திருக்கடவூர் வீரட்டம்


பண் :

பாடல் எண் : 1

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு , வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி , மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான் .

குறிப்புரை :

மருள் - மயக்கம் . துயர் - துயரம் . தீர - நீங்க . பிறவிக்கு மயக்கமே ஏது , பிறவித்துயர் தீர மயக்கம் தீர்தல் வேண்டும் . ` பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை மறப்பிலார்கண்டீர்மையல் தீர்வாரே ` என்றதில் , மையல் தீரின் பிறப்பொழியும் . அதுகுறித்துப் பிறப்பில் பெருமானை மறப்பிலாது வழிபடல் வேண்டுமென்று உணர்த்தினார் முதன்மறைப்பிள்ளையார் . ` மருளவா மனத்தனாகி மயங்கினேன் மதியிலாதேன் இருளவா அறுக்கும் எந்தையிணையடி நீழலென்னும் அருளவாப் பெறுதலின்றி அஞ்சிநானலமந்தேன் ` ( தி .4 ப .76 பா .1) மருட்டுயர் - மயக்கத்தாலுறுகின்ற பிறவித்துயரம் . மருட்டுயர் தீர்தல் பயன் . அர்ச்சித்தல் ஏது . தருமை ஆதீனத்தின் 25 ஆவது பட்டம் , சீலத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் அருளிய ஞானபோதம் ஆகிய ` அருச்சனை ` ( ` ஞானசம்பந்தம் ` ம . 17. இ 1 ) என்னும் கட்டுரையால் , அதன் சிறப்பை உணர்க . மாணி - பிரமசாரி . மார்க்கண்டேயன் - மிருகண்டு முனிவர் புதல்வர் . மார்க்கண்டேயற்கு ஆய் - மார்க்கண்டேய முனிவர்க்குப் பூசாபலத் துணையாகி . இருட்டிய - இருளதாய ( மேனியும் ), வளை வாள் எயிறு - வளைந்த வாள்போலுங் கூரிய பல்லும் . எரிபோலும் குஞ்சி - தீயைப் போலும் ( தலையின் ) செம்மயிரும் , சுருட்டிய நாவில் - மடக்கிய நாக்கும் உடைய ( கூற்றம் ). கூற்றம் - உடலையும் உயிரையும் கூறுபடுத்துவது . ஊற்றம் பதைப்ப - இயமன் நடுங்க . உதைத்து ;- உங்ஙனே உவ்விடத்தே . உருட்டிய - உருளச் செய்த . சேவடியான் - செய்யதிருவடியுடையான் . கடவூர் உறை உத்தமன் - திருக்கடவூரில் எழுந்தருளிய உத்தமன் என்னும் திருப்பெயருடையவன் . ` மாணிக்குயிர் பெறக் கூற்றை யுதைத்தன `. ( தி .4 ப .108 பா .1.)

பண் :

பாடல் எண் : 2

பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

ஐந்து சொற்களாக அமைந்த திருவைந்தெழுத்தை ஓதி விருப்பினோடும் தன் நன்மை கருதிச் சிவபெருமானை அணுகியிருந்த பிரமசாரியான மார்க்கண்டேயனுடைய இனிய உயிரை உண்பதற்கு அவனை வெகுண்டு கோபத்தோடு எழுந்து தாக்கிய கூற்றுவனை அவன் கண்கள் குருதியைச் சொரியுமாறு உதைத்துச் செயற்பட்ட சேவடியான் கடவூர் உறை உத்தமனே .

குறிப்புரை :

