திருப்பழனம்


பண் :

பாடல் எண் : 1

அருவ னாய்அத்தி யீருரி போர்த்துமை
உருவ னாயொற்றி யூர்பதி யாகிலும்
பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே.

பொழிப்புரை :

அருவத் திருமேனியுடையவனாய் யானையின் ஈரப்பட்ட உரியைப் போர்த்தவனாய் , உமையை ஒரு பாகத்தில் உடையவனாய் ஒற்றியூரைத் தன்பதியாக் கொண்டவன் ஆயினும் , பருத்த வரால் மீன்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பழனம் என்னும் தலத்தினுள்ளான் அருட்செல்வத்தினால் இத்தேவர்களுக்குச் செல்வம் பெருகுதலை விரும்பும் .

குறிப்புரை :

அருவன் - உருவமற்றவன் . அத்தி - யானை . உமை உருவன் - பார்வதியோடு கூடிய உருவமுடையவன் . பதி - வாழும் ஊர் . பருவரால் - பெரியவரால் மீன்கள் பொருந்திய . பழனத்தான் - திருப்பழனம் என்னும் தலத்திற்குரியவன் . திருவினால் திரு வேண்டும் - செல்வங்களைக்கொண்டு சிவப்பணி செய்து வீடு பேற்றைக் கேளுங்கள் . இத் தேவர்க்கே - இத்தேவரிடத்தே .

பண் :

பாடல் எண் : 2

வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐய னையறி யார்சிலர் ஆதர்கள்
பைகொ ளாடர வார்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.

பொழிப்புரை :

படங்கொண்ட பாம்பை அரையில் ஆர்த்துக் கட்டிய பழனத்தலத்து இறைவனும் , உலகத்தினுள்ளார் எல்லாரும் வந்து வணங்கி வலம் கொள்ளுதற்குரிய தலைவனும் ஆகிய பெருமானைச் சில குருடர்கள் அறியார் ; சில பொய்யர்கள் வணங்காது வீண் காலங்கள் போக்குவர் .

குறிப்புரை :

வையம் - உலகம் ; அஃது ஆகுபெயராய் மக்களை உணர்த்திற்று . ஐயன் - அழகியவன் . ஆதர்கள் - அறிவற்றவர்கள் . பைகொள் ஆடரவு - படத்தைக் கொண்டு ஆடுகின்ற பாம்பு . ஆர்த்த - கட்டிய . பழனன்பால் - திருப்பழனத்திறைவரிடத்து . அன்பு கொள்ளாதென வருவிக்க . பொய்யர் - பொய்ப்பொருள்களைப் பின்பற்று கின்றவர்கள் . காலங்கள் போக்கிடுவார்கள் - வறிதே காலங்களைக் கழிப்பார்கள் .

பண் :

பாடல் எண் : 3

வண்ண மாக முறுக்கிய வாசிகை
திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணு மாகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீர் அவ னாயிர நாமமே.

பொழிப்புரை :

அழகுபெற முறுக்கப்பெற்ற வட்டமாகிய திருச் சடையிற் சேர்த்து உறுதியாகக் கட்டி முடித்துப் பண்பாடும் இறைவனாகிய பழனத்தலத்துப் பெருமானின் ஆயிரம்நாமங்களை நீர் எண்ணுவீராக .

குறிப்புரை :

வண்ணமாக முறுக்கிய - அழகாக முறுக்கிக் கட்டிய . வாசிகை - தலை . திண்ணமாக - பெரிதாக . பண்ணுமாகவே பாடும் - இசையிலக்கணக்கூறு தெரியப் பாடுகின்ற . அவன் ஆயிரம் நாமத்தை நீர் எண்ணும் - அவனது பல திருப்பெயர்களை நீங்கள் நினையுங்கள் .

பண் :

பாடல் எண் : 4

மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க்கொண் மாலை சடைக்கணிந் திட்டதே.

பொழிப்புரை :

பிடித்த கொடுமையை உடைய பாம்பு நெடுமூச்சு விடவும் , அப்பாம்பினைக்கண்ட பிறைமதி நடுங்கிக் காண அப் பாம்பைப் பற்றியாடுபவனாகிய கொன்றைத்தாரும் மாலையும் உடைய பழனத்தலத்துப் பெருமான் இவற்றைச் சடைக்கணிந்திட்டது என்னையோ ?

குறிப்புரை :

பிடித்த மூர்க்கப்பாம்பாகிய அது மூச்சிட வாக்கு அப்பாம்பினைக் கண்ட துணிமதி பார்க்க அப்பாம்பினைப் பற்றும் பழனத்தான் என மாற்றுக . பிடித்த - பற்றிய . மூர்க்கப் பாம்பு - கொடிய பாம்பு . மூச்சிட - பெருமூச்சுவிட்டுச் சீற . வாக்கு - நீர் ஒழுகியதுபோல் நெளிந்துவரும் . துணிமதி - பிறை மதி . பார்க்க - காண . பற்றும் - பிடித்து ஆட்டும் . தார்க்கொள்மாலை - இண்டை முதலிய மாலை வகைகளோடு . அணிந்திட்டது - தலையில் சூடியுள்ளது . பழனத்தான் சூடியுள்ளான் . கொன்றை மாலையோடு இவற்றைச் சூடியது என்னையோ என்க .

பண் :

பாடல் எண் : 5

நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோல முண்ட குணத்தால் நிறைந்ததோர்
பாலு முண்டு பழனன்பா லென்னிடை
மாலு முண்டிறை யென்றன் மனத்துளே.

பொழிப்புரை :

நேர்ந்ததாகிய கோலமாக நஞ்சினை உண்ட குணத்தால் நிறைந்த நீலகண்டனும் , பழனத்தலத்தின் கண் உள்ள இறைவனும் ஆகிய பெருமானிடத்து என்றன் மனத்துள் சிறிது மயக்கம் உள தாகின்றது .

