திருச்சிராப்பள்ளி


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.

பொழிப்புரை :

நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.

குறிப்புரை :

சிராப்பள்ளி நாதரைச் சொல்ல என்னுள்ளம் குளிரும் என்கின்றார். நன்றுடையான், தீயதில்லான் இவை யிரண்டும் இத்தலத்துத் தீர்த்தங்கள். நரைவெள்ளேறு - மிக வெள்ளிய இடபம். சென்றடையாத திரு - நல்வினைப் போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவது போல வந்து அடையாத இயற்கையேயான திரு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.

பொழிப்புரை :

சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரியமலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழி தரும் செயல் அன்றோ?

குறிப்புரை :

பெண் குரங்கு ஆண் குரங்கோடு ஊடி, குட்டியையும் தூக்கிக் கொண்டு மூங்கிலில் பாய்வதற்காக மலைமிசையேறும் சிராப்பள்ளி நாதா! நாகத்தையும் மதியையும் உடனாக வைத்தல் உனக்குப் பழியாகுமல்லவா?. கைம்மகவு - கைக்குழந்தை. கடுவன் - ஆண் குரங்கு. கழை - மூங்கில். செம்முக மந்தி - சிவந்த முகத்தோடு கூடிய பெண் குரங்கு. பெண் குரங்கின் முகம் சிவப்பாயிருக்குமென்ற குரங்கின் இயற்கையையும் ஈண்டு எண்ணுக. வெம்முக வேழம் - கொடுந்தன்மையுடையயானை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிக ளடியார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

சிராப்பள்ளி நாதனின் அடியார்க்கு அல்லல் இல்லை என்கிறது. மந்தம் முழவம் - மந்தஸ்தாயியில் அடிக்கப்படும் முழவம். மழலை - பொருள் விளங்காத ஒலி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.

பொழிப்புரை :

பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.

குறிப்புரை :

நீலகண்டன், எரியாடுங் கடவுள், பிறைச் சென்னியன் எங்கள் கடவுள் என்கின்றது. வண்டும் தும்பியும் நீலப் பூவில் தங்கிப்பாடும் என்ற சுனையியற்கை முதல் இரண்டடிகளில் குறிக்கப் பெறுகிறது. கறை - விடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.

பொழிப்புரை :

கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும் மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?

குறிப்புரை :

சிவபெருமான் முழுமுதற் கடவுளல்லர் என்பார்க்கு உண்மை உணர்த்துவது இப்பாடல். கொலைவரையாத கொள்கையர் - கொலையை நீக்காத கொள்கையினை உடைய திரிபுராதிகள். நிலவரை நீலம் - நிலவுலகில் நீலநிறம் ஊட்டப்பட்ட துணி. வெள்ளை நிறம் ஆமே - வெண்மை நிறம் உடையதாதல் கூடுமா? நீலநிறத்துக்கு மட்டும் உரிய பண்பு இது. அதுபோல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றல் இயலாது. (பழமொழி - 168.)

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை யறிவாரே.

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.

குறிப்புரை :

சிராப்பள்ளிமேவிய செல்வர் பெண்ணொரு பாக மாகுவர், ஆகாத நஞ்சை அருந்துவர், பிரம கபாலத்தில் பிச்சையும் எடுப்பர், இவர் செயல்கள் ஒன்றோடொன்று ஒத்திருந்தனவல்ல என்றபடி. வெய்ய - கொடிய; விரும்பத்தக்க என்றுமாம். வேங்கைப்பூ பொன்சேரும் சிராப்பள்ளி என்றது, வேங்கை மலர்கள் பொன்போன்ற நிறத்தனவாய் நிலத்தைச் சேரும் மலை என்க. ஐயம் - பிச்சை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

வேயுயர்சாரற் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.

பொழிப்புரை :

கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு, சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.

குறிப்புரை :

தாயுமானவர், பேயின் கையிலுள்ள கொள்ளியைக் கை விளக்காகக் கொண்டு ஆடுதல் திருவுளக் குறிப்பாயின் அது ஆகாது என்கின்றது. வேய் - மூங்கில். கருவிரலூகம் - கருங்குரங்கு. சேய் - தூரம். கைவிளக்கு - சிறியவிளக்கு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.

பொழிப்புரை :

மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?

குறிப்புரை :

தலையே கலனாகப் பலி ஏற்றுண்பார்; சொல்லவல்ல வேதத்தையும் பாடலையும் சொன்னால் சிராப்பள்ளியார் செய்கை சில அல்லாதன போலும் என்கின்றது. மல்கும் - நிறைந்த, வேதங்களையும் பாடல்களையும் சொன்னால் அவற்றில் சில அல்லாதன என்பதை அவர் செய்கைகளிலிருந்து அறிகிறோம் என்பது கருத்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக்
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டா லிகழாரே.

பொழிப்புரை :

பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக்கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே, நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?

குறிப்புரை :

அயனும் மாலும் உம்மைக் காணாவிட்டாலும் நீர் மனைதொறும் பிச்சைக்குப் புறப்படாதீர்; உம்மை யாவரும் இகழார்கள் என்கிறது. அரப்பள்ளியான் - பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமால். கரப்பு உள்ளி - இறைவன் மறைந்திருப்பதை எண்ணி. நாடி - தேடி, ஏதிலர் - அயலார்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்க ளுரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.

பொழிப்புரை :

நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர், எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் உரைக்கும் சொல்லைப் பேணாது பெருஞ்சிறப்பெய்த விரும்புபவர்களே! சிராப்பள்ளி சேர்மின் என்கின்றது. நாணாது - வெட்கப்படாமல். கஞ்சியை விடியலுணவாகவும், பகலிலும் உண்டு ஓதுபவர்கள் புத்தர்கள். பேணாது - போற்றாது. உறுசீர் - மிக்கபுகழ். சேணார் கோயில் - ஆகாயமளாவிய கோயில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்த னலமிகுபாட லிவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.

பொழிப்புரை :

தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.

குறிப்புரை :

சிராப்பள்ளியானைத் துதித்த ஞானசம்பந்தன் பாடலிவை வல்லார் தேவரொடு சேர்ந்து வாழ்வர் என்கின்றது. தேன் - வண்டு. கானல் - கடற்கரைச் சோலை. வானசம்பந்தத்தவர் - வானுலகிற் சம்பந்தமுடைய தேவர்கள்.
சிற்பி