திருவீங்கோய்மலை


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

வானத்துயர்தண் மதிதோய்சடைமேன் மத்த மலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவி பாகமாக்
கானத்திரவி லெரிகொண்டாடுங் கடவு ளுலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

வானத்தில் உயர்ந்து விளங்கும் குளிர்ந்த சந்திரன் தோயும் சடைமுடிமேல் ஊமத்தம் மலர்களைச் சூடித் தேன்போன்ற இனிய மொழிகளையும் மான் விழிபோலும் கண்களையுமுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு சுடுகாட்டில் இரவில் எரி யேந்தி ஆடும் இறைவர் உலகமக்கள் உணர்ந்து போற்றுமாறு பன்றிகள் பலகூடி இறங்கிவரும் சாரலையுடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

பிறை, மத்தம் இவற்றைச்சூடி, தேவியைப் பாகமாகக் கொண்டு, நள்ளிரவில் நடமாடும் பெருமான் ஈங்கோய் மலையார் என்கின்றது. கான் - சுடுகாடு. ஏனத்திரள் - பன்றியின் கூட்டம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகா டிடமாகக்
கோலச்சடைக டாழக்கு ழல்யாழ் மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண வாடும் பரமனார்
ஏலத்தொடுநல் லிலவங்கமழும் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

முத்தலைச்சூலம் ஒன்றைத்தமது படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய சடைகள் தாழ்ந்து தொங்கவும், குழல் யாழ் மொந்தை ஆகிய இசைக்கருவிகள் முழங்கவும், பால் போன்று இனிய மொழியினை உடைய பார்வதிதேவி காண ஆடும் பரமர் ஏலம் நல்ல இலவங்கம் முதலியன கமழும் திருவீங்கோய்மலையின்கண் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

சுடுகாட்டில் குழலும் யாழும் முழவுங்கொட்ட, பாகம் பிரியாள் காண ஆடும் பெருமான் இவர் என்கின்றது. கோலச்சடை - அழகியசடை. குழல், யாழ், மொந்தையைக் கொட்ட என்றாலும், குழலை ஊத, யாழை வாசிக்க, மொந்தையைக் கொட்ட எனக் கருவிகளுக்கேற்பப் பொருள் கொள்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

கண்கொணுதலார் கறைகொண்மிடற்றார் கரியி னுரிதோலார்
விண்கொண்மதிசேர் சடையார்விடையார் கொடியார் வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனிற்பூசும் பெம்மா னெமையாள்வார்
எண்குமரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

கண் ஒன்றைக்கொண்ட நுதலினரும், விடக்கறை பொருந்திய கண்டத்தினரும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவரும், வானில் விளங்கும் மதியைச்சூடிய சடையினரும், விடைக் கொடியினரும், ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டுள்ளவரும் திருவெண்ணீற்றைத் திருமேனியின் மார்பகத்தே பூசுபவரும் ஆகிய எமை ஆள்பவராகிய பெருமான் கரடிகளும், சிங்கங்களும் திரியும் சாரலை உடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

இறைவருடைய உடையும் அணியும் பூச்சும் இவை என்கின்றது. நுதல் - நெற்றி. கறை - விடம். மிடறு - கழுத்து. எண்கு - கரடி. அரி - சிங்கம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

மறையின்னிசையார் நெறிமென்கூந்தன் மலையான் மகளோடும்
குறைவெண்பிறையும் புனலுந்நிலவுங் குளிர்புன் சடைதாழப்
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட் டெரியாடும்
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய சாரலை உடைய திருவீங்கோய்மலை இறைவர் வேதங்களை இனிய இசையோடு பாடுபவர். வளைவுகளோடு கூடிய மென்மையான கூந்தலையுடைய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு, கலைகள் குறைந்த வெண்மையான பிறையும் கங்கையும் விளங்கும் குளிர்ந்த மென்மையான சடைகள் தாழ, பறை குழல் இவற்றோடு காலிற்கட்டிய கழலும் ஆரவாரிக்கப் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டுள் எரியேந்தி ஆடுபவராவார்.