குறிப்புரை :

நீலம் - நீலநிறம் பொருந்திய விடம் . நேர்ந்ததோர் - பொருந்தியதோர் . கோலமுண்ட - அழகைக் கொண்ட . குணத்தால் நிறைந்தது - நற்குணங்களால் நிரம்பிய அம்பிகை . ஓர் பாலுமுண்டு - இடப்பாகத்தில் எழுந்தருளியுள்ளது . என்னிடை - என்னிடத்தே . மால் - மயக்கம் . இறை என்பதை இறைவனே என்றும் , சிறிது என்றும் பொருள் கூறலாம் .

பண் :

பாடல் எண் : 6

மந்த மாக வளர்பிறை சூடியோர்
சந்த மாகத் திருச்சடை சாத்துவான்
பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய்தந்தை யெம்பெரு மானுமே.

பொழிப்புரை :

பெருமை தரும்படியாக வளர்பிறையைச் சூடி ஒரு சந்தமாகத் திருச்சடை சாத்துவானும் , பந்தமாயினவற்றைத் தீர்ப்பானும் ஆகிய திருப்பழனத்து இறைவன் எந்தையும் , தாயும் , தந்தையும் , எம்பெருமானும் ஆவன் .

குறிப்புரை :

மந்தமாக - மெதுவாக . சந்தம் - மாலை . பந்தம் - வினை ; நம்மைச் சூழ்ந்த பாசம் . எந்தை - என் உண்மையான உயிர்த்தந்தை . தாய் தந்தை - உடலைப்பெற்று வளர்த்த தாயும் தந்தையுமாவன் . எம்பெருமான் - எங்கள் தலைவன் .

பண் :

பாடல் எண் : 7

மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்
பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாட்க ணின்று தலைவணங் கார்களே.

பொழிப்புரை :

எல்லோரும் பார்க்க நின்று பழனத்தின்கண் பரவுவார்க்கு அருள் வழங்கும் இறைவனின் திருவடிக்கண் நின்று தலை வணங்காதவர்கள் , அறிவிலிகளாகி வழியொன்றறியாதவர்களும் , பூக்களைக்கொண்டு கரத்தால் தொழ விழையாத மூடர்களும் ஆவர் .

குறிப்புரை :

மார்க்கம் - உண்மைச் சமயநெறி . மதியில்லிகள் - மதியிலிகள் . பூக்கரத்தில் புரிகிலர் - பூக்களைக் கையில்கொண்டு போற்றாதவர் . பார்க்க - அவனது திருக்கண் நோக்கு விழ . பரவும் - தோத்திரியுங்கள் . தாள்கள் - திருவடிகள் . தலை வணங்காரை நோக்கி இரங்கியது .

பண் :

பாடல் எண் : 8

ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை யாளொடுங் கூடவே.

பொழிப்புரை :

இமையோர்களாகிய தேவர்கள் பணி பல கண்டு தம் பதவியினின்றும் மேலே உயர்ந்தது கண்டும் , தீவினையாளர்கள் தெளிவடைந்தாரல்லர் . இழிந்தவராய மக்கள் பணியையும் விரும்பும் பழனத்தலத்து இறைவன் உமையாளொடுங் கூடி ஒரு கூறனாயினன் .

குறிப்புரை :

வானுலகின்கண் ஏறினாராகிய இமையோர்கள் என்க . கண்டும் தேறுவாரலர் - வானோர் வழிபடக்கண்டும் தெளிவாரல்லர் . பாறினார் - இழிந்தார் . மக்களது பணியையும் விரும்பும் பழனத்தான் என்க .

பண் :

பாடல் எண் : 9

சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புரம் மூன்றெய்தான்
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
எற்றி னான்மறக் கேனெம் பிரானையே.

பொழிப்புரை :

திரியும் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , பற்றியவர்களுடைய வினைகளைத் தீர்க்கும் பெருமானுமாகிய பழனத்தலத்து இறைவன் சுற்றுவாரையும் தொழுவாரையும் மேலே உயர்த்தும் ஒளிவண்ணனாயுள்ளனன் ; எம்பெருமானை எதனால் அடியேன் மறக்கக்கூடும் ?

குறிப்புரை :

சுற்றுவார் - வலம் வருவார் . சுடர்வண்ணன் மேல் - ஒளிவண்ணமுடைய பெருமானிடத்து . தெற்றினார் - உலகங்களை அழித்தவர்களாய் ; திரியும் என்க . பற்றினார் - பற்றுக்கோடாகக் கொண்டவர் . எற்றினால் - எதனால் .

பண் :

பாடல் எண் : 10

பொங்கு மாகடல் சூழிலங் கைக்கிறை
அங்க மான இறுத்தருள் செய்தவன்
பங்க னென்றும் பழன னுமையொடும்
தங்கன் தாளடி யேனுடை யுச்சியே.

பொழிப்புரை :

பழனத்தலத்து இறைவன் , பொங்குகின்ற பெருங்கடல் சூழ்ந்த இலங்கைக்கரசனாம் இராவணனது அங்கமானவற்றை இறுத்து அருள்செய்தவனும் , உமையொரு பங்கனும் , அடியேனுடைய உச்சியிலே தன் தாளிணைகளைத் தங்குமாறு செய்தவனும் ஆவான் .

குறிப்புரை :

பொங்கும் - அலையெழுப்பும். மா - பெரிய. அங்கமான - உடலுறுப்புக்களானவை. பங்கன் - மாதொரு கூறன். தங்கன் - தங்கியிருப்பவன். என்றும் - எப்பொழுதும்.
சிற்பி