எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை


பண் :

பாடல் எண் : 1

சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்
சாக்கிரந் தன்னிற் சழுத்திதற் காமியம்
சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையாகிய சாக்கிர சாக்கிரத்தில் மட்டுமே திரோதானமலம் செயற்படும். (எனவே இந்நிலையில்தான் அனைத்துக் கருவிகளும் செயற்பட, ஆன்மா உலகினை நன்கு உணர்வதாகும்). சாக்கிர சொப்பனத் தளவிலேதான் - அஃதாவது, சாக்கிர சாக்கிரம், சொப்பனம் என்னும் இரண்டில் மட்டுமே ஆன்ம தத்துவம் செயற்படும். (அவற்றுள் சாக்கிரத்தில் மட்டுமே புறக் கருவிகள் செயற்படச் சொப்பனத்தில் அந்தக்கரண நிகழ்ச்சியாகிய சிந்தனை மட்டுமே உளதாகும்) சாக்கிர சுழுத்தியளவில்தான் - அஃதாவது சாக்கிர சாக்கிரம், சாக்கிர சொப்பனம், சாக்கிர சுழுத்தி என்னும் மூன்றளவிலேதான் கன்மங்கள் நிகழும். (எனவே, அந்த மூன்றளவிலேதான் ஆன்மாவிற்குச் சுக துக்கங்கள் விளங்கித் தோன்றும்). சாக்கிர துரியத்தளவில்தான் வித்தியா தத்துவங்கள் செயற்படும். (எனவே, அந்த நான்களவில்தான் ஆன்மாவிற்கு `யான்` என்னும் தன்னுணர்வு உளதாகும்).

குறிப்புரை :

எனவே, சாக்கிர துரியாதீதத்தில் யாதொரு செயற் பாடும் இன்றி, மூச்சும் நின்றுவிட ஆன்மாத்தான் சாக்கிர சாக்கிரத்தில் அறிந்த சுகம், அல்லது துக்கத்திலே தன்னையும் மறந்து, `அதுவேயாய் அழுந்தியிருக்கும்` என்பதுதானே விளங்கிற்று.
ஆன்மாவிற்கு `யான்` என்னும் தன்னுணர்வு வித்தியா தத்துவத்தாலும், `இஃது இன்னது` என்றும் இஃது எனது, பிறருடையது என்றும் நிகழ்வதாகிய பிறபொருள் உணர்வு ஆன்ம தத்துவத்தாலும் நிகழும். `யான், எனது, பிறருடையது` - என்னும் உணர்வுகள் முழு அனுபவங்கள் ஆகா, அவை பொருள்களை உணரும் உணர்வுகளே யாம், அங்ஙனம் பொருள் உணர்வு நிகழ்ந்தபின், ஆன்மா அந்த உணர்வுகள் அனைத்தையும் இழந்து, உணர்ந்த பொருளில் அதுவாய் அழுந்துவதே முழு அனுபவமாகும். உலகப் பொருளிள் ஆன்மா அவ்வாறு அழுந்தி நிற்பதே உலகத்தைப் பற்றிய முழு அனுபவமாகும். அதுவே சாக்கிர துரியாதீதம். அதிற் சிறிது குறைந்தன எல்லாம் சாக்கிர துரியம் முதலிய நான்குமாம். இதுவே இம்மந்திரத்தால் கூறப்பட்டது.
வித்தியா தத்துவங்களைச் சிவ தத்துவங்கள் செயற்படுத்த, வித்தியா தத்துவங்கள் ஆன்ம தத்துவங்களைச் செயற்படுத்தும். ஆகவே, `வித்தியா தத்துவங்கள் ஆன்ம தத்துவங்களில் சில பல வற்றைச் செயற்படுத்தாது நிற்கும் நிலைகளே கீழாலவத்தை` எனவும், `சிவதத்துவங்கள் வித்தியா தத்துவங்களில் சில பலவற்றைச் செயற்படுத் தாது நிற்கும் நிலைகளே மத்தியா லவத்தை` எனவும் உணர்ந்து கொள்க.
சித்தாந்த சாத்திரங்களில் கூட, `மாயேயம்` என இருக்க வேண்டிய பாடங்கள் `மாமாயை` என்றே மாற்றப்பட்டிருத்தலைக் காணலாம். அவ்வாறே இம்மந்திரத்திலும் சில பிரதிகளில் பாடம் மாற்றப்பட்டுள்ளது.
`மாயேயம்` என்பது இங்கு பிரகிருதியின் காரியங்களையே குறித்தது. மூல கன்மமே `கன்மம்` எனப்பட, அதினின்றும் தோன்றும் நல்வினை தீவினைகளாகிய காரிய கன்மம், `கான்மியம்` எனப்பட்டுப் பின் `காமியம்` என மருவி வழங்குகின்றது. ஈற்றடியில் `மாயை` என்றது அசுத்த மாயையை. அஃது ஆகுபெயராய், அதன் காரிய மாகிய வித்தியா தத்துவங்களை உணர்த்திற்று.
நான்கடிகளிலும் `செயற்படும்` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன.
இதனால், மத்தியாலவத்தை ஐந்தன் இயல்புகளும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
ஏய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்தச் சகலத் துளானே.

பொழிப்புரை :

சிவதத்துவம் அனைத்தும் செயற் படாமையால், வித்தியா தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய அதீத நிலையில் சிவதத்துவங்கள் தொழிற்படத் தொடங்கிய பொழுது வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் எழுந்து, கலை, காலம், நியதி என்னும் மூன்று தத்துவங்களை எழுப்பும். பின்பு கலையினால் வித்தையும், வித்தையால் அராகமும் எழுந்து தொழிற்படும். இவ்வாற்றால் மத்தியா லவத்தைகளில் துரியாதீதம் முதலிய ஐந்தும் நிகழும், அவை ஐந்தும் `மகாசகலம்` எனப் பொதுப் பெயரைப்பெறும்.