ஐந்தெழுத்தும் ஐந்து பதம் ஆகும் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளையுணர்த்தும் . அவை மந்திரமாகச் செபிக்கப் படும்போது முன்னர்ப் பிரணவமும் பீசங்களும் கூட்டி யுச்சரிக்கப் படும் . சிவஞான மார்க்கத்திலே ஐந்து பதப்பொருளும் உணரப்படும் . ` அந்தியும் நண்பகலும் அஞ்சு பதஞ்சொல்லி முந்தியெழும் பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென் திருவாரூர்புக்கு எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே ` ( தி .7 ப .83 பா .1) ` மந்திரம் நமச்சிவாய ஆக நீறணியப்பெற்றால் வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே `. ( தி .4 ப .77 பா .4) சிவனே என்னும் நாவுடையார் நமையாளவுடையார் ` ( தி .6 ப .68 பா .6). ஓதிப் பரிவினொடும் இதத்து எழும் மாணி . ஓதி எழும் மாணி . மாணி உயிர் ; இன்னுயிர் . மாணி தன் இன்னுயிர் . உயிர் உண்ண ;- ` உயிர் உண்ணவும் பருகவும் படுவதன்றாயினும் , ` அகலிருவிசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப்பருதி `. ( பெரும் பாணாற்றுப் படை :- 1 - 2) என்றாற் போல ஓர் அணி குறித்து நின்றது ` ( புறநானூறு 230. உரை ). வெகுண்டு - சினந்து , அடர்த்த - தாக்கிய . கதத்து - வலிமையால் . வெகுண்டு என முன் உள்ளது . கதம் என்றது வலியென்னும் பொருட்டு . எழுகாலனை - எழுந்த காலனை . கண்ணிற் குருதிப்புனல் ஆறாக ஒழுக உதைத்து எழும் சேவடியான் திருக்கடவூர் உறை உத்தமன் . ஒழுக உதைத்தெழு சேவடி .

பண் :

பாடல் எண் : 3

கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின னீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

வஞ்சனை பொருந்திய மனத்தினர் காண்பதற்கு அரியவனாய் , மன்மதன் மீது நெருப்பைச் சொரிந்து அவனை அழித்த கண்ணினனாய் , கங்கையும் பாம்பும் சூடிய சிவந்த சடையினை உடையவனாய் , வெண்ணீறணிந்து பால் போன்ற நிறத்தினனாய்க் கூற்றுவனை முன்னொரு காலத்தில் பேரொலி செய்து அதட்டியவன் சிவந்த திருவடிகளை உடைய கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

கரப்பு - மறைத்தல் , வஞ்சகம் . சிந்தையார் - சிந்திக்கும் சித்தம் உடையவர் . காண்டற்கு அரியவன் :- ` உணர்வினேர் பெறவருஞ் சிவபோகத்தை ஒழிவின்றி உருவின்கண் அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை ` ( தி .12 பெரியபுரா . 2064) ` கரவாடும் வன்னெஞ்சர்க்கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை ` ( தி .4 ப .7 பா .2) ` கரவிலாமனத்தராகிக் கைதொழுவார்கட்கென்றும் இரவு நின்றெரியதாடி இன்னருள் செய்யும் எந்தை `, ` வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயான் ` ( தி .6 ப .50 பா .4) ` கள்ள முள்ள வழிக்கசிவானலன் ` ( தி .5 ப .82 பா .4)` வஞ்ச மனத்தவர்கள் காணவொண்ணா மணிகண்டன் ` ( தி .6 ப .42 பா .8) காமன் - மன்மதன் . அவனையும் நெருப்பு உமிழும் கண்ணால் எரித்தவன் . காமனையும் கண்ணெருப்புமிழ்ந்தவன் என்க . யாவரும் அவனைக் காமுறுவர் . எல்லாராலும் காமுறப்படும் அவனையும் தான் காமுறாது முனிந்து உமிழ்ந்த தீயார்ந்த கண்ணினன் நம் சிவபிரான் . ` காமனையும் கண்ணழலால் விழித்தநாளோ `? உம்மை உயர்வு சிறப்பு . ( நன்னூல் சங்கரநமச்சிவாயருரை காண்க ). நீள்புனற் கங்கையும் பொங்கு அரவும் பரப்பிய செஞ்சடையன் . பால் வண்ணன் . ` பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும் `. ( தி .4 ப .81 பா .4.) இது , குங்குமத்தின் மேனி அவன் நிறமே ` ( தி .4 ப .6 பா .3) ` பொன்னார் மேனியன் ` என்பவற்றின் முரணும் என்னற்க . ` செந்நிறத்தள் எந்நிறத்தளா யிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்தனாயிருப்பன் ஆங்கு ` ( திருக்களிற்றுப்படியார் . 79). உரப்பிய - பேரொலி செய்து அதட்டிய . காலனை உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே .

