திருஆரூர்


பண் :

பாடல் எண் : 1

எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்தொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்ச லென்னுமா ரூரனே.

பொழிப்புரை :

மூன்று பொழுதினும் பிரமன் தொழ நின்றவனும் , புகழ்ந்து போற்றத்தக்க செம்பொன்னின் வண்ணமேனி உடையவனும் , உயிர் உடம்பைவிட்டு நீங்கும் அப்போதைக்கு அஞ்சல் என்று அபயங் கொடுப்பவனுமாகிய சிவபெருமானை எப்போதும் சிறுபொழுதும் நீர் மறவாது இருக்க . ( சே - போதும் எனப்பிரித்து விடையின்மீது இவர்ந்து வரும் எனினும் அமையும் )

குறிப்புரை :

எப்போதும் - இரவு பகல் எந்தநேரத்தும் , துன்பக்காலத்தேயன்றி இன்பக்காலத்தும் எனலுமாம் . இறையும் - கணப்போதும் . முப்போதும் - காலம் மூன்றினும் . செப்போதும் பொன் - சிவந்த பொன் , சிவப்பு செப்பு என மருவிற்று . செம்பொன் மேனியன் என்றபடி . அப்போதைக்கு - இயமன் கால பாசத்தை வீசியெறிந்து தன் அன்பரை அழைக்கும் அப்போதின் கண் . அஞ்சல் என்னும் - ( அலமந்தபோது ) அஞ்சவேண்டா என்று கூறும் .

பண் :

பாடல் எண் : 2

சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்
அடைகி லாஅர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போலிடு காடரா ரூரரே.

பொழிப்புரை :

மருங்கில்மட்டுமின்றிச் சடையின்மேலும் ஒரு தையலை வைத்தவரும் , அரவை அரையிற் கட்டியவரும் , இடுகாடரும் ஆரூரரும் ஆகியவர் வேற்படையொத்த பெரிய கண்ணை உடைய உமையொரு பாகமாகத் தோன்றி அருள் புரிவர் .

குறிப்புரை :

ஓர் - ஒர் எனக் குறுகியது . ஒர் தையல் - கங்கை . அடைகிலா அரவு - அடங்கி நடக்கமாட்டாத அரவு . தடம் - பெரிய . போல் - ஒப்பில் போலி .

பண் :

பாடல் எண் : 3

விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர்க் கருளுமா ரூரரே.

பொழிப்புரை :

வெண்தலையே இரக்கும் கலனாகக் கொண்டு வீடுகள்தோறும் பலிதேரும் இளமையுடையவரும் , துண்டாகிய வெள்ளிய பிறை முடிவைத்த இறையவரும் , தேவர்களுக்கு அருளும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .

குறிப்புரை :

விண்ட - தோல் தசை நரம்பு முதலியவை நீங்கிய . குழகன் - இளமையுடையவன் . துண்டம் - இருமுனையும் ஒட்டி முழுமையாகாத ஒரு கலைப்பிறை . அண்டவாணர் - தேவர்கள் . வாணர் - வாழ்நர் என்பதன் மரூஉ .

பண் :

பாடல் எண் : 4

விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை
அடைவர் போலரங் காகவா ரூரரே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் , விடையும் ஏறுவர் ; வெண் தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார் ; உடையாகச் சீரையைக் கொண்டவர் . உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர் .

குறிப்புரை :

சீரை - கிழிந்த சீலை அல்லது மரவுரி .

பண் :

பாடல் எண் : 5

துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையொர் பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட் சடையில் திசைமுழு
தளக்குஞ் சிந்தையர் போலுமா ரூரரே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் , துளையுள்ள துதிக்கை உடைய யானையின் உரித்த தோலைப் போர்த்தவர் ; வளையணிந்த கையாளாகிய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்தெய்தியவர் ; அவர் தமது பிறை பொருந்திய சடையினால் , எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும் ; உலகமே உருவமா ( விச்சுவரூபியா ) க நின்றாடுவார் என்பது கருத்து .

குறிப்புரை :

துளைக்கை வேழம் - துளையுடைய கையோடு கூடிய யானை . உரி - உரிக்கப்பட்டது ; தோல் . வளைக்கையாள் - வளையல் அணிந்த கையையுடையவள் ; பார்வதி . பார்வதி தேவியை இடப் பாகத்தே கொண்டு மகிழ்வு எய்துவித்து அவ்வின்பத்தால்தானும் திளைத்திருக்கும் . சடையுள் திங்களையுடைய ஆரூரர் என்க .

பண் :

பாடல் எண் : 6

பண்ணி னின்மொழி யாளையொர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர் போலுமா ரூரரே.

பொழிப்புரை :

பண்ணையொத்த இனிய மொழியாளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விசும்பில் விளங்கும் பிறையினைச் சூடி , திருநீற்றுப் பொடியினைத் திருமேனியிற் பூசிச் சுடலையினை அண்மித் திருவாரூர்ப் பெருமான் ஆடுவர் .