குறிப்புரை :

`வித்தியா தத்துவங்களில் மாயை தவிர யாதொரு தத்துவமும் செயற்படாதநிலை சாக்கிரத்துரியாதீதமும் மாயையோடு காலம் மட்டும் தொழிற்படும் நிலை சாக்கிரத் துரியமும், அவற்றோடு கலை நியதி இவை தொழிற்படும் நிலை சாக்கிரச் சுழுத்தியும், அவ்றோடு வித்தை செயற்படும் நிலை சாக்கிர சொப்பனமும், அவற்றோடு அராகமுங் கூட, சிவதத்துவம், வித்தியா தத்துவம் அனைத்தும் செயற்படும் நிலை சாக்கிர சாக்கிரமும் ஆம்` - எனக் கூறியவாறு. சிவதத்துவங்களும் இவற்றிற்கு ஏற்பச் செயற்படும் என்க.
`மாயை எழுப்பும்` - என்றதனால், `அது பிறிதொன்றையும் எழுப்பாது, தன்னளவில் செயற்பட்டிருந்த நிலை உண்டு என்பது பெறப்பட்டது.
முன்னை மந்திரத்தில், `சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி` - என்றதனாலும், `சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்` என்றதனாலும், `அந்நிலைகளில் வித்தியா தத்துவங்கள்மேற்கூறிய முறையில் செயற்படும்` என்பது கொள்ளப்படும்.
வித்தியாதத்துவங்களைக் காலம் முதலாக வைத்து எண்ணுதல் முறையாயினும், கலை முதலாக வைத்து எண்ணுதலும் உண்டு` என்பதைச் சிவப்பிரகாசம் முதலியவற்றால் அறிக.
பின்னர் `இராகாதி` என வருதலால், `கலாதி` என்றதில் `ஆதி` என்றது, நியதியை மட்டுமே தழுவி நின்றது.
வித்தை, அராகம் இவை யொழிந்த ஏனையவற்றை முன்னே வேறு பிரித்து ஓதினமையால், `ஏய்` என்பதில் ஏயப்பட்டன, அவையேயாயின,
வித்தியா தத்துவங்கள் பெரும்பாலும் ஒடுங்கினமையால், சாக்கிரத்தில் அதீதத்தை எய்திய ஆன்மாப் பின்பு அதினின்றும் மீளுதல் வித்தியா தத்துவங்கள் செயற்படுதலாலே, என்பார் முன்னிரண்டடிகளில் சிலவற்றை வகுத்துக்கூறிப் பின்னிரண்டடி சிலவற்றைச் சுட்டியொழிந்தார். மாசகலத்தையே இங்கு, `சகலம்` என்றார். `இராகாதி ஏய்` என மாற்றி ``கனா, நனா`` என்பதற்கு முன்னும் `ஆயினன்` என்பதை இறுதியிலும் கூட்டுக. `ஆன்மா ஆயினன்` எனத் தோன்றா எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், மத்தியாலவத்தைகளில் சிலவற்றினியல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மேவிய அந்தன் விழிகட் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணும் அதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலுங் கருமமே.

பொழிப்புரை :

பிறவிக் குருடன் கண்ணை விழித்து விழித்துப் பார்ப்பினும் யாதொன்றையும் காணமாட்டுவானல்லன். (இது போன்றது சாக்கிர துரியாதீதநிலை அஃதாவது, உணர்வு சிறிதும் இன்றிக் கிடக்கும் நிலையாம்).
ஒன்றும் காணப்படாத நிலையில் அக்குருடன் தன் காலில் கீழ்க் கிடப்பதைத் தடவித் தடவிப்பார்ப்பான். (இதுபோன்றது சாக்கிர துரிய நிலை. அஃதாவது, உணரத் தக்கனவற்றைச் சிறப்பாக அன்றிப் பொதுவாக உணரும் நிலையாம்).
தடவிப் பார்த்த குருடனுக்குக் கோல் ஒன்று கிடைத்ததாயின் அதனைத் துணையாகப் பற்றிச் சில இடங்களுக்குச் செல்வான். (இது போன்றது சாக்கிரச் சுழுத்தி நிலை; உணரப்படும் பொருள்களைச் சிந்தனையால் உணரும் நிலையாம்).
இதன் பிறகு அக்குருடன்தனக்குக் கண் தெரிவதற்கு வேண்டியவற்றைச் செய்வாரை அணுகி அவர்கட்கு உபசார வார்த் தைகளைச் சொல்வான். (இதுபோன்றது சாக்கிரச் சொப்பனநிலை. உணரவேண்டுவனவற்றை உணர்தற்கு முனையும் நிலையாகும்).
(இறுதியில் குருடன் கண்பெறுதலும் உண்டு. அதுபோன்றதே சாக்கிர சாக்கிரம்) சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்னும் மூன்று நிலைகளில்தான் ஆன்மா செயற்பாடுடையதாம். ஏனை இரண்டும் செயலற்ற நிலைகளாம்).

