திருப்பிரமபுரம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை 5.
ஓரா னீழ லொண்கழ லிரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 10
நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானில மஞ்சக் 15
கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா மந்தக் கரணம்
முக்குண மிருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி யைவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை 30
வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 35
ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும் 40
மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையி னொருமையு மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணிய னறியும் 45
அனைய தன்மையை யாதலி னின்னை
நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.

பொழிப்புரை :

சொரூப நிலையில் விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால் ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி எடுத்துக் கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஆயினை, உன் சக்தியைக் கொண்டு அவ் ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக்குறிப்போடு சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை, விண் முதலிய பூதங்களையும் சந்திர சூரியர்களையும் தேவர்கள் மக்கள் முதலியோரையும் படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகள் ஆயினை, பிரமன் திருமால் ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக நின்றாய், ஒப்பற்ற கல்லால மரநிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளி நெறியைக் காட்டினாய், சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை ஓட்டினாய், கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய்,/n ஒரு தாளையும் ஈருகின்ற கூர்மையையும் முத்தலைகளையும் உடைய சூலத்தையும் நான்கு கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம் ஆகியவற்றையும் ஏந்தினாய்,/n சினந்து வந்த, தொங்கும் வாயையும் இரு கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தாய்,/n ஒப்பற்ற வில்லின் இருதலையும் வளையுமாறு செய்து கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தாய்./n ஐம்புலன்கள் நான்கு அந்தக் கரணங்கள், முக்குணங்கள் இரு வாயுக்கள் ஆகியவற்றை ஒடுக்கியவர்களாய தேவர்கள் ஏத்த நின்றாய்,/n ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத்தக்க கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும் ஓதி, பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய்,/n ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,/n தேவர்கள் புகலிடம் என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை விரும்பினாய்./n மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய்./n வழங்கக் குறையாத செல்வவளம் மிக்க பூந்தராயில் எழுந்தருளினாய்./n வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய்,/n ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய்./n புறவம் என்னும் தலத்தை விரும்பினாய்,/n கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய முடியாத பண்பினை உடையாய்./n சண்பையை விரும்பினாய்./n ஐயுறும் சமணரும் அறுவகையான பிரிவுகளை உடையபுத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்./n வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி வாழ்கின்றாய்,/n ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால் வேதம், மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய்,/n சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும் உணர்ந்த குற்றமற்ற அந்தணாளர் வாழும் கழுமலம் என்னும் பழம்பதியில் தோன்றிய கவுணியன்குடித் தோன்றலாகிய ஞானசம்பந்தன் கட்டுரையை விரும்பிப் பிரமன் மண்டையோட்டில் உண்ணும் பெருமானே அறிவான். அத்தன்மையை உடைய நின்னை உள்ளவாறு அறிவார், நீண்ட இவ்வுலகிடை இனிப்பிறத்தல் இலர்./n குருவருள்: ஞானசம்பந்தர் அருளிய சித்திரக் கவிகளுள் ஒன்றாகிய திருவெழுகூற்றிருக்கை ஒன்றை மட்டுமே பாராயணம் புரிவோர்,அவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் அனைத்தையும் ஓதிய பயனைப் பெறுவர் என்பது மரபு./n சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.

