சீகாழி
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 1
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.
பொழிப்புரை :
நல்லவர்களும், நாள்தோறும் வேள்விகளைச் செய்பவர்களும், நான்கு வேதங்களை ஓதுபவர்களும், அன்புடையவர்களும் ஆகிய அந்தணர்கள், ஒளி பொருந்திய அழகிய தன் திருவடிகளைப் போற்ற, மேருவில்லால் முப்புரங்களை அழித்த சிவபெருமான் எழுந்தருளிய தலம், மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழி நகராகும்.
குறிப்புரை :
வேதம் ஓதி வேள்விசெய்யும் அந்தணர்கள் திருவடியைத் தொழ, வில்லால் புரமெரித்த பெருமானிடம் காழிநகரம் என்கின்றது. தீ மேவும் தொழிலார் - யாகத்தீயை விரும்பும் தொழிலையுடைய அந்தணர். நால்வேதம் சொல்லார் - நான்கு வேதங்களாகிய சொல்லையுடையவர்கள். கல்லார் மதில் - மலையையொத்த மதில்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 2
துளிவண் டேன்பாயு மிதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கண்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை யுகந்தா னூர்போலுங்
களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே.
பொழிப்புரை :
வளமான தேன் துளிபாயும் கொன்றை மலர், தூய ஊமத்தம் மலர், தெளிந்த வெண்மையான பிறை மதி, பாம்பு, கங்கை ஆகியன விளங்கும் சென்னிக்கண், ஒளி பொருந்திய வெள்ளிய தலை மாலையை விரும்பிச்சூடிய சிவபிரானது ஊர், கள்ளுண்டு களித்த வண்டுகள், யாழ்போல ஒலிக்கும், சீகாழி நகராகும்.
குறிப்புரை :
கொன்றை, பிறை, பாம்பு, ஊமத்தம் இவற்றை விரும்பிய இறைவனிடம் இது என்கின்றது. வண் தேன் துளி பாயும் இதழி என மாறுக. இதழி - கொன்றை. மாசுணம் - பாம்பு.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 3
ஆலக் கோலத்தி னஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் றன்மையாற்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தாற்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.
பொழிப்புரை :
பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் எனப்படும் அழகிய நஞ்சினை உண்டு, அமுதம் முழுவதையும் தேவர்களுக்கு ஈந்தருளிய தன்மையை உடையவனாய் மார்க்கண்டேயன் பொருட்டுத் தன்பாதத்தால் காலனை உதைத்த சிவபிரானது ஊர், சீகாழிநகராகும்.
குறிப்புரை :
ஆலகால விஷத்தை உண்டு அமுதத்தைத் தேவர்க்கு அளித்தவனும், காலனைக் காய்ந்தவனும் ஆகிய காவலன் ஊர், காழி என்கின்றது. ஆலக்கோலத்தின் நஞ்சு - ஆலகால விஷம். சால - மிக. பாலற்கு - மார்க்கண்டேயற்கு. பரிந்து - கருணை கூர்ந்து. அளித்தான் - உயிர் கொடுத்தான்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 4
* * * * * * * * * *
பொழிப்புரை :
* * * * * * * * * *
குறிப்புரை :
* * * * * * * * * *
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 5
* * * * * * * * * *
பொழிப்புரை :
* * * * * * * * * *
குறிப்புரை :
* * * * * * * * * *
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 6
* * * * * * * * * *
பொழிப்புரை :
* * * * * * * * * *
குறிப்புரை :
* * * * * * * * * *
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 7
* * * * * * * * * *
பொழிப்புரை :
* * * * * * * * * *
குறிப்புரை :
* * * * * * * * * *
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 8
இரவிற் றிரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பானீ றணிவோர்க்குங்
கரவிற் றடக்கையார் காழிந் நகர்தானே.
பொழிப்புரை :
இரவில் திரியும் நிசாசரராகிய அசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் இருபது தோள்களையும் நெரித்து, பின் அவன் வருந்திய அளவில் கைகளில் ஏந்தும் வாள் வழங்கிய சிவபிரானது இடம், இறைவனைப் பரவித்திரியும் அடியவர்கட்கும், பால் போன்ற திருநீற்றை அணிபவர்கட்கும், ஒளியாமல் வழங்கும் நீண்ட கைகளையுடைய, வள்ளன்மை மிக்க, அடியார் வாழும், சீகாழிப்பதியாகும்.
குறிப்புரை :
இராவணற்கு வாள் அருளிச் செய்தவன் இடம் காழி நகரம் என்கின்றது. இரவில் திரிவோர் - அசுரர்கள்; நிசாசரர் என்பதன் மொழிபெயர்ப்பு. நிரவி - ஒழுங்குபடுத்தி. கரவாள் - கைவாள். கரவு இல் தடக்கையார் - ஒளியாமல் வழங்கும் கையையுடையவர்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 9
மாலும் பிரமனு மறியா மாட்சியான்
றோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலு மிரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.
பொழிப்புரை :
திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத மாட்சிமையை உடையவனும், மான்தோலும், முப்புரி நூலும் பொருந்திய மலை போன்ற மார்பினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளும்பதி, தம்பால் இரந்தவர்களுக்கு எந்நாளும் பிறிதொருநாளையோ, நேரத்தையோ குறிக்காது உடனே பொருள் வழங்கும் செல்வர்கள் வாழ்கின்ற சீகாழிநகராகும்.
குறிப்புரை :
அயனும் மாலும் அறியாதவனும், பூணூல் அணிந்தவனுமாகிய இறைவன் பதி காழிநகர் என்கின்றது.
இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் - யாசிப்பவர்களுக்கு எப்பொழுதும் இதுகாலமல்ல, இதுகாலமல்ல, என்று சொல்லாது எப்பொழுதும் கொடுப்பவர்கள்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 10
தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாக மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.
பொழிப்புரை :
உணவளிப்போர் தங்கள் கைகளிலே தர, அதனை வாங்கி உண்ணும் சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை உடுத்திய புத்தர்களும் ஆகியவர்களின் தீயொழுக்கத்தை மனத்துக் கொள்ளாமல், உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்றவனும், மலரணிந்த சென்னியில் கங்கையைத் தரித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய காழிநகரைப் பேணித்தொழுவீர்களாக.
குறிப்புரை :
புத்தர் சமணர்களுடைய தீயொழுக்கத்தைச் சிந்தியாமல் காழிநகரைத் தொழுமின்கள் என்கின்றது.
தம்கையிட உண்பார் - கையில் பிச்சையிட ஏற்று உண்பவர்கள். சீவரத்தார்கள் - காவியாடை உடுத்தியவர்கள். பெங்கை - தீயொழுக்கம்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 11
வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் னகர்தன்னை யிணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.
பொழிப்புரை :
பிறைமதியைச் செஞ்சடையில் வைத்த சிவபிரானது மணங்கமழ்கின்ற சீகாழிப்பதியாகிய நகரை, ஒப்பற்ற ஞானசம்பந்தன் போற்றிப் பேசிய இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற புகழோடு வாழ்வர்.
குறிப்புரை :
காழிநகரைப்பற்றிச் சம்பந்தன் சொன்ன இத்தமிழை வல்லவர்கள் கடல் புடைசூழ்ந்த உலகத்துப் பாசம் நீங்கிப் பழியற்றுப் புகழுடையராய் வாழ்வர் எனப் பயன் கூறுகிறது. பெருநீர் - கடல்.