குறிப்புரை :

மேவிய-பிறப்பிலே பொருந்திய. விழி கண், நிகழ் கால வினைத்தொகை. `குருடன்` என்றது, `பார்க்க இயலாதவன்` என்ற தாம். `காணும்` என்றது, தடவிப் பார்த்தலை, `தடிகொண்டு மேவும்` எனவும் `விழிபெற ஆவன கொல்லும்` எனவும் மாற்றியுரைக்க.
இங்குக் கூறிய இவ்வியல்புகள் பெரிதும் அதிர்ச்சியைத் தரத் தக்க செய்தியை அறிந்தவுடன் ஆன்மா மூர்ச்சித்துப் பின் தெளிவடை தலில் நன்கு விளங்கம். அது பற்றி அவற்றையே சிலர் உதாரணமாகக் காட்டினாலும் அவை மட்டுமே உதாரணங்கள் அல்ல. மிகச் சிறு சிறு செய்திகளிலும் விழிப்பில் இவைகள் இடையறாது நிகழ்வனவேயாம்.
இதன் முதல் மூன்று அடிகள் ஒட்டணியாய் அமைந்தன. ஆதலின், இதனால், மேற்கூறியவை உவமைகாட்டித் தெளிவிக்கப் பட்டனவாம்.

பண் :

பாடல் எண் : 4

மத்திமம் ஒத்த சிலந்தி வலையத்துள்
ஒத்தங் கிருந்தங் குயிருண்ணு மாறுபோல்
அத்தனு ஐம்பொறி ஆடகத் துள்நின்று
சத்தம் முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.

பொழிப்புரை :

ஐம்பொறிகளைக் கருவியாக உடைய அந்த உடம் பாகிய ஆடரங்கத்துள் நின்று சத்தம் முதலிய புலன்களை உயிர் நுகரும் முறை, சிலந்தியானது வலைக்குள் ஏற்புடைய இடத்தில் இருந்து கொண்டு, அங்குவந்த உயிர்களை உண்ணும் முறைபோல்வது. ஆதலின், அதற்கு ஏற்புடையன மத்தியாலவத்தைகளே.

குறிப்புரை :

`தான்` என்றது உயிரை. `தான் சத்தம் முதல் ஐந்தும் உண்ணுமாறு, சிலந்தி உயிர் உண்ணும் மாறுபோலும்; ஆதலின் மத்திமம் ஒத்த` - எனக் கூட்டி முடிவு செய்க.
`ஐம்பொறி அத்தனுவாகிய ஆடு அகம்` என்க. உயிரின் செயற்பாட்டை ஆட்டமாக உருவகித்தார். `அத்தனும்` - என்பதைப் பாடமாகக் கொண்டமையால், பலரும் இடர்ப்பட்டனர். `வலையது` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `சிலந்தி உயிர் உண்ணுதல் வலையின் மத்தியில் இருந்து` என்பது, பொருளில், `மத்திமம் ஒத்த` என்றதனானே பெறப்பட்டது` `மயில் போல ஆடினாள்` என்றால், மயில் ஆடுதல் தானே பெறப்படுதல் போல. `ஒத்த` என்பது அன் பெறாத அஃறிணைப் பன்மை வினைமுற்று. ஒத்து - வலைக்கு ஏற்ப இயைந்து பின் வந்த `அங்கு` என்பதன்பின், `வந்து` என ஒரு சொல் வருவிக்க. `போல்` என்னும் பகுதியே நின்று, `போல்வது` என முற்றுப் பொருள் தந்தது. அதன்பின், ஆதலின் என்பது சொல் லெச்சமாய் நின்றது.
இதனால், மத்தியாலவத்தையே உயிர் உலகத்தை நன்கு அனுபவிக்கும் நிலையாதல் கூறப்பட்டது. அதுபற்றி இது, `பிரேரகாவத்தை` - எனப்படும்.

பண் :

பாடல் எண் : 5

வைச்சன அச்சு வகையிரு பத்தஞ்சோ(டு)
உச்ச முடன் அணை வான்ஒரு வன்னுளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு உதவியாக அவைகளின் வசமாக வைக்கப்பட்ட கருவிகள் இருபத்தஞ்சு. எனினும், (அவைகளை வைத்துமட்டும் போதாமையால்) எல்லாவற்றையும் நடத்தும் தலைமைப்பாட்டோடு உடனாய், நீங்காது ஒருவன் இருக்கின்றான். அவனை எல்லா நூல்களும் ஒருமுகமாக, `பித்தன்` என்றும் `பெரியோன்` என்றும் `பிறப்பிலி` என்றும் கூறுதலையறிந்து. அவனையே விரும்பி நான் உய்ந்தவாறு குறிக்கொளத்தக்கதாகும்.

குறிப்புரை :

இருபத்தஞ்சு கருவிகளாவன, ஆன்மதத்துவம் இருபத்து நான்கும், புருட தத்துவம் ஒன்றுமாம். வித்தியா தத்துவங்கள் அனைத்தும் `புருடன்` என ஒன்றாக அடக்கப்பட்டன. ஆன்மாக் களுடன் இறைவன் கருவிகளைக் கூட்டினால் மட்டும் போதாது. செயல்தோறும் அவனும் உடன் இயங்கினால்தான் உயிர்கள் அக் கருவிகளால் அடையத் தக்க பயனை அடையும். அதுபற்றி இறைவன் அவ்வாறு உடன் நிற்றலையே இம்மந்திரத்தால் குறித்தார்.
இறைவன் இவ்வாறு உடனாய் நிற்கும் நிலைபெத்த காலத்தில் மத்தியாலவத்தையிலே சிறப்பாக நிகழ்தலால், அவ்வவத்தை `உணர்த்து முறைமை` - எனப்படுகின்றது. ஆகவே அதனை இங்குக் குறித்தல் முறைமையாகின்றது. ஈற்றில் உரைக்கப்பட்டது சொல்லெச்சம்.
இறைவன் இங்ஙனம் உடனாய் நிற்கும் நிலை சிவஞான போதம் பதினொன்றாம் சூத்திரத்தில் `காணும் உபகாரம்` என இனிது விளக்கப்பட்டது.
`இங்ஙனம் உடனாய் நிற்பவனைப் பிற தேவராக உணராது, சிவபெருமானாகவே உணர்தல் வேண்டும்` என்பதையே பின்னிரண் டடிகளால் கூறினார். `பிச்சன், பிறப்பிலி, பேர் நந்தி` என அப்பரும் அருளிச் செய்தார்.l `அவனருள் நச்சி` என மாற்றி யுரைக்க.
`இருபத்தஞ்சு` - என்றதை மாகேசுர மூர்த்தமாகக் கொள் ளுதற்கு, இங்கு யாதோர் இயைபும் இல்லாமை யறிக.
இதனால், மத்தியாலவத்தை பற்றி அறியத்தக்கதொரு சிறப்புப் பொருள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நாலா றுடன்புருடன் நற்றத் துவம்உடன்
வேறான ஐயைந்து மெய்ப்புரு டன்பரம்
கூறா வியோமம் பரம்-எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்தி தத்வமே.

