மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்


பண் :

பாடல் எண் : 1

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

பொழிப்புரை :

உடம்பு அழியுமாயின், அதனைப் பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயலன்றி நிற்பதாம். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு இயங்கிய உயிர், தவமாகிய துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே ஆயினேன்.

குறிப்புரை :

``ஆகவே, என்னை உடம்பையே பொருளெனக் கொண்டவனாகக் கருதி அறிவுடையோர் இகழார்` என்பது கருத்து. எனவே, ``நீவிரும் உடம்பை நிலை பெறுவிக்க முயலுங்கள்`` என்பது குறிப்பெச்சமாயிற்று. ``உடம்பார், உயிரார்`` என்றவை, நிலையாமை யுடைய இழிவு பற்றி வந்த திணை வழுவமைதி. இதனை, ``உயர்வு பற்றி வந்தது`` என்பாரும் உளர்;, ``அழியின் `` எனவும், ``அழிவார்`` எனவும் அழிபொருளாகக் கூறப்பட்டவை, உயர்வுடையனவாதல் எவ்வாறு என எண்ணி ஒழிக. திடம்படல், உறுதி யுண்டாகப் பெறுதல், ``உயிர்க்கு உறுதி`` என்றது, இங்குத் தவத்தை, ``திடம்பட`` என்பதில் எண்ணும்மை தொகுக்கப்பட்டது. இனி, ``சேரவும்`` என்னும் எண் ணும்மையைச் சிறப்பும்மையாக வைத்து, ``திடம்பட`` என்பதனைச் சேர்தற்கு அடையாக்கியே உரைப்பர் பலரும். உடம்பை வளர்க்கும் உபாயம், வருகின்ற திருமந்திரம் முதலாக உள்ளவற்றிற் கூறப்படுவன. ``வளர்த்தேன்`` இரண்டில் முன்னது வினைமுற்று. அதன்பின், ``அதனால்`` என்பதும் இறுதியில், ``ஆயினேன்`` என்பதும் எஞ்சி நின்றன.
இதனால், காயசித்தி இன்றியமையாமையாதற்குக் காரணம் உணர்த்து முகத்தால், அதன் சிறப்புக் கூறப்பட்டது. இதனானே, உடம்பை உயிர் நலத்திற்குக் கருவியாகக் கொள்ளுதலல்லது, அதனையே பயனாகக் கொள்ளுதலும், உடம்பு கருவியாதலை உணராது அதனைப் பகை எனக் கொண்டு வருத்துதலும் ஆகா என்பதும் பெறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. 

பொழிப்புரை :

சிவ நூல் கேட்பதற்கு முன்பெல்லாம் உடம்பை அழுக்கு ஒன்றையே உடையதாகக் கருதி இகழ்ந்திருந்தேன். சிவநூல் கேட்ட பின்னர், அதற்குள்தானே பயனை அடைதற்குரிய வழிகள் பலவும் இருத்தலை அறிந்தேன். அதனால், அவ்வறிவின் வழியே, உடம்பிற்குள் தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடுறாதவாறு குறிக்கொண்டு காக்கின்றேன்.

குறிப்புரை :

`இத்தகைய அறிவையும் செயலையும் நீவிரும் பெறுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இழுக்கு, குற்றம்; மாசு. இழுக்குடையதனை, `இழுக்கு` என்றார், `சிவ நூல் கேட்கும் முன்னர், கேட்டபின்னர்` என்பன இயைபெச்சமாய் வந்து இயையும். உறுதல், பயனைப் பெறுதல். உறுபொருள், உறுதற்கு ஏதுவாய பொருள்; என்றது வழியை. செய்யுளின் இடைக்கண்நின்ற ஏகாரங்கள் தேற்றம். கோயில் - ஆதார, நிராதார, மீதானங்களாகிய இடங்கள். ``இருந்து`` என்றது `குறிக்கொண்டிருந்து` என்றவாறு.
இதனால். `உடம்பு, உயிர் நலத்திற்குக் கருவியாதல் இவ்வாறு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே. 

பொழிப்புரை :

பிராண வாயுவை வாங்கியும், விட்டும் சுழலும்படி செய்ய, உடம்பில் உள்ள மாசுகளும் அதனோடே சுழன்று நீங்கும். அவ்வாற்றால் மாசுகளைப் போக்கித் தூய்தான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அவை வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியினுள்ளும் அவ்வாயுச் சென்று உலவும்படி செய்து, அதன் ஆற்றலை அந்நாடிகட்குத் தருகின்ற இவ்வுபாயத்தை முறை யறிந்து செய்ய வல்லவர்க்கு, உடம்பு நெருப்பிலிட்டுச் சுடப்படுதலினின்றும் நீங்கி, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் புலப்படக் காட்டும் மந்திர மையாய் அமையும்.