பண் :

பாடல் எண் : 4

மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

மான்குட்டி விளங்கும் கையினனாய் , தேவர் தலைவனான தன்னை மனம் மகிழ்ந்து வழிபட்ட பிரமசாரியின் அரிய உயிரைக் கைப்பற்றுதற்காகக் கொதிக்கும் உள்ளத்தோடு வெகுண்டு புறப்பட்ட , மூவிலை வேலை ஏந்திய கூற்றுவன் வாய் விட்டுக் கதறுமாறு அவனைச் சிதைத்த சேவடியை உடையவன் , கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

மறி - மான்கன்று . திகழ் - விளங்கும் . திகழ்கை :- வினைத்தொகை . வானவர் - முத்தியுலகில் மெய்யின்பம் நுகர்வோர் ; தேவருமாவர் . ` தூயவிண் ` ( தி .4 ப .77 பா .3) ` வானைக் கடந்தண்டத் தப்பால் மதிப்பன ` ( தி .4 ப .92 பா .14) ` காதல் செய்யகிற்பார்க்குக் கிளரொளிவானகந்தான் கொடுக்கும் ` ( தி .4 ப .92 பா .13) என்பன முதலியவற்றால் வான் என்பதன் பொருளை ( வீட்டை ) உணர்ந்து கொள்க . மனம் மகிழ்ந்து குறித்து எழும்மாணி . மகிழ்ச்சி மனத்தில் ; குறித்தல் உயிரில் . குறித்தல் - தியாநம் . மாணிதன் ஆருயிர் :- சித்தாய் அழியாத அஃது , அழியும் உடலுட்புக்கு நிற்றலின் அருமை குறித்தது . மார்க்கண்டேயரைப் போல்வார் அரியர் என்பார் ` ஆருயிர் ` என்றார் . காலன் கொள்ளற்பாலன எளிய உயிர்களாகிய பிற கணக்கிலா திருக்கவும் . ` ஆருயிர் கொள்வான் ` வந்ததால் , ` சேதனம் என்னும் அச்சேறு அகத்தின்மையின் கோது என்று கொள்ளாதாம் கூற்று ` ( நாலடி ) என்பது வாயாதலறிக . கொதித்த சிந்தையில் கறுத்து ( சினத்து ). மூவிலை வேல் - திரிசூலம் . ` தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழ விடுவேன் ` ( கந்தரலங்காரம் ). அலற உறுக்கிய சேவடியான் . உறுக்குதல் - அதட்டல் , சினத்தல் . காலனை உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே .

பண் :

பாடல் எண் : 5

குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமொ டர்ச்சித்த மாணித னாருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

குழையணிந்த காதுகளை உடைய , தேவர் தலைவனாகிய தன்னை நீராடி வழக்கமாக அருச்சித்த மாணியின் அரிய உயிரைக் கைப்பற்ற வந்த தீப்பொறி கக்கும் முத்தலைச் சூலம் ஏந்திய கூற்றுவன் கதறுமாறு அவனைச் சிதறச்செய்த சேவடியான் கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

குழை - குண்டலம் . ` சங்கக்குழை ` ` தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளைநீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்கவளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ `. ( தி .8 திருவாசகம் . 232) குழை திகழ் காது . மறி திகழ்கை . ( தி .4 ப .107 பா .4.) குளிர்ந்து - தண்ணீருட் குளித்தும் உண்ணீர்மை குளிர்ந்தும் , பழக்கம் :- பூசனை புரிந்து கைவந்தமை ; சிவபிரானொடு பழகிய பழக்கம் . அர்ச்சித்த மாணியின் உயிரை அரிதென்றுணராது கொள்ளவந்த காலன் . தழல் - தீ . பொதி - பொதிந்த ; மூடிய உழக்கிய - மிதித்த . ` வருடை பாய்ந் துழக்கல் `. ( சிந்தாமணி 1899) மாணியின் ஆருயிர் கொள்ளவந்த காலனை ` உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே .

பண் :

பாடல் எண் : 6

பாலனுக் காயன்று பாற்கட லீந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

சிறுவனாகிய உபமன்யுவுக்குப் பால் உணவுக்காகப் பாற்கடலையே வழங்கி , பல கிளைகளோடு ஓங்கி வளர்ந்த கல்லால மர நிழலின் கீழ் இருந்து வேதங்களின் செய்திகளைச் சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு உபதேசித்துச் சிறந்த முனிவனான மார்க்கண்டேயனுக்காகச் சூலமும் பாசக் கயிறும் கொண்டு தொடர்ந்து அவனை நெருங்க ஓடிவந்த காலனை வெகுண்ட பெருமான் , கடவூர் உறை உத்தமனாவான் .