பொழிப்புரை :

`சாங்கியர் கூறும் நிலம் முதல் மூலப் பகுதி ஈறான இருபத்து நான்கு தத்துவங்களுடன் அவர் இருபத்தைந்தாவதாகக் கூறு கின்ற புருடனையும் ஒரு தத்துவமாகக் கூட்ட, சாங்கியர் கொள்கை யினின்றும் வேறான இருபத்தைந்து தத்துவங்கள் உளவாகின்றன. அவற்றிற்கு மேல் உண்மையில் `புருடன்` எனச்சொல்லத்தக்க ஈசுரனும் அவனுக்கும் மேலான, சொல்லுக்கு எட்டாத பராகாயமும், அதற்கு மேல் பரப்பிரமமும் ஆகத்தத்துவம் இருபத்தெட்டு` எனத் `தத்துவ எண்ணிக் -கையை இவ்வாறு கொள்வதே சிறப்பு` என வேதாந்திகள் கூறுகின்றனர்.

குறிப்புரை :

`வேதாந்திகளது கொள்கையை உணர்ந்தாலன்றிச் சித்தாந்திகளது கொள்கையின் சிறப்பு விளங்கமாட்டாது` என்பது பற்றி அதனைக் கூறினார். சாங்கியர் முதலியோர் நிரீச்சுரவாதிகள் ஆயினமை பற்றி அவரது கொள்கைகளை நாயனார் கூறிற்றிலர். `உடன்` இரண்டில் பின்னது `தொகை` என்னும் பொருளது.
சாங்கியர் `புருடன்` எனக் கூறுவதே சிவன் - என்பது வோதந்திகள் கருத்து. அதனினின்றும் பிரித்தற்கு ஈசுரனை `மெய்ப் புருடன்` - என்றார். இதனையடுத்து, `பரம்` - என்றது. `மேல்` என்ற படி. `வியோமம், ஆகாயம்` - என்பன ஒரு பொருட் சொற்களாயினும் பூதாகாயம் அல்லாது, எல்லாவற்றிற்கும் மேலே உள்ள பராகாயமே சிறப்பாக, `வியோமம்` எனப்படும்.
சித்தாந்தத்தில் சிவனது சத்தியே பராகாயமாம். ஞானம யமாய் இருத்தல்பற்றி `சிதாகாசம்` - எனப்படும். `சிற்பர வியோமம்`* என்றார் சேக்கிழார்.
`எல்லாப் பொருள்கட்கும் இடங்கொடுத்து நிற்கும் பூதா காயம் போல, பிரகிருதி முதலாகிய அனைத்திற்கும் மேலாய் உள்ளது பரா காயம் `என்பது வேதாந்திகள் கொள்கை. அதனை, அனிர்வ சனீயம்` - என அவர் கூறுதல் பற்றி அதனை, `கூறா வியோமம்` என்றார். இதன் பின், பரம் என்றது, `பரம்பொருள்` - என்றபடி. இறுதியில் `வேறான` - என்றது, `சிறப்பான` என்றதாம் `வேறான தத்துவம் நாலேழு என வேதாநதி கொண்டனன்` - என்க. இம்மந்திரம் இருவிகற்பமாய் வந்தது.
மத்தியாலவத்தையில் வைத்துத் தத்துவங்களைக் கூறுவார். வேதாந்திகள் கூறும் தத்துவ முறைமையை இதனாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு
மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டானடி காணலு மாமே.

பொழிப்புரை :

உயிர் (ஏலாத நிலைகளின் நீங்கி) ஏற்புடையதாகிய அழகிய நிலையைத் தலைப்பட்டபொழுது, இடைகலை, பிங்கலை நாடிகள் வழியாக இயங்குகின்ற காற்றோடு பொருந்தி அவற்றின் வடிவாகி, அப்பொழுதே இராசத சத்துவ தாமத குணங்களிலும் பொருந்திக் (கீழ்நோக்கிச் சென்று) மூலாதாரத்தை யடைந்து, அங்கே உள்ள குண்டலி சத்தியின் கீழ் நோக்கு நிலையை மாற்றி மேல்நோக்கி எழச் செய்து, பின்பு பிருதிவிமண்டலம், அப்புமண்டலம், தேயு மண் டலம் ஆகிய மூன்று மண்டலங்களிலும் மேற்கூறிய முக்குண வடிவாய் உள்ளமும் மூர்த்திகளிடமாக இறைவனைத் தரிசித்தல் கூடும்.