குறிப்புரை :

இடுகாட்டில் மலையான் மகளோடு ஆடும் இறைவன் இவர் என்கின்றது. நெறி மென் கூந்தல் - நெறித்துச் சுருண்ட மெல்லிய கூந்தல். குறை வெண் பிறை - சாபத்தால் குறைந்த வெண்மையான பிறைச்சந்திரன். படுகாடு - சுடுகாடு. சிறை வண்டு - சிறகோடு கூடிய வண்டுகள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர் கண்ணினார்
கந்தமலர்கள் பலவுந்நிலவு கமழ்புன் சடைதாழப்
பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட் டெரியாடும்
எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

நறுமணங்களைக் கொண்டுள்ள சாரலையுடைய திருவீங்கோய்மலை இறைவர், இறந்தார் உடலை எரிக்கும் சுடலையில் விளைந்த சாம்பற்பொடியைத் திருநீறாக அணிந்தவர். நெற்றியைச் சார்ந்துள்ள விழியையுடையவர். மணம் பொருந்திய மலர்கள் பலவும் விளங்கும் மணங்கமழ் செஞ்சடைகள் தாழ்ந்து தொங்கப்பந்து சேரும் கைவிரல்களையுடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கச் சுடுகாட்டில் எரியாடுபவர்.

குறிப்புரை :

இதுவும் அது. நொந்த - பதன் அழிந்த. பந்து அண் விரலாள் - பந்து அணுகும் மெல்லிய விரலை உடையாள். கடி கொள் சாரல் - தெய்வமணங்கமழும் சாரல்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

நீறாரகல முடையார்நிரையார் கொன்றை யரவோடும்
ஆறார்சடையா ரயில்வெங்கணையா லவுணர் புரமூன்றும்
சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்க ணடல்வெள்ளை
ஏறார்கொடியா ருமையாளோடும் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள இறைவர் திருநீறு அணிந்த மார்பினையுடையவர். சரஞ்சரமாக வரிசையாய் மலரும் கொன்றை மாலைபாம்பு கங்கை ஆகியவற்றை அணிந்த சடைமுடியை உடையவர். கூரிய கொடியகணையால் அசுரர்களின் முப்புரங்களையும் சினந்து எரித்த தேவர்தலைவர். சிவந்த கண்களையும் வலிமையையும் உடைய வெண்மையான விடையேற்றுக் கொடியினை உடையவர்.

குறிப்புரை :

கொன்றை, அரவு, கங்கை இவற்றைச் சடையில் உடையவரும், திரிபுரங்களை எரித்தவரும் ஈங்கோய்மலையார் என்கின்றது. அகலம் - மார்பு. அயில் - கூர்மை. அடல் - வலிமை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன் விரிகொன்றை
நனையார்முடிமேன் மதியஞ்சூடு நம்பான் நலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோ டனலேந்தும்
எனையாளுடையா னுமையாளோடும் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளிவிளங்கும் இறைவர். வினைகளானவற்றைத் தீர்த்து அருளையே வழங்கும் விகிர்தர். விரிந்து தழைத்த கொன்றை அரும்புகள் சூடிய முடிமீது பிறைமதியையும் சூடும் நம்பர். அழகு நிறைந்ததும் தலைமை உடையதுமான தாமரை மலர்மேல் உறையும் பிரமனின் தலையோட்டுடன் அனலையும் ஏந்தி என்னை அடிமையாகக் கொண்டருளுபவர்.

குறிப்புரை :

வினைதீர்க்கும் விகிர்தனாய் என்னை ஆளுடைய பிரான் இவர் என்கின்றது. நனை - அரும்பு. தனையார் கமலம் - தலைமை பொருந்திய தாமரை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

பரக்கும்பெருமை யிலங்கையென்னும் பதியிற் பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளு மணியார் விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்று நின்றேத்த
இரக்கம்புரிந்தா ருமையாளோடும் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள ஈங்கோய்மலை இறைவர், எங்கும் பரவிய பெருமையை உடைய இலங்கை என்னும் நகரில் புகழோடு விளங்கிய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணன் தலைகளையும் தோள்களையும் தமது அழகு பொருந்திய கால்விரலால் நெருக்கி அடர்த்து, பின் அவன் `நிமலா போற்றி` என்று ஏத்த இரக்கம் காட்டி அருள்புரிந்தவராவார்.

