திருவெங்குரு


பண் :

பாடல் எண் : 1

காலைநன்மாமலர் கொண்டடிபரவிக் கைதொழுமாணியைக் கறுத்தவெங்காலன்
ஓலமதிடமுன் னுயிரொடுமாள வுதைத்தவனுமையவள் விருப்பனெம்பெருமான்
மாலைவந்தணுக வோதம்வந்துலவி மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி
வேலைவந்தணையுஞ் சோலைகள்சூழ்ந்த வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

வைகறைப் பொழுதில், சிறந்தனவாகிய நல்ல மலர்களைப் பறித்துவந்து சாத்தித் தன் திருவடிகளைப் பரவி, கைகளால் தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்துவந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும், உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய எம்பெருமான், மாலைக் காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு, பவளம் ஆகியவற்றை உந்திவந்து கரையிற் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

நாள்தோறும் மலர்கொண்டு அடிபரவும் மார்க் கண்டற்காகக் காலனைக் காய்ந்த பரமன் வெங்குரு என்னும் சீகாழியில் வீற்றிருக்கிறார் என்கின்றது. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டர். கறுத்த - கோபித்த. மாலைக்காலம் வந்ததும் கடல் ஓதம் பெருகி, சங்கையும் பவளத்தையும் உந்திக் கடல்சாரும் சோலைகள் சூழ்ந்த காழி என நெய்தல்வளம் கூறப்பெற்றது.

பண் :

பாடல் எண் : 2

பெண்ணினைப்பாக மமர்ந்துசெஞ்சடைமேற் பிறையொடுமரவினை யணிந்தழகாகப்
பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி
மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரைகடன்முகந் தெடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

உமையம்மையை இடப்பாகமாக விரும்பி ஏற்று, செஞ்டைமேல் பிறை பாம்பு ஆகியவற்றை அணிந்து, பண் வகைகளை அழகாகப்பாடி ஆடியவராய்ச் சென்று, மகளிரிடம் பலியேற்கும் பரமராகிய எம் அடிகளார், ஊழிக் காலத்தில் உலகை மூடி வான்முகடு வரை உயர்ந்து சுருண்டு விழும் அலைகடல் நீரில் மிதந்து உயர்ந்து வான் உற ஓங்கி மீள நிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள், வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை :

கடல்கொண்டஞான்று உயர்ந்தோங்கிய கோயிலில் உமாதேவியை ஒருபாகத்திருத்தி, பிறைசூடி, பண்ணைப்பாடி, தன் தன்மைகளைப்பேணி வீற்றிருந்தார் என்கின்றது. அமர்ந்து - விரும்பி. பரிசுகள் பேணி - தன் தன்மையவாகிய கருணையைக் காட்டி. கடல் மோதி, ஏறி, முகந்து எடுப்ப, உயர்ந்து, ஓங்கி, இழி கோயிலாகிய வெங்குருவில் வீற்றிருந்தார் என முடிக்க.

பண் :

பாடல் எண் : 3

ஓரியல்பில்லா வுருவமதாகி யொண்டிறல்வேடன துருவதுகொண்டு
காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக் கறுத்தவற்களித்துடன் காதல்செய்பெருமான்
நேரிசையாக வறுபதமுரன்று நிரைமலர்த்தாதுகண் மூசவிண்டுதிர்ந்து
வேரிகளெங்கும் விம்மியசோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

தம் இயல்பிற்குப் பொருத்தமற்ற உருவமாய் மிக்க வலிமையுடைய வேடர் உருத்தாங்கி வந்து உமையம்மைகாண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டிச் சண்டையிட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய சிவபிரான், வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரந்தங்களில் புரள, அதனால் மலர்கள் விரிந்து தேன் உதிருவதால் தேன் எங்கும் விம்மிவழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

உமாதேவிக்காக விசயனைக் கோபித்து அருளுஞ் செய்த பெருமான் இவர் என்கின்றது. ஓர் இயல்பு இல்லா உருவமது ஆகி - ஒருதன்மையும் இல்லாத உருவத்தை மேற்கொண்டு. காரிகை - உமாதேவியார். தனஞ்சயன் - அருச்சுனன். கறுத்து அவற்கு அளித்து எனப்பிரிக்க. நேரிசை: ஒருபண். அறுபதம் - வண்டு. முரன்று - ஒலித்து. தாது கண் மூச - மகரந்தம் கண்ணில் மூட. வேரிகள் - தேன்கள்.