குறிப்புரை :

ஏற்புடை நிலையே அழகிது ஆதலின் அதனை `ஏல் அம்` என்றார். அம் - அழகு. அஃது ஆகுபெயராய், அழகிதாகிய நிலையைக் குறித்தது. அழகிய நிலையாவது யோகாவத்தை. அட்டாங்கத்தில் இயமம்முதலிய நான்கும் `யோக சாக்கிரம்` என ஒன்றாய் அடங்கும். ஏனைய பிரத்தியாகாரம் முதலிய நான்கும் யோக சொப்பனம், யோக சுழுத்தி, யோக துரியம், யோக துரியாதீதம் என்பனவாய் அமையும். இவை ஐந்துமே சிறப்பாக, `மேலாலவத்தை` எனப்படும்.
யோகநூலார் இவற்றையே `மலம் நீங்கிய நின்மலாவத்தை` எனக் கூறுவராயினும்` ஒளியாலன்றி இருள் நீங்காதவாறு போல, ஞானத்தாலன்றி மலம் நீங்காது ஆதலின், ஞானவத்தைகளே நின்மலாவத்தையாம். இதனை,
``யோகில் தருவதோர் சமாதி தானும்
தாழ்ந்துபின் சன்னம் சாரும்``
எனச் சிவஞான சித்தி இனிது விளக்கிற்று.3 தாழ்தலாவது, கீழ் நிலையை அடைதல். இவை இங்ஙனமாயினும் நின்மலாவத்தையில் சேர்க்கும் ஆற்றலுடையன ஆகலின் `ஏற்புடையஅழகிய நிலை` எனப்பட்டன. கீழாலவத்தையும், இத்தன்மை இலவாதல்அறிக.
உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது ஆதலின் `இடையொடு பிங்கலை கோலங் கொண்டு` என்றார். இடையும், பிங்கலையும் அவை வழியாக இயங்குகின்ற காற்றைக் குறித்தலால் ஆகுபெயர்கள். உடல் உள்ள அளவும் முக்குணங்கள் நீங்கா ஆதலின் ஆன்மா அவற்றினுட் புகவேண்டியதாயிறறு. முறுக்குதல் - திசை மாற்ற வைத்தல். `கோண்` என்றது, `மண்டலம்` என்றபடி. பிராசாத நிலையில் நிராதாரத்தை உட்கொண்டு முதலில் உள்ளது அக்கினி மண்டலமாகச் சொல்லப்படினும் ஆதார யோகத்தில் பிரமனை நோக்கி முதலில் உள்ளனப் பிருதிவி மண்டலமாகக் கூறினார். ஆதாரங்களின் காணப் படுபவர்கள் குணமூர்த்திகளேயாயினும் அவர்களை நிர்க்குண மூர்த்தி யாகிய சிவனது விபூதிகளாகவே உணர்தல் வேண்டும், என்றற்கு,
``காலம் கொண்டான் அடி காணலும் ஆமே``
என்றார். உம்மை சிறப்பு. அதனானே யோகாவத்தையில் சிறப்பு விளங்கும். காலம் கொண்டான் - காலத்திற்கு உட்படாமல் அதனைத் தன் செயலுக்குக் கருவியாகக் கொண்டவன் சிவன்.
``காலமும் கடவுள் ஏவலால் துணைக் காரணங்காண்``
என்றது சிவஞான சித்தி.l
`அவத்தை` எனப்படுவன மேற்கூறிய `கீழாலவத்தை, மத்தியா லவத்தை` - என்பனவேயன்றி, மேலாலவத்தையாகிய யோகா வத்தையும் உண்டு - என்பதை இதனாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 8

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலின் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குறிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.

பொழிப்புரை :

நாடிகள் பத்தும், நன்மை விளங்குகின்ற வாயுக்கள் பத்தும் நாடிகளில் சிறப்புடைய, `இடை, பிங்கலை, என்னும் இரு நாடிகள் வழியாக இயங்குகின்ற `பிராணன்` என்னும் வாயுவிற்குக் கீழ்ப்பட்டு, அவற்றின்வழி நிற்கும். ஆணும், பெண்ணும் கூடியதனால் விளைகின்ற இன்பத்தில் உயிர் மூழ்குதற்குக் காரணமான சுக்கில சோணிதங்களும், அவ்வின்பத்தை விரும்புவதாய் அன்பைச் செய்கின்ற மனமும் உடல் முழுவதுமாய் இருக்கும்.

குறிப்புரை :

நாடிகள் பத்தும் தூல உடம்பிற்கு உறுப்பாய் அமைவன. அவை, `அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழு முனை, காந்தானி, குகுதை, சங்கிலி, சிகுவை, புருடன்` - என்பன.
`பத்தும்` - என்பது, `வாயு` என்றதனோடும் சென்று இயைந்தது. வாயுக்கள் பத்தாவன, `பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` - என்பன. `நாடிகளாலும், வாயுக்களாலும் உடல் உருப்பெற்று நிலைபெறுகின்றன` எனவும், `உடலை மனம் பற்றி உலாவுதலால் இன்பம் விளைகின்றது` எனவும் கூறியதனால், தூலமும், சூக்குமமும், பரமும் ஆகிய உடம்பாய் உள்ள கருவிகளின் கூடுதல் குறைதல்களாலே அவத்தைகள் பலவாய் நிகழ்கின்றன` என்பது உணர்த்தியவாறு.
இதனால், அவத்தை பேதங்கட்குக் காரணம் குறிப்பால் உணர்த்தப்பட்டது. ஒடுங்கியிருந்திடும்` என்பதை இறுதியிலும் கொண்டு கூட்டுக.
(இரண்டாம் தந்திரத்து, `பாத்திரம்` - என்னும் தலைப்பில் வந்துள்ள `ஆவன ஆவ` என்னும் மந்திரம் (496) பதிப்புக்களில் இதனையடுத்தும காணப்படுகின்றது).

