திருப்புறம்பயம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிறம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
திறம்பய னுறும்பொரு டெரிந்துணரு நால்வர்க்
கறம்பய னுரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்தவனே! வீரமும் பயமும் கொண்டு தன்னோடு போர்மலைந்த அசுரர்களின் முப்புரங்களின் வலிமையை அறுத்தாய். உனது தன்மை பசுமை நிறமும் செம்மையும் கலந்தது. ஆகமங்களின் பயனாகச் சொல்லத்தக்க பொருளைத் தெரிந்துணர விரும்பிய முனிவர் நால்வர்க்கு அறமாகிய பயனை உணர்த்தியருளினாய்.

குறிப்புரை :

மறம் - வீரம், பாவமுமாம். பயம் - அச்சம், மறத்தையும் அச்சம் விளைவிப்பதையும் உடைய. மலைந்தவர் - (பகைவர்) போராடியவர்; திரிபுரத்தசுரர். பரிசு - (பெயர்ந்து சென்று அழிக்குந்) தன்மை.
அறுத்தனை - அறுத்தாய். செம்மை நிறம் அப்பனது. பசுமை நிறம் அம்மையினது, அம்மையப்பர் நிறம் இரண்டும் கூறப்பட்டன, பயன் உறும் பொருள் - உயிர்க்குறுதியை அடைவிக்கும் ஆகமாந்தப் பொருள். நால்வர்க்கு - சநகாதியர்க்கு. அறம்பயன் - அறமாகிய பயன். அமர்ந்தோய் - வீற்றிருந்தருளியவனே. அறுத்தனை உரைத்தனை என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளம்
தரித்தனை யதன்றியு மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை யிலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயத்தில் எழுந்தருளியவனே! சடையை விரித்து பெருகி வந்த கங்கை வெள்ளத்தைத் தாங்கினாய்: அஃதன்றியும் மிகப்பெரிய காலனின் பிடரி வருந்துமாறு உதைத்தாய். விளங்கும் அணிகலன் பூண்ட உமையம்மையை மேனியின் ஒரு பாகமாகப் பொருத்தியுள்ளாய்.

குறிப்புரை :

சடை விரித்தனை; வெள்ளம் தரித்தனை. எருத்து - கழுத்து, பிடர். இலங்கிழை - விளங்கிய பூண் உடைய உமாதேவியார். கருத்தினை - கருத்தை உடையாய்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக்காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய். குருந்தொசித்த திருமால் மோகினியாகவர அவரோடு கூடிப்பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடுகாட்டை விரும்பிமகிழ்ந்தாய்.

குறிப்புரை :

விழுங்கு உயிர் உமிழ்ந்தனை - இளைப்பாற்றற் பொருட்டு உடலினின்றும் பிரிக்கப்பட்ட உயிர்களை மீண்டும் அவற்றின் வினைகளைக் கழித்தற்பொருட்டு உடம்பிற்புகுத்தினாய். குருந்து ஒசி பெருந்தகை - குருந்த மரத்தை வளைத்த பெரிய தகைமையை உடையமாயன்; திருமால். மோகினி வடிவங்கொண்டு மனைவியாகிய வரலாறு காண்க. மயானம் புரிந்தனை - சுடுகாட்டை விரும்பினாய்,`கள்ளி முதுகாட்டிலாடி` `கோயில் சுடுகாடு`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

வளங்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த பெருமானே! வளமை பொருந்தியதாய்க் கடுமையாகப் பெருகிவந்த கங்கையொடு கூடிய சடையசைய விளங்கும் இளம்பிறையை கலங்கத்தாங்கி மனம் நெகிழ்ந்து வணங்கும் அடியவர்க்குச் சுடுகாட்டில் விளைந்த நீற்றொடு தோன்றும் உன் கோலத்தை அறிவிற் காட்டி விளங்குகின்றாய்.

குறிப்புரை :

புனல் - கங்கை. துளங்கு - அசைவு, முதனிலைத் தொழிற்பெயர். அளைந்தவர் - கலந்தவர், குழைந்தவருமாம். புலம் - புளம். லகரளகரப்போலி, அளமரு - அலமரு என்பது போல. மெய்யினிடம் என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண வரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்தவிறை யோனே.

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த இறைவனே! நீ பெரிதாகப் பற்றிய நோய், பிறப்பு இறப்பு, இல்லாதவன். கரும்படு சொல்லி என்னும் பெயருடைய உமையம்மையுடன் மகிழ்ந்தவன். வண்டுகள் தேனுண்ண அதனால் அழகுற அவிழும் கொன்றைமலர்களை விரும்பியவன்.