குறிப்புரை :

ஓருருவாயினை - என்றது, எல்லாத் தத்துவங்களையுங் கடந்து வாக்குமனாதிகளுக்கு எட்டாமலிருந்துள்ள தற்சுருபந்தான் பஞ்சகிர்த்தியங்களையும் நிகழ்த்தவேண்டி நினது இச்சையால் எடுத்துக்கொண்டிருக்கும் திருமேனியை (எ-று)/n மானாங்காரத்தீரியல்பாய் - என்றது. மானென்பது - சத்தி - ஆங்காரத்தீரியல்பாய் - தற்சத்தியைக் கொண்டு சர்வானுக்கிரகமான பஞ்சகிர்த்தியங்களை நடத்தவேண்டிச் சத்தி சிவமாகிய இரண்டு உருவாயினை எ - று./n ஒரு - என்றது. அந்தச் சத்தியுடனே கூடி யொன்றாகி நின்றனை எ - று./n விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை - என்றது. ஆகாச முதலாகப் பூமியீறாகவுள்ள பஞ்சபூதங்களையும் சந்திராதித்தர்களையும் தேவர்களையும் மற்றுமுள்ள ஆத்மாக்களையும் படைக்கைக்கும், காக்கைக்கும், அழிக்கைக்கும், பிரமா விஷ்ணு உருத்திரன் என்கின்ற திரிமூர்த்திகளுமாயினை எ - று./n இருவரோடு ஒருவனாகி நின்றனை - என்றது. பிரமாவையும் விஷ்ணுவையும் வலத்தினும் இடத்தினும் அடக்கிக் கொண்டு ஏகமாய்த் திரிமூர்த்தியாகி நின்றனை எ - று./n ஓரால்நீழலொண்கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறிகாட்டினை - என்றது. விருக்ஷங்களுக்கு எல்லாந்தலைமையாய் இருப்பதொரு வடவிருக்ஷத்தின் நீழலிலே எழுந்தருளியிருந்து நின்னழகிய ஸ்ரீ பாதங்களை உதயம் மத்தியானம் அத்தமனம் என்கின்ற மூன்றுகாலமும் தோத்திரம் செய்யாநின்ற அகஸ்தியன் புலத்தியன் சனகன் சனற் குமாரன் என்னும் நால்வகை இருடிகளுக்கும் தற்சுருபமான திருமேனியைக் காட்டி அருளினை எ - று./n நாட்டம் மூன்றாகக் கோட்டினை - என்றது. பிர்மா முதலாயிருந்துள்ள ஆத்மாக்கள் ரூபமென்னும் புலனாலே சர்வ பதார்த்தங்களையும் காணாதபடியாலே சந்திராதித்தர்களையும் அக்கினியையும் மூன்று கண்ணாகக் கொண்டருளி அந்தகாரமான இருளை ஓட்டினை எ - று./n இருநதி அரவமோடு ஒரு மதி சூடினை - என்றது. பெரிதாகிய கங்கையையும் ஒப்பில்லாத பாம்பினையும் ஒருகாலத்தினும் முதிராத பிறைக்கண்ணியையும் சூடியருளினை எ - று./n ஒருதாள் ஈரயின் மூவிலைச்சூலம் நாற்கான் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை - என்றது. பிரணவமாயிருந்துள்ள ஒரு காம்பினையும், ஈருகின்ற கூர்மையினையும், பிர்மா விஷ்ணுருத்திரனென்கின்ற மூன்று இலையினையும் உடையதொரு சூலத்தினையும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற நாலு வேதங்களையும் நாலுகாலாயிருந்துள்ள ஒரு மான் கன்றினையும், ஸ்ரீ பஞ்சாக்ஷரங்களையும், அஞ்சு தலையாகவுடையதொரு மகாநாகத்தினையும் அஸ்தங்களிலே தரித்தருளினை எ - று./n காய்ந்த நால்வாய் மும்மதத்து இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை - என்றது தன்னிழலைக் காயத்தக்க கோபத்தினையும் தொங்கும் வாயினையும் இரண்டு கொம்பினையும் உடையதொரு ஒப்பில்லாத ஆனையினுடைய பெலங்களையெல்லாம் கெடுத்து உரித்துப் போர்த்தனை எ - று./n ஒரு தனு இருகால் வளைய வாங்கி முப்புரத்தோடு நால்நிலம் அஞ்சக் கொன்று