குறிப்புரை :

``சுழற்றிக் கொடுக்க`` என்பது ஒரு சொல் நீர்மைத்து. `கொடு` என்பது செயப்படுபொருள் குன்றாவினையில் இவ்வாறு துணைவினையாய் வருதலை, `கிண்டிக் கொடுத்தல், புரட்டிக் கொடுத்தல்` முதலாகவரும் வழக்குநோக்கி அறிக. `சுத்தி` என்பது பாடமன்று. ``மலம்`` எனப் பின்னர் வருதலின்` வாளா,``கழியும்`` என்றார், ``உழற்றிக் கொடுக்கும்`` என்பதில் உழலுதற்கு இடமும், கொடுத்தலுக்குச் செயப்படுபொருளும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. உழற்றிக் கொடுத்தலையே உபாயம் என்கிறாராதலின், ``கொடுக்கும் உபாயம்`` என்பதில், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். `அழற்றப்படுவது` என்னும் பொருளதாய ``அழற்றி`` என்பது இங்கு அன்னதாம் தன்மையைக் குறித்தது. மந்திர மை, புதையுண்டு கிடக்கும் பொருட்குவை முதலியவற்றைப் புலப்படக் காட்டுதல் நன்கறியப்பட்டது.
இதனால், காயசித்தி உபாயங்களுள் முதல் உபாயம் பிராணாயாமம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே. 

பொழிப்புரை :

மந்திரமைபோல நின்று பயன்தரத் தக்கதாகிய உடலை. அன்ன தாகாதவாறு, `ஐ, வளி, பித்து` என்னும் மூன்றானும் தோன்றிக் கெடுக்கின்ற நோய்கள், முறையே, `மாலை, நண்பகல், காலை` என்னும் பொழுதுகளில் செய்யும் பிராணாயாமத்தால் நீங்கும். அதுவேயன்றி, முப்பொழுதும் செய்யும் பிராணாயாமத்தாலும் நரை திரைகள் வாராதொழியும். இவ்வுபாயத்தை இங்கு, உடலைக் கொல்லும் நஞ்சுபோன்ற தீமைகள் நீங்குதல் நோக்கிக் கூறினோம்.

குறிப்புரை :

போல் உடல், வினைத்தொகை. `போன்றுடல்` என்பது பாடமன்று. `உடற்கண்`` என ஏழாவது விரிக்க. ``வஞ்சகம், செய்திடில்`` என்பவற்றை ஏனையவற்றிற்கும் கூட்டுக. ``ஐ, வாதம், பித்து`` என்ற மூன்றும் காரண வாகுபெயராய், அவற்றால் உளவாகும் நோய்களைக் குறித்தன; என்னை? அற்றொழியற்பாலன அந் நோய்களே யாதலின். காலைப் பொழுது எச் செயலுக்கும் சிறப்புடைய தாகலின். அதனை ``செஞ்சிறு காலை`` என்றார். செய்தலுக்குச் செயப்படுபொருள், அதிகாரத்தால் வந்தது. ``நஞ்சறச் சொன்னோம்`` என்பதனை ஈற்றில் வைத்து உரைக்க. ``நரை, திரை நாசம்`` என்றதனால், இளமைநீங்காமை குறிக்கப்பட்டது. இதனைக் காலம் வரையாது கூறினமையின் `எக்காலத்தும் செய்தலால்` என்றதாயிற்று.
இதனால், மேற்கூறிய உபாயத்தைச் செய்யுமாறும், அவற்றால் வரும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :

மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவினவாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தி யிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்.

குறிப்புரை :

``பாம்பு`` என்றது குண்டலினியை; ``இயந்திரம்`` என்றது நடுநாடியை. `பதினாறு அங்குலக் கயிறு` என்றது, அந்நாடியுள் பதினாறு மாத்திரையளவு பூரிக்கப்படும். பிராணவாயுவை, `பன்னிரண்டு அங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டை`` என்றது, இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பிலே பன்னிரண்டங்குலம் வெளிச் செல்லும் பிராண வாயுவை. `அம் மூட்டையை அவிழ்ந்து வீழாமல் கட்டுதல்` என்றது, அந்த இரு வழியையும் அடைத்தலை. எனவே, `இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பாக இயங்குகின்ற பிராண வாயுவை அடக்கிப் பதினாறு மாத்திரையளவு நடுநாடி வழிப் பூரித்துக் குண்டலி சத்தியை நடு நாடியில் பொருந்தி யிருக்கச் செய்தால், உடம்பிற்கு அழிவு உண்டாகாது` என்பது இம் மந்திரத்தால் போதரும் பொருளாம்.
`மூன்று மடக்கு` என்றது, உடம்பில், `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` எனப் பகுக்கப்படும் மூன்று வட்டங்களை. அம்மூன்றிலும் குண்டலினி வியாபித்துள்ளமை அறிக. இனி, `அப் பாம்பு அவ் யந்திரத்தில் ஊன்றி யிருக்க` என்றது, பொது மக்களிடத்து உணர்வின்றித் தூங்குவது போல் இருக்கின்ற நிலையில் லாமல், விழித்திருப்பதுபோல் செயற்படும் நிலையில் நிற்க, என்றதாம். பிராண வாயுவால் சட ஆற்றல் மிக்கு நிற்கும் உடல் உறுப் புக்கள், பின் அறிவாற்றலால் தூண்டப்படுதலும் அவை செயற் பாடின்றிக் கெட்டொழியாமைக்கு ஏதுவாம் என்க. குண்டலியின் தன்மை மேலே பலவிடத்தும் விளக்கப்படது. ``கட்டியிட்டு`` என்பதில் `இட்டு` அசைநிலை. `பாம்பு, இரண்டு எட்டுள இயந்திரத்தில் நான்ற மூட்டை இரண்டையும் கட்டி ஊன்றியிருக்க உயிர் அழியாதே` என வினை முடிவு செய்க. ``இரண்டெட்டு`` என்பது எண்ணலளவை யாகுபெயர். `முட்டை` என்பது பாடம் அன்று.
இதனால், காய சித்தி உபாயங்களுள் குண்டலினி இயக்கம் இரண்டாவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே. 