பண் :

பாடல் எண் : 9

பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவம் நாலேழ் எனஉன்னத் தக்கதே.

பொழிப்புரை :

(`வேதாந்திகள் கொள்வன` - என மேற்கூறப்பட்ட) தத்துவங்கள் இருபத்தெட்டு என்னும் தொகை, தூலபூதம் ஐந்து, சூக்கும பூதம் (தன்மாத்திரை) ஐந்து, ஆகிய பூதங்கள் பத்தும், ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகிய இந்திரியங்கள் பத்தும், `மனம், அகங்காரம், புத்தி` - என்னும் அந்தக் கரணங்கள் மூன்றும், மூலப்பகுதி ஒன்றும் ஆகிய சடங்கள் இருபத்து நான்கும், அவற்றிற்கு மேல் அபர துரியமாகிய புருடன், அல்லது சீவன் ஒன்றும், அதற்குமேல் காலத்தின் வாயிலாக எல்லாவற்றையும் இயக்குகின்ற ஈசுரன் ஒருவனும், அவனுக்கு மேலேயுள்ள மாயையாகிய பராகாசமும், அவனுக்கு மேல் பரதுரியமாகிய பரம்பொருள் ஒன்றும் எனக் கருதத் தக்கதாகும்.

குறிப்புரை :

சித்தம் மூலப்பகுதியுள் அடங்கிற்று. `பராகாயம்` என்பதற்கு `மேய்த்த வியோமம் என்றார். ஈசுரனை மாயைக்கு உட்பட்டவனாகவே வேதாந்திகள் கொள்வர்.
இதனால் மேல் எண்ணளவாகக் கூறிய வேதாந்தி தத்துவங்கள் இவை என்பது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விளங்கிடும் முந்நூறு முப்ப தொருபான்
தளங்கொள் இரட்டிய(து) ஆறு நடந்தால்
வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழித் தத்துவம் நின்றே.

பொழிப்புரை :

முந்நூறு, அதனுடன் முப்பதொருபான்; அஃதா வது முந்நூறு, இரண்டும் கூட அறுநூறு. தளம் - படி. இரட்டிய தாகிய ஆறு. ஆறாறு = முப்பத்தாறு, அறுநூற்றை முப்பத்தாறு படியாக உறழ வருவது இருபத்தோராயிரத்து அறுநூறு. இஃது ஒரு நாளைக்கு வெளிச்சென்றும், உட்புகுந்தும் நடக்கின்ற மூச்சின் எண்ணிக்கை யாகும். இவ்வாறு வாயு - பிராணன். எழுந்து நடந்தால், உயிரைப் பற்றி யுள்ள பஞ்சமலங்களும் தன் தன் வேலையைச் செய்யும். அப்பொழுது தான் மாயா காரியமாகிய தத்துவங்களின் செயல்களும் விளங்குவனவாம்.

குறிப்புரை :

`உடம்பில் உயிர் நிலை பெறுதற்குப் பிராண வாயு வினது இயக்கமே இன்றியமையாக் காரணமாய் இருத்தலின், அவ் வியக்கம் உள்ளதனால்தான் தத்துவங்கள் காரணமாக அவத்தைகள் நிகழ்கின்றன` என்றவாறு. துரியாதீத நிலையில் உயிர்ப்பு அடங்கு தலால் மேற்கூறிய எண்ணிக்கையில் சில குறையலாம். உயிர்ப்பு அடங்கிய நிலையில் உயிர் கேவலத்திலே கிடக்கும். மூன்றாம் இடி இன எதுகை பெற்று வந்தது.
இதனால், `அவத்தை பேதங்கட்கு உயிர்ப்பு ஓர் இன்றியமை -யாக்கருவி` என்பதும், அவ்வுயிர்ப்பின் நிலைகளும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 11

நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிரம்
மேலும்ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பால்அவை தொண்ணூற்றோ டாறுட்படும் அவை
கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.

பொழிப்புரை :

`நாலுகோடியே நாற்பத்தொண்ணாயிரத்து ஐந்நூறு` என்பது முற்கூறிய எண்ணிக்கையில் உயிர்ப்பு இயங்கும் இயக்கத் தொகை. அத்தொகையளவு, சிறிதே ஏற்றம் உள்ள ஐந்தாண் டுகளாம். (எனவே, அந்த அளவு மூச்சு, உடல் வளர்வதற்குத்தவிர, உயிர்க்கு யாதும் பயன்தருவன அல்லவாம்). இனி, `மூச்சு இயங்கும் காலத்தில் விளங்கிடும்` எனப்பட்ட தத்துவங்கள் தொண்ணூற்றா றாகும். எனினும், அவற்றை இருபத்தைந்தில் அடக்குவார் உளர்.

குறிப்புரை :

தத்துவங்களைப்பற்றிக் கூறிவரும் தொடர்ச்சிக்கு இடையில் அவற்றோடு இயைபுடைய உயிர்ப்பியல்கள் சிறிது இடம் பெற்றன. `ஐயைந்துள் ஆகும்` என்றது பிறன் கோட் கூறல். கோலிய - வரையறுத்த. `பால் அவை` என்றதில் `அவை` என்றது மேற்கூறிய தத்துவங்களை.

பண் :

பாடல் எண் : 12

ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

மாயா வாதியை வேறு கூறினமையால், `வேதாந்தி` என்றது பிரம பரிணாம வாதியையாயிற்று. இதனானே மேல் `வேதாந்தி` என்றதும் இவனையேயாதல் தெளிவாம். `ஐயைந்து` என் பதில் அந்தக்கரணம் நான்காக, அவற்றிற்குமேல் பிரகிருதி உளதாம்.
இதனால், மதவாதிகளின் தத்துவக்கொள்கைகள் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

தத்துவ மானவை தன்வழி நின்றிடில்
ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி
தத்துவ மாவ(து) அகார எழுத்தே.