தலத்துறு அவுணரை அறுத்தனை - என்றது, ஒப்பில்லாத பொன்மலையாகிய வில்லை இருதலையும் வளைய வாங்கி அஸ்திரத்தைத் தொடுத்து, மூன்றுபுராதிகளாகிய அவுணரை அறுத்தனை எ - று./n ஐம்புலம் நாலாம் அந்தக்கரணம் முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை - என்றது. சத்த - பரிச - ரூப - ரச - கந்தம் எனப்பட்ட ஐம்புலங்களையும், மனம் - புத்தி - யாங்கார - சித்தம் என்கின்ற அந்தக்கரணங்கள் நான்கினையும், ராசத - தாமத - சாத்துவிகம் என்கின்ற மூன்று குணங்களையும், பிராணன் - அபானன் என்கின்ற இரண்டு வாயுவையும், மூலாதாரத்திலே ஒடுக்கிக்கொண்டு ஏகாக்ரசித்தராயிருந்துள்ள தேவர்கள் ஏத்த நின்றனை எ - று./n ஒருங்கிய மனத்தோடு இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து நான்மறை ஓதி ஐவகை வேள்வியமைத்து ஆறங்க முதலெழுத்தோதி வரன்முறை பயின்றெழுவான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை - என்றது, ஆகாரம் - நித்திரை - பயம் - மைதுனம் இவற்றில் செல்லும் மனத்தைப் பரமேசுவரனுடைய ஸ்ரீ பாதங்களிலேயொருக்கி முன்பு தாம் மாதாவின் உதரத்திலே பிறந்த பிறப்பும், உபநயனத்தின் பின்பு உண்டான பிறப்புமாகிய இரண்டையும் விசாரித்து மூன்று சந்தியும், செபதர்ப்பண - அனுட்டான - ஓமங்களையுமுடித்து, இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்கின்ற நாலு வேதங்களையும் ஓதி, சிவபூசை - குருபூசை - மகேசுரபூசை - பிராமண போசனம் - அதிதி புசிப்பு என்கின்ற ஐந்து வேள்வியும் முடித்து, ஓதல் - ஓதுவித்தல் - வேட்டல். வேட்பித்தல் - ஈதல் - ஏற்றல் என்னும் ஆறங்கங்களையும் நடத்தி இவைகளுக்கு முதலாயிருந்துள்ள பிரணவத்தையும் உச்சரித்துத் தேவலோகத்திலுள்ள தேவர்களுக்கும் அவிகொடுத்து மழையைப் பெய்விக்கும் பிராமணராலே பூசிக்கப்பட்ட பிரமபுரமே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை என்றவாறு - ஆறங்கமாவன மந்திரம் - வியாகரணம் - நிகண்டு - சந்தோபிசிதம் - நிருத்தம் - சோதிடம் என இவ்வாறு வழங்கப்படு கின்ற முறையொன்று./n அறுபதமுரலும் வேணுபுரம் விரும்பினை - என்றது. அறுகாலுடைய வண்டுகளிசைபாடும் பொழில்சூழ்ந்த வேணுபுரம் என்பதே திருப்பதியாக எழுந்தருளினை என்றவாறு - வேணுபுரம் என்பதற்குக் காரணம்: வேணு என்பானொரு இந்திரனுடன் கெசமுகன் என்பானொரு அசுரன் வந்து யுத்தம்பண்ண அவனுடனே பொருது அப செயப்பட்டுப் பிரமபுரமென்னு முன் சொன்ன பதியிலேவந்து பரமேசு வரன் திருவடிகளிலே `தம்பிரானே! அடியேனுக்கு அமைத்தருளின சுவர்க்கலோகத்தைக் கசமுகன் சங்கரிக்க, அவனுடன் யுத்தம்பண்ணி அபசெயப்பட்டுப் போந்தேன்`என்று விண்ணப்பஞ்செய்து பூசிக்கையாலே தம்பிரானும் கணேசுரனைத் திருவுளத்தடைத்து `வாராய் கணேசுரனே! கசமுகன் வரப்பிரசாதமுடையவன்; ஒருவராலுமவனைச் செயிக்கப்போகாது; நீயும் அவன் வடிவாகச் சென்று உன் வலக்கொம்பை முறித்தெறிந்து அவனைக்கொன்று வேணு என்கின்ற இந்திரனைச் சுவர்க்கலோகத்திலே குடிபுகவிட்டுவா `என்று