ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
பண் :
பாடல் எண் : 1
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.
பொழிப்புரை :
சிவனது சத்தி `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் நிறைந்திருத்தலால், `சத்தியே அவனது திருமேனி` என்பது பற்றி எங்கும் அவனது திருமேனி உள்ளதாம். `சத்தியே அவனது இருப்பிடமாகிய பர வெளி, அல்லது சிதாகாசம்` என்பது பற்றி, எங்கும் அவன் இருக்கும் சிதாகாரம் உள்ளதாம்; `அவனது சத்தி, அல்லது திருவருளே அவனது செயல்கள்` என்பது பற்றி, அவனது திருக்கூத்து எங்கும் நிகழ்வதாம். இவ்வாற்றால் எங்கும் எல்லாம் சிவமயமாய் இருத்தலால், எங்கு நிகழும் எந்தச் செயலும் அவனது திருவருள் திருவிளையாட்டேயாம்.
குறிப்புரை :
`எங்கும் சிவ சத்தி ஆதலால் எங்கும் திருமேனி ... ... ... இருத்தலால், சிவனது அருள் விளையாட்டே எங்கெங்கும் தங்கும்` என இயைத்து முடிக்க. `அது` பகுதிப் பொருள் விகுதி.
இதனால், `எங்கும் நிகழும் எல்லாச் செயல்களும் அவனது திருவிளையாட்டாம் ஆதலின் அவ்விளையாட்டாகிய அவனது திருக்கூத்துக்கள் தாம் பலவாம்` என அவை தொகுத்துக் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 2
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனை
சொற்பத மாய்அந்தச் சுந்தரக் கூத்தனை
பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.
பொழிப்புரை :
அறிவே வடிவாதல் பற்றி, பரஞ்சோதியாய் மேலான ஒளியாய் - விளங்குகின்ற சிவனது அருள் விளையாட்டாக முன் மந்திரத்தில் கூறப்பட்ட அத்திருக்கூத்துத் தான் பலவாயினும் அவை, `சிவானந்தத்க் கூதது, சுந்தரக் கூத்து பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து` என ஓராற்றால் ஐந்து வகையாகின்றன. அவற்றின் மேலும் பலவாகின்ற கூத்தினை இயற்றுகின்ற அவனது ஆற்றலை யாரே அளவிட்டறிவார்!
குறிப்புரை :
இவைகளை ஒரோ ஒன்றாக நாயனார் பின்வரும் அதிகாரங்களில் விளங்கக் கூறுவார்.
இதனால் திருக்கூத்து வகைகள் தொகுத்துப் பெயரளவில் கட்டப்பட்டன.
பண் :
பாடல் எண் : 1
தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.
பொழிப்புரை :
மேற்கூறிய ஐவகைக் கூத்துக்களுள் சிவானந்தக் கூத்தாவது, என்றும் அழிதல் இல்லாமையால் சத்தாய், அதனோடே சித்தாய், ஆனந்தமாய் உள்ள சத்தியிடமாக நின்று ஆனந்தத்தை முடிவின்றிப் பொழியும் கூத்தாகும் ஆகவே, ஆன்ம அறிவைக் கடந்து அந்தக் கூத்தினை இயற்றும் சிவனுக்கு அவ்விடத்தில் அந்த நடனத்தைச் செய்தற்கு அரங்காய் நிற்பது மேற்கூறிய அந்தச் சத்தியே.
குறிப்புரை :
`பரா சத்தி` என்பது உணர்த்துதற்கு, `சத்தாயும், ஆனந்தமாயும் உள்ளது` என்றார். அதனானே சித்தாதலும் தழுவப்பட்டது. `சத்தாவது உள்ளது` என்று மட்டும் கூறுவாரை மறுத்துச் சித்தாந்தம் கூறுதற்பொருட்டு, தோற்றக் கேடுகள் இன்றி உள்ளது` என்பார். ``தான் அந்தம் இல்லாச் சத்தி`` என்றார். அந்தம் இன்மை கூறவே, ஆதியின்மையும் பெறப்பட்டது. `ஆன்ம அறிவைக் கடந்து தன்னியல்பில் நிற்கும் சத்தியே பராசத்தி` என்றற்கு ``ஞானம் கடந்து`` என்றார். `அவ்வானத்தக் கூத்து` எனச்சுட்டு வருவிக்க. ``ஆடரங்கு`` என்பதில் ஆடுதல் வாளா பெயராகி நின்றது. `ஆனது அந்தச் சத்தியே` எனப்பயனிலை வருவித்து முடிக்க.
``ஆனந்த மாநடம்`` என்பதை முதலிற் கூட்டுக. கண்டீர், முன்னிலையசை. `சத்திமேல் நிகழ்ந்து` என ஒருசொல் வருவிக்க. ``உந்தும்`` என்பது கூறப்பட்டது.
எனவே, இது பரமுத்தியை அடைந்த ஆன்மாக்கட்கு அந்நிலையில் பராசத்தி வழியாகப் பேரானந்தத்தை இடையறாது தந்து கொண்டிருக்கும் கூத்தாதல் விளங்கும்.
``மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும் - ஆனந்தம்
மொண்டருந்தி நின்றாடல் காணும், அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து``
``பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரைஉணர்வுக் கெட்டா ஒருவன் - வரைமகள்தான்
காணும் படியே கருணைஉருக் கொண்டாடல்
பேணுவர்க் குண்டோ பிறப்பு``
என்பவற்றால் அறிக.
பண் :
பாடல் எண் : 2
ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.
பொழிப்புரை :
`ஆனந்தம்` என்னும் சொல் வழியாக உணரப் படுகின்ற அந்தப் பொருள், ஆருயிர்களுக்கு அனுபவப் பொருளாதற் பொருட்டு ஆனந்தக் கூத்தை விரும்பிச் செய்யும் சிவனுக்கு அந்நிலையில், `மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி` என்பதுபோல, உடன் நிகழும் அரங்கமும் ஆனந்தமாய்; பாட்டுக்களும் ஆனந்தமாய்; பலவகை வாத்தியங்களும் ஆனந்தமயம்; இயங்கு திணை றிலைத் திணைகளாகிய அனைத்துப் பொருள்களும் ஆனந்தமயம்.
குறிப்புரை :
வாச்சியம் - சொற்பொருள். `ஆனந்த வாச்சியம் ஆனந்தமாக, ஆனந்தக் கூத்து உகந்தானுக்கு என்பவற்றை முதலில் கூட்டியுரைக்க. ``ஆனந்தம் ஆக`` என்றது, `உண்மையில் ஆனந்த மாகும்படி` என்றதாம். உண்மையாவது, அனுபவம் அகத்தல், தன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. ஆனந்தத்தை விளைப்ப வற்றையும், பெறுபவற்றையும் ஆகுபெயரால் ``ஆனந்தம்`` என்றார். ``சராசரம்`` என்றது அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. ``சராசரம்`` என்ற அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. `எஞ்ஞான்றும் எல்லாப் பொருள்களும் முதல்வன் வழியாவனவற்றி வேறாவன அல்ல` என்பதாம். `பூவோடு சேர்ந்த நாரும் மணங் கமழும்` என்பது போல, `ஆனந்தக் கூத்தோடு இயைந்த அனைத்தும் ஆனந்தமாம்` என்பது கருத்து. பராகாசத்துள் நிகழும் ஆனந்தக் கூத்தின் இயல்பு இது வாகலின், அதுதானே இவ்வுலகில் நிகழுமிடத்தும் இவ்வியல்பினதேயாம்.
``உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர
அருளினை எனப்போற்றி``
என்ற ஆளுடைய பிள்ளையாரது அனுபவ நிலையை இங்கு நினைவு கூர்க.
இதனால், சிவானந்தக் கூத்தினால் எல்லாப் பொருளும் ஆனந்தமாய் விளங்குதற் பயன் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 3
ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.
பொழிப்புரை :
`உள்ளது` என வழங்கபப்டும் சத்தாதல் தன்மையும், `ஒளி` என வழங்கப்படும் சித்தாதல் தன்மையும், சமய நிலையில் `சிவகாமி` என வைத்து வணங்கப்படும் அருள் வடிவான ஆனந்த மாதல் தன்மையும் ஆகிய இம்மூன்று தன்மைகளையும் உயிர்கள் பெறுதல், சிவன் செய்யும் ஆனந்த நடனத்தை உள்ளத்தில் தெளிவாகக் கண்டு தியானிக்கும் தியானத்தினாலாம்.
குறிப்புரை :
``பரம்`` மூன்றும் பரமாதல் தன்மை மேல் நின்றன. பரமாதல் தன்மையை உபநிடதங்கள், `சத்து சித்து, ஆனந்தம்` என மூன்றாகக் கூறும் வழக்குப்பற்றி அவற்றையே எடுத்துக் கூறினார். செய்யுள் நோக்கிச் சித்து முதற்கண் கூறப்பட்டது. `சிவகாமி` என்பது பொதுவாக, `சிவனை விரும்புவள், விரும்பச் செய்பவள்` எனப் பொருள் தரினும் உண்மையில் `காமம்` என்பது இன்பத்தைக் குறிப்பதாக `சிவகாம வல்லி` என்பதை, தன் ஆனந்தக் கொடி`l எனக் கூறுமாற்றால் அறிக. தெளிவு, இங்கு, தியானம். ``தெளிவாம் நட்டத்தின்`` என்றது, `நட்டமாம் தெளிவானதின் சத்தி` எனப் பொருள் தந்து நின்றது.
இதனால் சிவானந்தக் கூத்துப் பரமுத்தி ஆனந்தத்தைத் தருதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.
பொழிப்புரை :
அருவம், உருவம் அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளை உயிர்களின் பொருட்டுக் கொள்கின்ற சிவன் படைத்தல் முதலிய ஐந்தொழிக்கு ஏற்ப ஐந்து வகை வடிவங்களையும், அவற்றிற் குரிய பெயர்களையும் கொண்டு செய்தலை நாடகமாக உடையவன். ஆகையால் அவன் செய்யும் தொழில்கள் யாவும் அருள் காரணமாகச் செய்வனவே அந்நிலையில் அத்தொழிலை அவள் ஐந்தாக வகுத்து அம்மையோடு உடனாய் நின்று திருக் கூத்தாடுகின்றான். அக்கூத்தும் ஐந்தாகும்.
குறிப்புரை :
அகளம் - உருவம். சகளம் - உருவம். இற்றைக் கூறவே, இனம் பற்றி அருவுருவமும் கொள்ளப்பட்டது. ``ஆடி`` என்பது பெயர். ``நடம் ஐந்து`` என்றது, பொன், வெள்ளி, செம்பு, இரத்தினம், பல்வகைக் கூட்டு, என்பவற்றாலாகிய மன்றங்களில் செய்யும் நடனத்தை எனவே, மன்றம் ஐந்தாதல் பற்றி நடனம் `ஐந்து` எனப்பட்டதாம். பொன் மன்றம் முதலியன முறையே `தில்லை` கூடல்` திருநெல்வேலி, திருவாலங்காடு, திருக்குற்றாலம்` என்னும் தலங்களில் உள்ளவை. ஆகம் - திருமேனி ஐந்தொழிலுக்கு ஏற்ற ஐந்து திருமேனிகளாவன யன், மால், அரன், மகேசுரன் சதாசிவன் ஆகிய திருமேனியின் அயன் முதலிய மூவரையும் இங்கு, `சம்பு பக்கத்தினர்` என்க. ஆன தொழில், தான்என்று கொண்டு தொழில், அருளால் ஆவன` என ஒருசொல் வருவிக்க.
``அகள சகளத்தன் ஐங்கருமத்து ஆகம் ஆன நடம் ஆடி`` எனத் தொடங்கி, `பாகனாய்` என ஆக்கம் வருவித்து, `ஆன நடம் ஐந்து` என முடிக்க. ``ஐந்தொழில் செய்து`` என்பதைத் `தொழில் ஐந்து செய்து` என மாற்றிக் கொள்க.
இதனால் முடிநிலைக் கூத்தாகிய ஆனந்தக் கூத்திற்குமுன் அதற்கு ஏதுவான வேறு கூத்தக்களையும் சிவன் செய்தருளுகின்றான் என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 5
பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து)
ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.
பொழிப்புரை :
`நிலையற்ற இன்பத்தில் மோகத்தை உண்டாக்குவ தாகிய சுவர்க்கம், மக்கள் விலங்கு முதலிய வேறுபட்ட பல உடம்புகளையுடையதாகிய பூமி, துன்பத்தையே தருவதாகிய நரகம்` என்றும் மூவகை உலகங்களில் உயிர்களைச் செலுத்தி ஐந்தொழில் செய்து அவைகளை ஆட்கொள்கின்ற, மேலான பரம்பொருளும் அனைத்துப் பொருட்கட்கும் இடமாதல் பற்றி, `பிரமம்` எனக் குறிக்கப்படுவதும் ஆகிய அந்த ஒரு பொருளில் அடங்கியுள்ள அண்டங்களோ பல கோடி என்றாலும் அவை ஐந்து தொகுப்புக்களில் அடங்குகின்றன. அவை, `பூதாண்டம், பேதாண்டம், போகாண்டம் இவை அனைத்திலும் பழைதான முத்தாண்டம்` என்பன.
குறிப்புரை :
இவை முறையே, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் அடங்கியுள்ளனவாம். ``மோகாண்டம்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ``மோகாண்டம்`` என்பது முதலிய மூன்றிலும் ``அண்டம்`` என்றது உலகத்தை உலகத்தை. ``தாகாண்டத்து`` என்பதில் அத்துத் தொகுத்த லாயிற்று. `ஐங்கருமத்தால்` என உருபு விரிக்க. ஆண்டதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. `ஏக அந்தமாம் பிரமமாகிய அண்டத்தன பூதாண்டம் ... ... ... முத்தாண்டம்` என முடிக்க. `பிரமத்தை அண்டம்` என்றது இடமாதல் பற்றி.
``பூதாண்டம்`` என்பதில் ``பூதம்`` என்றது யாவரும் நன்கறிந்த பிருதிவியை. ``பேதம்`` என்றது அதற்குமேல் அப்பு முதல் பிருகிருதி முடிய உள்ளவற்றை. ``போகம்`` என்பது போக்தா. (நுகர்வோன் மேலதாய்ப் புருட தத்துவத்தையும் அதற்குக் காரணமான மற்றை வித்தியா தத்துவங்களையும் குறித்தது.) யோகாண்டம், தவத்தோர் அடையக் கூடிய வித்தியேசுர புவனங்கள். அவை `சுத்த வித்தை ஈசுரம், சாதாக்கியம்` என்னும் தத்துவங்களில் உள்ளன. முத்தாண்டம், அபர முத்தித் தானங்களாகிய சிவதத்துவ, சித்தி தத்துவ புவனங்களை தோற்ற முறையில் இவை முற்பட்டனவாதல் பற்றி ``மூதாண்டம்`` எனப்பட்டன. ``மூதாண்டம்`` என்பது, ஏனைய வற்றோடு இயைந்து இன்னோசை தர வேண்டி, ``மூதாண்டம்`` என நீட்டல் பெற்றது. ``மோகாண்ட தேகாண்ட தாகாண்டம்``, உம்மைத் தொகை தற்பரத்து - தற்பரமாம் தன்மையையுடைய. அத்தன்மை யாவது உயிர்கள் அனைத்திற்கும் மேலானதாதல்.
`இவ் ஐங்கலைகளிலும் சிவனது ஆனந்தக் கூத்து நிகழ்கின்றது` என்பது கருத்து. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.
இதனால் ஆனந்தக் கூத்தின் வியாபகம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 6
வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவனம் முழுதாட
நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.
பொழிப்புரை :
(``அவனன்றி ஓரணுவும் அசையாது`` என்னும் பழமொழி. `அவன் அசையவில்லையாயின் எதுவும் அசையாது` என்பதையும் தெரிவிப்பதுடன் `அவன் அசைந்தால் அனைத்தும் அசையும்` என்பதையும் தெரிவிக்கின்றது. ஆகவே, `அனைத்தும் அசைய வேண்டி அவர் அசைகின்றான்` என்பது விளங்குகின்றது. அசைதல், அது அது தன் தன் இயல்பிற்கு ஏற்பச் செயற்படுதல், `அவனது திருக்கூதினாலே அனைத்தும் செயற்படுகின்றன` என்பதையே இம்மந்திரம் உணர்த்துகின்றது.)
இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :
`சொல்லும், பொருளும்` என அனைத்தப் பொருளும் இருவகைப்படும். சொல் `வழக்குச் சொல், செய்யுட் சொல்` என இருவகைத்து. செய்யுட்களும் முதல் நூல்களே தலையாயவை. ஆகவே அவற்றை வேதங்கள் ஆட, மிகும் ஆகமம் ஆட`` என எடுத்தோதவே, ஏனைய சொல்வகைகள் ஆடுதல் தானே அமைந்தது. சொற்கள் அசைதலாவது வழக்கிலும், செய்யுளிலும் நின்று பொருளுணர்த்தி வருதல். செய்யுட்கண் தம்மியல்பில் நிற்குங்கால் இயற்செய்யுளாயே நிற்கும். இசையோடு பொருந்தினால் இசைச் செய்யுளாய் முன்னையினும் இனிமையைத் தரும். அதனால், ``கீதங்கள் ஆட`` என அவற்றை வேறெடுத்தோதினார். அண்டம் - உலகம். உலகங்களை `ஏழ்` என்றல் வழக்கு. ``பூதங்கள்`` என்றது உபலக்கணத்தால் தத்துவம் அனைத்தையும் தழுவி நின்றது. புவனங்கள், உலகங்களை ஆட்சி புரியும் அதிகார தேவர்களுக்கு உரிய இடங்கள், `அவை இருநூற்று இருபத்து நான்கு என்பது சைவ சித்தாந்தம். நாதன் ஞானானந்தக் கூத்தினைக் கொண்டு ஆடினான்` என இயைக்க. கொள்ளல், மேற்கொள்ளல், ஞானத்தைக் கூறவே, அதனோடு உடன் நிற்பதாய உண்மையையும் கொள்ளப்படும். உண்மை அறிவு இன்பக்கூத்தே ஆனந்தக் கூத்து ஆதல் விளங்கும்.
இதனால் சிவனது உண்மையறிவின்பக் கூத்தே அனைத்துப் பொருள்களும் நிலைத்துத் தத்தம் இயல்பிற்கேற்பச் செயற்பட்டு பயன் விளைக்கச் செய்வது` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.
பொழிப்புரை :
(முன் மந்திரத்தில், `அளைத்துப் பொருள்களின் இயக்கங்கட்கும் காரணமாய் நிகழ்வது சிவன் கூத்து` என்பது கூறப் பட்டது. இம்மந்திரத்தில், அவை இயங்குங்கால், அக்கூத்து அவற்றோடு உடனாயும் இயங்கி திகழ்கின்றது` என்பது கூறப் படுகின்றது. இவையே இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வேற்றுமை. எனவே மேற்கூறிய மந்திரத்தின் பொருளே இம்மந்திரத்திற்கும் ஆகின்றது.)
இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :
பாரதத்தை அதன் சிறப்புப் பற்றி, `ஐந்தாம் வேதம்` என்றல்போல வேதத்தின் பொருளை உபவிருங்கணம் செய்யும் புராண இதிகாசங்களை உபசாரத்தால் `வேதம்` என வைத்து, ``வேதங்கள் ஐந்து`` என்றார். துணை நூல்களாய் நின்று முதல் நூலின் பொருளை விரித்து விளக்குதல் ஓதும் - நூல்களில் சொல்லப்படுகின்ற கலை, காலம் இவை வித்தியா தத்துவங்களில் தலையாயவை. ஊழி, உலகத்தின் நிலைப்புக் காலம். `அண்டம் ஐந்தில் போதம்` என மாற்றியுரைக்க. அண்டம் ஐந்து, நிவிர்த்தி முதலிய கலைகளில் உள்ள அண்டத்தின் வகை ஐந்து, போதம் - அறிவு. இஃது உயிர்களின் அறிவு, என்றது அதன் நிகழ்ச்சியை. புணர்தல் - உடனாய் நிற்றல்.
பண் :
பாடல் எண் : 8
தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சாத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே.
பொழிப்புரை :
முன் இரு மந்திரங்களில் அஃறிணையாக வைத்துக் கூறிய பொருளை இம்மந்திரம் உயர்திணையாக வைத்துக் கூறுகின்றது.
இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :
`ஆதியின் மூவர்கள்` என மாற்றிக் கொள்க. ஆதி உலகத் தோற்றக் காலம். சாத்தர் - சாத்தியர். `சாத்தியர்` என்னும் ஒருசாராரும் தேவர் கூட்டத்துள் சொல்லப்படுகின்றனர்.
சிவனது திருக்கூத்து உலகத்தின் செயற்பாடு எல்லாவற்றிற்கும் காரணம் ஆதல் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 1
அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.
பொழிப்புரை :
பிரகிருதி உலகங்களுக்கு அப்பால் உள்ளவை அசுத்த மாயா உலகங்கள். அவற்றிற்கு அப்பால் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் தத்துவ புவனங்கட்கு அப்பால் உள்ளவை சத்தி தத்துவ புவனமும், சிவ தத்துவ புவனமும், அவைகளில் முறையே `சத்தி` என்றும், `சிவன்` என்றும் இருதிறப்பட்டு நின்று ஐந்தொழில் புரிகின்ற சிவன், அத்தொழிலின் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு சத்தி காணத்தான் ஆடலை விரும்பி ஆடுகின்றான்.
குறிப்புரை :
எனவே, அங்ஙனம் ஆடுகின்ற கூத்தே சுந்தரக் கூத்தாம்` என்பது போந்தது. சுந்தரம் - அழகு. எனவே, அது வடிவைக் குறிக் -கின்றது. வடிவுதான் `அருவம், அருவுருவம், உருவம் என மூவகைப் படுதல் பலவிடத்தும் சொல்லப்பட்டது. அவற்றுள் உருவத்திருமேனி கொண்டு செய்யும் கூத்தையே நாம் கூத்தாகக் காணினும், அதனோடு ஒப்ப ஐந்தொழில் இயற்றும் மற்றைத் திருமேனிகளின் செயலும் சுந்தரக் கூத்து` என்றே இங்குக் கூறப்படுகின்றன. `சூக்கும நடனம், அதிசூக்கும நடனம்` எனச் சாத்திரங்களில் கூறப்படுவனவற்றை இங்கு நினைவு கூர்க. இதனால் மேல் தொகுத்துக் கூறிய கூத்து ஐந்தனுள் முதலாவதாகிய சிவானந்தக் கூத்து ஒன்றும் சொரூப நிலைக் கூத்தம், ஏனைய நான்கும் தடத்தநிலைக் கூத்தும் ஆதல் அறிக.
``அண்டங்கள் ஏழ்`` என்றது, பிரகிருதி அண்டங்களை யாதலின், பின்னர்க் கூறப்பட்டவை அசுத்த மாயை, சுத்தமாயா அண்டங்களாதல் விளங்கிற்று. சிவன் இன்றிச் சத்தியில்லையாதலின், சத்தியைக் கூறவே, சிவன் தானே பெறப்பட்டான். `சத்தி, சிவன்` என்பன அவரையும், அவர்க்கு இடமாய தத்துவங்களையும் குறித்து நின்றன. `உச்சிமேல் உள்ளது` என ஒருசொல் வருவித்து முடிக்க. ``கண்டம் கரியான்`` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது. சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தலாம். உகத்தல் தன் காரியம் தோற்றி நின்றது.
இதனால், `சுந்தரக் கூத்தாவது ஐந்தொழில் பற்றிய கூத்து` என்பது கூறப்பட்டது.
(பதிப்புக்களில் இதனை அடுத்துள்ள ``கொடுகொட்டி பாண்டரம்`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்குரியது.)
பண் :
பாடல் எண் : 2
பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன்
பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம்
பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.
பொழிப்புரை :
எல்லாவற்றையும் வியாபித்து நிற்றலால் சுத்த மாயை யின் வியாபகம் பரமாண்டம் ஆகும். அதற்குள்ளே உள்ள அனைத்து இடங்களிலும் பராசத்தியின் கூறாகிய ஆதி சத்தி பரவியுள்ளது. ஆகவே அந்தச் சத்தயைத் தனது விரிந்த ஒளியாகக் கொண்ட தடத்த சிவன், அவ்விடங்களில் எல்லாம் உளன். அவையேயன்றிச் சுத்தமாயையின் காரியமாகிய வாக்குக்களும் `அதிசூக்குமம், சூக்குமம், தூலம்` என்னும் வகையில் அந்த எல்லா இடங்களிலும் உள்ளன. ஆகவே, அந்த எல்லா இடங்களிலும் சிவன் தனது சுந்தரக் கூத்தினைச் செய்கின்றான்.
குறிப்புரை :
முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் உள்ளது, உளன், உள்ளன` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன. மூன்றாம் அடியின் ஈற்றில், `ஆகலான்` என்பதும் உடன் எஞ்சி நின்றது. நாதம் இல்லையேல் பொருள் விளங்காமை பற்றி அதன் இருப்பையும் உடன் கூறினார். நடம், அதிகாரத்தால் இங்கு நடைபெறுமாறு கூறப்பட்டடது.
பண் :
பாடல் எண் : 3
`அங்குசம்` என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.
பொழிப்புரை :
(`அம்சம்` என்பதை இடையே குகரச் சாரியைக் கூட்டி, `அங்குசம்` என ஒரு கருவியின் பெயர்போல ஆக்கி மறை பொருட் கூற்றாக வழங்குதல் சித்தர் மரபு. எனவே,) அங்குசம் என்ன எழும் மார்க்கம்` என்பது, `அம்சம்` என எழுகின்ற வழி என்பதாம். இம்மந்திரம் இரேசக பூரகமாய் நிகழும் வாயு இயக்கத்தால் இயல்பாக நிகழ்தலின் `அசபா மந்திரம்` எனப்படும். அம்மந்திரவழி இயங்கும் உயிர்ப்பினாலே அறிவு நிகழ்தலி அவ்வாற்றால் அறிவை விளக்கு கின்ற இறைவனது செயல் `அசபா நடனம்` எனப்படுகின்றது. அந்த நடனத்திற்கு, `அம், சம்` என்பனவே, `தொம், தி` என ஒலிக்கின்ற தாளங்களாம். அந்தத் தாள ஒற்றுக்கு இயையச் சிவன் சுழுமுனை நாடிக்குள் நின்று சுந்தரக் கூத்து ஆடுதலை அறிவு விளங்கிய காலத்தில் தொடங்குகின்றான். ஆயினும் அக்கூத்தினை அவன் முடித்துவிட்டு அப்பாற்போதல் இல்லை.
குறிப்புரை :
போதம் - அறிவு. மூல நாடி, சுழுமுனை நாடி. தரித்தல் - தங்குதல். அறிவு விளங்குதல், குரு உபதேசத்தால் அசபா நடனத்தை அறியப் பெறுதல்`. ``புகுதல்`` எனப் புதிதுபோலக் கூறியது, அறிவுக்குப் புலனாகும் காலம் பற்றி. விளங்கிய அறிவு பின் விளக்கம் அற்று மறவாமை பற்றி, ``போதல் இல்லை`` என்றார். அசபா நடனத்தால் இங்ஙனம் அறிவு விளங்கச் செயதல் ஐந்தொழில் நடனத்தில் `அதிசூக்கும நடனம்` எனப்படும். எனவே, இதுவும் சுந்தரக் கூத்தின் வகையாயிற்று.
இதனால், சுந்தரக் கூத்த வகைகளுள் ஒன்றன் இயல்பு கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி
மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.
பொழிப்புரை :
எனக்குத் தலைவனாகிய சிவபெருமான் முதலில் சுந்தரக் கூத்திற்கு ஆயத்தங்களைச் செய்தும், பின் அதனை, `அருவம் நான்கு அருஉருவம் ஒன்று, உருவம் நான்கு` என்னும் முறையில் திருமேனி கொண்டு மும்மாயைகளின் மேலும் நிகழ்த்திப்பின் முற் றொடுக்கத்தைச் செய்தும், அக்காலங்களில் உயிர்களின் அறிவின்கண் நின்று அதனை விளக்கியும், தோற்றம் நிலை, இறுதி மூன்றனுள் இடையதாகிய நிலைப்புக் காலத்தில் முன் மந்திர்ததில் கூறியவாறு சுழுமுனை நாடியில் நின்று உயிர்ப்பு வழியாகப் புலன் உணர்வைத் தந்து; இறுதியாக, என்றும் அழிதல் இல்லாத பெருநிலவுமாகிய முத்தி நிலத்தில் பேரானந்தத்தைத் தரும் நடனத்தைச் செய்தும் நிற்பதாக அக்கூத்தினை இங்ஙனம் வரையறை செய்துகொண்டான்.
குறிப்புரை :
ஆளத்தியாவது, பண் அமைதற்கு ஏழிசை முறையால் அதனை ஏற்றிழிவு வகைகளில் முன்னர் அமைத்துக் காண்பது. அஃது இங்குச் சுந்தரக் கூத்தினை இயற்றுவதற்கு ஆவனவற்றைச் செய்தலைக் குறித்தது. காலம் - ஊழி; பேரூழி; முற்றழிப்புக் காலம். ``கருத்து`` என்றது அறிவை, ``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் ஆறும் எண்ணுப் பொருளவாய் முறையே `ஆயத்தம், தூலம், சூக்குமம், கேவலம், சகலம், சுத்தம்` என்னும் அறுவகைக் கூத்தினையும் குறித்தன. சிவன் ஆயத்த நிலையில் பரநாத பரவிந்துக்களாயும், தூல நிலையில் அபநாத அபவிந்து சதாசிவன் முதலிய ஐவராயும் நிற்பன் `நவந்தரூ பேதம்` என்னும் மரபில் மலைபு வாராமைப் பொருட்டு. ``நவக்கூத்தாடி`` என ஒன்பது பேதம் கூறினாராயினும், அவற்றுள் முதலில் உள்ள பரநாத பரவிந்துக்கள் ஒழிந்த ஏழனையே அங்குக் கொள்க. இனி `நவக் கூத்தாடி` என்றே போயினால், ஆயத்த நிலை தோன்றாமை பற்றி அதனை வேறு வைத்தும் முற்றழிப்புத் தனிச் சிறப்புடைமையின் அதனைப் பின்னரும் எடுத்தோதியும் வலியுறுத்தினார். சுத்த நிலைக் கூத்து முன் அதிகாரத்திற்குரிய ஆனந்தக் கூத்தேயாயினும் அதுவும் கூத்தினுள் ஒன்றாதல் தோன்றுதற் பொருட்டு, ``முடிவிலா ஞானத்துள் ஆடி`` எனத் தொகுத்தோதினார். ``முடித்தான்`` என்றது, `இவ்வாறு முடித்தான்` என வரையறை செய்தமையைக் குறித்தது. இனிச் சுத்தம் ஒழிந்த கேவல சகலக் கூத்துக்களும் நவக் கூத்தில் அடங்குவனவே என்க. முதல் அடி இன எதுகை.
இதனால் சுந்தரக் கூத்தின் வகைகள் பலவும் வகுத்துக் கூறப் பட்டன. ஆனந்தக் கூத்தைக் கூறியது எய்தியது இகந்து படாமைக் காத்தது.
பண் :
பாடல் எண் : 5
சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும்
சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.
பொழிப்புரை :
சத்தி பேதங்கள் ஐந்து, அவை, `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` என்பன. இவற்றோடு இயைந்த சிவபேதமும் ஐந்து, அவை, `பரம், சிவன், சிவன், கருணாகரன், நாதமூர்த்தி, விந்துமூர்த்தி` என்பன. திருவருள் பெற்றோர் அடையும் முத்திகள் எட்டு. அவை, காலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம், சிவன் முத்தி, அதிகாரமுத்தி, போகமுத்தி, இலயமுத்தி, பரமுத்தி அல்லது சாயுச்சியம்` என்பன. முதன்மைப்பதவிகள் எட்டு. அவை, `கணபதி, குமாரன்` நந்தி, சண்டி, அரன், அரி, அயன், இந்திரன்` என்போரது பதவிகள். சித்திகள் எட்டு. அவை அணிமாதிகள். சிவபதம் - சிவனது நிலை. அவை எட்டாதல் அட்டமூர்த்தியாய் நிற்றலால். அட்ட மூர்த்தமாவன `ஐம்பூதம், ஞாயிறு, திங்கள், உயிர்` என்பன. இவற்றில் நிற்குமிடத்தே `பவன், சர்வன்` முதலிய எட்டுப் பெயர்களைச் சிவன் உடையவன் ஆகின்றான். சுத்திகள் எட்டு, வழிபாட்டில் செய்யப் படுவன. `நிரீக்கணம், புரோக்கணம், தாடனம், அப்பியுக்கரணம்` என்பன. இவை முறையே `பார்த்தல், தெளித்தல், தட்டுதல், மூடுதல் மும்முறை கை கொட்டல், திசைக்காப்புச் செய்தல், சுற்றுதல், அமுதமய மாக்கல்` என்பனவாம். இவை முதலாக அனைத்தும் நிகழும்படி சிவன் தொன்று தொட்டுச் சுந்தரக்கூத்தினை நிகழ்த்தி வருகின்றான்.
