திருநெய்த்தானம்


பண் :

பாடல் எண் : 1

கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புரம் மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.

பொழிப்புரை :

கொல்லிமலையில் வீற்றிருப்பவனும் , குளிர்ச்சி செறியும் குற்றாலத்தில் வீற்றிருப்பவனும் , பகைவர் புரங்கள் மூன்றையும் எரிசெய்தவனும் , திருநெல்லிக்காவில் உள்ளவனும் , நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானை வாயினாற் சொல்லி மெய்யினால் தொழுவார்கள் ஒளியோடு கூடி வாழும் உயர்நிலை பெறுவர் .

குறிப்புரை :

கொல்லியான் - கொல்லிமலைக்குரியவன் . தேவார வைப்புத்தலங்களில் ஒன்று . குளிர்தூங்கு - குளிர்மிக்க . குற்றாலத்தான் - குற்றால மலைச்சாரலில் வாழ்பவன் . குளிர்தூங்கு என்பதைக் கொல்லியுடனும் குற்றாலத்துடனும் கூட்டுக . புல்லியார் - அற்பமானவர் , கீழோர் . நெல்லியான் - திருநெல்லிக்கா என்னும் தலத்துக்குரியவன் . நிலையான - என்றும் நிலைத்ததாயுள்ள . சொல்லி - தோத்திரம் சொல்லி . மெய் - உண்மையாக . சுடர் வாணர் - ஞானத்தினால் நிலைபெற்றோராவர் என்க .

பண் :

பாடல் எண் : 2

இரவ னையிடு வெண்தலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.

பொழிப்புரை :

இரத்தலை உடையவனும் , வெண்தலை ஏந்தியவனும் , எல்லோராலும் பரவப்படுபவனும் , படையுடையார் முப்புரங்களையும் எரியால் நிரந்தவனும் , ஞானாசாரியனும் நிலை பெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானைத் தொழுவார்கள் இவ்வுலகத்து நன்கு வாழ்வோராவர் .

குறிப்புரை :

இரவனை - பிச்சையிரப்பவனை . ஏந்தியை - ஏந்தியவனை . பரவனை - எங்கும் பரவி இருப்பவனை . படையார் - ஆயுதங்கள் செறிந்த . நிரவனை - அழித்தவனை . குரவனை - முதற் பெருங்குருவாக விளங்குபவனை . கொடிவாணர் - ஒழுங்கில் வாழ்பவராவர் .

பண் :

பாடல் எண் : 3

ஆனிடை யைந்தும் ஆடுவ ராரிருள்
கானிடை நடம் ஆடுவர் காண்மினோ
தேனிடை மலர் பாயுநெய்த் தானனை
வானி டைத்தொழு வார்வலி வாணரே.

பொழிப்புரை :

பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமஞ்சனம் கொள்பவரும் , நள்ளிருளில் இடுகாட்டிடை நடம் ஆடுபவரும் ஆவர் ; காண்பீராக ! மலரிடைத் தேன் பொழிந்து பாயும் திருநெய்த்தானனை வானிடைத் தொழுவார்கள் வலிமையோடு வாழ்பவராவர் .

குறிப்புரை :

ஆனிடை ஐந்து - பசுவிடத்துண்டாய பஞ்சகவ்வியம் . ஆர்இருள் - மிக்க இருள் செறிந்த இரவு . கான் - இடுகாடு . மலரிடைத்தேன்பாயும் என்று மாறுக . வானிடைத் தொழுவார் - உள்ளத்தின்கண் உள்ள தகராகாசத்துவைத்துத் தியானிப்போர் . வலி - வினைகளை வெல்லும் வலிமை .

பண் :

பாடல் எண் : 4

விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே.

பொழிப்புரை :

பகைவர் புரமூன்றையும் வெள்ளிய சாம்பலாகி யெழுமாறு கண்டு எரித்தவனும் , கடிதாகிய ஆலகாலத்தை உண்டவனும் ஆகிய ஒளியான திருநெய்த்தானனைத் தொண்டராகித் தொழுவார் ஒளியோடு கூடி வாழ்பவராவர் .

குறிப்புரை :

விண்டவர் - பகைவர் . வெண்ணீறெழக் கண்டவன் - சாம்பராகச் செய்தவன் . கடிது - கொடியது .

பண் :

பாடல் எண் : 5

முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
தங்கை யால்தொழு வார்தலை வாணரே.

பொழிப்புரை :

தம் முன்கைகள் நோகுமாறு கடைந்த தேவர்களும் அசுரர்களும் அஞ்சிநிற்கச் சிறிதும் ஐயுறாது கடல் நஞ்சுண்டு அனைவரையும் காத்தவனும் , உமாதேவியோடு விரும்பி எழுந்தருளியிருப்போனுமாகிய திருநெய்த்தானனைத் தம்கைகளால் தொழுவார் தலைமைத் தன்மையோடு கூடி வாழ்பவராவர் .