திருவுளம் பற்றக் கணேசுரனும் அவன் வடிவாகச்சென்று தன் வலக்கொம்பை முறித்தெறிந்து அவனையுங்கொன்று வேணு என்கின்ற இந்திரனையும் சுவர்க்கலோகத்திலே குடிபுகவிட உண்டானது என்க. இகலியமைந்துணர் புகலி அமர்ந்தனை - என்றது. தேவர்கள் முன்பு புகலிடமென்று புகுதலால் திருப்புகலி என்பதே திருப்பதியாக எழுந்தருளி இருந்தனை என்றவாறு - தேவலோகமான அமராபதியைச் சூரபத்மா என்பானொரு அசுரன் வந்து சங்காரம் பண்ண அவனுடனே தேவேந்திரன் முதலாயுள்ளார் பொருது அபசெயப்பட்டு யுத்தத்தையொழிந்து இனி நமக்குப் பரமேசுவரன் ஸ்ரீ பாதமொழிய புகலிடமில்லை என்று வேணுபுரத்திலே வந்து பரமேசுவரனைத் தெண்டம்பண்ணி அவனாலுண்டான நலிகையை விண்ணப்பஞ் செய்து எங்களை ரக்ஷித்தருள வேண்டும் என்னப் பரமேசுவரனும் சுப்பிரமணியரைத் திருவுளத்து அடைத்து `வாராய் சுப்பிரமணியனே! நீ ஆறுமுகமும் பன்னிரண்டு கையுமாகப் போய்ச் சூரபத்மாவையும் செயித்துத் தேவலோகத்திலே தேவர்களையும் குடிபுகுத விட்டுவா`என வருகை காரணம்./n பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை - என்றது. மிகவும் கோபிக்கப்பட்ட கடல்சூழ்ந்த வெங்குரு என்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை என்றவாறு. - லோகங்களுக் கெல்லாம் தேவகுருவாகிய பிரகஸ்பதிபகவான் என்னையொழிந்து கர்த்தாவுண்டோ என்று மனோகெர்வஞ் சொல்லுகையாலே பரமேசு வரனும் இவன் மகா கெர்வியாயிருந்தான் இவனுடைய கெர்வத்தை அடக்கவேண்டுமென்று திருவுளத்தடைத்தருளித் தேவர்க்குக் குருவாகிய அதிகாரத்தை மாற்றியருளப் பயப்பட்டுப் புகலி என்கின்ற திருப்பதியிலே போய்ப் பரமேசுவரனைத் தெண்டம்பண்ணி அடியேன் செய்த அபராதங்களைப் பொறுத்தருளி அடியேனை ரக்ஷித்தருள வேண்டும் என்று விண்ணப்பஞ்செய்யத், தம்பிரானும் நீ மகா வேகியாயிருந்தாய் என்று திருவுள்ளமாய் முன்புபோல் தேவர்களுக்குக் குருவாகிய அதிகாரத்தையும் கொடுத்த காரணத்தால் வெங்குரு என்கின்ற பெயருண்டாயது./n பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த தோணிபுரத்து உறைந்தனை - என்றது. பாணி என்கின்ற சலம் பிரளயமாய்ப் பூமி அந்தரம் சுவர்க்கம் மூன்று லோகங்களையும் புதைப்ப அதைச்சங்காரம் பண்ணியருளி அதின்மேலே தோணிபோல மிதந்த வெங்குருவாகிய தோணிபுரம் என்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று./n தொலையா இருநிதிவாய்ந்த பூந்தராயேய்ந்தனை - என்றது. வேண்டினார் வேண்டியது கொடுத்துத் தொலைவறச் சங்கநிதி பத்மநிதி என்று சொல்லப்பட்ட இரண்டு நிதிகளும் பூவும் தராயும் பூசிக்கையாலே திருப்பூந்தராயென்னப்பட்ட திருப்பதியிலே எழுந்தரு ளியிருந்தனை எ - று./n ஒருகாலத்துத் தொலையாத வரத்தைப் பெறுவது காரணமாகத் திருத்தோணிபுரத்திலே வந்து தம்பிரானைப் பூசித்தளவில் `உங்களுக்கு வேண்டுவதென்`என்று கேட்டருள, `தம்பிரானே! அடியோங்களுக்கு எல்லாக் காலங்களுந்தொலையாமல் கொடுக்கத் தக்க வரத்தைப் பிரசாதித்தருள வேண்டும்` என்று விண்ணப்பஞ் செய்ய, அவ்வாறே தொலையாதவரத்தையும் கொடுத்தருளி