குறிப்புரை :
``பேதம்`` என்பதைச் ``சத்தி`` என்பதனோடும் கூட்டுக. ``எட்டீசன்`` என்பதில், `எட்டும் நிகழ` என ஏனையவற்றோடு இயைய எண்ணும்மை விரித்து, அவற்றிற்கு முடிக்கும் சொல் ஒன்றும் வருவிக்க.
இதனால், சுந்தரக் கூத்தின் பயன்கள் பலவும் விரித்தோதப் பட்டன.
பண் :
பாடல் எண் : 6
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும்
ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே.
பொழிப்புரை :
மேகங்கள் ஏழு:- பிங்கல நிகண்டிலும், சூடாமணி நிகண்டிலும்` சிறிது சிறிது வேறுபடச் சொல்லப்பட்டன. நீர்மழையை அளவாகவும், மிகையாகவும், சிறிதாகவும் பொழிவன, மண்மழை, கல் மழை, பொன் மழை, மணி மழை என்பவற்றைப் பொழிவன இவைகள். கடல் ஏழு:- உப்பு, பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன், நன்னீர் - என்பவற்றை உடையன. தீவு ஏழு:- அந்த ஏழு கடல்களாலும் சூழப்பட்டுத் தனித்தனியே ஏழு நிலப்பகுதிகள். அவை:- சம்பு, சாகம், குசை, கிரௌஞ்சம், சான்மலி கேரமேதகம், புட்கரம் என்னும் காரணப் பெயர்களையுடையன. சம்புத்தீவு, நாவலந் தீவு. இதுவே நாம் வாழும் நிலம். தேகங்கள் ஏழு:- `தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் எழுபிறப்புக்கள். பாற்கரன் - சூரியன். சிவ பாற்கரன் - சிவ சூரியன். சிவன் உள்ளிருந்து அறியாமை இருளைப் போக்கி அறிவைப் பிறப்பித்தற்குக் கருவியாய் அவனால் அமைக்கப்பட்டவை. அவை ஏழாவன:- ஐம்பொறிகளும், மனமும் புத்தியும் ஆய அந்தக் கரணங்களுமாம். இன்னும் `ஏழ்` என்றதனானே வித்தியா தத்துவம் ஏழினையும் கொள்க. தாகம் - வெப்பம்; அஃது அதனையுடைய தீயைக் குறித்தது. ``தீக்கு நாக்கு ஏழ் உள` என்பர். அது பற்றி அஃது ஏழ் எனப்பட்டது. சாந்தி என்றது சுத்தத்தை அஃது ஏழாதல் கலா சுத்தி ஐந்தும், கன்ம சுத்தி ஒன்றும், ஆணவ சுத்தி ஒன்றுமாம். இந்த ஏழ் சுத்தியாலும் ஆன்ம சுத்தி உளதாகும்.
குறிப்புரை :
இதனால், வகை வகையாகச் சொல்லப்படுகின்ற அனைத்துப் பொருள்களும் சுந்தரக் கூத்துள் அடங்குதல் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 1
கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.
பொழிப்புரை :
தேவதாரு வனம், தில்லை வனம், திருஆலவனம் (திருவாலங்காடு என்பவற்றில் எழுந்தருளியுள்ள தலைவன் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம், ஆகிய சங்காரக் கூத்தக்களையும் அட்ட மூர்த்தத்தில் நின்று அவற்றை இயக்கி ஆடும் எட்டுக் கூத்தினையும், ஐந்தொழிற் கான ஐந்து கூத்தினையும், சுழுமுனை நாடியில் அறியப்படும் ஆறு ஆதாரங்களில் ஆறு கூத்தினையும் உறுதியாகக்கொண்டு ஆடுகின்றான்.
குறிப்புரை :
எனவே, `எங்கும் அகண்டாகாரமாய், அருவால் நின்று ஆடுதலேயன்றி, சில உயர் இடங்களில் அவற்றைத் தன்னுடையனவாக வரையறை செய்து கொண்டு அங்கு உருவத்திருமேனி கொண்டு ஆடுவதே பொற்பதிக்கூத்து` என்றதாயிற்று. `பொன்` என்றது தெய்வத்தன்மையை. பொற்பதி - தெய்வத் தன்மையுடைய தலங்கள்.
`கொடுகொட்டி, பாண்டரங்கம்` என்னும் கூத்துக்களை அசுரரை அழித்த காலத்தில் சிவபெருமான் ஆடினவாகச் சிலப்பதிகார உரை கூறிற்று.9 கலித்தொகைக் கடவுள் வாழ்த்தில், `சிவன் கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் - என்னும் கூத்துக்களை ஆடும் பொழுது அக்கூத்திற்கு உமையம்மையே தாளம் தருவான்` எனக் கூறியதற்கு, ஆண்டுப் பிறர் இல்லையே`` என்ற நச்சினஆர்க்கினயரது விளக்கத்தால் அக்கூத்துக்கள் சங்காரத்தின் முடிவில் செய்யப்படுவன வாதல் விளங்கும். இனி, பிரம கபாலத்தை ஏந்தி ஆரும் கூத்தே காபாலக் கூத்து ஆதலின் அதுவே தாருகாவனத்தில் அம்முனிவர்தம் பத்தினியர் முன்பும், முனிவர் முன்பும் ஆடிய கூத்தாகும். இவை போன்ற எல்லா வகைக் கூத்துக்களையும் சிவன், மேல், ஆன நடம் ஐந்து``3 எனக் குறிக்கப்பட்ட ஐந்து மன்றங்களில் ஆடல் திருமேனி ஆடுகின்றான் என்பது, ``தாருவனத் தில்லை (வன), வடமாவன மன்னவன்`` என்றதனால் விளங்கிற்று. தாருகாவனம் ஒரு தலமாக விளங்கவில்லை. தில்லை வளமும், திருஆலவனமும் தலங்களாய் விளங்குதல் வெளிப்படை. இவற்றைக் கூறவே சிறப்பாக ஏனை மூன்றும், பிறவும் கொள்ளப்படும். கோடு, கிளை` என்னும் பொருட்டால், முதல் உறுப்பாய தலையைக் குறித்தது. `பாண்டரங்கம்` என்பது ஈறு குறைந்து, `பாண்டரம்` என நின்றது. ``கோடு`` என்பதன் பின் `ஆகிய சங்காரங்கள்` என மாற்றிக்கொள்க. `இவற்றைத் திடமாகக் கொண்டு எழும் மன்னவன்` என வினைமுடிபு செய்க. எழுதல் - முயலுதல்; அது நிகழ்த்துதலைக் குறித்தது.
இதனால், அனைத்து வகையான கூத்துக்களையும் சிவன் உருவத் திருமேனி கொண்டு தலங்களில் ஆடுவதே பொற்பதிக் கூத்தாம்` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 2
தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
பொழிப்புரை :
சிவன் `உருவம்; அருவுருவம்` என்னும் இருவகை வடிவில் தலங்களில் எழுந்தருளியிருக்குங்கால் எங்கும் கிழக்கு நோக்கியே எழுந்தருளியிருப்பான். கோயில் வாயில் எத்திசையை நோக்கியிருப்பினும் அது கிழக்குத் திசையாகவே பாவிக்கப்படும். அந்நிலையில் உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் ஐந்து பக்கங்களிலும் முறையே ஈசானம், தற்புருடம், அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் முகங்கள் உள்ளனவாம். கோயிலின் வாயில் திசை மாறியிருப்பின் தற்புருட முகம் அந்தத் திசையில் வர அந்தத் திசையின் முகம் தற்புருட முகத்தில் சென்றுவிடும். சிவனது இந்த முகங்கள் ஏனை யோரது முகங்கட்கு இல்லாத பல அதிசய ஆற்றல்களை உடையன. அந்த முகங்களின் ஆற்றலால் சிவன் உயிர்களை நிகரற்ற பேரின்ப நிலையில் செலுத்துதற்கு மேற்கூறிய இருவகைத் திருமேனிகளிலும் இருந்து ஒப்பற்ற திருக்கூத்துக்களைச் செய்கின்றான்.
குறிப்புரை :
செய்யுள் நோக்கி உச்சி, கிழக்கு முதலிய பக்கங்கள் முன் பின்னாகக் கூறப்பட்டன. இந்த ஐந்து முகங்களும் முன் தந்திரத்தில், ``நடுவு கிழக்குத் தெற்குத் தரம்மேற்கு`` என்பது முதலிய மந்திரங்களிலும் கூறப்பட்டமை காண்க. இங்குக் கூறிய குறிப்புக்களால் சிவனது, `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியேசாதம்` என்னும் முகங்கள் ஐந்தும் சிவனது `உச்சி, முன்பக்கம், வலத்தோள், இடத்தோள், முதுகு` என்பவற்றின்மேல் உளவாகச் சிவன் எங்கும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருப்பவனாதல் விளங்கும்.
பக்கங்கள் பலவற்றிலும் முன்பக்கமே கொள்ளத்தக்கது ஆதலின், வழிபாடுகள் பலவும் தற்புருட முகத்திலே செய்யப் படுகின்றன. `தற்புருட முகத்தில் செய்யப்படுவது எதுவும் எல்லா முகத்திலும் செய்ததேயாம்` என்பது சிவாகமங்களில் சொல்லப்படுவது.
ஐந்து முகங்களும் ஐந்து சாதாக்கியங்களாகச் சொல்லப்படும். சத்தியோசாதம் அமூர்த்தி சாதாக்கியம், வாமதேவம் மூர்த்தி சாதாக்கியம். அகோரம் கர்த்திரு சாதாக்கியம். தற்புருடம் கரும சாதாக்கியம் முதலாக ஒவ்வொன்றும் அடுத்த சாதாக்கியத்தை முறையே சார்ந்து நிற்க, முடிவில் நான்கு சாதாக்கியமும் சிவ சாதாக்கியத்தைச் சார்ந்து நிற்கும் என்க.
1. `உச்சிமுகம் ஈசானம்; ஒளிதெளிஅப் பளிங்கே;
உத்தரபூ ருவத்திசையை நோக்கிஉறும் உகந்தே.
2. நிச்சயித்த முகத்தின்கீழ்ப் பூர்வதிசை நோக்கி
நிகழும்முகம் தற்புருடம்; கோங்கலர்போல் நிறமே.
3. அச்சுறுத்தும் அகோரமுகம் அறக்கரிது; கராளம்
அவிழ்தாடி; வலத்தோளில் தென்னோக்கி அமரும்.
4. செச்சைநிறத் தெரிவைமுகம்; இடத்தோள்மேல் வாமம்.
5. சிறுபுறத்தின் முகம் சத்தி யோசாதம் நிகழ்வால்.
என்னும் சிவதருமோத்தரச் செய்யுளாள் மேற்கூறியவை விளங்குதல் காண்க. உத்தர பூருவம் - வட கிழக்கு. பூர்வதிசை கிழக்குத் திசை. அறக் கரிது - மிகவும் கறுப்பானது.
அகோரமுகம் தோற்றத்தால் அச்சுறுத்தும் கோர வடிவாய் இருப்பினும் அது கோரத்திற்குக் கோரமாய்க்கொடிய வினைகளை அழித்தொழித்தலால் உண்மையில் அகோரமே - கோரம் இல்லாத - சாந்தமே. ``கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணம்என் றோரார்`9 என்னும் சிவஞான சித்தியை நோக்குக. இதனானே அகோர மந்திரம் பிராயச்சித்த மந்திரமாய் உள்ளது. ``ஒப்பில் பேரின்பத்து`` என்பதனை, ``தனி நடம் செய்யும்`` என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. பேரின்பத்து நடம், பேரின்பத்துக்கு ஏதுவாய நடம். ``உபயம்`` இரண்டில் முன்னது, `இரண்டாவதான உருவம்` என்றும், பின்னது, `அருவம், இருவம் இரண்டுமான அருவுருவம்` என்றும் பொருள் பயந்தன. மூன்றாம் அடி இனவெதுகை.
இதனால், ஐந்து முக மூர்த்தியாகிய சதாசிவ மூர்த்தியே நிலவுலகத் தலங்களில் உருவத் திருமேனி கொண்டு நடம் செய்தல் கூறப்பட்டது.
சிவாலயங்களில் கருவறையில் உள்ள இலிங்கம் சதாசிவ மூர்த்தமே. ஏனை உருவத் திருமேனிகள் மகேசுர மூர்த்தங்களாம்.
பண் :
பாடல் எண் : 3
அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
அடிஆர் பவரே அடியவ ராவர்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.
பொழிப்புரை :
பொன்னம்பலம் முதலிய ஐந்து அம்பலங்களிலும், மற்றும் பல இடங்களிலும் ஆடற் பெருமானைக் கண்டு வணங்கினவரே `அடியார்` எனப்படுவர். அவரே சிவானந்தத்தை அடைந்தவர்; சிவன் அருளைப் பெற்றனர்; சிவனது திருவடியைச் சேர்ந்தவர்.
குறிப்புரை :
``பொன்னம்பலத்தாடல் கண்டோர்`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க. தலைமைபற்றிய இதனைக் கூறவே, மற்றவை தழுவப் பட்டன. மூன்றாம் அடியொழிந்த மற்றை மூன்றடிகளிலும் ``அடியார்`` என வந்தனவும், மூன்றாம் அடியில் ``அடியில்`` என்றதும் சொற்பொருட் பின்வருநிலையனி. ``அரன் அத்தன்`` என்றது இருபெயர் ஒட்டு.
இதனால், சிவாலய தரிசனத்தில் ஆடற்பெருமானது தரிசனத்தினஅ இன்றியாமையாச் சிறப்புக் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து)
இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன்
படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.
பொழிப்புரை :
பலவகையான நடனங்களையும் செய்பவன் சிவன். அவன் மிக மேலான ஞான டனத்தையும் செய்ய வல்லவன். அந்த ஞான நடனத்தினால், அடங்காத எனது தற்போதத்தைத் தனது வலது தாளால் மிதித்து அடக்கி, இடப்பக்கத்தில் காணப்படுவதாய, எடுத்த பாதத்தை எனது தலைமேல் வைத்து, என்னைப் பேரின்பக் கடலுள் ஆழ்த்தினான். இனி ``உள்ளக் கிழியின் உருவெழிதிப்``* பார்க்கும் யோகிகட்கு அக்கிழி யுருவில் ஒன்றி விளங்குகின்றான்.
குறிப்புரை :
``என்னை`` இரண்டில் முன்னது, `எனது போதத்தை` என்றபடி. ``அடங்காத என்னை அடக்கி`` என்பதனோடு, ``மலம் சாய அமுக்கி``* என்பதையும், ``இடம் காண் அடி வைத்து என்னைப் பரானந்தத்து இட்டு`` என்பதனோடு, ``அருள்தான் எடுத்து - நேயத்தால் - ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்`` என்பதையும் ஒப்பீடுக.
மூன்றாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ``நடந்தான்`` என்பதில் `தான்`, அசை. ஞானக்கூத்தை வகுத்தரைப்பதே ``மாயை தனை உதறி``* எனத் தொடங்கும், ஞானக்கூத்து ஞானியர் பொருட்டச் செய்வதாகலின், ஈற்றடியிற்கூறியது யோகியர்க்காயிற்று. ஞானியரும், யோகியரும் அல்லாத பிறர்க்கெல்லாம் சிவன் ஊன நடனத்தைச் செய்வான் என்க. அது, ``தோற்றம் துடியதனில்``* என்னும் வெண்பாவில் சொல்லப்பட்டது.
இதனால், பொற்பதிக் கூத்துள் ஞான நடனம் உயிர்கட்குத் தரும் பயன் கூறும் முகத்தால், அதன் தரிசனச் சிறப்பு உணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 5
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.