பண் :

பாடல் எண் : 4

வண்டணைகொன்றை வன்னியுமத்த மருவியகூவிள மெருக்கொடுமிக்க
கொண்டணிசடையர் விடையினர்பூதங் கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப்
பண்டிகழ்வாகப்பாடியொர்வேதம் பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல்
வெண்பிறைசூடி யுமையவளோடும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

வண்டுகள் சூழும் கொன்றை மலர், வன்னி இலை, ஊமத்தம் மலர், வில்வம், எருக்கம்பூ ஆகியனவற்றை மிகுதியாகக் கொண்டு அணிந்த சடையினரும், விடை ஊர்தியரும், பூதகணங்கள் கொடுகொட்டி குடமுழா முழவு முதலியவற்றை முழக்கப் பண் விளங்க ஒப்பற்ற வேதங்களைப் பாடிப் பழகியவரும், தமக்கு முன்னே பாய்ந்து வந்த கங்கை வெள்ளத்தை வெண்பிறையோடு சடையில் அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் உமையம்மையாரோடு வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை :

கொன்றை முதலியவற்றை அணிந்த சடையராய், குடமுழா முதலியவற்றைப் பூதங்கள் வாசிக்க, இசையோடு வேதத்தைப் பாடுகிறவர் இவர் என்கின்றது. கூவிளம் - வில்வம். கொடுகொட்டி - ஒருவகை வாத்தியம். இது இப்போது கிடுகிட்டி என வழங்குகிறது. பண்திகழ்வாக - ஒரேஸ்வரத்தில்.

பண் :

பாடல் எண் : 5

சடையினர்மேனி நீறதுபூசித் தக்கைகொள்பொக்கண மிட்டுடனாகக்
கடைதொறும்வந்து பலியதுகொண்டு கண்டவர்மனமவை கவர்ந்தழகாகப்
படையதுவேந்திப் பைங்கயற்கண்ணி யுமையவள்பாகமு மமர்ந்தருள்செய்து
விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

சடைமுடியினராய்த் திருமேனியில் வெண்ணீறு பூசியவராய், தக்கை என்னும் இசைக்கருவியை வைத்துக் கட்டியுள்ள துணிமூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு வீடுகள் தோறும் வந்து பலியேற்று, தம்மைக் கண்ட மகளிரின் மனங்களைக் கவர்ந்து அழகிய கோலத்தோடு மழுப்படையைக் கையில் ஏந்தியவராய் விளங்கும் பெருமானார், பசிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்து அருள் செய்யும் குறிப்பினராய், விடையூர்தியோடு பூதகணங்கள் சூழ வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வந்து வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை :

வீடுகள்தோறும் வந்து பிச்சை ஏற்று, கண்டவர் மனத்தைக்கவர்ந்து, உமையவளை ஒருபாகத்திருத்தியவர் இவர் என்கின்றது. தக்கைகொள்பொக்கணம் - தக்கை என்னும் வாத்தியத்தை வைத்து மறைத்த துணி மூட்டை. இட்டு - புறத்தோளில் தொங்கவிட்டு.

பண் :

பாடல் எண் : 6

கரைபொருகடலிற் றிரையதுமோதக் கங்குல்வந்தேறிய சங்கமுமிப்பி
உரையுடைமுத்த மணலிடைவைகி யோங்குவானிருளறத் துரப்பவெண்டிசையும்
புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள் புரிந்தவர் நலங்கொளா குதியினினிறைந்த
விரைமலிதூபம் விசும்பினைமறைக்கும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

கரையை அலைக்கும் கடலின் திரைகள் மோதுதலால் இரவிடைக் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும் முத்துக்களை ஈனப் புகழ்பெற்ற அம்முத்துக்கள் மணல் இடையே தங்கி ஓங்கிய வானத்தின் இருளை முற்றிலும் துரத்தி ஒளி செய்ய, எண் திசைகளிலும் பரவி நிறைந்த வேதங்களைப் போற்றும் அந்தணர்கள் நன்மை விளைக்கும் வேள்விகளைப் புரிய, அவ்வேள்விகளின் ஆகுதியால் எழும் மணம் மிக்கபுகை வானை மறைத்துத் தோன்றும் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் பெருமான் உமையம்மையாரோடு வீற்றிருந்தருள்கின்றார்.