மகாசங்காரத்தினுந் தம்முடைய ஸ்ரீ அஸ்தங்களிலே தரித்தருளும் வரப்பிரசாதமுங் கொடுத்தருளினதால் பூந்தராய் எனப் பெயருண்டாயது./n வரபுரமொன்றுணர் சிரபுரத்துறைந்தனை - என்றது. வரத்தைத் தருவதான புரமென்றுணரத்தக்க சிரபுரமென்பதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று. /nதேவர்களும் பிர்ம விஷ்ணுக்களுமாகக்கூடி அமிர்தத்தையுண்டாக்கித் தேவர்களை இருத்தி விஷ்ணுபகவான் அமிர்தம் படைத்துக்கொண்டு வருகிற வேளையில் ராகு கேது என்கிற இரண்டு பாம்புங்கூடிக் கரந்திருந்து அமிர்தபானம் பண்ணுவதாக இருப்பதுகண்டு விஷ்ணு பகவான் அமிர்தம் படைத்துவருகின்ற சட்டுவத்தைக் கொண்டு தலையற வெட்டுகையால் உடலிழந்து நாகமிரண்டும் நம்முடல் தரக்கடவான் பரமேசுவரனொழிய வேறேயில்லை என்று திருப்பூந்தராயிலே வந்து பரமேசுவரனை நோக்கி இரண்டு சிரங்களும் பூசித்ததால் சிரபுரம் என்று பெயருண்டாயது. ஒருமலை எடுத்த இருதிறலரக்கன் விறல்கெடுத்தருளினை - என்றது. பெருமையுள்ள கயிலாயம் என்னும் பேரையுடைத்தாய் உனக்கே ஆலயமாயிருப்பதொரு வெள்ளிமலையை எடுத்த பெரிய புசபலங்கொண்ட இராவணனுடைய கர்வத்தைக் கெடுத்தருளினை எ - று./n புறவம் புரிந்தனை - என்றது. பிரசாபதி என்கின்ற பிர்மரிஷி கௌதமரிஷியை நோக்கி நீ ஸ்திரீபோகத்தைக் கைவிடாமலிருக்கிறவனல்லவோ என்று தூஷணிக்கையாலே கவுதமரிஷியும் பிரசாபதி பகவானைப் பார்த்து நீ புறா என்னும் ஒரு பக்ஷியாய் நரமாமிசம் புசிப்பாயாக என்று சபிக்கப் பிரசாபதியும் ஒரு புறாவாய்ப் போய்ப் பலவிடத்தினும் நரமாமிசம் புசிக்கையிலே, ஒரு நாள் மாமிசந்தேடிச் சோழவம்சத்திலே ஒரு ராசா தினசரி தனாயிருக்கிறவிடத்திலே இந்தப் புறாவாகிய ரிஷியும் போய் ராசாவைப்பார்த்து எனக்கு அதிக தாகமாயிருக்கின்றது சற்று நரமாமிசம் இடவல்லையோ என்ன ராசாவும் உனக்கு எவ்வளவு மாமிசம் வேண்டும் எனப் புறாவும், உன்சரீரத்திலே ஒன்று பாதி தரவேண்டும் என்று ராசாவும் தன்சரீரத்திலேயொன்று பாதி அரிந்திடப் புறாவுக்கு நிறையப் போதாமல் சர்வமாமிசத்தையும் அரிந்திட்டு ராசாவும் சோர்ந்துவிழ இந்தப் புறாவாகிய பக்ஷியும் தமக்குத் தன் சரீரத்தை அரிந்திட்டுப் பிழைப்பித்த ராசாசரீரம் பெறும்படி எங்ஙனே என்று விசாரிக்கு மளவில் பரமேசுவரனொழிய வேறில்லை என்று சிரபுரத்திலேவந்து பரமேசுவரனை நோக்கி அர்ச்சிக்கப் பரமேசுவரனும் திருவுளத்தடைத்தருளத் தம்பிரானே அடியேன் தாகந்தீரத் தன் சரீரத்தை அரிந்திட்ட ராசாவுக்கு முன்போல உடலும் பிரசாதித்து அடியேனுக்கும் இந்தச் சாபதோஷம் நீக்கவேண்டும் என்று விண்ணப்பஞ்செய்ய, ராசாவுக்குச் சரீரமும் கொடுத்துப் புறாவுக்கு வேண்டும் வரப்பிரசாதங் களையும் பிரசாதித்துச் சாபதோஷமும் மாற்றியருளிப் புறாவும் பூசிக்கையாலே புறவம் என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளி இருந்தனை எ - று./n முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் பண்பொடு நின்றனை - என்றது. ஆற்றுநீர் வேற்றுநீர் ஊற்றுநீர் என்று சொல்லப்பட்ட முந்நீராகிய