பொழிப்புரை :

நூறு மாத்திரை காலமேயாயினும், அறுபது மாத்திரை காலமேயாயினும், ஆறு மாத்திரை காலமேயாயினும் பிராண வாயு சுழுமுனை நாடியை வலமாகச் சூழ்ந்தும் இடமாகக் சூழ்ந்தும், அதன் உட்புகுந்து மேலேறியும் வருமாயின், அத்துணை ஆண்டுக்கால வாழ்நாளினை மக்கள் எய்துவர்.

குறிப்புரை :

நூறு முதலிய மூன்றினும் நான்கிடத்தும், `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. `பிராண வாயுவைக் கும்பகம் செய்யும் ஆற்றலுக்கு ஏற்பவே வாழ்நாளின் அளவு அமையும்` என்றற்கு இங்ஙனம் நயம்படப் பலவாறு விகற்பித்துக் கூறினார். யோகநெறியிற் கொள்ளப்படும் மாத்திரை என்பது, கைவிரலை இயல்பான இயக்கத்தில் முழந்தாளை ஒருமுறை சுற்றச் செலுத்தி நொடித்தலைச் செய்யும் கால அளவாம். யோக முறையால் பெறப்படும் வாழ்நாள் நீட்டிப்பு, இயல்பாய் அமைந்த வாழ்நாளின் எல்லையோடு கூடிநிற்கும்; அதனால் `ஆறாண்டு` என்பதும் நீட்டிப்பே என்க.
இதனால், `மேற்கூறியவற்றுள் முதலதாகிய பிராணாயாமத் தால் பெறப்படும் ஆற்றல் காயசித்திக்குச் சிறந்தது` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே. 

பொழிப்புரை :

மூன்று மடக்குடைப் பாம்புபோல உடம்பில் உள்ள குண்டலி சத்தி, மேற்கூறியவாறு ஊன்றியிருக்கும் இடமாகிய நடு நாடியைப் பிராண வாயு வலமும் இடமுமாகச் சுற்றிவருகின்ற சாதனையைப் புரிந்தால், உலக நோக்கில் இருக்கும்பொழுதே உடலில் உள்ள பத்து நாடிகளில் உண்டாவனவாக மேல் (பா.593) கூறிய ``மணி, கடல், யானை`` முதலியவற்றின் ஓசைபோலும் ஒலிகளைக் கேட்டல் கூடும். இனிச் சிவ பெருமான். தாள அறுதிக்கு இயைய ஆடும் ஆட்டத்தின் ஓசையும் கேட்கப்பட்டுப் பின் அப்பெருமானே விளங்கித் தோன்றுவான். மெய்யான இன்பமே வடிவமான எங்கள் ஆசிரியர் மேல் ஆணையாக, இவ்வாறு நாம் உண்மையையே உங்கட்குச் சொன்னோம்.