குறிப்புரை :

பாலன் - உபமன்னியுமுனிவர் ( வியாக்கிரபாத முனிவருடைய திருமகனார் ). பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து :- ` பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் ` ( தி .9 திருப்பல்லாண்டு 9). ஈந்து , ஈய்ந்து என்றிரு வடிவும் உண்டு . ஈத்தல் ஈதல் என்னும் இரண்டும் முறையே ஈத்து ஈந்து என்றாய வினை எச்சத்திற்கு அடியான தொழிற் பெயர் . ` ஈத்துவக்குமின்பம் ` ( குறள் 228) ` ஈத்தளிக்கவல்லான் ` ( குறள் . 387) ` ஈத்துமொருவுக ` ( தி .4 ப .83 பா .1). ` ஈத்தலும் ஈதலும்போலப் பாத்தலும் பாதலும் ஒன்று ஆதலிற் பாதீடாயிற்று ` என்று ( தொல் . புறத் . 3. உரையில் ) நச்சினார்க்கினியர் உரைத்தார் . அவ்வாறு ` ஈ ` என்னும் முதனிலையும் பகு என்றதன் திரிபாய பா என்பதும் ஒன்றாகா . பகுத்திடுதல் , பகுத்தீடு , பாத்தீடு , பாதீடு என்று மருவிய அதனை மருவாத சொல்லொடு கூட்டி ஒன்றெனல் நன்றன்று . ஈதலும் ஈத்தலும் ஒன்று என்றுமட்டும் உரைத்திருக்கலாம் . ` அவர் எமக்கு ஈந்தது இவ்வூர் ` ( குறள் 1142) ` ஈத்திரங்கான் . ஈத்தொறும் மகிழான் , ஈத்தொறுமாவள்ளியன் ` ( பதிற்றுப் பத்து 61) என்பவற்றால் , ஈந்தது , ஈத்தது என்ற இரண்டு வடிவும் அறிக . ஈத்தொறும் என்றும் ஈயுந்தொறும் என்றும் வேறுபட வரும் . ` கண்மணியனையாற்குக் காட்டுக என்றே மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும் . ஈத்த வோலைகொண்டு ... தேயமும் ` ( சிலப் . 2. 13. 76 - 8) என்றதில் ` ஈத்ததும் ` ` ஈத்த ` என்பனவும் ஈந்ததும் ஈந்த என்பனவும் வெவ்வேறே . வலித்தல் மெலித்தல் என்ன இடமின்றி நிற்கின்றன அவை . ` ஈத்த நிறை ` ( கலித்தொகை . 138) ` ஈத்த இம்மா ` ( ? 139 - 140) ` ஈத்த பயம் ` ( ? 59) ` ஈத்தவை ` ( ? 84) ` ஈத்தார் ` ( ? 109) ` ஈத்தை ` ` தருவாய் ` ( ? 86) ` ஈதல் ` ( ? 27 ; 61) ` ஈயும் வண்கையவன் ` பாடலுள் இருத்தல் உணர்க . ` ஈ ` என்னும் முதனிலை வினை ( ? 42) ஈவாய் ( ? 100) என்றிருவடிவும் நல்லிசைப் புலவர் வேறுபாட்டிற்கொள்ளும் வடிவு வேறுபாட்டினை ஆராய்ந்துணர்க . ஈகின்ற , ஈயும் , ஈகின்றான் என்பனவற்றிற்கு மற்றதன் வடிவில்லை , இறந்தகாலத்தில் மட்டும் அவ்வடிவம் பயின்றுளது . முனி - மார்க்கண்டர் . ஆய்க் காய்ந்த பிரான் .

பண் :

பாடல் எண் : 7

படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

பரவிய சடையிலே கொன்றைமாலை , பாம்பு மாலை , பாம்பினைத் தொடுக்கும் கயிறாகக் கொண்டு தொடுத்துக் கோத்துத் தலையில் அசைகின்ற தலைமாலை என்பனவற்றை அணிந்த திருமேனியனாய் , உண்ணும் பொருள்களைப் பிச்சை எடுப்பதற்காகத் திரிவோனாய் , ஒளி வீசும் முத்தலைச் சூலம் ஏந்திய காலன் துண்டங்களாகுமாறு வெகுண்ட சேவடிகளை உடையவன் கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