சமுத்திரத்திலே துயிலாநின்ற நாராயணனும் நான்முகத்தினையுடைய பிர்மாவும் அடியும் முடியும் தேடற்கு அரிதாய் நின்ற பண்பினையுடையையாய் எழுந்தருளியிருந்தனை எ - று./n சண்பை அமர்ந்தனை - என்றது. துர்வாச மகரிஷி யாசிரமத்தே கிருஷ்ணாவதாரத்திலுள்ள கோபாலப் பிள்ளைகளெல்லாமிந்த ரிஷியை அசங்கதித்துத் தங்களிலே ஒருவனைக் கர்ப்பிணியாகப் பாவித்துச்சென்று அவள் பெறுவது ஆணோ பெண்ணோ என்று அந்த ரிஷியைக் கேட்கையாலே அவர் கோபித்து இவள் பெறுவது ஆணுமல்ல பெண்ணுமல்ல உங்கள் வமிசத்தாரையெல்லாஞ் சங்கரிக்கைக்கு ஒரு இருப்புலக்கை பிறக்கக்கடவதென்று சபிக்கையாலே அவன் வயிற்றிலிருந்து ஒரு இருப்புலக்கை விழ அந்தச் சேதியைக் கிருஷ்ணன் கேட்டுத் துர்வாச மகரிஷி சாபங்கேவலமல்ல என்று அந்த இருப்புலக்கையைப் பொடியாக அராவி அந்தப் பொடியைச் சமுத்திரத்திலே போட, அராவுதலுக்குப் பிடிபடாத ஒரு வேப்பம் விதைப் பிரமாணமுள்ள இரும்பை ஒரு மீன் விழுங்கி ஒரு வலைக்காரன் கையிலே அகப்பட்டது. அதன் வயிற்றில் கிடந்த இரும்பைத் தன் அம்புத் தலையிலே வைத்தான். மற்றுஞ் சமுத்திரத்திற்போட்ட இரும்புப் பொடிகளெல்லாம் அலையுடனே வந்து கரைசேர்ந்து சண்பையாக முளைத்துக் கதிராய் நின்றவிடத்திலே கோபால குமாரர்கள் விளையாடி வருவோமென்று இரண்டு வகையாகப் பிரிந்து சென்று அந்தச் சண்பைக்கதிரைப் பிடுங்கி எறிந்துகொண்டு அதனாலே பட்டுவிழுந்தார்கள். இதைக் கிருஷ்ணன் கேட்டு இதனாலே நமக்கு மரணமாயிருக்குமென்று விசாரித்து ஆலின்மேலே ஒரு இலையிலே யோகாசனமாக ஒரு பாதத்தை மடித்து ஒரு பாதத்தைத் தூக்கி அமர்ந்திருக்கிற சமயத்திலே அந்த மீன்வேடன் பக்ஷி சாலங்களைத்தேடி வருகிறபோது தூக்கிய பாதத்தை ஒரு செம்பருந்து இருக்கிறதாகப் பாவித்து அம்பைத் தொடுத்தெய்யக் கிருஷ்ணனும் பட்டுப் பரமபதத்தை அடைந்தான். இந்தத் சாபதோஷம் துர்வாச மகரிஷியைச்சென்று நலிகையாலே இந்தத் தோஷத்தை நீக்கப் பரமேசுவரனை நோக்கி அர்ச்சிக்கப் பரமேசுவரனும் திருவுளத் தடைத்தருள ரிஷியும் தெண்டம்பண்ணித் `தம்பிரானே! அடியேனுடைய சாபத்தாலே கிருஷ்ணனுடைய வமிசத்திலுள்ள கோபாலரெல்லாருஞ் சண்பைக் கதிர்களால் சங்காரப்படுகையாலே அந்தத் தோஷம் அடியேனைவந்து நலியாதபடி திருவுளத்தடைத்தருளி ரக்ஷிக்கவேண்டும்` என்று விண்ணப்பஞ்செய்யத் துர்வாச மகரிஷிக்குச் சண்பை சாபத்தினாலுள்ள தோஷத்தை நீக்கிச் சண்பைமுனி என்கின்ற நாமத்தையும் தரித்தருளிச் சண்பை என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று./n ஐயுறும் அமணரும் அறுவகைத்தேரரும் ஊழியும் உணராக் காழியமர்ந்தனை - என்றது, வேதாகம புராண சாத்திரங்களிலுள்ள பலத்தை இல்லை என்று ஐயமுற்றிருக்கின்ற அமணரும் கைப்புப் - புளிப்புக் - கார்ப்பு - உவர்ப்பு - துவர்ப்புத் - தித்திப்பு என்கின்ற அறுவகை ரசங்களையும் உச்சிக்கு முன்னே புசிக்கின்றதே பொருளென்றிருக்கின்ற புத்தரும் ,ஊழிக்காலத்தும் அறியாமல், மிகவும் காளிதமான விஷத்தையுடைய காளி என்கின்ற நாகம் பூசிக்கையாலே சீகாழி