பொது


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

பொழிப்புரை :

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக .

குறிப்புரை :

( அ ) அந்தணர் , வானவர் . ஆன் இனம் வாழ்க என்றது வேள்வி முதலியவற்றாலும் ஆலயங்களில் சிவார்ச்சனை முதலிய வழிபாடுகளும் நிலைத்து நிற்கவும் , அங்ஙனம் நிலைத்து நிற்றலால் உலகம் சுபிட்சமாக வாழவும் வேண்டி இங்ஙனம் வாழ்த்துவது வேள்வியால் உலகம் சுபிட்சம் உறும் எனலை , ` கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் ` என்பதாலும் அறிக . ( முதல் திருமுறை ) ( ஆ ) தண்புனல் வீழ்க என்றது . வேள்வியின் பயன்மழை பெய்தலும் , குறித்து . மழையை வாழ்த்தியவாறு . ( இ ) வேந்தனும் ஓங்குக என்றது - சிவாலய பூசை முதலாகிய இவற்றை என்றும் அழியாது காத்துவருபவன் அரசன் , ஆதலின் அரசனை வாழ்த்தியவாறு . ` ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் ` என்பதை நோக்குக . ( குறள் . 560) ( ஈ ) தீயது எல்லாம் ஆழ்க என்றது . சைவசமய மல்லாத மற்றைச் சமய நெறிகளெல்லாம் ஒழிக , என்றும் உயிர்கட்குத் தீமை பயப்பன பிற அனைத்தும் ஒழிக என்றவாறு . எல்லாம் என்னும் எழுவாய்க்குப் பயனிலை சூழ்க என்பது . இது சேக்கிழார் அருளிய பொருளிற் கண்டது . ( உ ) அரன்நாமமே சூழ்க என்றது . ஆன்மவர்க்கங்கள் அனைத்தும் சிவபெருமான் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை ஓதி வாழ்ந்து , ஓங்குவன ஆகுக என்றவாறு . ` ஐந்தெழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை , முனைவனே முதல் அந்தம் இல்லாமல்லற் கரை காட்டி ஆட்கொண்டாய் ` என்ற திருவாசகக் கருத்தும் காண்க . ( ஊ ) வையகமும் துயர்தீர்கவே என்றது . உலகத்தவர்க்கு இம்மை மறுமை இரண்டிலும் நேரக்கூடிய துன்பங்கள் நீங்குக என்றவாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.

பொழிப்புரை :

பாச ஞானத்தாலும் , பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர் . பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து , நெருப்பேந்திய கையர் , ஏறுகந்தேறுவர் , கண்டமும் கரியவர் , காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர் . ஆயினும உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர் . அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும் ?

குறிப்புரை :

அரிய காட்சியராய் ... வாழ்க்கையர் என்றது . அன்பில்லார்க்குக் காண்டற்கு அரியர் ( ஆகி ) ( இருந்தும் ) மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் உருமேனி தரித்துவந்து , தமது அங்கை சேர் எரியர் , ஏறுகந்தேறுவர் , கண்டமும் கரியர் , காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காணக் காட்சி அருளுவர் என்றவாறு . ஆயினும் பெரியர் என்றது . இவ்வடிவே அன்றி , பிருதிவி முதலாகிய பூதங்களும் , ஆன்மகோடிகளும் , பல்கோடியண்டங்களும் பிற அனைத்தும் தம்வடிவாக நிற்பர் என்றவாறு - சிவஞானசித்தியார் . ஆர் அறிவார் அவர் பெற்றி ( பெற்றி - தன்மை ) என்றது . பசுகரணம் கெட்டுப் பதிகரணத்தால் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் எவராலுங் காண்டற்கரியவனென்றபடி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.

பொழிப்புரை :

இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர் . தந்தையும் , தாயுமில்லாதவர் . தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர் . அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது .

குறிப்புரை :

வெந்தசாம்பல் விரைஎனப் பூசி என்றது . ( விரை - வாசனை ) தம் திருவுருவின் பேரொளிப்பிழம்பின் முன் , ( பிரளய காலத்து ) உலகெலாம் வெந்த ஒளி , ஒரு சிறு ஒளியாகவும் சாலாமையை விளக்கி ` அதன் அறிகுறியாக அச்சாம்பலைச் சாந்தாகப் பூசினர் என்றபடி . சிவம் - பேரொளிப் பிழம்பு . ` அண்டம் ஆரிருளூடு கடந்து உம்பர் , உண்டுபோலு மோர் ஒண்சுடர் அச்சுடர் , கண்டிங்கார் அறிவார் , அறிவாரெலாம் வெண்டிங்கட்கண்ணி வேதியன் என்பவே `. தந்தையாரொடுதாய் இலர் என்றது - உலகை ஒடுக்கி மீளத்தோற்று வித்தலால் , உலகிற்குத்தாமே தாயும் தந்தையும் ஆவதல்லது , தாம் பிறப்பு . இறப்பு இல்லாதவர் என்றபடி . தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பவர் என்றதை , ஒளியாகிய தம்மை நினைத்தலால் , இருளாகிய வினை நீங்கச் செய்பவர் என்றபடி . எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ என்றது . அளப்பரும் காட்சிப் பொருளாந் தன்மையை எவ்வகைக்ககூற்றிலும் கூறமுடியாது என்பதாம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.

