ` என்க .

பண் :

பாடல் எண் : 4

பன்மலிந்த வெண்தலை கையி லேந்திப்
பனிமுகில்போல் மேனிப்ப வந்த நாதர்
நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை
நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்
கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்
கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்
பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

பல்மிக்க வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பனிபொழியும் மேகம் போன்று திருநீற்றால் வெள்ளிய மேனியை உடைய வஞ்சகராகிய எம் தலைவர் , நெல் மிக விளையும் நெய்த்தானம் , சோற்றுத்துறை , நியமம் , துருத்தி , நீடூர் , பாச்சிலாச் சிராமம் , கற்கள் மிக்க உயர்ந்த கழுக்குன்றம் , கடற்கரையிலமைந்த நாகைக்காரோணம் என்ற தாம் உகந்தருளியிருந்த திருத்தலங்களை விடுத்து , இன்று பொலிவுமிக்க தம் தேவிமாரோடு கூடியதாம் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

பல் மலிந்த - பற்கள் நிறைந்த . பனி முகில் - பனியைப் பெய்யும் மேகம் ; இது வெள்ளிதாய் இருக்கும் . இனி , ` குளிர்ந்த முகில் ` எனக்கொண்டு , ` அம்மை திருமேனியைக் குறித்தது ` என்றலுமாம் . ` பிரபந்தம் என்பது , ` பவந்தம் ` என்றாயிற்று ` பிரபஞ்சம் ` என்பது , ( திருவிளை . மண்சு . 72) ` பவஞ்சம் ` என வந்ததுபோல . ` உரையும் பாட்டும் ஆகிய செய்யுள்களுக்கெல்லாம் உண்மையில் உரிய பொருள்சேர் புகழையுடைய தலைவர் ` என்றவாறு ` பவந்தர் - வஞ்சர் ; கள்வர் ` என்றுங் கூறுவர் . நியமம் , ` பரிதிநியமம் ` என்னுந் தலம் . பாச்சில் - பாச்சிலாச்சிராமம் . ` நீர்க்கழுக்குன்றம் ` எனமாற்றுக . பொன் அழகு ; கோதையர் ; தேவியார் .

பண் :

பாடல் எண் : 5

செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

இறந்தார் தலைமாலையைக் கையிலெடுத்துத் தலையில் சூடிச் சிவந்த மேனியில் பெரிய தலையை உடைய யானைத் தோலைப் போர்த்துப் பார்வதி பாகராய் , மானைக் கையில் ஏந்தி , ஆறுநூறாயிரத்து அறுபது தேவர்கள் தம் கூத்தினைக் காணுமாறு அருள் செய்து , புலித்தோலை இடையில் கட்டிக் கையில் புத்தகம் ஒன்றனை ஏற்றுப் புறம்பயம் நம் ஊர் என்று எம்பெருமான் போயினார் .

குறிப்புரை :

சிவபிரான் , கையிலும் தலைமாலை ஏந்திநிற்றல் , இத்திருப்பாடலாற் பெறப்படும் . அத் தவத்த தேவர் - அந்தத் தவம் உடைய தேவர் . தேவர் அறுபதின்மருக்கும் . ஆறுநூறாயிரவர்க்கும் ஆடல் காட்டினமை இத்தலத்துள் நிகழ்ந்தது போலும் . புத்தகம் கைக்கொள்ளல் , ஆசிரியக்கோலம் . ` புறம்பய மதனில் அறம்பல அருளியும் ` ( தி .8 திருவா . கீர்த்தி . 90) என்பதனால் , இறைவன் இங்கு ஆசிரியனாய் இருந்து அருளினமை அறியப்படுகின்றது . ` திறம்பயனுறும்பொருள் தெரிந்துணரும் நால்வர்க்கு - அறம்பய னுரைத்தனை புறம்பய மமர்ந்தோய் ` என , ஆளுடைய பிள்ளையாரும் அருளிச் செய்தார் . ( தி .2. ப .30. பா .1.)

