கோயில்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

பொழிப்புரை :

வேதம் முதலிய நூல்களைக் கற்று அவற்றின்கண் ஓதிய நெறியிலே நின்று, வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அந்தணர்கள் வாழும் தில்லையிலுள்ள சிற்றம் பலத்தில் எழுந்தருளியவனும் இளமையான வெள்ளிய பிறை மதியைச் சூடியவனும் ஆகிய முதல்வனது திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றா.

குறிப்புரை :

இப்பாடல் சிற்றம்பலநாதன் திருவடியே பற்றுக் கோடாகக் கொண்டவர்களைப் பாவம் பற்றாது என்கின்றது. கற்று - வேதம் முதலியவற்றை ஓதி. ஆங்கு எரி யோம்பி - அந்நெறியிலேயே நின்று வேள்வியைச் செய்து. கலி - பாவம். பற்றா - பற்றுக்கோடாக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மைய றீர்வாரே.

பொழிப்புரை :

பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று, எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவனும், தாயின் வயிற்றில் தங்கிப் பிறத்தல் இல்லாதவனும், பின் புறம் தாழ்ந்து தொங்கும் சடாபாரம் உடையவனும் ஆகிய பெருமானை மறவாதவர் மயக்க உணர்வு நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

சிற்றம்பலநாதரை மறவாதவர்களே மலமயக்கம் தீர்வார்கள் என்கின்றது. பறப்பை - வேள்விச்சாலை. பசு வேட்டு - ஆன்மபோதத்தைக் கொன்று. எரி ஓம்பும் - சிவாக்கினியை வளர்க்கும். சிறப்பர் - சிறப்பினை உடைய தில்லை வாழ் அந்தணர்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.

பொழிப்புரை :

மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தோச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும் பொய்யாத வேதப்பாடல்களை விரும்பும் சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்த உறையும் கோயிலை உடையது சிற்றம்பலமாகும்.

குறிப்புரை :

வேதத்தை விரும்பிய சிவபெருமான் உலகேத்த உறை யுங் கோயில் சிற்றம்பலம் என்கின்றது. மையார் ஒண் கண்ணார் - மை பூசிய ஒளிபொருந்திய கண்ணை உடைய பெண்கள். பொய்யா மறை - என்றும் பொய்யாத வேதம். புரிந்தான் - விரும்பியவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே.

பொழிப்புரை :

மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து சிறிதே தாக்கும் தில்லைப்பதியில் சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் பேரம்பலத்தை அடுத்துள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே இன்பம் ஆகும்.

குறிப்புரை :

சிற்றம்பலநாதன் சேவடியை ஏத்தும் இன்பமே இன்பம் என்கின்றது. கொடிவந்து பிறை இறைதாக்கும் பேரம்பலம் எனக்கூட்டுக. அறை - ஒலி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.

பொழிப்புரை :

செல்வவளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச்செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.

குறிப்புரை :

சிற்றம்பலத்தெழுந்தருளியிருக்கின்ற செல்வன் கழலை ஏத்தும் இன்பமே இன்பம் என்கின்றது. சேண் - ஆகாயம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமா னுரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.

பொழிப்புரை :

புதிதாக மரத்தின்கண் இருந்து வெளிவரும் மாந்தளிர் போன்ற மேனியளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, திருமகள் விளங்கும் தில்லை மாநகருள் சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளியவரும், யானைத்தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமாகிய எம் பெருமான் திருவடிகளை அல்லது என் உள்ளம் வேறொன்றையுமே விரும்பாது.

குறிப்புரை :

சிற்றம்பலத்து எழுந்தருளியுள்ள பெருமான் திருவடி யல்லது என்னுள்ளம் வேறொன்றையும் பேணாது என்கின்றது. திரு மாந்தில்லை - திருமகளோடு கூடிய பெரியதில்லை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தா னுலகேத்தச்
சிலையா லெயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் கங்கை நதியை முடியிற்சூடித் தன் திருமேனியில் ஒருபாகமாக மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு மகிழ்ந்திருப்பவனும் உலகம் போற்ற மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்து அழித்தவனும் ஆகிய சிற்றம்பலத்துப் பெருமானைத் தலைதாழ்த்தி வணங்குவார் தலைமைத் தன்மையோடு விளங்குவார்.

குறிப்புரை :

சிற்றம்பலத்தைத் தலையால் வணங்குபவர்களே தலை யானவர்கள் என்கின்றது. சிலை - மேருமலையாகிய வில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கூர்வா ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்த றிண்ணமே.

பொழிப்புரை :

கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் வலிமையை அழித்துச் சிறந்த புகழ் மல்கிய சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளிய கங்கையைத் தரித்த சடையினை உடைய இறைவனை நாள்தோறும் ஏத்துபவருக்குத் தீராதநோய்கள் எல்லாம் தீர்தல் திண்ணம்.

குறிப்புரை :

சிற்றம்பலநாதனை நாள்தோறும் ஏத்துவார் தீராத நோயெல்லாம் தீர்வர் என்கின்றது. கூர்வாள் அரக்கன் என்றது இராவணனை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலா யோங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.

பொழிப்புரை :

வளைந்து சுற்றிய பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ந்த தாமரை மேல் விளங்கும் நான்முகனும், அடிமுடிகளைக் காணாதவராய்த் தன் திருவடிகளைப் பரவ, அழல் வடிவில் ஓங்கி நின்றவனும், உயர்ந்தோர் பலர் வாழும் தில்லைப் பதியுள் சிற்றம் பலத்தின்கண் எழுந்தருளியவனுமாகிய பெருமானைப் போற்ற, நோய்களில் மாட்சிமை உள்ள கொடிய நோய்கள் எல்லாமும் பயன்தாராது கழியும்.

குறிப்புரை :

சிற்றம்பலத்தைத் துதிக்க, பெரியநோயெல்லாம் மாயும் என்கின்றது. கோண் நாகணையான் - வளைந்த நாகத்தை அணையாகக்கொண்ட திருமால். சேணார் - தேவர்கள். மாணா நோய் - மாட்சிமைதராத நோய்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.

பொழிப்புரை :

மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தரும் நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் மொழியும் அறியாமையோடு கூடிய உரைகளைக் கேளாது ஒழுக்கத்தால் மேம்பட்டவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.

குறிப்புரை :

புறச்சமயிகள் புல்லுரையைக் கேளாது சிற்றம்பல நாதன் திருவடியைத்தினம் தொழுவோம் என்கிறது. பட்டைத் துவர் - மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் காவி. படிமம் - நோன்பு. முட்டைக் கட்டுரை - அறியாமையோடு கூடிய சொல். சிட்டர், ஆசாரசீலர். நட்டம் - நடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.

பொழிப்புரை :

உலகில் உயர்ந்து விளங்கும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், ஒழுக்கசீலர்களாலே புனிதமாகக் கொண்டு போற்றப் பெறும் தில்லைச் சிற்றம்பலத்தே எழுந்தருளிய, சூலப்படையுடைய பெருமான் மீதுபாடிய, இத்தமிழ் மாலையாகிய திருப் பதிகத்தை, அழகுறப் பாடவல்லவர் நல்லவர் ஆவர்.

குறிப்புரை :

திருஞானசம்பந்தர் திருச்சிற்றம்பலநாதனைப் பற்றிச் சொன்ன தமிழ் மாலையைப் பாடவல்லவர்கள், நல்லவர் ஆவர் என்கின்றது. சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் - ஒழுக்கம் உடையவர்களால் கொள்ளப்படுகின்ற சிற்றம்பலம். கோலத்தால் - அழகால்.
சிற்பி