குறிப்புரை :

இராவணனை விரலால் அடர்க்க, அவன் நிமலா போற்றி என வணக்கம் செய்ய, இரக்கங்காட்டிய பெருமான் இவர் என்கின்றது. பரக்கும் - பரந்த. அணி - காலாழி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

வரியார்புலியி னுரிதோலுடையான் மலையான் மகளோடும்
பிரியாதுடனா யாடல்பேணும் பெம்மான் றிருமேனி
அரியோடயனு மறியாவண்ண மளவில் பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த வெங்கள்பெருமான் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

ஈங்கோய்மலை இறைவர் வரிகளோடு கூடிய புலித் தோலை உடையாகக் கட்டியவர். மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு பிரியாது அவளுடனாக இருந்து ஆடுதலை விரும்பும் தலைமை சான்றவர். தம்திருமேனியின் அடிமுடிகளைத் திருமாலும் நான்முகனும் அறியாதபடி அளவற்ற பெருமை உடையவராய் எரிஉருவத்தோடு ஓங்கிநின்ற எங்கள் பெருமான் ஆவார்.

குறிப்புரை :

உமையொருபாதியனாய், அயனும் மாலும் அறியாமல் எரியாய் நிமிர்ந்த பெருமான் இவர் என்கின்றது. வரி - கோடு. எரியாய் - அக்கினிவடிவான அண்ணா மலையாய்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்கு சமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியு மதியில் தேரரும்
உண்டிவயிறா ருரைகள்கொள்ளா துமையோ டுடனாகி
இண்டைச்சடையா னிமையோர்பெருமான் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

அருகதேவன் வீற்றிருக்கும் அசோகமரம் என அம் மரத்தின் பெருமை கூறிப்பெயர்ந்து செல்லும் மாறுபட்ட சமயநெறியில் நிற்கும் சமணர்களும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையில் ஏந்தித்திரியும் அறிவற்ற புத்தரும் உண்டு பருத்த வயிற்றினராய்க் கூறும் உரைகளைக் கொள்ளாது, உமையம்மையாரோடு உடனாய், இண்டை சூடிய சடைமுடியினனாய், இமையோர் தலைவனாய், ஈங்கோய் மலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச் சென்று வழிபடுவீராக.

குறிப்புரை :

சமணரும் புத்தருமாகிய இவர்களின் உரையைக் கொள்ளாத இமையோர் பெருமான் இவர் என்கின்றது. பிண்டி - அசோகந்தளிர். ஏன்று - தாங்கி. மண்டை - பிச்சை ஏற்கும் பாத்திரம். தேரர் - புத்தர். உண்டி வயிறார் - உண்டு பருத்த வயிற்றையுடையவர்கள். இண்டை - திருமுடியிற் சூடப்படும் வட்டமாகக் கட்டப்பெற்ற மாலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

விழவாரொலியு முழவுமோவா வேணு புரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சே ரணிகொள் சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலை களைவாரே.

பொழிப்புரை :

திருவிழாக்களின் ஓசையும் முழவின் ஓசையும் நீங்காத வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியில் அழல் வண்ணனாகிய சிவபிரானின் அருள்சேரப் பெற்ற அழகிய ஞானசம்பந்தன் எழிலார்ந்த சுனையும் பொழிலும் புடைசூழ்ந்து விளங்கும் திருவீங்கோய்மலை ஈசனின் திருவடிகளைப் பரவிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

சம்பந்தன் சொன்ன ஈங்கோய்மலைப் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவார் என்கின்றது. வேணுபுரம் என்பது சீகாழிக்கு மறுபெயர். எழில் - அழகு.
சிற்பி