குறிப்புரை :

முதலடி, மேல், ``மூன்று மடக்குடை`` என்ற மந்திரத்துட் கூறியதனை அநுவதித்தது. எனவே, இச்சாதனையால் குண்டலியின் இயக்கம் மிகுதல் பெறப்பட்டது. சகல நிலை `பகல்` எனப்படுதலின், சகல சாக்கிர நிலையை, `மத்தியானம்` என்றார். யோகாவத்தை யிலன்றிச் சகலாவத்தையில் தச நாதங்களைக் கேட்டல் அரிதாகலின், ``மத்தியானத்திலே வாத்தியங்கேட்கலாம்`` எனச் சிறந்தெடுத் தோதினார். இஃது உடம்பு சட ஆற்றல் மிக்கிருத்தற்கு அறிகுறியாகும். `தித்தித் தா` என்னும் ஒலிக் குறிப்பினை, ``தித்தித்த`` எனக் குறுக்கி ஓதினார். அஃது இரட்டுற மொழிதலாய் நின்று, கூத்து, அருள் இன்பக் கூத்தாதலை உணர்த்திற்று. கூத்து, கருவியாகுபெயர்; என்னை? சிவனின் வேறாக ஓதப் பட்டமையின் சிவன், தடத்த சிவன். ``வெளி ப்படும்`` என்பதனைத் தனித் தனி இயைக்க. ``சொன்னேன்` என்பதும் பாடம்.
இதனால், இரண்டாவதாகிய குண்டலியின் இயக்கம் திருவருட் பேற்றிற்குச் சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.

பொழிப்புரை :

நாதத்தை முற்றப் பெறக் கருதிச் சொல்லப்படுகின்ற, முறையே மகர மெய்யையும் புள்ளி வடிவினதாய எழுத்தையும் உடன் கொண்டு விளங்கும் அகரமும், சகரமுமே பிராண வாயுவைத் தடுத்தற்குரிய மந்திரமாம்; ஏனெனில், நாதத்தை முற்றும் உணரப் பெறுதலே யோகம் கைவந்தவனுக்குரிய தன்மையாதலின்.

குறிப்புரை :

`உறப் பெறவே நினைந்து ஓதும்` என்பதை முதலிற் கொள்க. பிரணவ கலைகளுள் அகர உகரங்கள் பெருங்கூறாயும், மகர மெய் உட்கூறாயும் நிற்குமாதலின், மகர மெய்யை, ``திறத்திறம்`` என்றார், ``விந்து`` என்றது இங்கு, புள்ளி, வடிவத்தை, மகரத்தை உடன்கொண்ட அகரம் எனவே, `அம்` என்பதும், புள்ளி வடிவை உடன்கொண்ட சகரம் (ஸ) எனவே, `ஸ`என்பதும் விளங்கின. இவை இரண்டுங் கூட, `அம்ஸ:` என்றாகுமாகலின், அதுவே பிராணா யாமத்திற்கு உரிய மந்திரம் என்பது போந்தது. `அகரம்` என வாளா கூறினும், மகரம் தானே பெறப்படுமாயினும், சகரத்திற்கு வேறு கூறு கின்றாராகலின், அகரத்தின்கண் ஐயம் நிகழாமைப் பொருட்டு, அதனை எடுத்தோதினார். `அசபை` எனப்படுவது இவ் அம்ஸ மந்திரமே. உபதேசத்தாற் பெறற்பாலனவாய மந்திரங்களை வெளிப் படக் கூறாது, இங்ஙனம் மறைத்துக் கூறுதலே மந்திர நூல்கட்கு இயல்பென்க.
அம்ஸ மந்திரத்துள் `அம்` என்பது மூச்சினை உள் வாங்குதற்கும், `ஸ` என்பது மூச்சினை வெளிவிடுதற்கும் உரியன, இதனை அவற்றது ஓசை இயல்பாலும் உணரலாகும். இவ்வாறன்றி இவற்றை மாறிக் கூறுவாரும் உளர். உயிர் முதலாய மந்திரங்கள் அனைத்திற்கும் முதற்கண் ஹகாரத்தைச் சேர்த்தல் வடமொழி மரபாகலின், `அம்ஸ:` என்பது, `ஹம்ஸ:` என்றும் `அம்ச மந்திரம்` என்பது `ஹம்ஸ மந்திரம்` என்றும் அம்மொழியில் சொல்லப்படும். இனி, ஸகாரத்திற்கும் மகர மெய்யைச் சேர்த்து `அம்சம்` எனச் சொல்லப்படுவதே அம்ச மந்திரம் என்னும் கொள்கையும் உண்டு. `அதனையே மேற்கொண்டு, இதற்கு அவ்வாறு உரை கூறுவாரும் உளர்.
இது பிராணனின் இயல்பான இயக்கத்தாலே நடை பெறுதலின், `அசபை` எனப்பட்டது. அசபை, வாய்விட்டுச் செபிக்கப் படாதது, `அஜபா` என்பது வடமொழிப் பெண்பாற்சொல். `செபிக்கப் படாதது` எனவே, இதனை, `மானதமாகக் கணித்தலே சிறப்பு` என்பது பெறப்படும்.
`அம்` என்பதனை, `அஹம்` எனத் திரித்து, `ஸ:` என்பதன் பின் வைக்க, `ஸோஹம்` என்றாகி, `அவன் நான்` எனப் பொருள் தரும். அதனால், `ஸோஹம்` எனப் பாவிக்கும் மந்திரமும் அம்ஸ மந்திரத்தின் வேறுபாடே என்பர், அம்ஸ மந்திரத்தால் பாச நீக்கமும், ஸோஹம் பாவனையால் சிவப்பேறும் உளவாகும் என்க.
இதனால், `காயசித்தி முதலிய பலவற்றிற்கும் துணையாகிய பிராணாயாமத்திற்கு உரிய மந்திரம் இது` என்பது, காய சித்தி உபாய இயைபு பற்றிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.