பொழிப்புரை :
நான், பிறவியாகிய துன்பத்தினின்று நீங்கி, வீடாகிய இன்பத்தை அடைதற்குரிய வழி யாது` என்று ஆராய்ந்து கூத்தப் பெருமானை என்னுடைய அன்பிற்குள் அகப்படும்படி வைத்தேன். தேவருள் அஅவனே கூத்தாட வல்ல பெருமான். அவனது கூத்து எல்லார் கூத்தினும் மேலாய கூத்து; செம்பொன் அம்பலத்தில் வெற்றியுடன் விளங்குதல் கூத்து; அனைத்துப் பொருள்காவல் இயகத்தோடு மிக நெருக்கமான தொடர்புடைய கூத்து. உபநிடதங்கள், `தத்` என்னும் சொல்லால் சுட்டுகின்ற பரம் பொருளின் கூத்து.
குறிப்புரை :
ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. ``கூத்தன்`` என வந்தன பலவும் ஒருபொருள்மேல் வந்த பல பெயர். கூத்தின் சிறப்பை அதனை உடையானோடு பலவகையில் சேர்த்துக் கூறினார்.
``கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்``8
என்பதனால், காளியோடு ஆடி, `அவளை வென்ற அந்த நடனமே தில்லையில் செய்யப்படுகின்றது` என ஆளுடைய அடிகள் அருளிச் செய்தவாறே இவரும் பொன்மன்றுட் கூத்தினைச் ``சேவகக்கூத்து`` என்றார். சேவகம் - வீரம், வெற்றி. கோயிற் புராணமும் இவ்வாறே கூறுதல் காண்க.
``சம்பந்தம்`` என்றது, இங்கு அத்துவித சம்பந்தத்தை. அதனைச் சித்தாந்த நூல்கள் இனிது விளக்கும்.
``நாடி வைத்தேன்`` என்றதனால், அதன் பயன் எண்ணியது எண்ணியவாறே கிடைத்தமை பெறப்பட்டது. அதனை இங்குக் கூறியதனால், `நீவிரும் அதனை அவ்வாறு வைத்தால் இன்புறுவீர்கள்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
``சித்தமும் செல்லாச் சேட்சியன காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!``J
``ஆர்காண வல்லார் அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோர் மறைத்து``l
``அழலார் வண்ணத்து அம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``3
எனப் பிற திருமுறைகளிலும் வந்தவாறு இங்கும் நாயனார், ``அன்பில் வைத்தேன்`` என்று அருளிச்செய்தார். அதனால், வேதங்களாலும் அறியவாராது `அது` எனச் சேய்மைச் சுட்டாகப் பொதுவிலே சுட்டப் படுகின்ற பரம்பொருள் அன்பர்தம் அன்பிற்குள்ளே வந்து அகப் படுதல் தெளிவாகும். பொற்பதிப் கூத்துப் பல வகைக் கூத்தும் ஆதல் தோன்றுதற்கு. இடையே ``சொம்பொன் திருமன்றுட் கூத்து`` என்றார்.
இதனால், பொற்பதிக் கூத்தின் தரிசனம் பலவகைக் கூத்தின் தரிசனமுமாய் வீடு பயத்தல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 6
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.
பொழிப்புரை :
சிவன் தனது கூத்தினை மாணிக்கச் சபையில் மாணிக்கக் கூத்தாக இயற்றுவான். தில்லை பொற்சபையில் பொற் கூத்தாக இயற்றுவான். மற்றும் வெள்ளி முதலிய சபைகளில் அது அதற்குத் தக்க கூத்தாக இயற்றுவான். அனைத்தையும் கடந்த தனது இயற்கைப் பரஞ்சோதி வெளியில் சிவானந்தக் கூத்தாக இயற்றுவான். (அது முதலிலே சொல்லப்பட்டது.) ஆகவே, ஒருவகையாய் இல்லாமல் பலவேறு வகையாக இயற்றுகின்ற ஆணிப்பொற் கூத்தனது கூத்து வகைகளையெல்லாம் யார் வரையறை செய்து கூறவல்லவர்!.
குறிப்புரை :
`ஒருவரும் இல்லை` என்பதாம். பூணுதல் - வெள்ளி முதலியவற்றைத் தாமதமாகக் கொள்ளும். ``சடைக் கூத்து`` என்பதைச் `சடைபோலும் கூத்து` என உவமத் தொகையாக்கி, `சிவனது சடை ஒன்றாய் இல்லாது பலவாய் விரிதல் போலப் பலவாய் விரியும் கூத்து` எனத் தொழிலுமாம் ஆக்குக. ஆணிப்பொன் - பிற பொன்னின் மாற்றுக்களையெல்லாம் அளந்து காட்டித் தான் வேறொன்றால் அளக்கப்படாத பொன். இதனை `உரையாணி` என்பர். ஆணிப்பொன் போலும் கூத்து, பிற கூத்தின் தகுதிகளைத் தான் அளந்து, பிறிதொரு கூத்தினால் தன் தன்மை அளக்கப்படாத கூத்து.
``யார் அறிவாரே`` என்றது, `பொற்பதிகளில் சென்று காணின் அக்கூத்துக்களின் வகையை ஒருவாறு உணர்ந்துரைத்தல் கூடும்` என்றபடி.
இதனால், பொற்பதிக் கூத்து அவனது கூத்து வகை பலவற்றையும் காட்டுதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.
பொழிப்புரை :
பொற்பதிகளுள் உள்ள நேர்மை மிகுந்த அம்பலங்களில் நிகழும் திருக்கூத்தில் அழகிய மலரும் பொன்னும் போலும் எடுத்த திருவடியில் தம் அன்பை வைப்பவர்கட்கு அவ்வன்பினால் உடம்பு அழுகையில் விம்மும்; `அதிருவடி எங்கே மறைந்து விடுமோ` என அஞ்சி நடுங்கும்; தந்து அடைக்கல நெறியையும், பிழைபொறுக்க வேண்டுதலையும் இனிது புலப்படுத்த வேண்டி நிலத்தின்மேல் நெடுங்கிடையாய் விழும்; பின்பு திருக்கூத்தினைக் காண வேண்டி எழும்; தளர்ச்சியடையும்; முடிவாக அவர்கள் தம்மையே தாம் மறந்துவிடுவார்கள் என்றால் `தற்பெருமை` என்பது அவர்கட்கு எங்கேயிருக்கப் போகின்றது? அஃது எங்கும் இல்லாது, அறவே கெட்டொழியும்.
குறிப்புரை :
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கிப் பின், ``மெய்`` என்பதை ``விம்மும்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``தம்மையும்`` என்னும் உம்மை சிறப்பு. சதுர் - பெருமை. திருக்கூத்தை அன்போடு தரிசிப்பவர்க்கு இம்மெய்ப்பாடுகள் உளவாதலைத் திருநாவுக்கரசரது வரலாற்றில் சேக்கிழார்,
``கையும் தலைமிசை புனைஅஞ் சலியன;
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன; கரணங் களும்உடன்
உருகும் பரிவின; பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழும்;முன் பெழுதரும்;
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடும்அவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்``
எனக் கூறியவாற்றானும் அறிக.
இன்னும்,
``விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்;
தம்மாண் பிலராய்த் தரியார்; தலையால் முட்டுவார்;
எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்``
என்றதையும் காண்க. நேர்மை - மலக்கோண் நீங்கிய திருவருள் நேர்மை.
இதனால், பொற்பதிக் கூத்தினைத் தரிசிப்பார்க்கு உண்டாகும் அனுபவம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 8
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த
நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.
பொழிப்புரை :
காண்பவரது உள்ளங்களில் சிவானந்த நாட்டத்தையே முறுகி வளரச் செய்கின்ற பொற்பதிக் கூத்துக் கண்டவுடன் கண்டவர்களது சித்தம் வேறு எதனையும் சிந்தியாது; அந்தத் திருக்கூத்து ஒன்றை மட்டுமே சிந்திக்கும். உயிர்ப்பினால் பொறிகள் வழியாகப் புலன்களின்மேல் செல்வனவாய ஏனைய அந்தக் கரணங்களும் அவ்வாறு செல்லமாட்டா. (``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக``* என்ற அனுபவத்தை நினைவு கூர்க.) அங்ஙனமாகவே, உலக ஆசைகள் பலவும் அற்றொழி வனவாம். அவை ஒழியவே உலகப் பொருள்களைத்தேடி, அவை கிடையாமையால் மனம் திகைத்தலும், தேடுதலாலும், திகைத்தலாலும் உடல் இளைத்தலும் நிகழா.
குறிப்புரை :
``ஆனந்த நாட்டம்`` என்பது முதலாகத் தொடங்கி, `சிந்தை தேட்டறும்` என மாற்றி, ``திகைப்பறும், பிண்டத்துள் வாட்டறும்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. தேடுதல் - ஆராய்தல். தேடு, தேட்டு - முதனிலை திரிந்த தொழிற்பெயர். `காலால், புந்தியாகி வரும் புலன்மேல் (மனம்) ஓட்டறும்; திகைப்பறும்` என உருபு விரித்து, `மனம்` என்பது வருவிக்க. மனம் பொறிவழிச் சென்று கவர்கின்ற புலன்கள் முடிவில் புத்தியின்கண் வந்து முடிதலின், ``புந்தியாகி வரும் புலன்`` என்றார். `புலன்மேல்` என, `மேல்` என்பது விரிக்க. பிண்டம் - உடல். `வாட்டம்` என்பதில் அம்முக் குறைந்து நின்றது.
இதனால், பொற்பதிக் கூத்துக் காண்பவர்க்கு அக்கட்சியே முத்திப் பேரின்பமாதற் சிறப்புக் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 9
காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.
பொழிப்புரை :
சிவன், படைப்புக் காலத்தில் உயிர்களைக் காளியின் பிடியிலிருந்து விடுவித்தற்கு அவளோடு நடனப் போட்டி யிடும் முறையில் நடனம் ஆடி அவளை வெள்கச் செய்து வென்றான். பின்பு தேவர்கள் கண்டு தனது முதன்மையை உணர்ந்து உய்தற் பொருட்டு அவர்கள் முன் மேரு மலையில் நடனம் ஆடினான். பின் நில உலகில் சுடலைகளில் பேய்களோடு கூடி நடனம் ஆடினான். பஞ்ச பூதங்களில் எப்பொழுதும் ஒருவரும் அறியாதபடி நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றான். அவன் பொற்பதிகளில் உள்ள அம்பலங்களில் யாவரும் காண, எந்நாளும் ஆடிக்கொண்டிருக்கின்றான்.
குறிப்புரை :
`அவ்வருமை யறிந்து அப்பதிகளில் சென்று அந்த நடனத்தை வணங்குதல் மானிடர்க்குக் கடன்` என்பது குறிப்பெச்சம்.
`காளி, தாருகன்` என்னும் அசுரனை அழித்து அவனது குருதியைக் குடித்த காரணத்தால், அவனைப் போலவே உலகை அழிக்கத் தொடங்கியபொழுது சிவன் அவளோடு நடனப்போர் செய்து அவளது சினத்தை அடக்கினான்` என்பது புராண வரலாறு.
``நீடுயர் மண்ணும் விண்ணும் நெடுவேலை குன்றொடு
உலகேழும் எங்கும் நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள்
துதிஓதி நின்று தொழலும்
ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்தும்
ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம்
அவையாம் நமக்கொர் சரணே``
என்னும் அப்பர் திருமொழிக் குறிப்பைக் காண்க. தாருகன் - ஆணவ மலம். அவனை அழித்த காளி - மாயை. சிவன் அவனது கோபத்தை அடக்கியது. மாயையின் மயக்கத்தை நீக்கியது. எனவே, உயிர்களைக் கேவல சகலங்களின் நீக்கிச் சுத்தத்தை அடையச் செய்தலே சிவன் செய்யும் திருக்கூத்து` என்பது விளங்கும். காளியோடு நடனம் ஆடிய ஐதிகத்தைக் குறிப்பதே திருவாலங்காட்டுத் தலம். எனவே, அவ்விடத்து நடனமே பழைய நடனம் ஆதல் விளங்கும்.
தேவர்கள் காண மேருமலையில் ஆடியதை இம்மந்திரத்தால் அறிகின்றோம்.
சிவன் சருவ சங்காரத்தின் பின் உடல்அற்ற உயிர்களோடு கூடி நடனம் ஆடுதல் அறியாதார் உலகத்தில் பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் ஆடுவதாக எண்ணுவர். அவர்தம் மனப்பான்மை பற்றி அதனையும் சிவன் உடன்பட்டுக் கொள்கின்றான். `குவலயத்தக் கூளியோடு ஆடி` என ஒரு தொடராக ஓதற்பாலதனை இரண்டு தொடராகப் பிரித்து ஓதினார். சிவனது செயல்கள் எல்லாம் அவனது திருக்கூத்தாகவே கூறப்படுதல் பற்றி. அவன் பஞ்ச பூதங்களைச் செயற்படுத்தி நிற்றலையும் அவனது திருக்கூத்தாகக் கூறினார். `எத்துணைப் பெரியோன் எத்துனை எளியனாய் வந்து பொற்பதிகளில் ஆடுகின்றான்` என்பதை விளக்குதற்கு அவனது பெருநடனங்கள் பலவற்றையும் எடுத்தோதினார். மூன்றாம் அடி உயிரெதுகை பெற்றது.
இதனால், பொற்பதிக் கூத்தின் அருமை உணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 10
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.
பொழிப்புரை :
(`சிவன் அண்டம், பிண்டம்` இரண்டிலும் நடம் புரிகின்றான்` என்பதனாலும், `பிண்டத்துள் இருதயத்திலே நடம் புரிகின்றான்` என்பதனாலும் அண்டமும், பிண்டமும் சமம் ஆகின்றன. அம்முறையில் நோக்கும் பொழுது) பிண்டத்தில் நடு நாடியாகிய சுழுமுனா நாடியே மேரு மலையும், இடைநாடியே இலங்கையும், பிங்கலை நாடியே மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனையும் ஆகும். `இனி, `மேரு` எனப்படும் நடுநாடி மேல் நோக்கிச் செல்கின்ற மணிபூரகம் பொதிய மலையும். இருதயம் தில்லைவனமும் ஆகும். ஆகவே மேரு முதலியவற்றை உடைய நிலம் சிவனது திருவருள் மிக்கு விளங்குகின்ற சிவநிலம் ஆதல்போல், சுழுமுனை முதலியவற்றை உடைய பிண்டமும் சிவநிலமேயாம்.
குறிப்புரை :
`நடு நாடி மேரு வாய் உறும்; இடை இலங்கையாய் உறும், பிங்கலை குறியாய் உறும்; மலயத்தூடு ஏறும் சுழுனை தில்லை வனத்துச் சாரும் ஆகவே, இவைகளையுடைய பிண்டம் வெளியே இனிது விளங்குகின்ற நிலம் போல சிவபூமி என இயைத்துக் கொள்க.
குறி - எல்லை. அது வட எல்லையைக் குறித்தது. முன்னர்க் கூறிய உருவக முறையால், ``மலயம், தில்லைவனம்`` என்பன மணி பூரகத்தையும் இருதயத்தையும் குறிப்பவாயின. ``வான்`` என்றது அதன்கண் அடங்கி விளங்கும் நிலத்தை. இன், உவம உருபு. `இலங்கை, குறி` என்பவற்றை, இடைபிங்கலைகளோடு நிரல் நிறையாக இயைக்க. `ஆய் உறும்` என ஆக்கம் விரித்து எல்லா வற்றோடும் கூட்டுக. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. ``இவை`` என்பது தானியாகு பெயராய் இவைகளையுடைய உடம்பைக் குறித்தது.
இதனால், அண்டத்தில் பொற்பதிகள் இருத்தல் போலப் பிண்டத்திலும் பொற்பதிகள் இருத்தல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 11
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.
பொழிப்புரை :
[முன் மந்திரத்தில் பிண்டம் அண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கும் முறை கூறியது போல, அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கினால்,]
மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனை நிலமகட்குப் பிங்கலை நாடியும், தெற்கேயுள்ள இலங்கை இடைநாடியும், சிவன் நடனம் புரிகின்ற தலங்களுள் தலையாயதாகிய தில்லை நடுநாடியும் ஆகும். பூதகாரியமாகிய அண்டம், பிண்டம் இரண்டனுள் அண்டம் பிண்டத்தோடு ஒப்ப இவ்வாறு வரையறை செய்து உணரப்படும்.