குறிப்புரை :

ஓதத்தில் கரையேறிச் சங்குகளும் இப்பிகளும் முத்துக்களை ஈன, அவை இருளை ஓட்ட, அந்தணர்கள் செய்யும் யாகப்புகை ஆகாயத்தை மறைக்கின்ற வெங்குரு என்கின்றது. இருளை ஒளியாக்குவன சங்கும் இப்பியும் ஈன்ற முத்துக்கள். ஒளியான விசும்பை மறைப்பன யாகப்புகை என்பது கருத்து. பூசுரர் - அந்தணர். புரை - உயர்வு.

பண் :

பாடல் எண் : 7

வல்லிநுண்ணிடையா ளுமையவடன்னை மறுகிடவருமத களிற்றினைமயங்க
ஒல்லையிற்பிடித்தங் குரித்தவள்வெருவல் கெடுத்தவர்விரிபொழின் மிகுதிருவாலில்
நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப நலிந்திடலுற்று வந்தவக்கருப்பு
வில்லியைப்பொடிபட விழித்தவர்விரும்பி வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

கொடி போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மை அஞ்சுமாறு வந்த மதகளிற்றை அது மயங்குமாறு விரைந்து பிடித்து அதனை உரித்து அம்மையின் அச்சத்தைப் போக்கியவரும், விரிந்த பொழிலிடையே அமைந்த அழகிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதியர்க்கு நல்லறங்களை உரைத்து, யோக நிலையில் ஞானமாத்திரராய் வீற்றிருக்க, திருமால் பிரமர் தம் கடுஞ்சொற்களால் நலிவுற்று மலர்க்கணை தொடுத்து யோக நிலையைக் கலைக்க வந்த கரும்பு வில்லையுடைய காமன் எரிந்து பொடிபடுமாறு விழித்தவரும் ஆகிய சிவபிரானார் விரும்பி வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

உமையவள் அஞ்ச, யானையை உரித்து அவள் அச்சத்தைப் போக்கியவரும், ஆலின்கீழ் நால்வருக்கு அறம் உரைத்திருந்தபோது வருத்தவந்த மன்மதனை எரித்தவரும் ஆகிய இறைவன் இந்நகரில் இருந்தார் என்கின்றது. வல்லி - கொடி. மறுகிட - மயங்க. ஒல்லை - விரைவாக. வெருவுதல் - அஞ்சுதல். திரு ஆல் - கல்லால விருட்சம். நலிந்திடலுற்று - வருந்தி. கருப்பு வில்லி - கரும்பை வில்லாக உடைய மன்மதன்.

பண் :

பாடல் எண் : 8

பாங்கிலாவரக்கன் கயிலையன்றெடுப்பப் பலதலைமுடியொடு தோளவைநெரிய
ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே யொளிதிகழ்வாளது கொடுத்தழகாய
கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங் கொன்றையுங்குலாவிய செஞ்சடைச்செல்வர்
வேங்கைபொன்மலரார் விரைதருகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்த வரும், அவன் பிழை உணர்ந்து வருந்திப்பாடிய அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவ ரும், அழகிய கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்த மலர், கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின் பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில் வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை :

இராவணனை அடக்கி அருள்செய்தவர் இவர் என் கின்றது. பாங்கிலா அரக்கன் - குணமில்லாத இராவணன்.