குறிப்புரை :

பிணியும் பிறப்பும் இறப்பும் இல்லாய் என்றபடி. கரும்பொடு படுஞ்சொலின் மடந்தை - `கரும்பன்ன சொல்லம்மை` என்னும் அம்பிகையின் திருப்பெயர். பல திருப்பதிகங்களுள் இறைவனுக்கும் இறைவிக்கும் அக்காலத்தில் வழங்கிய திருப்பெயர்களைக் குறித்தல் மூவர் இடத்தும் உண்டு. சுரும்பு - வண்டு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த பெருமானே! தீ வளர்க்கும் நீண்டகையை உடைய அந்தணர்கள் உன்னை நினையும் மனத்தவராயின் அவர் எத்தொழிலை மேற்கொண்டவர் ஆயினும் அவர்தம் தீவினைகட்குப் பகையாயிருந்து தீர்ப்பவன் நீ. தீக்கொழுந்து போன்ற ஒளி பொருந்திய சடையில் தனித்த பிறையோடு பொருந்தக் கங்கை கிடக்குமாறு செய்துள்ளவன், நீ.

குறிப்புரை :

அனல்படு தடக்கையவர் - செந்தீவளர்க்கும் கையுடைய அந்தணர். `எரியோம்புஞ் சிறப்பர்` (தி.1 ப.80 பா.2.) வினைப் பகை - வினைக்குப் பகைவன். தனல் - தணல். புனல் - கங்கை. கிடக்கையை - கிடத்தலை உடையாய்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்தோய்! பாவமான செயல்களை விரும்பாத தவத்தைப்புரியும் அடியவர் உள்ளங்களில் அறநெறிப் பயனையும் அடைய விரும்பாதவாறு அதனைக்கடிந்து, உன் அருள் உரிமையைப் பெற்றோர் திறத்தினுக்கு ஏற்ப அருள் வழங்கும் தன்மையனாய் வேறாய் நின்றும் அருள் புரிபவன் நீ.

குறிப்புரை :

மறத்துறை - பாபமார்க்கம். மறுத்தவர் - வேண்டாதார். தவத்து அடியர் - தவத்தையுடைய அடியவர். அறத்துறை ஒறுத்து - புண்ணிய மார்க்கத்தையும் கடிந்து. இருவினையொப்புடைமை குறித்த படி. அருட்கிழமை - சிவஞானத்திற்கு உரியராந்தன்மை. திறம் - சரியை முதலிய நான்கு திறங்கள். சரியையாளர் திறத்திற்குத் தக்கவாறு அருள்செய்யும் இறைவனது திறத்தைக் குறித்தபடி. மதித்து அகல நின்றும் புறத்துஉள திறத்தினை என்பது இறைவனது ஒன்றாய் வேறாய் உடனாயிருக்கும் மூன்று இயல்புகளுள் வேறாய் நிற்பதைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
வலங்கொள வெழுந்தவ னலங்கவின வஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்தவனே! இலங்கை மக்கள் வணங்கும் தலைவனாகிய இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு முழங்க அவன் வலிய தலைகளோடு கைகளை அடர்த்து அவன் அஞ்சிப் போற்ற வாளும், நாளும் அளித்து அவனுக்கு வெற்றி உண்டாக அருள் புரிந்தவன் நீ. நன்மைகள் உண்டாக ஐந்து புலன்களை வென்றவன் நீ.

குறிப்புரை :

இலங்கையர் - இலங்கையில் வாழ்ந்தவர்கள், இறைஞ்சு இறை - வணங்கும் அரசனாகிய இராவணன். விலங்கலில் - கயிலையை எடுக்குந்திறத்தில். உலம் - திரண்டகல்லை. கெழு - ஒத்த. கவின - அழகுசெய்ய. அஞ்சு - அஞ்சுகின்ற, ஐம்புலன் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

வடங்கெட நுடங்குண விடந்தவிடை யல்லிக்
கிடந்தவ னிருந்தவ னளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள்செய் தொன்றினை புறம்பயம மர்ந்தோய்.

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்தவனே! ஆல் இலையில் துயின்ற திருமாலும் அவனது கொப்பூழாகிய தாமரையில் இருந்துதோன்றிய பிரமனும் உன்னை அளந்தறிய இயலாதவரா(யி)னார். பின் அவர்கள் தொடர்ந்து பழைய உருவோடு வணங்க அவர்கட்கு கருடப்புள், அன்னப்புள் ஆகியவற்றை ஊர்தியாகக் கொண்டு படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு அருள்புரிந்தாய்.