குறிப்புரை :
`அண்டம், பிண்டம் என்பவற்றுள் பிண்டத்தை அண்டத்தோடு ஒப்பித்தலே மரபு போலும்` என மலையாமைப் பொருட்டு, `அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்பித்தலும் மரபே` என்றற்கு இது கூறினார். இதனால், அண்டம் பிண்டம் இரண்டும் தம்முட் சமம் ஆதல் விளங்கிற்று. கோயிற் புராணத்திலும்,
``அலைந்திடும் பிண்டம், அண்டம்
அவைசமம் ஆத லாலே,
இலங்கைநேர் இடைபோம்; மற்றை
இலங்குபின் கலையாம் நாடி
நலங்கிளர் இமய நேர்போம்;
நடுவுபோம் சுழுனை நாடி``
என்றும்,
``நாடரு நடுவின் நாடி
நலங்கிளர் தில்லை நேர்போய்க்
கூடும்``*
என்றும் இவ்வாறே கூறப்பட்டது.
`புறத்து ஆனது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. ``இடை பிங்கலை`` என்பவற்றை முன் மந்திரத்திற்கு இணங்க, `புறத்து ஆனது, தெக்கணம்` என்பவற்றோடு எதிர்நிரல் நிறையாக இயைக்க. ``தெக்கணம்`` என்றது. தென் கோடியாகிய இலங்கையை, `நட்டம் பயில்` எனப் பயிலுதலுக்குச் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. நில உருண்டைதான் பல பகுதிகளை உடைத்தாயினும், அவற்றுட் சிறந்தது, `சுரும பூமி` எனப்படுகின்ற பரத கண்டமே இவ்வாறான பல சிறப்புக்களை உடையது என்க.
இதனால், பிண்டத்தைப் போல அண்டமும் நாடி முதலியவற்றை உடைத்தாதல் கூறப்பட்டது.
`அண்டம், பிண்டம் இரண்டும் சிவன் நடம்புரியும் பொற்பதிகளை உடையன` என்றற்கு இவ்விரு மந்திரங்களும் இவ்வதிகரத்தில் அருளிச்செய்யப்பட்டன.
பண் :
பாடல் எண் : 1
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
பொழிப்புரை :
பொன் வகைகளில் சிறந்தமை பற்றி, `அம்பொன்` எனப்படும் செம்பொன் நகரமாகிய தில்லைப் பதியே அனைத்து அண்டங்களாகவும், அப்பதியில் உள்ள ஆலயத்தின் ஐந்து ஆவரணங்களே பூதங்களில் ஒன்றாகிய ஆகாயம் போலாது, அதற்கு மிக முன்னே சுத்த மாயையில் தோன்றி, அனைத்துப் பொருள் களையும் தம்முள் அடக்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைக ளாகவும், அவ் ஆலயத்தின் முதல் ஆவரணத்துள் உள்ள திரு வம்பலமே ஐந்தொழில் செய்யும் சத்தியாகவும் அமையும்படி நின்று, அனைத்தையும் கடந்து நிற்கும் மேலான ஒளியாகிய சிவன் நடனத்தை விரும்பிச் செய்கின்றான்.
குறிப்புரை :
அண்டப் பகுதிகளை எடுத்துக் கூறவே, முன் அதிகாரத்தில் அண்டத்தோடு ஒப்பிக்கப்பட்ட ஒப்புமை பற்றிப் பிண்ட வகைகளும் அடங்கின. அதனால், `பொற்றில்லைக் கூத்துத் தானே அண்டபிண்டம் அனைத்தையும் இயக்குகின்ற கூத்தாம்` எனக் கூறியவாறாயிற்று. இன்னும் ``பரஞ்சோதி`` என்றதனால், ஒரு நாமம், ஓருருவம், ஒன்றும் இல்லாத அந்தப் பரமசிவன்தானே பொற்றில்லையுள் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான்` என்பது தோற்றுவிக்கப்பட்டது.
தண்டு, `தெண்டு` என மருவிற்று. தண்டு - செங்கோல்` நீதி. அஃது உயிர்களை வினை நெறிக்கு உட்படுத்தி ஆளும் ஆளுகையைக் குறித்தது. ``தெண்டினினின்`` என இன்னுருபின் மேல் இன்சாரியை வந்தது சிறுபான்மை வழக்கு உகத்தல் - விரும்புதல். அது தன் காரியந்தோன்ற நின்றது.
கோயிலை, `நகர்` என்றல் பற்றி, `பதி` என்றார். அதனை ஐந்து ஆகாசமாகக் கூறினமையின், அஃது ஐந்து ஆவரணங்களை உடைத்தாதல் விளங்கிற்று. அனைத்தையும் அடக்கி நிற்றல் பற்றிக் கலைகள் `ஆகாசம்` எனப்பட்டன.
இதனால், `தில்லைத் திருக்கோயிலின்கண் உள்ள திருவம்பலத்தில் செய்யப்படும் திருக்கூத்தே பொற்றில்லைக் கூத்தாம்` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 2
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.
பொழிப்புரை :
குரு உணர்த்தியருள்கின்ற இன்பக் கதிராய்ப் பின் பெருகி விளைகின்ற தலையாய இன்பத்தைத் தன்னுள் நிரம்பக் கொண்டு சிவன் தென்னாட்டில் தில்லையை அடைந்து மங்கையோடு உடனாம் இன்பப் போக வடிவினனாய், நிலையான இன்பத்தைத் தரும் நடனத்தைச் செய்கின்றான்.
குறிப்புரை :
`அதனைத் தவறாது சென்று கண்டு தொழுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.
குரு + ஆனந்தம் = குரானந்தம். `ரேகை`, ஒளியின் சிறு கூறு. குரு உபதேசத்தில் சிவானந்தம் கேள்வியளவில் சிறிதே புலப் படுதலால் அதனை ``ரேகை`` என்றும், பின்னர்ச் சிந்தித்தல், தெளிதலால் பெருகி வருதலால் ``கூர்ந்த`` என்றும், அங்ஙனம் பெருகி எல்லையின்றி விளைகின்ற இன்பம் சிவனுக்கு ``வரம்பில் இன்பம்`` என்னும் குணமாய் இருத்தலின் ``குணமாம் சிரானந்தம்`` என்றும், அஃது அவனது நடனத்தில் பொங்கி வழிதலால் ``பூரித்து`` என்றும் கூறினார். ``தென்திை\\\\u2970?`` என்றது இங்குத் தில்லையை ஆதலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. தில்லையை அவன் தேர்ந்து கொண்டது, `அதன் சிறப்பு நோக்கி` என்றே கொள்ளப்படும். ``மாதவம் செய்த தென்றிை\\\\u2970?``9 எனச் சேக்கிழாரும் குறித்தருளினார். புரம் - திருமேனி; வடிவம். `பூவையும் தானுமாம் ஆனந்த போக புரனாய்` என்க. ஆனந்தம், சிவானந்தம். போகம் - உலக இன்பம். அவன் போக வடிவினனாய் இருந்து தரும் போகம் சிவானந்தத்திற்குத் தடையாகாமை பற்றி, ``ஆனந்த போகம்`` என்றார், மொழியின் இனிமை பற்றி மகளிரைக் `கிளி, பூவை` என உவம ஆகுபெயராற் கூறுதல் இலக்கிய வழக்கு. `நிர்` என்னும் உபசர்க்கம் நிலை பேற்றையும் உணர்த்தும், நிர்த்தாரணம் நிர்ணயம்` முதலியவற்றிற் போல. இம்மந்திரத்திற்குப் `பரஞ்சோதி` என்னும் எழுவாயை முன் மந்திரத்திலிருந்து கொள்க.
இதனால், தில்லைக் கூத்தினைச் சிவன் மேற்கொண்ட வகை -யும், அது போகம், மோட்சம் இரண்டையும் தருதலும் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 3
ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.
பொழிப்புரை :
சிவன் தான் ஆடும்பொழுது, அவனோடு உடன் ஆடுவன பல. அவ்வாறு அனைத்தும் ஆடும்படி அவன் தான் நாதாந்தத்தைக் கடந்து செய்யும் நடனத்தைத் தில்லையில் நாதத்தோடு கூடியே ஆடுகின்றான்.
குறிப்புரை :
`இஃது அதிசயம்` என்பதாம். ``ஆதிபரம்`` என்பதன் பின் `தான்` என்பது வருவிக்க. கை முதல் மதியீறாகச் சொல்லப் பட்டன எல்லாம் அவனுடையனவே. ஓதும் சடை, பிறருக்கு உரித் தாகாது அவனுக்கு உரித்தாகச் சொல்லப்படுகின்ற சடை. எனவே, `முதல் இருடியாவான் சிவனே` என்பது விளங்கும். ``விஸ் வாதிகோ ருத்ரோ மகரிஷி;`` என வேதமும், ``முன்னியாய் நின்ற முதல்வா போற்றி``* எனத் திருமுறையும் கூறும். உன்மத்தம் சடையில் அணிந்த ஊமத்தை மலர். அனல், வினையைப் போக்குதலையும், சடை ஞானத்தைத் தருதலையும், ஊமத்தை ஆனந்தம் விளைத்தலையும், பிறை அருள் வழங்குதலையும், குறிப்பால் உணர்த்துவன. `பாரும், மீது அண்டமும் ஆட` என்க. இது அவன் ஆட, அனைத்தும் ஆடுதலைக் குறிக்கும். ``நாதமொடு`` என்பதில் நாதம் சிலம்பொலி. கந்திருவர் யாழொலி முதலிய இன்னொலிகள். நாதாந்தம் - முடிவில் உள்ள நாத தத்துவத்திற்கு அப்பால். `அங்குச் செய்யப்படுவதே ஆனந்த நடனம்` என்பது மேற் கூறப்பட்டது.8 `அந்த நடனத்தைச் சிவன் இந்நிலையில் செய்கின்றான்` என்றார்.
பண் :
பாடல் எண் : 4
கும்பிட அம்பலத் தாடிய கோநடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.
பொழிப்புரை :
அழகிய திருமேனியுடன் பெருமான் தில்லை யம்பலத்தில் ஆடுகின்ற தலைமை வாய்ந்த அந்த நடனம் அகில உலகங்களுக்குமான நடனமாகும், அதனை வணங்க வேண்டி அவ்வம்பலத்தை அடைந்தால், அவ்அடைவே மேலான ஞானத்தின் முடிநிலையாகிய மௌன நிலைப்பேறாகும்.
குறிப்புரை :
``அம்பரன்`` என்பதை முதலிலும், `கும்பிட` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிலும் கூட்டி உரைக்க. அம்பலம், அதிகாரத்தால் இங்குத் தில்லையம்பலம் ஆயிற்று. கோ - தலைமை. `அகிலாண்டத்திற்கும் ஆடும் நட்டமாம்` என்க. செம்பொருள், கண்கூடாக அறியப்படும் பொருள். ஈண்டுள்ளாரால் அங்ஙனம் அறியப் படும் சிவலோகம் தில்லையம்பலம்` என்க. ``கும்பிடச் சேர்ந்துற்றால்`` என்றது, `கும்பிடுதற்கு முன்பே பயன் விளையும்` என விளைவு கூறிய வாறு. உம்பர்அம் எனப் பிரிக்க. உம்பர் - மேன்மை. அம் - அழகு; சிறப்பு` என்றபடி `மோனமாகிய அந்தம்` என இயையும், மௌன மாவது, தற்போதம் அற்ற நிலை. ``மோனம் என்பது ஞான வரம்பு``*\\\\`20என ஔவையாரும் அருளிச் செய்தார். ஞான அந்தத்தின் உண்மை - ஞானத் -தின் முடிநிலையால் விளையும் மெய்யான பேறு; பரமுத்தி. தில்லைத் திருநடம், கண்டு வணங்கினஆர்க்கு வீடுபேற்றைத் தரும்` என்றபடி.
இதனால் தில்லைக் கூத்தின் தலைமையும், பயனும் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 5
மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
பாதியோ டாடும் பரன்இரு பாதமே.
பொழிப்புரை :
நில அண்டத்தின் பகுதி மூவேழும், அவற்றிற்கு மேல், `நீர் முதலிய பூதம் நான்கு, அகங்காரம், புத்தி, பிரகிருதி` என்னும் தத்துவ அண்டங்கள் ஏழும் உண்மை வீட்டிற்கு வழியாகின்ற உபநிடத நூல்கள் நூற்றெட்டும், இன்னும் அராகம் முதல் நாதம் முடிவாய் உள்ள தத்துவ புவனங்களும் ஆகிய அனைத்தும் சிவனது திருக்கூத்தின் எல்லையையே எல்லையாக உடையன. இனி உயிர்கள் அடையும் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ய முத்திகளும் மாதுடன் ஆடும் சிவனது திருவடி நிலைகளேயாகும்.
குறிப்புரை :
நில அண்டப் பகுதி மூவேழாவன, கீழுலகம் ஏழு, நிலப்பரப்பின் தீவுகள் ஏழு, மேலுலகம் ஏழு, புவனங்களை நோக்கும் பொழுது தன்மாத்திரை, கன்மேந்திரியம், ஞானேந்திரியம், மனம். இவை அகங்காரத்தில் அடங்குதலைச் சிவஞான யோகிகளது இரண்டாம் சூத்திர மாபாடியத்துப் பிரதிட்டாகலை விளக்கத்தில் காண்க. வேதாந்த சித்தாந்த நூல்களே உண்மை ஞான நூல்களாதல் பற்றி அவைகளையே `சாதகம்` எனக்கொண்டு, அவற்றுள் வேதாந்த நூல்களையே சமய நூல்களாகச் சுட்டினார். `சமயம்` என்றது சமய நூல்களை. ஒடு, எண் ஒடு. அதன் இயல்பு ஓரிடத்தில் நின்றே ஏனையிடத்தும் இயைதல் ஆதலை அறிக. அந்தம், இங்கு எல்லை. முன் நின்ற அந்தம் மேதினி முதலிய பிறவற்றோடும் சென்றியையும். `மேதினி யந்தமொடு, மூவேழ் அந்தமொடு` என இவ்வாறு எண்ணி, ``நடனாந்தம்`` என்பதனோடு முடிக்க. ``பதம்`` என்றது முத்தியை, ``பாதி`` என்றது பாதியாய் இருப்பவனை.
இதனால், அனைத்தும் திருக்கூத்துள் அடங்குதல் பொது வகையால் கூறப்பட்டதாயினும், கருத்து வகையால் தில்லைக் கூத்துள் அடங்குதலே கூறப்பட்டதாம்.
பண் :
பாடல் எண் : 6
இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.
பொழிப்புரை :
பிண்டத்தில் இடைகலை பிங்கலை நாடிகள் அண்டத்தில் உள்ள இலங்கையும், இமயமுமாகவும் நடு நாடியாகிய சுழுமுனை இரேசக பூரக வாயுக்களால் சூழப்படுதலால் சூரிய சந்திரர்களால் வலம் வரப்படுகின்ற மேருவாகவும் மதிக்கப்படும். அந்நிலையில் தில்லை நடுநாடியாக மதிக்கப்படுதலால், அங்கு நடனம் புரிகின்ற பெருமானே யோகியர் தம் மனம் ஒன்றி உள்கும் முதற் பொருளாவான்.
குறிப்புரை :
அஃதாவது, `உலகம் முழுவதையும்` இயக்குபவ னாவான்` என்பதாம்.
`கடவும் மூலம், கைகண்ட மூலம்` எனத் தனித்தனியாக இயைக்க. கடவுதல், யோகியர் பிராணனைச் செலுத்துதல். ``கடவும்`` என்னும் பெயரெச்சம், ``மூலம்`` என்னும் இடப்பெயர் கொண்டது. கைகண்ட - அனுபவம் பெற்ற. இஃது ஏதுப் பெயர் கொண்டு முடிந்தது. `அனுபவம் பெற்றோர் யோகியர்` என்க. ``மூலம்`` என்றது நடு நாடியை. படர்வு - நினைவு. ``பரம்`` என்றது, `முதற்பொருள்` என்றபடி. `அங்கு (தில்லையில்) நடிகும் பரமே பரமாம்` என முடிக்க.
இதனால், தில்லைத் திருத்தலத்தின் முதன்மை கூறும் முகத்தால், அதன்கண் திருக்கூத்து நிகழ்த்தும் இறைவனது முதன்மை கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும்
பேறான வேதா கமமே பிறங்கலால்
மாறான தென்திசை வையகம் சுத்தமே.
பொழிப்புரை :
பரத கண்டத்தின் தென்னெல்லையாகிய, `கன்னி துறை` எனப்படும் குமரித் துறையும், காவிரியும், பிற நவ தீர்த்தங்களும், `ஆனை மலை, பசுமலை, நாகமலை சிராமலை, அண்ணாமலை, மறைமலை, காளத்திமலை` என்னும் ஏழு மலைகளும், வேத ஆகம ஒழுக்கங்களுள் சிறந்து விளங்குதலால், அக்கண்டத்தில் நிலைதிரியாததாகிய தென்பகுதியே நிலவுலகத்தில் முத்தி நிலமாகும்.