பண் :

பாடல் எண் : 6

நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்லபுலி யதள்மேல் நாகங் கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

விடம் அடைந்த கழுத்தினராய் , நீறு பூசி , பெரிய புலித்தோல் மேல் பாம்பினை இறுகத் கட்டிக் கொண்டு , செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய்ப் பவளம் போன்ற சிவந்த மேனியை உடைய எம்பெருமான் யான் உறங்கும் இடத்து வந்து துடியை ஒலித்து என்னை விழிக்கச் செய்து ` யான் பராய்த் துறை ஊரினேன் ` என்றார் `. யான் திடுக்கிட்டு எழுந்திருந்தேன் . பின் அவர் என் குறிப்பறிந்து மெய் தீண்டிச் செய்தனவற்றைச் சொற்களால் எடுத்துக்கூறும் ஆற்றல் இல்லேன் . தம் சிவந்த சடையில் கங்கையைச் சூடி அப்பெருமான் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

` பராய்த்துறையேன் ` என்றது வேறு முடிபாகலின் , பால்வழுவின்மை யுணர்க . இது , வருகின்ற பாடல்களிலும் ஒக்கும் . ` ஓர் பவள வண்ணர் ` என்றது , முன்னர் அறிந்திலாமை குறித்தது . துஞ்சிடை - உறங்குமிடத்து . ` அதன்பின் நிகழ்ந்தது உனக்குச் சொல்ல மாட்டேன் ` என்க . நிகழ்ந்தது , குறிப்பறிந்து மெய்தீண்டியது . மாட்டாமை , நாணத்தால் ஆயதென்க . இனி , ` சொல்லமாட்டேன் ` என்றதற்கு , ` காதலும் நாணமும் ஒருநிலையே நின்றமையால் , கடிந்தாயினும் நயந்தாயினும் ஒன்றும் சொல்ல இயலாதேனாயினேன் ` என்றுரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 7

மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு
திருமுண்ட மாஇட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

ஒருகையில் மான் குட்டியை ஏந்தி , மற்றொரு கையில் மழுப்படையை ஏந்தி , ` யான் மறைக்காட்டில் உள்ளேன் ` என்று இனிய சொற்களைப்பேசி , விளங்கிய திண்ணிய தோள்கள் மீது திருநீற்றைப் பூசி , நெற்றியில் திரிபுண்டரமாகத் திருநீறணிந்து , சுருண்ட கூந்தலை உடைய மகளிர்பின் சென்று , தம் கண்கள் கரிந்து நீர் சொரியுமாறு அவர்களை நெடுநேரம் அசையாமல் நோக்கி , புள்ளிகள் பொருந்திய பாம்புகளை இறுகக் கட்டிக் கொண்டு பூதங்கள் சூழ எம்பெருமானார் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

மறி - மான் கன்று , மழலை - இனிய மொழி . செறி - செறிதல் ; நெருங்குதல் ; கிளைத்தல் . ` நீறு கொண்டு சென்று ` என இயையும் . திருமுண்டமா இட்ட திலக நெற்றி - மங்கல முகமாமாறு இட்ட திலகத்தை உடைய நெற்றியை உடைய ( கூந்தலார் என்க ). நெறி இலங்கு கூந்தலார் - நெறிப்பு விளங்கும் கூந்தலை உடையவர் . அவர் பின் பின் சென்று என்றது , ` அன்னார் பலரிடத்துத் தாமே வலியச் சென்று ` என்றவாறு . நெடுங்கண் பனிசோர - ( நிறையழிந்து ) நீண்ட கண்கள் நீர்த்துளிகளைச் சொரியுமாறு . நோக்கி - காதல் நோக்கு நோக்கி . பொறி - புள்ளி ; இது படத்தின்கண் உள்ளது .

பண் :

பாடல் எண் : 8

நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட்டியுங்
குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை
நல்லாளை நல்லூரே தவிரே னென்று
நறையூரில் தாமும் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

ஓரிடத்தில் தங்காமல் பல ஊர்களும் பிச்சை ஏற்றலைக் கருதிச் சென்று , வளையலை வரிசையாக அணிந்த மகளிர் பிச்சை வழங்க , அதனோடு அவர்களுடைய அடக்கம் என்ற பண்பினையும் கைக்கொண்டு , தம் வாகனமாகக் கொலைத் தொழில் செய்யும் காளையையும் , வாச்சியங்களான கொக்கரையையும் கொடுகொட்டியையும் குடமூக்கு என்னும் தலத்தில் விடுத்து , நல்லாளை , நல்லூர் , நறையூர் இவற்றில் தங்குபவரைப் போலக் கூறிக் கொண்டு , மகளிரை நிறையழிக்கும் கோலமுடைய நம் பெருமானார் பூதம் சூழப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