பொழிப்புரை :

பூரக ரேசகங்களை மேற்கூறியவாறு அம்ஸ மந்திரத்தாற் செய்தபின் கும்பகம் செய்யும் பொழுது `ஹாம்` என்னும் வித்தெழுத்தாலே (பீஜாட்சரத்தாலே) பிராணனைச் சுழுமுனை நாடி வழியே கண்டத்தளவும் செலுத்திப் பின், `ஹௌம்` என்னும் வித்தெழுத்தால் ஆஞ்ஞையை அடைவித்து, அங்கே மலவெழுத் துக்கள் நீங்கிய திருவைந்தெழுத்து, `தத்துவமசி` மகாவாக்கியப் பொருளையும், `சோஹம்` என்பதன் பொருளையும் தருமாற்றை உபதேச முறையான் உணர்ந்து அதனானே அவ்வாயுவை அசையாது நிறுத்திப் பின் அபானவாயு எழத் தொடங்குமாயின், அதனைப் பிரணவத்தால் அடக்கிப் பிராணனை முன்போலவே மேலெழச் செய்யின், அவ்வாறு செய்பவன் சிவமாந் தன்மையை அடைவான்.

குறிப்புரை :

``உந்திச் சுழியின் உடன் ஏர் பிராணன்`` என்றது, `பிராணனை அஃது எழுமிடத்திலிருந்தே இவ்வாறு எழுப்புக` என்றவாறு. உடன் - விரைவாக. ஏர்தல் - எழுதல். நிறுத்துதற்கு ``சிவமந்திரத்தினால்`` என விதந்தோதியது போலப் பிராணனையும், அபானனையும் எழுப்புதற்கு உரிய மந்திரங்களை விதவாமையானும், ``எழுப்பி`` என வாளாகூறி யொழியாது ``சிந்தித் தெழுப்புக`` என்றமையானும், பிராணனை உள்வாங்குதற்குரிய ``ஹம்`` என்பதனை மாத்திரை கூட்டி அது நெடிது செல்லுமாறு எழுப்பி, அப்பிராணன் நிற்றற்கு அம்மந்திரத்தை ஹௌகாரமாகத் திரித்து முடித்தல் வேண்டும் என்பதும், அபானனை மூலாதாரத்திற்குரிய பிரணவத்தால் எழுப்புதல் வேண்டும் என்பதும் பெறப்பட்டன.
மந்திரங்கள் வாயினால் சொல்லப்படும் சொற்களும், அவற்றொடு கூட்டப்படும் வித்தெழுத்துக்கள் (பீஜாட்சரங்கள்) மனத்தால் சிந்திக்கப்படும் எழுத்துக்களும் ஆம் என்க. `முந்தி நிறுத்தி`` என இயையும். ``முகடு`` என்றது, சுழுமுனையின் உச்சியாகிய ஆஞ்ஞையை. பிராணனை அவ்விடத்து நிறுத்தும் முன்னே அபான வாயு கீழ்ச் செல்லுதல் குற்றமாகாமையின், ``முந்தி முகட்டின் நிறுத்தி`` என்றார், எனவே, ``மூலத்துவாரத்தை முக்காரம் மிட்டிரு`` (பா.571) என மேற் கூறியதும் இதுவேயாதல் அறியப்படும். ``அவன் சிவனாம்`` என மாறுக. இனி `அவ்வாறு செல்பவன்` என்பதைத் தோன்றா எழுவாயாகக் கொள்ளின், ``அவன்`` என்பது பகுதிப் பொருள் விகுதியாம், ``ஆம்`` என்றது ``அப்பாவனையைத் தலைப்படுவன்` என்றவாறு.
இதனால், காயசித்தி பெற்றவன் அதனால் பெறற்பாலதாய பயனைப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே. 

பொழிப்புரை :

அசுத்தத் தன்மை நீங்காதே எருவாய்க்கு இரண்டு விரற்கிடைமேலேயும், தன் சொல்லாற் சொல்லப்படாத குறிக்குக் கீழே யுமாய் உள்ள இடத்தில் தியானியுங்கள் `யாரை` எனின், உடம்பின் கண் ஆறு வகையில் உள்ள இறைவன் அங்கும் உளன். எனவே, அவனையே தியானியுங்கள் என்பதாம். அங்குத் தியானிக்குமிடத்து, ``ஊமை எழுத்து`` எனப்படும் பிரணவத்தால் தியானியுங்கள்.