குறிப்புரை :

பண்ணின் இன்மொழியாள் - ` பண்ணினேர் மொழியாளுமை ` ( தி .5. ப .10. பா .1) இசையினிமையை ஒத்த மொழியை உடையவள் . பாகமா - இடப்பாகத்தேகொண்டு என்னும் பொருளது . விண்ணினார் விளங்கும் மதி - விண்ணிலே பொருந்தி விளங்கும் மதி . சுண்ணநீறு - கலவைச் சந்தனம்போலக் கொள்ளப்படும் திருநீறு . அண்ணி - நெருங்கி .

பண் :

பாடல் எண் : 7

மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறு மிறைவனார்
கட்டு வாங்கங் கனன்மழு மான்தனோ
டட்ட மாம்புய மாகுமா ரூரரே.

பொழிப்புரை :

தேனொழுகும் புதுமலரணிந்த குழலாளாகிய உமையம்மையொடு பெரிய ( திருமாலாகிய ) விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவனார் , கட்டுவாங்கம் , சுடர்ந்தெரியும் கனல் , மழு , மான் எனுமிவற்றைக்கொண்ட எட்டுத் தோளராகிய திருவாரூர்ப் பெருமானே ஆவர் .

குறிப்புரை :

மட்டு - தேன் . தேன் நிறைந்த பூக்கள் சூடிய என்றபடி . வார்குழல் - நீண்ட கூந்தல் . மால்விடை - திருமாலாகிய இடபம் . பெரிய விடை என்றும் ஆம் . இட்டமா - விருப்பமாக . உகந்து - மகிழ்ந்து . கட்டுவாங்கம் - இறைவன் திருக்கரத்தேந்திய கட்வாங்கம் என்னும் ஆயுதம் . கனல் மழு - சொலிக்கின்ற மழு . அட்டமாம் புயம் - எட்டுத்தோள்கள் . ஆரூரர் ஆகும் ( விளங்குவார் ) என்க .

பண் :

பாடல் எண் : 8

தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி யெல்லியு ளாடு மிறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதுமா ரூரரே.

பொழிப்புரை :

பிறைத் திங்கள் விளங்கும் சடையினரும் , கனலைக் கரத்தேந்தி நள்ளிருளில் நட்டம் ஆடும் இறைவரும் , காமனைச் சினந்து நோக்கிய கண்ணினரும் , ஆராய்ந்த நான்மறைகளால் ஓதப்பெறும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .

குறிப்புரை :

தேய்ந்த திங்கள் - தக்கன் மகளிர்களிடம் காட்டிய ஒருதலைப் பக்கமான அன்பால் அவன் சாபமிட அதனால் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து குறைந்ததால் ஒரு கலையான சந்திரன் . கமழ் - விளங்குகின்ற . எல்லி - சர்வசங்காரகாலமாகிய நள்ளிரவு . காய்ந்து - சினந்து . ஆய்ந்த - அறிஞர்கள் நுணுகிக் கற்கும் .

பண் :

பாடல் எண் : 9

உண்டு நஞ்சுகண் டத்து ளடக்கியங்
கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்டவாண ரடையுமா ரூரரே.

பொழிப்புரை :

நஞ்சினை உண்டு கண்டத்துள் அடக்கியவரும் , இண்டை மாலையைத் தம் செஞ்சடையுள் வைத்த இயல்பினரும் , கோவணத்தை ஆடையாகக் கொண்டவரும் , மிகுந்த எரியைக் கரத்தில் உடையவரும் , தேவர்கள் அடைந்து வழிபடும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .

குறிப்புரை :

நஞ்சு உண்டு கண்டத்துள் அடக்கிய என மொழி மாறுக . அங்கு - தலையில் . இண்டை - தலையில் அணியும் மாலை . ` சுரும்பார் மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம் ` ( தி .2. ப .114. பா .1) கொண்ட - அணிந்த அல்லது ஏற்றுக்கொண்ட . கூரெரி கொண்டவன் கோவண ஆடையன் எனத் தனித்தனியே கூட்டுக .

பண் :

பாடல் எண் : 10

மாலு நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆல முண்டழ காயவா ரூரரே.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் அறிய இயலாதவரும் , காலனைக் கடந்திட்டுச் சூலமும் , மானும் , மழுவும் ஏந்திய கையினரும் , ஆலம் உண்டதனால் அழகுபெற்று விளங்கிய கண்டத்தையுடைய வரும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .

குறிப்புரை :

அறிகிற்கிலார் - அறிதற்குஇயலாதவரானவர். காலனாய அவன் - காலனாகிய இயமன். கடந்திட்டு - வென்று. ஆலம் உண்டு அழகாய ஆரூரர்-ஆலகால நஞ்சை உண்டு அதைத் திருமிடற்றிலே நிறுத்தி நீலகண்டனாம் அழகிய தோற்றம் பெற்ற ஆரூர் இறைவர்.
சிற்பி