பொழிப்புரை :

இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும் , பழமை வாய்ந்த புகழ்களும் கேட்கவும் , சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன . ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா . எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழ்களைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும் , தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது . தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை .

குறிப்புரை :

ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் வண்ணமும் மாண்பும் ... வேண்டா என்றது . முதல்வராகிய அவர்தம் அடியார்களுக்கு அருளும் விதத்தையும் அவர்தம் மாட்சிமையையும் . கேட்பான்புகில் - கேட்கவும் சொல்லவும் தொடங்கினால் . அளவு இல்லை - அளவில்லாதன ஆதலால் , கிளக்க வேண்டா - அவைபற்றிய ஆராய்ச்சியொன்றும் இயம்பவேண்டா என்றவாறு . கோட்பால ... தக்கார் என்றது . எந்தை தாள்பால் - எம் இறைவனின் திருவடியில் வணங்கி , தலைநின்று - சார்ந்து . தக்கார் - பக்குவிகள் , இவை - அருளும் வண்ணம் மாண்பு ஆகிய இவற்றை ( க் கேட்பாராக ) அது நம்மைப்பற்றித் துன்புறுத்தும் துன்பங்களும் அவற்றின் காரணமாகிய வினைகளும் சாராமல் ஒழியும் பொருட்டு என்றவாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

பொழிப்புரை :

இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா . அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும் , அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன் . அவனை விரைவில் வந்து சார்ந்து , மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் . இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன் .

குறிப்புரை :

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா என்றது - சிவன் ஒப்புயர்வற்ற பொருளாதலால் ஏதுக்களுக்கும் , எடுத்துக்காட்டுக்களுக்கும் , அப்பாற்பட்டவன் - அளந்தறிய முடியாதவன் . ஏதுக்களாற் சோதித்தல் - அநுமானப் பிரமாணத் தாலறிதல் . எடுத்த மொழியாற் சோதித்தல் - உரையளவையாற் சோதித்தறிதல் , ஆகமப்பிரமாணமும் , உவமைப் பிரமாணமும் ஆம் . சுடர்விட்டுளன் எங்கள் சோதி என்றது - தன்னைக் காணலுறுவார் புறக்காட்சிக்கு அனற்பிழம்பாயும் , அகக்காட்சிக்கு ஆழ்ந்த அன்பினாலும் நினைய உள் எழுந்த சோதியாயும் விளங்குகின்றவன் என்றபடி . மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம்பற்றி வாழ்மின் என்றது - ஆதிச்சுடர்ச் சோதியாகிய அரனை அன்பினால் மனத்தின்கண் பாலித்து , அறிவானந்த நோக்கோடு அவனையே இடைவிடாது நோக்கி வாழ்ந்து பிறவித்துயர் நீக்குமின் என்றபடி . சாதுக்கள் ... சார்மின்களோ என்றது - வேண்டும் விருப்பம் எல்லாம் இறைவன் திருவடியே என்று பேரன்பினால் போற்றுவீர் , இறையே வந்து சார்மின் - கணப்பொழுதேனும் அவன்பால் வந்து சார்மின் என்றபடி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.

பொழிப்புரை :

இறைவன் திருநடனம் புரிவதும் , மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும் , வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா , மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா , பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின் , இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம் . இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம் .

குறிப்புரை :

ஆடும் எனவும் நாட்டல் ஆமே என்றது - ஆடுதல் , கூற்றம் உதைத்தல் , வேதம் பாடுதல் , என்னும் இறைவன் செயலாகிய இம் மூன்றும் புகழ்கருதியோ ஆன்மாக்களை உய்விக்கவேண்டியோ என ஆராய்வீராகில் புகழலால் அவனுக்கு ஆவது என்னை ? துன்பம் அடைதலும் அதற்குக் காரணமான பிறப்பும் நீங்கி உயிர்கள் உய்தி கூட வேண்டும் என்னும் நிர்ஹேதுக கிருபையன்றிப் பிறிதென் ? உயிர்களை உய்விக்கக் கருதியே இறைவன் இவை செய்கிறான் என்றபடி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே.