குறிப்புரை :

இறைவனைத் தியானிக்கும் இடங்களில் ஒன்றாகிய ``மூலாதாரம் எனப்படுவது எருவாயுமன்று; கருவாயுமன்று`` என மேற் (பா.568) கூறியதனை நன்கு வலியுறுத்தற்கு, ``குதந்தன்மேல்`` எனவும், ``இலிங்கத்தின் கீழே`` எனவும், அங்கு இறைவன் இருக்கு மாறு உணர்த்து முகத்தான் ``யாரை`` என்னும் அவாய் நிலையை நிரப்புதற்கு, ``ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் ``எனவும் கூறினார். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் இறைவன் முறையே ``அதோ முகன், பிரமன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்`` என்பவராக வீற்றிருப்பான். ``அதோமுகம் கீழண்ட மான புராணன்`` ``அதோமுகமாகிய அந்தமில் சத்தி- அதோ முகமாகி அமர்ந்திருந் தானே`` என்பவற்றால், அதோமுக மூர்த்தியின் நிலை பற்றி அறிந்துகொள்க. பிற யோகநூல்கள் மூலாதாரத்தில் விநாயகராய் இருப்பன் எனக் கூறும். கீழ்நோக்கித் தொங்கும் தும்பிமுகத்தை யுடைய விநாயகர் அதோமுகரே. ஐந்து முகத்தோடு அதோ முகமுங் கூடிய அறுமுக மூர்த்தி முருகன். ``உடம்பிடை`` என்பதன்பின், ``உள்ள`` என்பது சொல்லெச்சமாய் நின்றது. ``அண்ணல் அங்கும் உளன்`` என உம்மையை மாற்றி யுரைக்க.
இதனால், அபானனை எழுப்புதலும் இன்றியமையாத தென்ப துணர்த்த வேண்டி, அதனை எழுப்புமாறு கூறப்பட்டது. இதனுள், ``கூறா உபதேசம்`` என்றது ``அபானனைச் சிந்தித் தெழுப்பி`` என்றதனைத் தெரிந்துணர்த்தியவாறு. உபதேசிக்கப் படுவதனை, ``உபதேசம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 11

நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே. 

பொழிப்புரை :

பிராணனை முந்தி முகட்டில் நிறுத்திய பின், அதற்கு மேலே உள்ள ஏழாந்தானமாகிய உச்சியில் திருவருளோடு நேரே கூடி, ``இத்திருவருளல்லது பிறிதொன்றும் நிலையுடையதன்று`` என்பதை எவரேனும் உணர்ந்திருப்பார்களாயின், அவர்கள் ஆன்ம லாபத்தைப் பெறுதலேயன்றி, நரை திரை அணுகாது, என்றும் இளமையோடு இருக்கும் நன்மையையும் அடைவர். இஃது எங்கள் ஆசிரியர் ஆணை யாகச் சொல்லப்படும் உண்மை.

குறிப்புரை :

``குண்டலி சத்தியன்றிச் சிவசத்தி`` என்பது உணர்த் துதற்கு, ``நீலநிறமுடை நேரிழையாள்`` என்றார். ஆறாந்தானமாகிய ஆஞ்ஞை விந்துத்தானமாகலின், அதற்கு மேலுள்ள உச்சி சத்தித் தானமாம். சத்தி அருவ நிலையது ஆகலானும், அதில் அருவுருவ நிலையாகிய ஆஞ்ஞையினும் மிக விளக்கமாகத் திருவருள் விளங்கு மாகலானும் அதனையே, ``நீல நிறமுடை நேரிழையாளொடும் சாலவும் புல்லி`` என்றார். ``பாலனும் ஆவர்`` என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சம். ``ஆவர்`` என்றது, ``ஆதலை மிகப் பெறுவர்` என்றவாறு. பராநந்தி - பரானந்தத்தை எய்தியவர், பரானந்தம் - மேலாய இன்பம்; சிவானந்தம்.
இதனால், `காய சித்தி பெற்றோன் அதனாலாம் பயனை மிகப் பெறுவானாயின், அதனானே, காய சித்திப் பயனும் மிகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே. 

பொழிப்புரை :

உணவுக் குறைவால் முகத்தில் தசை ஒட்டிக் கண்குழியுமாயினும், அதனால், உடலுக்கு அழிவு வந்து விடாது. மாறாக, உடம்பு இளைத்தால் பிராணவாயு வசப்பட்டு காய சித்தி கைகூடும். ஆகவே, உணவு குறையின், உயிர், நலம் பெறுதற்குரிய வழிகள் பலவும் அமையும். அதனால், உண்டி சுருக்கியவன், இறவாமையாலும், இன்ப நிறைவாலும் சிவனோடொத்து நிற்பான்.