பொழிப்புரை :

`மெய்` என்பன யாவும் ஒருவனது அறிவினுள்ளே அடங்கித் தோன்றுமாயின் அவன் ஏனையோர் பலரினும்திறம் மிக உடையனாய் விளங்கலாம். அப்பொழுது பயனில்லாத செயல்கள் யாவும் ஒழிந்து, பயனுள்ள செயல் கைவரும். அங்ஙனம் உணரப்படும் மெய்களில் நாதம் தலையாயது.

குறிப்புரை :

மெய்ம்மையை அறியும்பொழுதே பொய்மை பொய்மை யாதல் விளங்கும் ஆதலின், `தத்துவமானவை தன்வழி நின்றிடில் பொய்த்தவமாம் அவை போயிடும்` என்றார் பயனில்லாத செயல்களை, `தவம் என்றது இழித்தற் குறிப்பு. சொல்லும் பொருளு மாகிய இருவகைப் பொருள்களில் சொல்லைத் தனது அறிவினின்றும் வேறு பிரித்துக் காணுதல் அரிதாதல் பற்றி `தத்துவமானது அதுவே` என்றார். தன்னைக்கண்டால் போக்கொடு வர இறப்பும் விகாரமும் புருடன் இன்றாம்` என்பது சிவஞானசித்தி.l நாதத்தை அகாரமாகக் கூறுதல் மரபு.
இதனால், தத்துவ ஞானமே பந்தம் நீங்குதற்கு வழியாதல் கூறப்பட்டது. `ஐந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு` என்றார் திருவள்ளுவரும்.*

பண் :

பாடல் எண் : 14

அறிவொன் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்ற நீஎன் றருள்செய்தான் நந்தி:
அறிகின்ற நான்என் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

`நான் எது` என்று தொடங்கி, முப்பத்தாறு தத் துவங்களையும் நிலம் முதல் நாதம் ஈறாக, ஒவ்வொன்றாக ஆராய்ந்து வந்தபொழுது, அவை அனைத்துமே சடமாய் இருத்தலால், `யான்` என்றும், `எனது` என்றும் உணரும் உணர்வுகளையுடைய நான் அவை களில் ஒன்றேனும் அல்லாமை புலப்பட்டது. ஆயினும் `அவ்வுணர் வினையுடைய நான் எது` என உணர இயலாமலே திகைத்திருந்தேன். அப்பொழுது நந்தி பெருமான், `முப்பத்தாறு தத்துவங்களும் சடம்` என்றும், `நான் அவைகளில் ஒன்றேனும் அல்லேன்` என்றும் உணர்ந்தது எது? அதுதான் நீ என்று உணர்த்தினார். அதன் பின் நான் அவ்வாறே உணர்ந்து மெய்யுணர்வு உடையனாயினேன்.

குறிப்புரை :

ஆன்மாத் தன்னைப் பிற பொருள்களை உணர்தல் போலத் தன்னினும், பிறவற்றினும் வேறாகப் பிரித்து எதிர்ப்படுத்தி வைத்து உணர்தல் இயலாது` என்பதும், பிற பொருள்களின் இயல்பை உணரும் முகத்தானே, `அவ்வுணர்வையுடைய பொருளே நான்` என அனுமித்தே உணர்தல் வேண்டும் - என்பதும் கூறியவாறு. இஃது அறியாமையைப் பின்னர்த் தோன்றிய அறிவைக் கொண்டே அனுமித் துணர்தல் போல்வது. உலகில் ஒருவன் பிறரையும், பிற பொருளையும் எதிர்ப்படுத்திப் பார்த்தல் கூடும் ஆயினும், தன் முகத்தைக்தான் அவ்வாறு பார்க்க இயலாது, கண்ணாடி வழியாகவே பார்க்க இயலும். `அது போல்வது இது` என்றும் கூறலாம்.
`என்முகம் எப்படியிருக்கிறது, எப்படியிருக்கிறது` என எண்ணி அலமருகின்ற ஒருவனும் அறிவுடையான் ஒருவன் கண்ணாடியைக் கொடுத்துக் காட்டிச் செய்வது போல, `நான் எது` எனத் தேடி அலைகின்ற பக்குவான்மாவிற்குச் சிவன் குருவாகிவந்து, `பிற பொருள்களை அறிந்து வருபவன் யாரோ, அவன்தான் நீ` என உணர்த்தி அருளுவான் - என்பதையே பின்னிரண்டடிகளால் கூறினார்.
`ஆன்மா - அருவுருவாய்த்
தோன்றிஉடன் நில்லாது; தோன்றாது நில்லாது;
தோன்றல்மலர்மணம்போல் தொக்கு`l
என மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.
இதனால், `பொருளியல்புகளை உணர்ந்துவரும் ஆன்மா தன்னை உணருமாறு இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும்
ஆக்கு மாலவத்தை ஐந்தும் நனவாதி
போக்கிச் சிவத்தொடும் பொய்யான ஆறாறும்
நீக்கி நெறிநின்றோன் தானாகி நிற்குமே.