பொழிப்புரை :

சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவபூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ?

குறிப்புரை :

கடி ... ... அன்றே என்றது :- ` அரனடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமதாகும் , பரனடிக்கு அன்பிலார்செய் புண்ணியம் பாவமாகும் , வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி , நரரினில் பாலன்செய்த பாதகம் நன்மையாய்த்தே ` ( சித்தியார் - சுபக் . 29)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.

பொழிப்புரை :

வேதத்தை அருளிச் செய்தவனாய் , வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு , குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க , பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும் .

குறிப்புரை :

வேதமுதல்வன் ... ... சொல்லே என்றது :- பதினெண் புராணங்களும் - சிவ பரத்துவம் சொல்வனவே , உலகத்தவர் , ஏதப்படாமை - ஒழுக்க நெறி தவறுதலாகிய குற்றம் அடையாமைப் பொருட்டுக் கூறிய இப்புராணங்கள் ஓதியுணரத்தக்கன என்றவாறு . ( சூதன் - சூதபுராணிகர் ) ஒலிமாலை - உண்மைக் கருத்துக்களை விரிவுறக் கூறும் , நூல் வரிசைகள் எனப்பொருள்படும் . கலிக்கோவை - புராணங்கள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.

பொழிப்புரை :

கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட , அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி , தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து , தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ ?

குறிப்புரை :

நலிந்து ஆட்ட - நலிவுறுத்தி அலைக்கப்பட , ஆடி - அலைந்து . இடர் கண்டு - துன்பத்தை அறிந்து , அருள் செய்தல் பேணி - அதற்கு அருள் செய்யுங்கடமையைக் கருதி , போர் ஆழிஈந்தபுகழ் - போர்க் கருவியாகிய சக்ராயுதத்தையன்றோ ? நீர் ஆழிவிட்டு ஏறி - கண்துயிலும் கடலை விட்டுப் பூமிக்கு வந்து , நெஞ்சு இடம் கொண்டார்க்கு - தம்மைத் தன் நெஞ்சிடத்திற்கொண்ட திருமாலுக்கு , நெஞ்சிடம் கொண்டார் . தியாகேசமூர்த்தியைத் திருமால் தனது இருதயத்திற் பூசித்துவந்தமையும் , பின் இந்திரன் பால்வந்த அம்மூர்த்தி முசுகுந்த சக்கரவர்த்திமூலம் திருவாரூரில் எழுந்தருளினரென்பதும் வரலாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.

பொழிப்புரை :

திருமாலும் , நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும் , பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி , பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு , தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான் .

குறிப்புரை :

மாலாயவனும் ... செய்ததாமே என்றது :- திருமால் முதலிய தேவர்கள் இறந்தொழியாமைப் பொருட்டு இறைவன் நஞ்சுண்டு காத்த கருணைத்திறம் கூறியபடி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை [ தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.

பொழிப்புரை :

சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி , மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர் . சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தெளிவு பெறாதவர்கள் தெளிவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல , வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில் , இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும் . ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு . ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும் , அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும் .

குறிப்புரை :

அற்றன்றி ... அன்றே என்றது :- மதுரையிற் சங்கம் வைத்தருளியவனும் , சிவனேபரம் என்று தோற்றவும் தேறாத சமணர்கள் தெளிய , வையையிலிட்ட ஏடு எதிர்ந்துசெல்ல வைத்தவனுமாகிய பெருமானல்லனோ இறைவன் என்னத்தக்கவன் . ஆதலின் அவனுக்கே அன்பு செலுத்தத்தக்கது என்றவாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 12

நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
எல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல்
பல்லார் களும் மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.

பொழிப்புரை :

சிவஞானிகள் வாழ்கின்ற புகலி எனப்படும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , மெய்யன்பர்களால் நன்கு வணங்கப்படும் சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்கள் பலராலும் மதிக்கப்படும் திருப்பாசுரம் ஆகும் . இதனை ஓத வல்லவர்கள் வானுலகை ஆளும் வல்லமை பெறுவர் .

குறிப்புரை :

பத்து - என்றது இலக்கணை . ` மும்மதத்தன் ` என்ற சிவஞான சித்தியார் காப்புக்கு மாதவச் சிவஞானயோகிகள் உரைத்த உரையாலும் அறிக . ` உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் நிலவும் மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும் கலதிவாய் அமணர் காண்கிலார் கண் ஆயினும் பலர்புகழ் தென்னவனறியும் பான்மையால் ` என்பதும் ` உள்ள வண்ணம் பலரும் உணர்ந்துய்யப் பகர்ந்து ` என்பதும் சேக்கிழார் பெருமான் திருவாக்கு .
சிற்பி