குறிப்புரை :

``அண்டம்`` என்றது தலையை. ``அண்டம், பிண்டம்`` என்னும் நயம்பற்றி இவ்வாறு ஓதினார். வருகின்ற திருமந்திரத் துள்ளும்``அண்டத்துள் உற்று`` என்பார். மகளிர் இன்பத்தை விரும்புவோருள்ளும், அதனைக் கை விடின் உடல் கெடும்` என்று அஞ்சுவார் இல்லை. ஆகவே, `அவ்வின்பம் குறையின் உடற்கு அழிவில்லை` என விலக்குதல் வேண்டாமையின், அப்பொருள் பட ஈண்டு நலிந்துரைத்தல் வேண்டாமை அறிக. `உள` என்பதன்பின், `ஆம்` என்பது எஞ்சிநின்றது.
இதனால், ``காய சித்தியும், உயிர் நலமும் வேண்டுவோர் உண்டி சுருக்கல் இன்றியமையாதது`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

பிண்டத்துள் உற்ற பிழைக்கடை வாசலை
அண்டத்துள் உற்ற தடுத்தடைத் தேவிடின்
வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார்
கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே. 

பொழிப்புரை :

உடலில் பொருந்தியுள்ள, தவ ஓழுக்கத்திற்கு இழுக்குத் தருகின்ற கடைப்பட்ட வழியை. உச்சியில் விளங்குவதாகிய திருவருளைத் தலைப்படுமாற்றால் அடைத்தே விடின், உடம்பு, மகளிர் கண்ட உடன் விரும்பத் தக்க அழகைப் பெற்று விளங்கும் பயனையும் அடையலாகும்.

குறிப்புரை :

``புழைக் கடை`` என்பது திரிந்து வழங்கும் இழிவழக் கோடு ஒத்துத் தோன்ற, ``பிழைக் கடை` என நயம்பட ஓதினார். பிழை - குற்றம். எனவே, இஃது உண்மையில் புணர்ச்சி தவிர்தல் கூறியதேயாம். திருவருள் உணர்வும், சிவானந்தப் பேறும் உடையவர்க் கன்றி புணர்ச்சி தவிர்தல் இயல்பாக உண்டாகாது. ஆயினும், யோக முயற்சியால் தவிர்தல் கூடும்; அம்முயற்சி இது என்பதனை இதனுள் நாயனார் உணர்த்தியருளினார். ``பிழைக்கடை`` என்பதன் உட் பொருளை உணராமல் வெளிப்பொருளே பற்றி, ``எருவாய்`` எனப் பலரும் உரைத்தார். அப்பொருள் மேலே பலவிடத்தும் பெறப்பட்டது. நன்மை - அழகு. உம்மை, `மேற்கூறியவையேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``நற்காயமும் ஆம்`` என்றாராயினும், `காயம் நல்லது மாம்` என்றலே கருத்தாதல் அறிக. மகளிரை விரும்ப விரும்ப அவரால் வெறுக்கப்படும் நிலையும், அவரை விரும்பாது ஒழிய ஒழிய அவரால் விரும்பப்படும் நிலையும் உளவாகின்ற வியப்பினைக் குறித்தற்குப் பின்னிரண்டடிகளை அவ்வாறு ஓதினார். இம்மந்திரத்திற் பாடம், பலவிடத்துப் பிழைபட்டது.
இதனால், காய சித்திக்கு வேண்டப்படுவதாய மற்றும் ஓர் உபாயம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான், எவ்வுயிரையும் அதன் உடலினின்றும் பிரித்துக் கொண்டுபோதற்குச் சுற்றிக் கொண்டிருக் கின்ற கூற்றுவனைத் தொன்றுதொட்டே சினந்து, முக்கோண வடிவான மூலாதாரத்தில் உள்ள அக்கினியில் காய்ந்து கொண்டிருக்கின்றான்; ஆகையால், அவ்விடத்தில் அவனது கழல் அணிந்த திருவடியைக் காணப்பெற்றால், பின்னர் நிழலில் நிற்பினும், வெயிலில் நிற்பினும் ஒன்றே; அஃதாவது, அவற்றால் வரும் கேடு ஒன்றுமில்லையாம்.

குறிப்புரை :