படர்சடை - படர்ந்தசடை . சடைக்கொன்றை - சடையில் அணிந்த கொன்றை மலர் மாலை . பன்னகம் - பாம்பு . மாலை :- பாம்பை மாலையாகப் பூண்டுள்ளானென்க . பணி - பாம்பு . பணம் - படம் . பணத்தையுடையது பணி . பணியைக் கயிறாகக்கொண்டு தலைகளைக் கோத்தமாலை ; தலைமாலை ` கடியராக் கயிற்றிற்கட்டுஞ் சதுர் மறைக்கரோடி முட்டாட்டாமரை வாசம் ` ( சேதுபுராணம் இராமனரு . 89). உடைதலை - உடைந்த தலை ; ` உடைதலைமாலை ` ( தி .4 ப .111 பா .1). ` தலைமாலை தலைக்கணிந்து `. கோத்து - கோக்கப் பட்டு ; அணியப்பெற்று . உழல் - உழல்கின்ற , உழல்வது தலைமாலை . உழலற்கு இடம் திருமேனி . உண்டற்குக்கொள்ளும் பிச்சைக்கு என்றே உழல்வோன் (- திரிவோன் ). கொன்றையும் பன்னக மாலையும் பணிகயிறாக் கோத்துழலும் உடைதலைமாலையும் உடைய மேனியன் எனப் பொருத்திக்கொள்க . உம்மையை ஏனையிடத்தும் ஒட்டுக . சுடர் பொதி மூவிலை வேலுடைக் காலனை :- ` தழற் பொதிமூவிலை வேலுடைக் காலனை ` ( தி .4 ப .120 பா .5) துண்டம் ( துண் + து + அம் ). துண்டமது :- அது முன்மொழிப் பொருட்டாய் நின்று சுட்டுப் பொருளையுணர்த்தாது நின்றது . உடறிய - சீறிய ; வருத்திய .

பண் :

பாடல் எண் : 8

வெண்டலை மாலையுங் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

வெள்ளிய தலைகளால் ஆகிய மாலையாகிய கரோடி பொருந்திய விரிந்த சடையின்மீது கங்கையாகிய பெண்ணை அணிந்த தலைவனாய்ப் பேய்களோடு விரும்பி ஆடும் பெருந்தகையாய் , நெற்றியில் தனியான ஒரு கண் உடையவனாய்க் காலனை வெகுண்டவனாய் , கடல் விடத்தை உண்ட பெருமான் கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

வெள்தலை மாலையும் - வெள்ளிய தலைகளைக் கோத்தமாலையும் . கங்கை - கங்கையாற்றையும் , கரோடி - முடிமாலை . த .4 ப .107 பா .7 பார்க்க . விரிசடைமேல் - விரிந்த சடையின்மேல் . பெண்டு - ( பெண்தன்மையுடையது ) கங்கையென்னும் பெண்ணை . அணி நாயகன் - அணிந்த இயவுள் . முதலடியிற் ` கங்கை ` என்றும் இதிற் ` பெண்டு ` என்றும் உள்ள இரண்டும் ஒன்றையே குறிப்பன ஆயினும் முன்னர்ச்சடையில் உள்ளவற்றுட் சில பொருள்களின் வரிசையிற் கூறப்பட்டது . பின்னர்ப் பரன் பெயராகக் கூறப்பட்டது . சடைமேற் பெண்ணையணிந்தவன் பேயோடும் ஆடும் பெருந்தகையான் . கண்நெற்றியன் . தனிக்கண் நெற்றியன் . கண்ணைத் தனியே உடைய நெற்றியன் தனிக்கண்ணையுடைய நெற்றியினன் ... அன்று - மார்க்கண்டேயரைப் பற்றவந்த அந்நாளில் . காலனைக் காய்ந்து உண்டருள் செய்தபிரான் கடவூர் உறை உத்தமனே . கடலின் விடம் - பாற்கடலிற்றோன்றிய நஞ்சினை . உண்டருள் செய்த - உண்ட . நஞ்சிற்கு அருள் செய்தல் இல்லை . துணைவினை . தேவர்க்கும் அசுரர்க்கும் நஞ்சுண்டருள் செய்தார் எனின் , உண்டு அருள் செய்தார் என்றாகும் . ஈண்டு உண்டார் என்பது மட்டும் கொள்ளற்பாலது . சடைமேல் அணிந்த பெண்டு கங்கை .