குறிப்புரை :
காவிரியோடு உடன் வைத்து எண்ணத்தகும் வேறு ஒன்பது யாறுகள் `பொருநை, (தாமிரவருணி) வையை, மணிமுத்தம், நிலா, (வெள்ளாறு), கெடிலம், தென்பெண்ணை, பாலி, கம்பை, பொன் முகலி` என்பன. மிக்குள்ள ஏனைய வெற்புக்களினும் மேம்பட்டுள்ளன. `பிறத்தலால் என்பது பாடம் அன்று.
பரத கண்டத்தின் வடபகுதி யவனர்கள், முகமதியர்கள் முதலியோரால் பேரிடர்ப்பட்டுத் தனது நிலை திரிந்தது போலத் தென்பகுதி என்றும் நிலை திரிதல் இல்லாமை தோன்ற, ``மாறாத தென்திசை`` என்றார். `அசோக மன்னனும் பாலாற்றைக் கடந்து அப்பால் தெற்கே செல்ல இயலாமல் திரும்பி விட்டான்` என்பர்.
கங்கை, யமுனை, சரசுவதி, கோதாவரி முதலிய நதிகளாலும், இமயத் தொடராலும், காசி, கேதாரம் முதலிய தலங்களாலும் வடபகுதி இயற்கையில் சிறந்து நிற்பினும் அயலவர் நுழைவால் நிலை திரிந்தமை அறிக.
`வேதாகமங்கள் வடபகுதியில் தோன்றினவாகச் சொல்லப் படினும் அவைகளின் ஒழுக்கம் சிறந்து விளங்குதல் தென்பகுதியில் தான்` என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை ``சுத்தம்`` என்றது முத்தி நிலையை. சுத்தத்தைத் தருவதனை, ``சுத்தம்`` என்றார்.
சேக்கிழார் நாயனாரும் இவ்வாறே, `மாதவம் செய்த திசை தென்திசையே` எனக் கூறி, அதற்குக் காரணம் யாது` என முனிவர்கள் வினாவ, உபமன்னியர், `தில்லை, திருஆரூர், காஞ்சி, திருஐயாறு, சீகாழி முதலிய இறை தலங்களை மிகப்பெற்றிருத்தலே` என விடை யிறுத்து, பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை`` என வலியுறுத்திக் கூறினார் என அருளிச் செய்தார்.l இன்னும் அவர்,
``திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற`` எனவும்,
`அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல`3 எனவும் அருளிச்செய்தார்.இந்நாயனார்,
``என்னைநன் றாக இறைவன் படைத்தனன்,
தன்னைநன் றாகத் தமிழ்ச் செய்யு மாறே,``
``தங்கி மிகாமைவைத் தான்தமிழ் வேதம் ... ...
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்,``9
என்பவற்றால் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தி, இங்குத் தமிழ் நிலத்தின் சிறப்பை உணர்த்தினஆர். இவற்றால் எல்லாம் தமிழ் மொழியும், தமிழ் நிலமுமே சிவனருள் பெறுதற்குச் சிறந்த வாயிலாதல் விளக்கியவாறாம்.
இதனால், தென்திசையே சுத்தமாகத் தில்லை சுத்தத்தில் சுத்தமாய் உள்ளது` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 8
நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப்
போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.
பொழிப்புரை :
சொல்லுலகத்திற்கு முதலாகிய நாதத்திலும் அதன் காரியமாகிய நால்வகை வாக்குக்களிலும், அவ்வாக்குகளாய் வெளிப் படுகின்ற வேதாகமங்களிலும், அவற்றின்வழி வேட்கப்படுகின்ற வைதிகாக்கினி, சிவாக்கினி என்பவற்றின் கொழுந்திலும், உயிர்களின் அறிவிலும், எல்லா அண்டங்களிலும் ஆடுபவனாகிய சிவபிரான்,
குறிப்புரை :
(இதனை அடுத்துவரும் மந்திரத்தோடு கூட்டி முடிக்க.)
பண் :
பாடல் எண் : 9
தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.
பொழிப்புரை :
கூத்துக் கோலம் உடையனாய், `கோயில்` எனப் -படும் தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் தேவர்களும், மூவர்களும், முனிவர்களும் வேதமும், தமிழும் பாட, உமையம்மைதன் கண்முன் ஆடுகின்றான்.
குறிப்புரை :
``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் பலவும் எண்ணின்கண் வந்தன. வேதத்தைக் கூறவே ஆகமமும் அடங்கிற்று. ``நாதத்தில் ஆடி`` என்னும் மந்திரத்துள் `சிவன் உலகரால் அறியப் படாத பல இடங்களில் ஆடுபவன் என்பதைக் கூறி, ``தேவரொடாடி`` என்னும் மந்திரத்தில் `அத்தகையோன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவத் திருமேனி கொண்டு ஆடுகின்றான்` என்பதைக் கூறினார். `நாதம் முதலியவற்றில் ஆடுபவன் தில்லையில் தேவர் முதலியோர் சூழ அம்மைமுன் ஆடுகின்றான்` என ஒரு தொடரால் சுருங்கக் கூறிப் போகாமல், `ஆடி, ஆடி, ஆடி ... ... ... ஆடுகின்றான்` என பல தொடரால் விரியக் கூறினார் தில்லைக் கூத்தின் அருமையை வலியுறுத்தற்கு. யாண்டும் மந்திரங்களைக் குனகமாகச் செய்தார். இக்கூத்தின் பெருமை ஒரு செய்யுளில் அடங்காமை காட்டிச் சொல்லில் அடங்காமை தோற்றுவித்தற்குப் ``பராசத்தியில்`` என்பது `பரா சத்தி யிடத்தில்` என்னும் பொருட்டாய், `பரா சத்தி முன் னிலையில்` எனப் பொருள் தந்தது. `கோவிலுள் கூத்தப் பிரானாய்` என ஆக்கம் வருவித்து, ஆடிடும்` என முன்னே கூட்டி முடிக்க.
இவ் இருமந்திரங்களாலும், `தில்லைக் கூத்தின் பெருமை சொல்லில் அடங்காதது` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 10
ஆறு முகத்தின் அதிபதி தான்` என்றும்
கூறு சமயக் குருபரன் தான் `என்றும்
தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே`.
பொழிப்புரை :
கூத்தப் பிரான் ஒரு திருமுகத்தையே கொண்டு, ஒருவனேயாய் இருப்பினும் `ஆறு திருமுகங்களையுடைய முழுமுதற் கடவுளும் தானே` எனவும், அநைத்துச் சமய முதல்வனும் தானே` எனவும் தனது திருநடனக் குறிப்பை உணர வல்லவர்கள் உணர்ந்து கொள்ளும்படி தில்லைத் திருவம்பலத்துள் எஞ்ஞான்றும் விளங்கி நிற்கின்றான்.
குறிப்புரை :
`உச்சியில் ஒன்றும், நான்கு திசைகளிலும் நான்கும் ஆக ஐந்து முகங்களையே உடையவனாய்ச் சிவபிரான் உலகத்தை ஐந்தொழிற்படுத்து நடத்துகின்றான் என்றே வேதாகமங்கள் கூறியபோதிலும், `அந்த ஐந்து திருமுகங்கள் வெளிப்படையாய் விளங்குவன` என்பதும், `கீழ்நோக்கிய ஒருமுகம் ஞானியரே உணரும் வண்ணம் மறைந்துள்ளது` என்பதும் வேதாகமத் துணிபுகள் என்பதை நாயனார் இரண்டாம் தந்திரத்து `அதோமுக தரிசனம்` என்னும் அதிகாரத்துள் குறிப்பால் உணர்த்தினமை காண்க. ஐந்து முகங்களும் பொதுவாக ஐந்தொழிலை இயற்றினும், அவரவர் விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றும் சிறப்புத் தொழில்களை அதோமுகம் செய்யும் என்க. அது தேவர் வேண்டுகோளுக்கு இரங்கி முருகனை அளித்த வரலாற்றால் நன்கு விளங்கும்.
`தோற்றம் துடியதனில்` என்னும் உண்மை விளக்க வெண்பாவால் கூத்தப்பிரான் ஐம்முகம் செய்யும் ஐந்தொழில்களைச் செய்தல் விளங்கும். `வரைமகள்தான் காண்படியே`` எனவும், ``மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம் பலத்தே ஆதியும் நடுவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் - நாதனார்`` எனவும் பிற இடங்களிலும் ``பரா சத்தியில் ஆடி`` என முன் மந்திரத்திலும் கூறிய வாறு தேவியை உடன் கொண்டு, அவள் காண ஆடுதலே அதோமுகம் செய்யும் செயலைக் குறிக்கும். சமயங்கள் யாவும் அவற்றின் முதலாசிரியர்களாலே தோற்றுவிக்கப்படினும் அவர்களை அவ்வாறு தோற்றுவிக்கச் செய்தவனும் சிவனே யாதல் பற்றி, ``கூறு சமயக் குருபரன் தான்`` என்றார். அதுவும் அதோமுகச் செயல்களில் ஒன்றே என்க. வேறின்மை - நீங்குதல் இன்மை.
இதனால், தில்லைக் கூத்தபிரானே எல்லா மூர்த்திகலுமாய் நிற்றல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 11
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.
பொழிப்புரை :
எம் இறைவனாகிய சிவன், தில்லைத் திருவம் பலத்திலே ஆடும் அரங்கமாகக் கொண்டு அதன்கண் ஓய்வின்றி ஆடுவான். அவனது வலம், இடம் ஆகிய இரண்டு திருவடி களினின்றும் எழும் கழல் சிலம்பின் ஓசைகள் முறையே நாதமும், விந்துவுமாய் நிற்கும். அவை பரநாத பர விந்துக்களாம். அவையே அவற்றின் கதிர்களாகிய `அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை` என்னும் ஐந்து தத்துவங்களில் அவற்றின் நிலைமையவாய் நிற்க, சிவனும் அம்முறையால் உயிர்களிடத்துப் பொருந்தி அவற்றிற்கு அறிவைத் தருவான்.
குறிப்புரை :
`உப்பாம்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. உகரச் சுட்டு மேலிடத்தை உணர்த்திற்று. ``பரமாம் என்பதன்பின், `அவை` என்னும் சுட்டு வருவித்து, ``நின்று`` என்பதனை, `நிற்க` எனத் திரிக்க. `இவ்வாற்றால் யாது சொல்லப்பட்டது` எனின், தில்லைப் பெருமான் திருக்கூத்தினின்றே பரநாத பர விந்துக்கள் தோன்றி, சிவம், சத்தி முதலிய சிவதத்துவம் ஐந்திலும் அவற்றிற்கு ஏற்ற வகையில் பொருந்தி நின்று உயிர்களுக்கு அறிவை உண்டாக்குகின்றன` என்பது சொல்லப்பட்டதாம். இவ்வாறு அறிவைத் தருகின்ற நடனம், `அதி சூக்கும நடனம்` என்றும், `பர நடனம்` என்றும், `அது புருவ நடுவில் நிகழும்` என்றும் சொல்லப்படுகின்றது.
``நாதத்து ரேகை`` என்பதில் நாதம், பரநாதம், அதனைக் கூறவே பரவிந்துவும் உடன் கொள்ளப்பட்டது. ரேகை - கதிர், என்றது கூற்றினை. சிவ தத்துவங்கள் வித்தியா தத்துவங்களைச் செலுத்த, உயிர்களுக்கு அறிவு பொதுவகையான் நிகழும். பின்பு வித்தியா தத்துவங்கள் அந்தக் கரணங்களைச் செலுத்த அறிவு அவ்வப் பொருள்கள் மேல் சிறப்பு வகையால் நிகழும் `இவ்வாற்றால் இறைவன் உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கின்றான்` என்பதும், `அவ்வாறு பிறப்பித்தலே அவனது பர நடனம்` என்பதும் சைவ தத்துவங்களாதலை நாயனார் இம்மந்திரத்தால் உணர்த்தியருளினார்.
இதனால், தில்லைத் திருக்கூத்தே உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கும் கூத்தாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 12
ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.
பொழிப்புரை :
ஞான குருவாய் நின்று ஞானத்தைத் தருகின்ற சிவன், அவ்வாறன்றி, ஊன்றியும் தூக்கியும் ஆடும் கால்களும் அவற்றில் கழலும் சிலமும் ஆகியவற்றின் ஓசைகளும், அருகில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்களும், பலவகையான கரணங்களும் கூடிய கூத்துக் கோலத்தைக் கொண்டு ஆடுதலை அறியாமல், அவனை எங்கெங்கோ தேடியலைந்து, பின்பு என் உள்ளத்திலே அந்தக் கூத்துக் கோலத்தைக் கண்டேன். அக் காட்சியே யான் பிறவிக் கடலினின்றும் நீங்கிக் கரையேறிய நெறியாகும்.
குறிப்புரை :
``குரு பரன்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. `குருபரனாய் வந்து செய்கின்ற அருளையே கூத்தனாய் நின்று செய் கின்றான்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. கூத்தனாய் என ஒரு சொல்லாற் சொல்லியொழியாது, அக்கோலத்தை வகுத்துக் கூறினார், அதனை உள்ளத்தே கண்டவாறெல்லாம் இனிது விளங்குதற்கு. கண்டது, `உள்ளே` என்றதனால், தேடியது `வேளியே` என்பது போந்தது. `பிறவி யறுதலை எண்ணாதவர் திருக்கூத்தினைப் புறத்தே மட்டும் ஒருகாற் கண்டு ஒழிவர்` என்பதும், `பிறவியற வேண்டுபவர் அதனை எஞ் -ஞான்றும் உள்ளத்தே கண்டு கொண்டிருப்பர்` என்பதும் கூறியவாறு. கண்டமைக்கும், அற்றமைக்கும் `யான்` என்னும் எழுவாயும், `அற்றவாறு அறியத்தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. கூத்தப் பிரான் ஒருகாலிற் சிலம்பும், ஒரு காலிற் கழலும் அணிந்திருத்தல் அவற்றுள் ஒன்றைக் கூறவே மற்றொன்றும் பெறப்பட்டது.
இதனால், `கூத்துக்கோலம், போகியர்க்கு போகவடிவாதலே யன்றி, யோகியர்க்கு யோக வடிவுமாம்` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 13
இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.
பொழிப்புரை :
(`பிற உலோகங்களை நோக்கப் பொன் உயர்ந்தது` என்பதில் ஐயம் இல்லை. ஆயினும், `பொன்னிலும் மாணிக்கம் உயர்ந்தது` என்பது தெளிவு ஆதலால்) ஐவகை மன்றினுள்ளும் மணிமன்றினுள் ஆடும் ஆடற்பிரானே யோகியர்க்கு யோகமும், போகியர்க்குப் போகமும் ஆகின்ற அருட் கூத்தினை எல்லா இடங்களிலும் சென்று ஆடுகின்றான். `அஃது எதுபோலும்` எனின், இருதயத்திலே நிறைகின்ற பிராண வாயுவும் அவ்விடத்தினின்றும் குருதியோடு ஓடி உடம்பெங்கும் நிறைதல் போலும்.
குறிப்புரை :
`இச்சிறப்புப் பற்றியே அந்த மன்று மணிமன்றாய் உள்ளது` என்க. அது திருஆலங்காட்டு மன்றமாம். அவ்விடத்துக் கூத்து, காலை உயர்த்தி ஆடும் கூத்து (ஊர்த்துவ நடனம்) ஆதலும், ``எண்டோள் வீசிநின்று ஆடும் ஆடல்``33திருமுறை - 4.9.2. ஆதலும் எண்ணத் தக்கன.
``இன்னும் வேண்டும், நான் மகிழ்ந்து பாடி
அறவா, நீ ஆடும்போது `உன் அடியின்கீழ் இருக்க``*
என வேண்டிய அம்மைக்கு. இறைவன் ஆலங்காட்டு நடனத்திலே அவ்வாறு இருக்க அருள்புரிந்தமையும் கருதத் தக்கது. முன் அதிகாரத்தில் நாயனார் சிவன் ஆடும் இடங்களை எல்லாம் கட்டியதில், கனகா சலத்தில் ஆடுதலுக்கும் முன்னே காயோடு ஆடிய ஆலங்காட்டு நடனத்தையே முதலாவதாகக் குறித்தார். இது உலகம் காளியால் அழிந்தொழியாதவாறு காத்த நடனமாகச் சொல்லப்படுதலும் நோக்கத்தக்கது.
``தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்க வேற்காளிக்(கு) ஊட்டாங்காண் சாழலே``*
பண் :
பாடல் எண் : 1
குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
அருஉரு ஆவதும் அந்த உருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாளும் உமையவள் தானே.
பொழிப்புரை :
சிவபிரானது கூத்த வடிவமே சகல வருக்கத் -தினருக்குக் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்தும் வடிவமும், திருக் கோயில்களில் மூலத் தானத்தில் எழுந்தருளியிருந்து வழிபாட்டினை ஏற்று அருள்புரியும் இலிங்க வடிவமும் ஆகும். இனி அவ்வடிவத்தின் பக்கத்தில் பெண்ணுருவாய் நிற்பவளும், மற்றும் சிவனுக்கு மூவகைத் திருமேனியாய் விளங்குபவளும் கூத்தப் பெருமானது சத்தியே.
குறிப்புரை :
`குனிக்கும் உருவமே குரு உரு; அன்றி, அரு உரு ஆவதும் அந்த உருவே` என இயைத்துக் கொள்க. புரம் - திருமேனி. புரை - திருமேனியாய் உள்ளவள். `உருவாய் வருவாளும்` என ஆக்கம் விரிக்க. ``உமையவள்`` என்றது, `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. இவ்வாறெல்லாம் கூறியது, கூத்தப் பெருமானை வணங்கும் வணக்கத்தின் பயனை நோக்கியாம்.
இதனால், `கூத்தப் பெருமான் வணக்கமே அனைத்துத் திருமேனிகளின் வணக்கமாம்` என அவனது சமட்டி நிலை அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 2
திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே
உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.
பொழிப்புரை :
ஒருவனுக்கு வீட்டு நெறியாவது, அவனது உள்ளத்தில் அவனுக்குக் குருவாய் வந்து அருள் புரிந்தவர் நீங்காதிருக்க, வெளியில் சிற்றம்பலத்தில் அம்பலவாணர் ஆடுதலேயாகும். (உள்ளத்தில் குருவைத் தியானித்தலும், வெளியில் திருக்கூத்தைக் காணுதலுமேயாகும்` என்பதாம்.) உண்மையை ஊன்று உணர்ந் தோர்க்கு மூவகைத் திருமேனிகளும் ஞான நெறியும் அவையேயாம்.
குறிப்புரை :
`திரு` என்பது வீடாதலை, ``போகமும், திருவும் புணர்ப்பானை``3 என்பதனால் அறிக. `உன் குருவடிவு ஆக` என மாற்றி, ``திருவழியாவது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``குணக்கும் உருவே`` என்றாராயினும் `உருவாய்க் குனித்தலே` என்றலே கருத்தென்க. `குனித்தல்` என்றதும் அதனைக் காணுதலையே. உற்று உணர்ந்தோர்க்கு, உருவாவதும், அருவாவதும், அருள்வழி யாவதும் அவ்வழியே என இயைத்து முடிக்க. தான், அசை, வழி-வாயில். `உரு, அரு` என்பவற்றைக் கூறவே, உருவாருவமும் கொள்ளப்படும். தியானிக்கப்படுவதும் குனிப்பதும் உருவம் முதலியன ஆவனவும் வேறுவேறாய் இருக்க, அவற்றை, ``குனிக்கும் உருவே`` என, அஃது ஒன்றேயாகக் கூறியதுதான் இங்குக் குறிப்பிட்ட அற்புதம்.
``சிறைவான் புனல் தில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தை
யுள்ளுக உறைவான்``
என்றவிடத்தும் இவ்வற்புதம் குறிக்கப்பட்டமை காண்க.
இதனால், மேற்கூறிய சமட்டி நிலையில் உள்ளவைகளில் தலையாயதாகிய ஞான நிலை, சிறப்புப் பற்றி வேறெடுத்துக் கூறப்பட்டது.
``மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற
வாணுதல் மான்விழி மங்கை யோடும்
பொய்ம் மொழி யாமறை யோர்கள் ஏத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே!
``எம்மிறையே` இமை யாத முக்கண்
ஈச!என் நேச!இ தென்கொல் சொல்லாய்;
மெய்ம்மொழி நான்மறை யோர் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே``
``அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ,
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கய லார்புனற் செல்வம் மல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள
கங்குல் விளங்கெரி யேந்தியாடும்
கணபதி யீச்சரங் காமுறவே``1
``பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றி நின்று
நாடகம் ஆடும்நள் ளாறுடைய
நம்பெரு மான்!இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தை மார்கள்
துணைவ ரொடுந்தொழு தேத்தி வாழ்த்த
ஆடக மாடம் நெருங்கு கூடல்
ஆலவ யின்கண் அமர்ந்தவாறே``
``பருமதில் மதுரைமன் அவையெதிரே
பதிகம் தெழுதிலை யவை யெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே``2
``... ... ... ... பேணு பெருந்துறையுட் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்``3
என்றாற்போல ஏனை ஆசிரியர்களும் ஏகதேசியாய்க் காணப் படுபவன் எங்குமாய் நின்று அருள்புரிதலை வியந்தருளிச் செய்தல் காணத்தக்கது.
பண் :
பாடல் எண் : 3
நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து)
ஆடும் இடம்திரு அம்பலத் தானே.
பொழிப்புரை :
உள்ளே புகுந்து, வெளியே ஓடும் இயல்புடைய பிராணன் மூலாதாரத்திலினின்றும் எழுந்து சுழுமுனை வழியாக மேலே செல்லுங்கால், புருவ நடுவையும் கடந்து உச்சியை அடைந்து, அதற்கு மேலேயும் பன்னிரண்டங்குலம் சென்றால் பின்பு கிடைப்பது மேல் நிலைத் தத்துவமாகிய நாதத்தையும் கடந்து நிற்கின்ற நம் பெருமானாகிய சிவன் மிகவும் விரும்பி ஆடும் இடமாகிய திரு வம்பலமே. அதனை நீங்கள் உணருங்கள்.
குறிப்புரை :
``நாடுமின்`` என எடுத்தோதியது, பொற்பதிக் கூத்து, பொற்றிலைக் கூத்து ஆகியவற்றில் காணப்படும் அம்பலங்களை இம்மீதான அம்பலமாக உணர்ந்து வணங்குதல் சிறப்பு` என்பது உணத்துதற் பொருட்டாம்.
ஆறு ஆதாரங்களில் மேல் உள்ளதாகிய ஆஞ்ஞைக்கு அப்பால் உச்சி வரை ஏழாந்தானம். அதற்கு மேல் பன்னிரண்டங்குலம் நிராதாரம்; அதைக் கடந்த பெருவெளி மீதானம். அதுவே பரவெளி. `துவாதசாந்தம்` என்று சொல்லப்படுவது.
பிராணன் ஏழாம் தானத்திற்கு அப்பால் செல்லுதல் இல்லை. வலிந்து செலுத்தினால் பின் திரும்பாதாக, உடம்பு வீழ்ந்துவிடும். ஆயினும் பிராசாத கலைகளால் பிராணன் நிராதாரத்தளவு செல் வதாகப் பாவித்து நிற்றல் பற்றி ``பன்னிரண்டங்குலம் உதித்திட`` என்றார். உதத்தல், இங்கு, செல்லுதல். `உதித்திட அப்பால் அம்பலந் தான்` என ஒருசொல் வருவித்து முடிக்க. தான் என்பது தேற்றப் பொருள் தந்து நின்றது.
``ஓடும் உயிரெழுந்து ஓங்கி`` என்பதை முதலிலும், ``நாடுமின்`` என்பதை ஈற்றிலும் வைத்துரைக்க.
இதனால், புற அம்பலங்கள் அக அம்பலங்களாகச் சிறந்து நிற்கும் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.
பொழிப்புரை :
[அம்பலங்கள் பலவற்றையும் உகந்து ஆடும் நம்பெருமான் வானத்தில் அடங்கியுள்ள காற்று, மேகம், மின்னல், வில், இடி, ஓசை என்பவைபோல,] நிவிர்த்தி முதலிய கலைகளில் அடங்கியுள்ள `தத்துவம், புவனம், வன்னம், பதம், மந்திரம்` என்னும் ஐந்தோடும், கலையையும் கூட்ட ஆறோடும் ஒன்றாய், வேறாய், உடனாய்க்கலந்து அறிவு வடிவாய் அவற்றினின்றும் பிரித்துக்காண வாராமல் மறைந்தே நிற்கின்றான்.
குறிப்புரை :
`அம்பலங்கள் பலவற்றிலும் காணப்படுகின்ற இவன், மேல் நுண்ணியவாய் மிகப்பெரிய அளவில் விரிந்து கிடக்கின்ற அவை அனைத்திலும் ஒளிந்து நிற்றல் வியப்பு` என்பதாம். இம்மந்திரத்திற்கு எழுவாய் முன் மந்திரத்திலிருந்து என்பதாம். இம்மந்திரத்திற்கு எழுவாய் முன் மந்திரத்திலிருந்து வந்து இயைந்தது. காற்று வடிவம் உடைத் தாயினும், உருவம் இல்லது ஆகலின் அது காரண ரூபமான தத்துவங் கட்கும், மேகம் பல்வேறு வடிவங்களாய் வியப்புறத் தோன்றுவது ஆகலின் அது விசித்திரமான பல புவனங்கட்கும், மின்னல் விரையத் தோன்றி, விரையமறைவது ஆகலின், அது விரையத் தோன்றி விரைய மறையும் வன்னங்கட்கும், (எழுத்துக்களுக்கும்) வானவில் பல நிறங்களையுடையதாய், அழகிதாய் உள்ளத்தைக் கவர்தலின் அது பொருளுணர்ச்சியைத் தரும் பதங்கட்கும் இடியோசை பெருமுழக்கம் ஆதலின் அது நன்கு உச்சரிக்கப்படுகின்ற பாட்டாகிய மந்திரத்திற்கும், வானம் இவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்றலின் அஃது அத்து வாக்கள் ஆறில் ஏனை ஐந்தையும் தன்னுள் அடக்கி நிற்கும் கலைக்கும் உண்மையாயின. இனி, ``ஓை\\\\u2970?`` என்பதை, `ஆகாயத்தின் குணமாகிய ஓை\\\\u2970?` எனக் கொள்ளலும் ஆம். பிற ஓசைகளை நீக்குதற்கு ``வானக ஓை\\\\u2970?`` என்றார். களிஒளி - களிப்பைத் தருகின்ற ஒளி. ``ஒளி`` என்றது அறிவை. அறிவைத் தருவனவற்றை `அறிவு` என்றார். `அறிவைத் தருகின்ற ஆறு` எனவே, அவை அத்துவா ஆதல் விளங்கிற்று. `கலந்து - ஒன்றாய்க் கலந்து` என்க.
இதனால், பொற்பதிகளிலும், பொற்றில்லையிலும் ஆடும் பெருமான் அகண்ட வியாபகனாய் நிற்கும் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 5
தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடம்செய்யு மாறே.
பொழிப்புரை :
இருளை ஓட்டுதலால் முதன்மை பெற்ற தீ முதலிய ஐம்பெரும் பூதங்களும், கிழக்கு முதலிய எட்டுத் திசைகளும், மற்றும் அவற்றோடு உடன் எண்ணப்படுகின்ற `கீழ், மேல்` என்னும் பக்கங்களும், இவற்றையெல்லாம் பற்றி ஆராய்ந்தறிவதாகிய உயிர்களின் அறிவும் ஆகிய இவையெல்லாவற்றிற்கும் அப்பால் உள்ளது உண்மையான இன்பம், அதனை அசுத்த மாயை, சுத்த மாயை ஆகிய இருமாயைகளையும் கடந்தவரே பெறுவர். அவர் அங்ஙனம் அதனைப் பெறுதற் பொருட்டே சிவன் நிலவுலகில் நின்று பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து இவற்றைச் செய்கின்றான்.
குறிப்புரை :
`நாயகன் நின்று நடம் செய்யும் ஆறு, தீ முதல் அப்புற ஆனந்தம் கடந்து நின்றார் காண` என இயைத்து முடிக்க. ``அறி வினுக்கு`` `அறிவும் ஆகிய இவற்றுக்கு` என விரிக்க இகர. உயிரும், யகர மெய்யும் மொழியீற்றின் உறழ்ந்து வரும் இயல்புடைமையால்9 ஈகாரம் ஒன்றே யகர எதுகையை நிரப்பிற்று? என்க.
இதனால், நிலவுலகக் கூத்து பரானந்தத்தைத் தருகின்ற அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 6
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.
பொழிப்புரை :
கூத்தப் பெருமான், தான் மட்டும் தனியே நின்று ஆடாமல், உமை ஒருபால் நிற்கக் கொண்டு, அவள் கானவே ஆடுதல் வெளிப்படை. அதனாலேதான் அவனது கூத்து ஆனந்தமயமாயும், ஞானமயமாயும் உள்ளது. ஒரு கூத்திலே இருவர் பங்கும் உள்ளனவேயன்றி, இருவரும் இருகூத்து இயற்றிலர்.
குறிப்புரை :
`ஞானமும், ஆனந்தமும் இறைவனுக்குக் குணங்கள் ஆதலின் அவை அவனது சத்தியேயாம்` என்பதும், `சத்தியின்றிப் பொருள் இல்லை ஆதலால், அவள் இன்றி அவன் ஆடுதல் இல்லை` என்பதும், `பொருளும், சத்தியும் வேறு வேறு ஆகாமையின், இருவரும் ஒரு கூத்தினையே உடையர்` என்பதும் கூறியவாறு. `வேறொரு கூத்தை ஆடியவன் காளி` என்க.
``கூத்ததின்மேலே`` என்பதற்கு, `ஒரு கூத்ததின்மேலே` என உரைக்க. அது பகுதிப் பொருள் விகுதி. `மேலே உள்ளனர்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. கோது - துன்பமும், அறியாமையும். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், ஒரு நடனத்தை இருவர் இயற்றுதலும், அதனால் பிறவற்றில் பெறப்படாத பயன் விளைதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 7
இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.
பொழிப்புரை :
`எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்று கின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூடைபோல ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்.
குறிப்புரை :
``சத்தி`` என்றதனால், `சிவன்` என்பதும், ``எந்தை`` என்றதனால், `எம்தாய்` என்பதும் பெறப்பட்டன. `கருதல் அளவையால்` என்பது, ஆற்றலால் வந்தது. கருதலளவையால் அதனை யறிந்தவாறாவது,
``சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும், பெண்ணும், உயர்குண குணியுமாகி``9
நிற்றலைக் கொண்டு அறிவதாம்.
``இடம்`` என்றது உடம்பின் இடப்பாகத்தை யாதலின், `ஒருவரே இருவராய் நிற்றல்` பெறப்பட்டது. ``ஓர் உடம்பு இருவராகி``8 என அப்பர் அருளிச்செய்தமை காண்க. `இவர்கள் நடனம் ஆடுதல் உயிர்களின் பொருட்டே` என்பதை ஞான சம்பந்தரும்,
``ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் ... ... ... ... ... ...
நாடும் திறந்தார்க்கு அருளல்லது நாட்டலாமே``9
என அருளிச் செய்தமை காண்க.
இதனால், ஒருவரே இருவராய் நின்று ஆடுதலும் அவ் விடத்து, அடங்கலும் தாமாய் நின்று ஆடுதலும், தம் பொருட்டன்றிப் பிறர் பொருட்டாகவே ஆடுதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 8
சத்தி வடிவு சகலஆ னந்தமும்
ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு)
ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.
பொழிப்புரை :
எல்லா உயிர்கட்கும் ஏற்புடையதாகிய `இன்பம்` என்பது `சத்தி` என்னும் கூறே. அதனால், எந்த இன்பப் பொருளிலும் உள்ள எந்த இன்பமும் `சத்தி` என்னும் கூறே. (பொருள், `சிவம்` என்னும் கூறாம்) இனி எல்லாத் திருமேனி வகைகளும் சத்தியே. அந்நிலையில் பெருமானது சத்தியால் தோன்றி நிகழ்கின்ற ஒப்பற்ற நடனம், முத்தியின்பமாகிய பேரின்ப நடனமாகும்.