``ஈசன்; இரதத்துள் அங்கியுள் சீறி அழலும்` என மாறிக் கூட்டுக. `கூற்றுச் சீறி` என இரண்டாவதன் தொகையாய் இயையும், ``முன்`` என்பது, `முதலாக` எனப்பொருள் தந்தது, `தொன்மை` என்றது, உடம்பு தோன்றிய காலத்தை. முக்கோண வடிவை `இரதம் - தேர்` என்றார். இறைவன் உயிர்களின் உடம்பில் மூலாதாரத்தில் அக்கினியையும், அவ்வக்கினியுள் உடலை நிலைப்பிக்கின்ற ஆற்றலையும் படைத்து, அவற்றை நீங்காது நிறுத்தித் தானும் உடன் நிற்றலானும், அவற்றை அறிந்து, அவ்வக்கினியை எழுப்பி அவ் விடத்தில் அவனைத் தியானிப்பவர், காய சித்தியைப் பெறுவர் ஆகலானும் இவ்வாறு கூறினார். கூறவே, மேற்கூறியவாறு பிராணனையும், அபானனையும் மூலாதாரத்தினின்றும் மேல் எழச் செய்யுங்கால் முதல்வனது திரு வருளை நினைந்து செய்தல் வேண்டும் என்பது பெறப்பட்டது. `திருவருளை நினைந்து செய்யும் முயற்சியே வெற்றி பயக்குமல்லது, அதனை மறந்து செய்யும் முயற்சி ஒன்றொழிய ஒன்றாகும்` என்பது கருத்து.
இதனால் `காய சித்தி உபாயத்தை இறையருள் வழி நின்று` செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. இவ்வாறன்றி, `உபாயந் தானே காய சித்தியைப் பயந்துவிடும்` என மயங்குவர் பவ யோகிகள் என்க.

பண் :

பாடல் எண் : 15

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே. 

பொழிப்புரை :

ஈசன் இருத்தலை மேல் நான் தெரிந்து சொல்லிய மூலாக்கினி, `அகார கலை, உகார கலை, மகார கலை, விந்துகலை` என்னும் நான்கு கலைகள், மூலாதாரம் முதல் பிரமரந்திரம் ஈறாக உள்ள ஏழு ஆதாரங்களைப் பொருந்திய பிராண வாயு, உடம்பு முழுதும் உள்ள ஊன் ஆகிய இவைகளையே தன் பசிப் பிணிக்கு மருந்தாக உண்டு, ஒரு மான் கன்று வளர்கின்றவாறு வியப்புடைத்து!

குறிப்புரை :

மான், மகான்` என்பதன் திரிபு. மகான் - பெரியோன்; சிவன். `மகான்` என்பதை மான் எனத் திரித்து அதற்கேற்ப, சிவனது மக்களாகிய உயிர்களை, `கன்றாக` உருவகித்து, `புல்லை உண்ணு தலால் `புல்வாய்` எனப் பெயர் பெற்ற மான் ஒன்று, புல்லை உண்டு வளராமல், நெருப்பு, நிலாவொளி, காற்று, ஊன் என்பவற்றை உண்டு வளர்தல் வியப்பாகின்றது` என நயம்படக் கூறினார். எனவே, மேலை மந்திரத்துட் கூறியவாறு மூலாக்கினியை எழுப்புதல் முதலிய யோகமுயற்சியால் வாழ்நாள் நீட்டித்தல் கூறியவாறாயிற்று. புல்லாவது, ஐம்புல இன்பம்.
இதனால், காயசித்தி உபாயங்களால் அப் பயன் வியக்கத்தக்க வகையில் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. 

பொழிப்புரை :

மேன்மேல் வளரத்தக்கதாகிய காய சித்தி ஆற்றலைப் பெற நீ விரும்புவையாயின், அச்சத்தி ஒவ்வொரு நெல்லின் அளவாக மெல்ல மெல்ல வளர்கின்ற நுட்பத்தை உடலில் அளவற்ற இடங்களில் பாகுபடுத்திக் கண்டு. அவ்விடங்களில் எல்லாம், மேற்பலவகையாலும் முறைப்படச் சொல்லிய மந்திரங்களின்வழி அதனுள் ஒடுங்குவாயாக.

குறிப்புரை :

`சனனம்` என்பது இடைக்குறைந்து நின்றது. `சனனம்` என்றது காயத்தை. இவ்வாறன்றி, `ஆகுஞ்சன இருக்கை` எனவும் உரைப்பர். வேத சத்தி, உடம்பின் நிலையாமையைமாற்றி நெடிது வாழச் செய்கின்ற ஆற்றல். `அன்புறக் கொள்ளின்` என்பதை, `கொள்ள அன்புறின்` என மாற்றிக் கொள்க. தினை, எள், கடுகு முதலியன போல, சிறுமைக்குக் காட்டப்படுவனவற்றுள் நெல்லும் ஒன்றென்க. நெல்லின் - நெல்லின் அளவாக. இனி, `நெல் - நெற்பயிர்` எனக் கொண்டு, `நீர் கொளு நெல்லின்` எனவும் பாடம் ஓதுப. ``களத்தினால்`` என்றது வேற்றுமை மயக்கம்.
இதனால், காய சித்தி உபாயங்கள் மேற் சில வகையால் தொகுத்துணர்த்தப்பட்டதாயினும், உண்மையில் அது பரந்து கிடப்பது என்பது உணர்த்தி, `அவற்றை அறிந்து அனுபவமாகச் செய்க` என முடித்துக் கூறப்பட்டது.
சிற்பி