என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று./n எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை - என்றது. குரல் - துத்தம் - கைக்கிளை - உழை - இளி - விளரி - தாரம் என்பது ஏழிசை. - குரலாவது - சங்கத்தொனி, துத்தமாவது - ஆண்மீன்பிளிறு, கைக்கிளையாவது - குதிரையின்குரல். உழையாவது - மானின்குரல், இளியாவது - மயிலின்குரல், விளரியாவது - கடலோசை, தாரமாவது - காடையின்குரல் என்னும் நாதங்களையும் மெச்சினை, மகத்தான இருடிகள் எல்லாரினும் விருத்தராயுள்ள பராசரப் பிரமரிஷியானவர் மற்ற ரிஷிகளெல்லாரையும் நோக்கி நீங்கள் சமுசாரிகளொழிய விரதத்தை அனுஷ்டிப்பாரில்லையென்று அவர்களைத் தூஷிக்க அவர்களும் நீ மச்சகந்தியைப் புணர்ந்து மச்சகந்தமும் உன்னைப்பற்றி,விடாமல் அனுபவிப்பாயென்று சபிக்கையாலே அந்தச் சாபத்தின்படி போய் மச்சகந்தியைப் புணர்ந்து அந்தத் துர்க்கந்தம் இவரைப் பற்றி ஒரு யோசனை தூரம் துர்க்கந்தித்த படியாலே இது போக்கவல்லார் பரமேசுவரனையொழிய இல்லை என்று சீகாழியிலே வந்து பரமேசுவரனை அர்ச்சிக்கப் பரமேசுவரன் `உனக்கு வேண்டியது என்ன என்று கேட்க` `தம்பிரானே! அடியேனைப் பற்றின துர்க்கந்தத்தை விடுவிக்க வேண்டும்` என்று விண்ணப்பஞ்செய்ய, தம்பிரானும் `இவனென்ன கொச்சை முனியோ` என்று திருவுளமாய் இவன்மேற்பற்றின துர்க்கந்தத்தையும் போக்கிச் சுகந்தத்தையும் பிரசாதித்தருளிக் கொச்சை என்கின்ற சந்தான நாமத்தையுந்தரித்தருளிக் கொச்சை என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று./n ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும் மறைமுதல் நான்கும் மூன்றுகாலமும் தோன்ற நின்றனை - என்றது. பிரத்தி - பிரத்தியா காரம் - துல்லியம் - துல்லியாதீதம் - வித்தை - அவித்தை என்கின்ற ஆறுபதங்களும், ஆசு - மதுரம் - சித்திரம் - வித்தாரம் - விரையம் என்கின்ற ஐந்தும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற நாலுவேதங்களும், செல்காலம் - வருங்காலம் - நிகழ்காலம் என்கின்ற மூன்றுகாலமும் தோன்றாநின்ற திரிமூர்த்தியாயினை எ - று./n இருமையின் ஒருமையின் - என்றது. சத்திசிவங்களா யிருந்துள்ள இரண்டும் ஒன்றாய் அர்த்தநாரீசுவரவடிவமாய் இருந்துள்ளதை எ - று./n ஒருமையின் பெருமை - என்றது. தானே ஒரு எல்லையில்லாத சிவமாயிருந்துள்ளதை எ - று. மறுவிலாமறையோர் கழுமலமுதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமலமுதுபதிக் கவுணியன் அறியும் - என்றது. மறுவற்ற பிர்ம வமிசத்தில் தோன்றித் தீக்கைகளாலே மலத்தைக் கழுவப்பட்ட கவுணியர் கோத்திரத்திலே வந்த சீகாழிப்பிள்ளை கட்டுரையை விரும்பிக் கழுமலம் என்கின்ற முதுபதியிலே எழுந்தருளினை. கம் என்கின்ற பிரமசிரசிலே உண்கின்றவனே அறியும் எ - று./n அனைய தன்மையை யாதலின் - என்றது. அத்தன்மையாகிய இயல்பினையுடையையாதலின் எ - று./n நின்னை நினைய வல்லவர் இல்லை நீணிலத்தே - என்றது. நின்னை நினைக்க வல்லார்களுக்குப் பிறப்பு இல்லை என்றவாறு.
சிற்பி