பொழிப்புரை :

சகலத்தில் சகலமாகிய சகலசாக்கிரத்திற்றானே நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தையும், ஆணவத்தாலே ஆக்கப் படுகின்ற கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் அவை நிகழாதபடி, முதலாவதாகச் சொல்லப்படுகின்ற சகல சாக்கிரத்தில் உறைத்து நிற்கு மாற்றானே போக்கிச் சிவத்தோடும் திருவருள் வழியில் நிற்பவன், சடம் ஆதலின் நிலையின்றித் தோன்றியழிவனவாகிய முப்பத்தாறு தத்துவங்களுட்பட்டு, தத்துவான்மாவாய் நில்லாது, அவற்றின் நீங்கிச் சுத்தான்மா ஆவான்.

குறிப்புரை :

`மாசு நீங்கிய வழி, ஞாயிற்றின் முன்னிலையில் நிற்கும் படிகத்தில் ஞாயிற்றின் ஒளி பிரதிபலிக்கப் படிகம் அந்த ஞாயிறாகியே நிற்றல்போல, தத்துவங்களின் நீங்கியவழி, என்றும் சிவத்தோடே கூடி நிற்கின்ற ஆன்மாவில் சிவத்துவம் பிரகாசிக்க, அந்த ஆன்மாச் சிவமே யாய் நிற்கும்` - என்பது கருத்து.
ஆன்மாத் தத்துவங்களின் நீங்கிச் சிவத்தைத் திருவருளால் உணர்ந்து நிற்கும் நிலையே சகலத்தில் சுத்தாவத்தையாகும். `அவையே தச காரியங்களாக வகுக்கப்பட்டன` என்பது மேலே கூறப் பட்டது. அந்தச் சுத்தாவத்தையும் சாக்கிரம் முதல் ஐந்தாக நிகழ்தல் பற்றி, `நெறிநின்றோன்` என்றார். நெறிநிற்றல் - படி முறையாக ஏறி நிற்றல். `நனவாதி` என்பதற்கு, `நனவாகியமுதல் அவத்தையில் என உரைக்க. போக்கப்படுவன, முன்னர்க் கூறிய இருவகை ஐந்தவத்தை களாம். `சிவத்தோடும் நெறிநின்றான்` என இயைக்க. `இவற்றோடும்` - என்பது பாடம் அன்று.
`கீழாவத்தை மத்தியாலவத்தைகளில்வேறாய், யோகாவத்தை களும் உள` என மேற்கூறியதன் பின்8 `யோகாவத்தைகளின் மேலாக ஞானாவத்தைகளும் உள` - என்பது இதனால் கூறப்பட்டது.
தத்துவ ஞானத்தின் பயன் பந்தம் நீங்குதல் என மேற்கூறிய வாறுபோல,* பந்தம் நீங்கிய உயிர் சிவமாம் தன்மையை அடைதலே ஞானாவத்தைகளாகிய சகலத்தில் சுத்தாவத்தை என்பதும் இதனால் பெறப்பட்டதாம். `இவைகளே நின்மலாவத்தையான அல்லது யோகாவத்தைகள் நின்மலாவத்தையாகா` என்பது யோகாலத்தை கூறியவிடத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஆணவ மாதிமலம் ஐந்(து) அலரோனுக்(கு)
ஆணவ மாதிநான் காம்மாற்(கு) அரனுக்கு
ஆணவ மாதிமூன்(று) ஈசர்க்(கு): இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவர்க் கானதே.

பொழிப்புரை :

(பஞ்ச மலங்களும், `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி` என்னும் முறையில் வைத்துச் சொல்லப்படும். இவற்றுள் மறைத்தல் தொழிலைச் செய்வதில் தலைமை பெற்று நிற்பது திரோதாயியே. அதனால்), பிரமன் சிவனைச் சிறிதும் உணராதவன் ஆகலின் அவனைப் பஞ்ச மலங்களையும் உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், சீகண்ட ருத்திரன் பிரளயாகலன் ஆகலின் அவனைத் திரோதாயி, மாயேயம் - இவை யொழிந்த மூன்று மலங்களே உடையவனாகவும், வித்தியேசுரர் மந்திர மகேசுரர் முதலியோர் விஞ்ஞானகலர் ஆயினும் அதிகார மலம் நீங்கா மையால் ஆணவத்தோடு, கன்மமும்கூட, இரண்டு மலங்களை யுடையவர்களாகவும், அணு சதாசிவர்கள் அதிகார மலம் நீங்கினும் போக மலம் நீங்காமையால் ஆணவம் நீங்கப் பெறாது அஃது ஒன்றனையே உடையவர்களாகவும் கூறலாம்.

குறிப்புரை :

`இதனுள் குறிக்கப்பட்ட கடவுளர் யாவரும் அணு பக்கத்தவர்களே` என்பது சொல்லாமே விளங்கும். `இவர்களை இவ்வாறு பகுத்துக் கூறியதும் பொதுவகையில் இவரிடையே உள்ள தார தம்மியம் இனிது விளங்குதற் பொருட்டே` என்க. இவர்களை இங்ஙனம் பகுத்துக் காட்டியதனால், இவர்கட்கு உட்பட்டனவாகச் சொல்லப்படும் நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளுட்பட்ட ஆன்மாக் களின் பந்த வேறுபாடுகளும், அவற்றிற்கு ஏற்ப அவற்றிற்கு நிகழும் அவ்தை பேதங்கலும் ஒருவாறு உணர்ந்து கொள்ளப்படும். `அஃதே இந்த மந்திரத்திற்குப் பயன்` என்க. இரண்டாம் அடியீற்றில் குற்றிய லுகரம் கது நின்றது.
இதனால், `பந்தம் முழுவதும் நீங்காது சிறிதாயினும் உடைய இயிர்கட்கு எந்த வகையிலாவது அவத்தை பேதங்கள் நிகழவே செய்யும்` - என்பது கூறப்பட்டது.
சிற்பி