குறிப்புரை :

முன்கைநோவக் கடைந்தவர் - ( மந்திரமலையாம் மத்தை இழுத்து ) முன்கை வலியடையக் கடைந்தவராய தேவாசுரர் . நிற்க - ஆலகாலந் தோன்றியதைக் கண்டு அஞ்சி நிற்க . சங்கியாது - சங்கையடையாது ஐயுறாது . நவின்ற - பொருந்திய . தலை - சிறந்த தலைவராய் .

பண் :

பாடல் எண் : 6

சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.

பொழிப்புரை :

உலகெல்லாவற்றையும் சுட்ட திருவெண்ணீற்றினைத் திருமேனியிற்பூசி , நள்ளிருளில் பேய்களோடு சுடுகாட்டில் நடம் ஆடுபவரும் , உயர்ந்த முனிவர்களும் தேவர்களும் ஆராய்ந்து காணும் திருநெய்த்தானரும் ஆகிய பெருமானை விருப்பமாகத் தொழுவார் இன்பத்தோடு கூடி வாழ்பவராவர் .

குறிப்புரை :

சுட்டநீறு - திருநீறு . நள் - செறிந்த . சிட்டர் - தூய உணர்வினர் . தேரும் - ஆராய்ந்து காணும் . இட்டமாய் - விருப்பமாய் .

பண் :

பாடல் எண் : 7

கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தால்தொழு வாரும்பர் வாணரே.

பொழிப்புரை :

தீக்கொள்ளியினின்று எரிவீசிக் கொடிதாகிய கள்ளிக்காட்டில் ஆடும் இயல்பினர் காண்பீராக ; தெளிவு அடைந்து தேறிப் பின்னும் தெளிந்து அத்திருநெய்த்தானரை உள்ளத்தால் தொழுவார் தேவர்களோடு ஒத்த பேரின்பம் பொருந்தி வாழ்பவராவர் .

குறிப்புரை :

கொள்ளித் தீ - சுடுகாட்டுக் குறைக்கொள்ளி . வீசி - சுழற்றி . கள்ளிக்காடு - கள்ளிச்செடி முளைத்த இடுகாடு . தெள்ளித்தேறி - ஆராய்ந்து தெளிந்து . உம்பர்வாணர் - தேவர் உலகில் வாழ்பவராவர் என்க .

பண் :

பாடல் எண் : 8

உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச்
சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே.

பொழிப்புரை :

சென்னியில் உச்சியின்மேல் விளங்கும் இள வெண்பிறையும் பற்றியாட்டற்குரிய பாம்பும் சடையின்கண் வைத்தவனும் , நெற்றிக்கண்ணனுமாகிய திருநெய்த்தானனைச் சுற்றி வந்து மெய்யால் தொழுவார் ஒளி பொருந்தி வாழ்பவராவர் .

குறிப்புரை :

உச்சிமேல் விளங்கும் - ஆகாயத்தே விளங்கும் . ஆடு அரவு - ஆடும் பாம்பு ; ஆடரவொடு வெண்பிறை பற்றிச் சடை பெய்தவன் என்க . நெற்றியின்கண் ஆரழல் கண்ட - ஆரழல் தோன்றும்படி நெற்றியினால் விழித்த . ஊழிக்காலத்தும் உமையம்மை தம் கண்களைப் புதைக்க உலகம் இருண்டகாலத்தும் ( தி .4. ப .14. பா .8.) விழித்தான் என்க . அழல் - நெற்றிக்கண்ணை உணர்த்திற்று . சுற்றி - வலம்செய்து .

பண் :

பாடல் எண் : 9

மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச் செய்யுநெய்த் தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே.

பொழிப்புரை :

திருமாலோடும் வேதங்களை ஓதிய பிரமனும் திருவடியும் திருமுடியும் காண்டற்கரியனாயினானும் . சேல்மீன்கள் தம்மிற்பொரும் திருநெய்த்தானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய பெருமானை அன்புமயக்கத்தால் தொழுவார்களின் வினைகள் வாடிக்கெடும் .

குறிப்புரை :

மாலொடும் - திருமாலொடும் . காலொடும் முடி - திரு வடிகளையும் திருமுடியையும் . காண்பதரிதாயினான் - காணுவதற் கரிதாய் விளங்கியவன் . சேலொடும் செருச்செய்யும் - சேல் மீன்கள் தம்முள் போர்செய்யும் . மாலொடும் - வேட்கையோடும் .

பண் :

பாடல் எண் : 10

வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.

பொழிப்புரை :

வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணிவார்களின் வினைகள் கெடும் .

குறிப்புரை :

வலிந்த தோள் - வலிமையுடைய தோள் என்க. நெருங்க - அழிய. நீள்வரை - நீண்ட கயிலாயமலை. புரிந்து - இடை விடாதுவிரும்பி. கைந்நரம்பு - கையின்கண் உளதாகிய நரம்பு. பரிந்தனை-பரிவு செய்தவனை; இரங்கியவனை. பாறும் - அழியும்.
சிற்பி