பண் :

பாடல் எண் : 9

ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண வரியொடுபிரமனு மளப்பதற்காகிச்
சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ் செலவறத்தவிர்ந்தனரெழிலுடைத்திகழ்வெண்
ணீறுடைக்கோல மேனியர்நெற்றிக் கண்ணினர்விண்ணவர் கைதொழுதேத்த
வேறெமையாள விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

கங்கை நதியைச் சடையிற் சூடிய எம் தலைவராகிய சிவபிரானாரின் அடிமுடிகளை அளந்து காணுதற்குத் திருமால் பிரமர்கள் சேற்று நிலத்தைப் பன்றியாய் அகழ்ந்து சென்றும், முடியினைக் காண அன்னமாய்ப் பறந்து சென்றும் தம் செயல் அழிந்தனர். அழகு விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேனியரும், நெற்றிக்கண்ணரும், விண்ணவர் கைகளால் தொழுது ஏத்த அவர்களை விடுத்து எம்மைச் சிறப்பாக ஆள விரும்பியவரும் ஆகிய அவ்விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

அயனும் மாலும், விண்ணிலும் மண்ணிலும் தேடச் சென்றும் காணாது போக்கொழிந்தனர்; அத்தகைய நீறுபூசிய மேனியையுடையவர் இவர் என்கின்றது. சேறு இடைபுக்கும், திகழ்வானத் திடைபுக்கும் எனப் பிரித்துக் கூட்டுக. எழில் - அழகு. விண்ணவர் கைதொழுதேத்த எமை வேறு ஆள விரும்பிய விகிர்தர் - தேவர்கள் வணங்க எம்மை வேறாக ஆட்கொள விரும்பிய இறைவன்; என்றது, தேவர்கள் தம் போகத்திற்கு இடையீடு வாராமைகுறித்து வணங்குவர்; ஆதலால் அவர்க்கு எளிதில் அருள் வழங்காது, எம்மைச் சிறப்பாக வைத்து ஆள்கின்றார் என்ற நயப்பொருள் தோன்ற நின்றது.

பண் :

பாடல் எண் : 10

பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர் பயிறருமறவுரை விட்டழகாக
ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க னெல்லையில்வேள்வியைத்தகர்த்தருள்செய்து
காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக் கண்டவர்வெருவுற விளித்துவெய்தாய
வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக்கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது, அழகிய இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்றவளாகிய தாட்சாயணியின்பொருட்டு வலிய தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து, காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.

குறிப்புரை :

புறச்சமயிகளுடைய பொருந்தா உரைக்கு அப்பாற் பட்டுத் தக்கன் யாகத்தைத் தகர்த்து, வேட்டுவ வடிவந் தாங்கிய விகிர்தர் இவர் என்கின்றது . பாடு - துன்பம். பயில்தரும் மற உரை - சொல்லுகின்ற கருணையற்ற வார்த்தைகள். விட்டு - அவ்வுரைகளுக்கு அப்பாற்பட்டு. ஏடு உடை மலராள் - தாட்சாயணியாகிய உமாதேவி. தகர்த்து - அழித்து. விளித்து - அழைத்து.

பண் :

பாடல் எண் : 11

விண்ணியல்விமானம் விரும்பியபெருமான் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணியநூலன் ஞானசம்பந்த னவின்றவிவ்வாய்மொழி நலமிகுபத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியுமாடியும் பயிலவல்லோர்கள்
விண்ணவர்விமானங் கொடுவரவேறி வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே.

பொழிப்புரை :

வானளாவிய விமானத்தை விரும்பி, வெங்குரு என்னும் சீகாழிப்பதியுள் வீற்றிருந்தருளும் பெருமானைப் பற்றி, அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றைத் தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இவ்வுண்மை மொழிகளாகிய நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும், பண்ணிசை யோடும் பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள், தேவர்கள் விமானம் கொண்டுவர அதன்மிசை ஏறி, அகன்ற அத்தேவருலகை அடைந்து அரசு புரிந்து, அதன்கண் வீற்றிருப்பர்.

குறிப்புரை :

வெங்குருமேவிய பெருமானைச் சொன்ன இந்த நலமிகு பத்துப் பாடல்களையும் பத்தியோடு பாடியும் ஆடியும் பயிலவல்லார், விண்ணவர்கள் விமானங்கொண்டுவர அதில் ஏறிச்சென்று விண்ணரசாய் வீற்றிருப்பார் என்கின்றது. விண்ணியல் விமானம் - ஆகாயத்தை அளாவிய விமானம். நண்ணிய நூலன் - தானாகவே அடைந்த வேதத்தை உடையவன். வாய் மொழி - உண்மை உரை. வியனுலகு - அகன்ற உலகம்.
சிற்பி