நில்லாது - ஓர் இடத்தில் நிலையாக இராமல் , ஏகாரம் தேற்றம் , ` பலியுங்கொண்டு ` என்பதனைத் தழுவி நிற்றலின் ` நிறையுங் கொண்டு ` என்னும் உம்மை இறந்தது தழீஇயது . ` கொல்ஏறு ` என்பதில் ` கொல்லுதல் ` என்பது இன அடை . கொக்கரை - சங்கு . ` ஒழிய ` என்பதனை , ` வந்து ` என்பதொரு சொல் வருவித்து முடிக்க . ` குளிர்தண் பொய்கையையும் ` நல்ல ஆட்களையும் ( ஆடவர்களையும் ) உடைய நல்லூர் ` என்க . ` ஆளை ` என்னும் ஐகாரம் , சாரியை . ` நறையூரிற் றாமுந் தவிர்வார்போல ` என்பதனை , ` ஒழிய ` என்பதன் பின்னர்க் கூட்டுக . ` தாமும் ` என்னும் உம்மை அசைநிலை . எல்லா ஊரும் தம்முடையனவே ஆக , சில ஊரைத் தவிர்வார்போல , ` நல்லூரே தவிரேன் ` என்று கூறினார் என்றாள் . பொல்லாத வேடம் - மகளிரை நிறையழிக்கும் கோலம் .

பண் :

பாடல் எண் : 9

விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் திருநீற்றைப் பூசி ஓர் ஆமையோட்டினை அணிகலனாகப் பூண்டு , காதில் சங்கத் தோட்டினை அணிந்து , இடக்கையிலே வீணையை ஏந்திக் கங்கை தங்கும்சடை மீது பிறையை நாற்றிசையும் அதன் ஒளிபரவுமாறு வைத்து , மகிழ்ந்த , செந்தீ நிறத்துப் பெருமானார் , மேகலையை இடையில் அணிந்த உமைபாகராய் , பிறர் அணுகுதற்கரிய சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய தலைவராய் , மேம்பட்ட காளையை இவர்ந்து , பூதம் சூழப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

விரை ஏறு - ` மிக்க நறுமணப் பொருளாகப் பொருந்திய ` வெந்த சாம்பல் விரையெனப் பூசியே ` ( தி .3. ப .54. பா .3.) என்றருளிச்செய்ததும் உணர்க . வெண்தோடு - சங்குத் தோடு . ` இடக்கை ` என்பது . ` இடங்கை ` என மெலித்தலாயிற்று . ஆரிடம் - அணுகுதற்கரிய இடம் ; சுடலை . ` எல்லாம் ஒடுங்கிய இடம் ` என்னும் குறிப்பும் ஓர்க . ` ஐயன் ` என்றது , பன்மையொருமை மயக்கம் . புரை - உயர்வு ; தூய்மை .

பண் :

பாடல் எண் : 10

கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கினவி நாய கன்னும்
பூவாய பீடத்து மேல யன்னும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

தேவர் தலைவனான இந்திரன் உள்ளிட்டவரும் , முருகனும் , இடர்களையும் விநாயகனும் , தாமரையின் மேல் உள்ள பிரமனும் , உலகங்களை அளந்த திருமாலும் வணங்கி வாழ்த்துச் சொல்லுமாறு இனிய பாடல்களைப் பாடி , அவற்றிற்கு ஏற்ப ஆடி , வண்டு ஒலிக்கும் கொன்றைப் பூவினை அணிந்த தாமும் தம் பூதங்களுமாய்ப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று பெருமான் போயினார் .

குறிப்புரை :

இத்திருப்பாடல் , இறைவன் வெளிநின்று அருளுங் காட்சியை வகுத்தருளிச் செய்தது . ` இந்திரனை உள்ளிட்ட தேவர் பொருந்த ( புறஞ் சூழ்ந்து நிற்க ). குமரன் முதலாயினார் அருகிருந்து போற்ற ` என்க . பாவாய - பாட்டாகி நின்ற . பாரிடம் - பூதம் . ` தாமுமாய் ` என ஆக்கம் வருவிக்க . பரந்து - பரவி வந்து . பற்றி - என்னைத் தம் வயமாக்கி . பூவார்ந்த - பூவாகி நிறைந்த ; ` அழகு மிக்க ` எனினுமாம் . கொன்றை - கொன்றைக்கண் .
சிற்பி