குறிப்புரை :

வடம் - ஆலமரம்.
இங்கு ஆலிலையை உணர்த்திற்று. நுடங்கு உள - அசைவுள்ள, தூங்க என்றபடி. இடந்த - பெயர்ந்த. இடை அல்லி - கொப்பூழிடையில். பூத்த - (அகவிதழையுடைய) தாமரையொடு, கிடந்தவன் - திருமால். இருந்தவன் - அம்மலர்மேல் இருந்த பிரமன். புடம் - மறைப்பு. கருள் - இருள். இருள் மறைக்கப்பட்டாற்போல (ஒளிப்பிழம்பாய் இருந்தும் இருவரும் அடிமுடி காணாது) அறியாமையான் மறைக்கப்பட்டார்கள். \\\\\\\"கருள்தரு கண்டத்து எம் கயிலையார்\\\\\\\" (தி.3 பதி. 109 பா. 4). புடங்கருள் செய்து - புள்தங்க அருள் செய்து எனப்பிரித்துக் கருடப்புள், அன்னப்புள் இரண்டின் மேலும் தங்க அருள்செய்து எனலும் ஆம். பெயரெச்சத்து அகரம் தொக்கது. புள்தங்கு - புட்டங்கு என இரட்டிக்காதது, எதுகை நோக்கிற்றாம். தி.2 பதி.92 பா.1 காண்க. `புட்டன் பேடையொடாடும் பூம்புகலூர்த் தொண்டர் போற்றி வட்டஞ்சூழ்ந்தடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே` (தி.2 பதி.92 பா.21), என்பதில், புள் + தன் = புட்டன் என்று புணர்ந்தமையால், இங்கும் புள்தங்கு என்பனவற்றின் புணர்ச்சி எனக்கொள்வதில் தடைஇராது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம்
அடக்கினைபுறம்பய மமர்ந்தவுர வோனே.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த வலியவனே! ஊன் உண்டல் நன்றென்று கூறும் தேரர்கள், தீதென்று கூறும் சமணர்கள், உடலில் உடையின்றித்திரியும் திகம்பரர்கள் உடலைப் போர்த்தித்திரியும் புத்தர்கள் ஆகியோர் கூறும் பிடகநூல் முதலியவற்றின் உரைகளைக் கொள்ளாது உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குகின்றாய்.

குறிப்புரை :

விடக்கு - ஊன். ஒருவர் நன்றென்னும் - தேரரையும், தீ தென்னும் சமணரையும் குறித்ததாகும். (உடற்கு உடைகளைந்தவர், திகம்பரசைனர்.) படக்கர்கள் - உடையுடுத்தோர். படக்கு - உடை. பிடக்கு உரை - பிடக நூல்மொழி \\\\\\\"பிடக்கே உரைசெய்வார்\\\\\\\" (தி.1பதி.13 பா.19). புத்தர்களுடைய திரிபிடகம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தம்
தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
சுரும்பவிழ் புறம்பய மமர்ந்ததமிழ் வல்லார்
பெரும்பிணி மருங்கற வொருங்குவர் பிறப்பே.
 

பொழிப்புரை :

கரிய உப்பங்கழிகள், பெரிய அலைகளால், விளங்கும் முத்துக்களைத்தந்து உலவும் கழுமலத்தார்க்குத் தலைவனும் தமிழுக்கு உரிமை பூண்டவனுமாகிய ஞானசம்பந்தன், வண்டுகள் ஒலி செய்யும் புறம்பயம் அமர்ந்தபிரானை விரும்பிப் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்கள் காலங்காலமாக வரும் பெரும் பிணியாகிய பிறப்பு நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

கழி - உப்பளம்.
கரைக்குலவு முத்தம் - கரைமேல் விளங்கும் முத்து.
கழுமலத்து இறை - காழிவேந்தர்.
அமர்ந்த தமிழ் - விரும்பிப் பாடிய இப்பதிகம்.
மருங்கு அற - இருந்த இடமும் தெரியாது ஒழிய.
பிறப்பு ஒருங்குவர் - பிறப்பு ஒழியப் பெறுவர்.
ஒருங்குவது பிறப்பில் வினை.
பிறவி ஒருங்கப் பெறுவது இத்தமிழ் வல்லார் வினை.
அப்பிறப்பு ஒருங்கப்பெறுவர் எனற்பாலது பிறவி ஒருங்குவர் எனப்பட்டது.
நோயொழிவர், காலொடிவர் என்பவை போல்வது.
சிற்பி