பண் :

பாடல் எண் : 9

கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை யன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

பன்றி உருவெடுத்துப் பூமியைக் குடைந்துசென்ற கேசவனாகிய திருமால் தன் முயற்சியால் காண்டற்கு அரியவனாய் , தான் வாழ்வதற்காகத் தன் தாமரைபோன்ற கண் ஒன்றனைப் பெயர்த்து அர்ப்பணித்த அத்திருமாலுக்குச் சக்கரப்படையை வழங்கியவனாய் , ஒரு காலத்தில் கூற்றுவனை அழித்தவனாய் , எல்லா ஊழிகளிலும் உள்ள பெருமான் கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

கேழல் - பன்றி . கேசவன் - அழகிய மயிருடையவன் ; கேசியென்னும் அசுரனைக் கொன்றவன் . கேசி - கஞ்சனால் ஏவி விடுக்கப்பட்டுக் குதிரைவடிவாய் வந்த அரக்கன் ` ` தேவசேனையைப் பிடித்துச் சென்றபோது தேவேந்திரனாற் கொல்லப்பட்ட ஓரசுரன் ` என்றது ஈண்டுத் தொடர்பில்லாதது . கேசவன் என்பது விண்டுவின் துவாதச நாமத்தொன்று . காண்பு - காண்டல் . திருமால் காண்பதற்கரிய திருவடி காலன் காண்பதற்கெளிதாயிற்று என்று ஒலித்தலறிக . ( தி .4. ப .108. பா . 1,2) ` மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து மாலும் அறிந்திலன் மாலுற்றதே வழிபாடு செய்யும் பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக் காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழலடியே ` ( தி .5 ப .114 பா .1) மாமலர் - தாமரை . மலர்க்கண் :- உவமத் தொகை . மலர்க்கீடாகக் கண்ணையிடந்து அப்பியதால் மலர்க்கண் . இடந்து - பேர்த்து . மாலவன் - திருமால் . அன்று - ஆயிரம் பூக்கொண்டு வழிப்பட்ட நாளில் , ஆழி - சக்கரம் . ஈந்து - கொடுத்து . அடுதிறல் - கொல்லும் ஆற்றல் . திறலையுடைய காலனை . அன்று - ( தி .4 ப .107 பா .8) பார்க்க . அடர்த்து - கொன்று ; பொருது . ஊழி - ஊழிக்காலம் .

பண் :

பாடல் எண் : 10

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

தேன் விளங்கும் கொன்றை மாலையும் வில்வ மாலையும் அணிந்த அழகிய முடியின் மீது பஞ்சகௌவிய அபிடேகத்தை விரும்பும் பிரானாய் , ஆரவாரம் செய்து கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட வளைந்த வாளை உடைய இராவணன் பத்துத் தலைகளும் சிதறிவிழுமாறு அழுத்திய சிவந்த பாதங்களை உடையவன் கடவூர் உறை உத்தமன் ஆவான் .

குறிப்புரை :

தேன்திகழ் கொன்றையும் கூவிளமாலையும் திரு முடிமேல் அணிந்தவன் . ஆன் - பசு ( தி .4 ப .63 பா .9; ப .26 பா .5; ப .38. பா .5; ப .53 பா .7; ப .55 பா .3). மலை - திருக்கயிலையை . ஆர்த்து - பேரொலி செய்து . எடுத்த அரக்கன் . கூன்திகழ் அரக்கன் . வாள் - வாளை ( ஏந்திய அரக்கன் ). கொடிய அரக்கன் என்றலுமாம் . முடிபத்தும் குலைந்து விழ ஊன்றிய சேவடி , சேவடியான் கடவூர்உறை உத்தமனே . அவன் பத்து முடியும் குலைந்து விழ உத்தமன் பெரியதாகச் செய்தானல்லன் . திருவடியின் ஒரு விரலை ஊன்றியது ஒன்றே செய்தான் . அச் சிறியதான செயலுக்கே , அவன் தன் பேராற்றல் எல்லாம் ஒழிந்து குலைந்து விழுந்தான் . ` கருமலி ` கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண்டிறல் அரக்கன் உக்கான் ` ( தி .4 ப .71 பா .9) பெருவிரல் இறைதான் ஊன்றப் பிறை யெயிறிலங்க அங்காந்து அருவரையனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான் . ( தி .4 ப .75 பா .10).
சிற்பி