குறிப்புரை :
`திருக்கூத்துச் சத்தியால் உண்டாகி, ஆனந்தத்தைப் பொழியும்` என்றபடி. சகலம் - எல்லாம். உம்மை, முற்று. இனி, `சகலம் சகலநிலை` எனவும் உரைப்பர். அவர் உம்மையை இழிவு சிறப்பாகக் கொள்வர். இரண்டாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல். `சகளத்து` என்பதில் `அத்து` அல்வழிக்கண் வந்த சாரியை. `சகளமாய் எழும்` என ஆக்கம் வருவிக்க. ``சகளம்`` என்பது, பொதுவாகத் `திருமேனி` என்னும் அளவாய் நின்றது. `எழுந்து ஒத்த ஒரு நடம் ஆனந்த நடனமாம்` எனக் கூட்டுக. இரண்டு - இருவினை `இரண்டும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `இரு வினை யொப்பு` என்பது உபலக்கணத்தால் மலபரி பாகம், சத்திநிபாதம், ஞான முதிர்ச்சி இவைகளைத் தழுவி `முத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. ஒத்த காலத்தில் நிகழ்வதை ``ஒத்த`` என்றே உபசரித்துக் கூறினார்.
இதனால், திருக்கூத்து ஆனந்தக் கூத்தாதலாகிய அற்புதத்திற்குக் காரணம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 9
நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.
பொழிப்புரை :
நெற்றிக்குக் கீழே, இரு புருவங்கட்கு இடையே யுள்ள வெற்றிடம் தன்னை உற்று உற்றுப் பார்க்க, பார்க்குந்தோறும், பார்க்குந்தோறும் பார்ப்பவர்க்கு ஒளியை மிக மிக வீசுகின்ற ஓர் இல்லமாய் விளங்கும். `அந்த இல்லமே` சிவன் யாவரும் பற்றுதற்குரிய பற்றாய் இருக்குமிடம். அஃதாவது `ஞானாகாசம் என நான் திருவருளால் ஆராய்ந்து அடைந்தேன்.
குறிப்புரை :
உற்று உற்றுப் பார்த்தலாவது, உளம் ஒருங்கித் தியானித்தல். எனவே, அது தியானித்திற்குரிய இடமாதல் பெறப் பட்டது. ஒளி - ஞானம். மந்திரம் - இருப்பிடம். மேல் துவாத சாந்தத்தை `அம்பலம்` என்றும், இருதயத்தை `அம்பலம்` என்றும் கூறி, இங்கும் புருவ நடுவை `அம்பலம்` என்றது என்னையெனின், அண்டத்தில் அம்பலங்கள் பலவாதல்போலப் பிண்டத்திலும் அம்பலங்கள் பலவாதல் பற்றியாம். இருதய அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்கு உரியது, புருவ நடு அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்குரியது, புருவ நடு அம்பலம் தியானித்து ஞானம் பெறுதற்குரியது. துவாதசாந்த அம்பலம் அமைதியுற்று ஆனந்தம் எய்துதற்கு உரியது என்க. அண்டத்து அம்பலங்களும் வெள்ளி, பொன், மணி என வகைப்பட்டு நிற்றல் போலப் பிண்டத்து அம்பலங்களும் இவ்வாறு வகைப்பட்டு நிற்கும். ``மந்திரம்`` என்பதனை, `பஞ்சாக்கர மந்திரம்` என்பாரும் உளர். அஃது இவ்விடத்திற்கு இயைபில்லதாம் என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால் ஓர் அம்பலம் உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் அம்பலமாய் உள்ள அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 10
அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே`
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
பொழிப்புரை :
உலகங்கள் ஏழு, சாதாக்கியம் முதலாகக் கீழ் நோக்கியும், மேல் நோக்கியும் எண்ண வருகின்ற தத்துவங்கள் ஏழு, `தண்டு` எனப்படுகின்ற சுழுமுனை நாடியில் உள்ள, `சத்தம்` எனப்படுகின்ற வாக்கிற்கு முதல்வியாதல் பற்றி சாத்தவியாம் குண்டலி சத்திக்குரிய ஆதாரங்கள் ஏழு, அவற்றிற்குமேல் `வியாபினி, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்னும் சிவசத்திகளது இடங்கள் ஏழு, யாழ், குழல் முதலிய வற்றினின்றும் எழுகின்ற இசைகள் ஏழு ஆகியவற்றை எல்லாம் தனது இடமாகக் கொண்டு சிவன் நடம் புரிகின்றான்.
குறிப்புரை :
`இஃது அற்புதம்` என்பது குறிப்பெச்சம். ``ஏழும்`` என்பது இறுதி நிலை விளக்காய், ஏனை எல்லாவற்றோடும் சென் றியைந்தது. `சதாசிவம் ஆதி தத்துவம்` என இயைக்க. `சிவ தத்துவம் ஐந்து` என்பதே பெரும்பான்மையாக எங்கும் சொல்லப்படினும் பரநாத பரவிந்துக்களைக் கூட்டி, `ஏழு` என்றும் சிறுபான்மை சில ஆகமங்களில் சொல்லப்பட்டது. ``ஆதனம்`` என்பதைச் ``சாத்தவி`` என்பதனோடும் கூட்டுக. `தண்டு` என்பது, ``தெண்டு`` என மருவி வந்தது. தண்டு - யாழ். உபலக்கணத்தால் குழலும் கொள்ளப்பட்டது. இறைவன் சொல்லும், பொருளும் ஆதலேயன்றி ஏழிசையாய், இசைப்பயனுமாய்8 நிற்றலும் நன்கறியப்பட்டது. ``சிவாசனம்`` என்பதில் `சிவன்` என்பது `தன்` என்னும் பொருட்டாய் நின்றது அன்றி, `மங்கலப் பொருட்டாய் நின்றது` என்றலும் ஆம்.
இதனால், திருக்கூத்தின் வியாபக அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 11
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றது தான்இரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாகுமே.
பொழிப்புரை :
முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அம்பலங்கள் தாம் அளவிலவாதல் பெறப்பட்டமையால், அவைகளில் விளக்கொளி போல விளங்கி ஆடும் மூர்த்திகளும் எண்ணிலர். இனி அந்த அம்பலங்கள் மலராக விளங்க, இருநூற்றிருபத்து நான்கு புவனங்கள் அவற்றின் இதழாக, நிலையின்றித் தோன்றியழிவன. ஆகவே, என்றும் நிலையாயுள்ள சத்தியே அவனுக்கு என்றும் உள்ளதாகிய அம்பலமாம். ஆகவே, இதுவே அவனுக்கு நன்றாய அம்பலமாகும்.
குறிப்புரை :
`மன்று நிறைந்த விளக்கொளி நூறு; அவை மாமலராக, இதழ் தான் நாலொடு இருபத்து இருநூறு உள; சென்றது; நின்றதுதான் நெடு மண்டலம்; இதுதான் நன்று` என இயைத்துப் பொருள் கொள்க.
இதனுள் ``நூறு`` என்றது அளவின்மையைக் குறித்தது. `மலராக` என உவமம் குறித்த ஆக்கச்சொல் வருவிக்க. ``சென்றது`` என்றது பன்மையொருமை மயக்கம். `செல்வது` என எதிர்காலத்தாற் கூறற்பாலது, விரைவு பற்றி ``சென்றது`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. `நிற்பது` என்பதும் தெளிவு பற்றி ``நின்றது`` எனப்பட்டது. காலத்தின் நெடுமை அதில் உள்ள மண்டலத்தின்மேல் ஏற்றப்பட்டது. அம்பலத்தை, `மண்டலம்` என்றார்.
இதனால், அம்பலங்கள் பலவாயினும் உண்மை அம்பலம் சத்தியேயாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 12
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.
பொழிப்புரை :
அளவின்றி உள்ள அண்டங்கள், பிண்டங்கள், (உடல்கள்) பிருதிவி அண்டங்கள் தோறும் உள்ள அளவற்ற எழுவகைக் கடல்கள், அவைகளால் சூழப்பட்ட எழுவகைத் தீவுகள், எல்லாத் திசைகளிலும் நிறைந்துள்ள அளவற்ற மூர்த்தங்கள் இவை அனைத்தும் சிதாகாச வெளியில் உள்ள சிவன் நடனம் புரியும் இடங்களாம்.
குறிப்புரை :
``எழுகோடி`` என்றது அளவின்மையைக் குறித்தபடி. ``திை\\\\u2970?`` என்பது `இடம்` என்னும் பொருட்டாய்த் தீவுகளைக் குறித்தது.
இதனால், அளவிலா, எல்லா இடங்களிலும் திருக்கூத்து நிகழும் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 13
ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.
பொழிப்புரை :
ஆகாயம் ஒன்றேயாய் எங்கும் வியாபித்துள்ளது. ஆயினும் செயற்கையால் வரையறுக்கப்பட்டு, `மடாகாயம், கோயில் ஆகாயம், மன்ற ஆகாயம்` முதலாகப் பலவாறு வழங்கப்படுகின்றன. அவையெல்லாம் சிறு ஆகாயங்களாக, இயற்கை ஆகாயம் `மகாகாயம்` எனப்படும். சிறு ஆகாயங்களில் பல உருவங்களில் நடனம் செய்கின்ற சிவன் மகாகாயத்தையே அம்பலமாக ஒன்றேயான விசுவ ரூபத்தை உடையவனாயும் நடனம் புரிகின்றான். அந்நிலையில் அவனுக்கு ஆகாயமே உடல்; உயிர்களின் ஆணவ மலமே முயலகன்; போர்வை போலச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளே எட்டுக் கைகள்; சூரியன், சந்தரன், அக்கினி என்னும் முச்சுடர்களே விரும்பத்தக்க மூன்று கண்கள் என இவ்வாறு அமையும்.
குறிப்புரை :
`ஆங்காரம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து, ``ஆங்கார்`` என நின்றது. அஃது அதற்குக் காரணம் ஆணவ மலத்தைக் குறித்தது. `மோகமார்` என்பதும், அவ்வாறு, `மோகார்` என நின்றது. மோகம் - விருப்பம். ``மாகாயம்`` என்பதில் காயம் - ஆகாயம்.
இதனால் அகண்டமாய் உள்ள விசுவரூப நடன அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 14
அம்பல மாவ அகில சராசரம்
அம்பல மாவன ஆதிப் பிரானடி
அம்பல மாவன அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவன அஞ்செழுத் தாமே.
பொழிப்புரை :
சிவபெருமான் திருக்கூத்தியற்றுதற்குரிய அம்பலமாய் நிற்பன, நீர், தீ (இனம் பற்றி, நிலம், வளி, வான்) இவற்றின் அண்டங்களும், அனைத்து இயங்கு திணை நிலைத்திணை உயிர்களும், திருவைந்தெழுத்தும், அவனது வட இடத்திருவடிகளும் ஆகும்.
குறிப்புரை :
இவை தூல சூக்கும வகையில் ஒன்றைவிட ஒன்று சூக்கும மாகிய அம்பலம் இவை செய்யுள் பற்றி ஏற்ற பெற்றியில் கூறப் பட்டன. அஞ்செழுத்து அருட்சத்தி, திரோதான சத்தி, உயிர் என்பவை களாய் நிற்றலின் அவையும், பிரானது வலத்திருவடி திரோதான சத்தியும், இடத்திருவடி அருட்சத்தியும் ஆதலின் அவையும் அம்பலமாயின.
இதனால், திருக்கூத்து அனைத்த தூல சூக்கும அதிசூக்கும அம்பலங்களில் நடைபெறும் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 15
கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன
நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காமே.
பொழிப்புரை :
சிவனது பலவகைக் கூத்தில் `பாண்டரங்கம்` என்னும் கூத்து (திரிபுரத்தை எரித்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆதலின்,) ஒன்றோடு ஒன்று இயைந்து ஒலிக்கும் மத்தளமும், குழலும் `ஓம்` என்று ஒலிக்கவும், அந்நடனத்தின் குறிப்பை ஆராய்ந்து நோக்கிய பதினெண் கணங்களும் நிறைந்த பூதப்படைகளும் பல பாடல்களைப் பாடவும், அவர்களோடு மக்களும் கண்டு, `இவனே முதற்கடவுள்` என உணர்ந்து களி நடம்புரியவும் நிகழ்ந்தது.
குறிப்புரை :
``பூதங்கள் பாடியவாறு`` - என்றாராயினும், `பூதங்கள் பாட மானுடர் ... ... ... ஆடியவாறு` எனக் கூட்டி, `நிகழ்ந்தது` என ஒரு சொல் வருவித்து முடிக்க. இதில், மானுடர் கண்டு தெரிந்து ஆடினமை சிறப்பாகக் குறிக்கப்பட்டது.
``தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன்பாண்ட ரங்கமும்``3
என்பதற்கு,
``வானோராகிய தேரில், நான்மரைக் கடும்பரி பூட்டி நெடும் புறம் மறைத்து, வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன்னின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பாண்டரங்கக் கூத்தும்``
என்ற அடியார்க்கு நல்லார் உரையைக் காண்க. `பாண்டரங்கம்` என்பது கடைக் குறைந்து நின்றது.
இதனால், திருக்கூத்து வகைகளில் ஒன்றன் அற்புதம் எடுத்தோதி விளக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 16
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.
பொழிப்புரை :
வானம் அண்டங்களுக்கு உள்ளேயும் உள்ளது; வெளியேயும் உள்ளது. அதுபோல, நிலத்திற்கு அண்மையிலேயும் உள்ளது. சேய்மையிலேயும் உள்ளது. அதனால் அந்த இடங்களில் எல்லாம், வானவராகிய தேவர்களும் இந்த இடங்களில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தில்லைப் பொன்னம்பலத்தில் கூத்தப் பெருமான் தாமரை மலர்போலும் திருவடிகளைப் பெயர்த்து ஆடும் திருக்கூத்தினைக் கண்டு வணங்கி நற்கதியை அடைகின்றார்கள்.
குறிப்புரை :
`தேவர்களைக் கூறவே, மக்களைக் கூறவேண்டா` என்பது கருத்து.
இதனால், மண்ணுலகத் திருக்கூத்தினை விண்ணவர்களும் கண்டு வணங்கி நற்கதிபெறும் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 17
புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.
பொழிப்புரை :
புளியை நாவில் இட்டுச் சுவையாவிடினும் அதனைப் பார்த்தபோதே பார்த்தவர்கட்கு அதனைச் சுவைத்தாற் போல நாவில் நீர் ஊறுதல் அனைவரும் அறிந்தது. அதுபோல, கூத்தப் பெருமானது ஆனந்தக் கூத்தினைக் கண்டவர்கட்கு அக்கூத்தில் காணப்படும் குறிப்பின் பொருளைப் பெறாவிடினும் பெற்றுவிட்டது போன்ற இன்பம் உள்ளத்தில் ஊற்றெடுக்க உடலிலும் அதற்குரிய மெய்ப்பாடுகள் தோன்றும்.
குறிப்புரை :
அம்மெய்ப்பாடுகள் கண்ணீரரும்புதல் ஒன்றை மட்டும் தோற்றுவாயாகச் சுட்டினார். மயிர் சிலிர்த்தல், உடல் கம்பித்தல், நாத்தழுதழுத்தல் முதலியன பிறவாம். களிக்கும் திருக்கூத்து - களித்தற்கு ஏதுவாய திருக்கூத்து. ``துளிக்கும் கண்ணீர் சேரா`` என்றது, `முன்பு அரும்பிப் பின்பு தாரையாய் ஒழுக` என்றபடி. `அக்கூத்து நெஞ்சை உருக்கும்` என்க. ஒளி - சிவம். அதனுள் ஆனந்தமாவது, அதில் தோய்ந்து பெறும் ஆனந்தம்.
`பெறத் தக்க பொருள்களைப் பெற்ற வழியே இன்பம் உண்டாதல் எங்ஙனம்` என்னும் ஐயத்தை உவம வாயிலாக நீக்கினார்.
``உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று``*
எனக் கூறிய அவ்வின்பத் தன்மை இவ்வின்பத்திற்கும் உண்டென்க. காமத்திற்கு உரியரல்லார்க்கு மேற்கூறிய காமத்திற்கு ஏதுவான காட்சி மகிழ்செய்யாதவாறு போல, இறையின்பத்திற்கு உரியர் அல்லார்க்குப் பொன்னம்பலக் கூத்துக்காட்சி இன்பம் செய்யாதாகலின், அவர், யாம், அக்கூத்தினைக் கண்டபொழுது எமக்கு அத்தகைய இன்பம் தோன்றவில்லையே ஏன்? என நாயனாரைக் கடாவலாகாமையறிக. ``புளிக் கண்டவர்க்கு`` என்பதில் சகர ஒற்று எதுகை நோக்கி விரிந்தது. புளி சுவைக்கப்பட்டு பொருளாகலின், `நாவில்` என்பது கூற வேண்டாவாயிற்று. `சோர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். ``ஆனந்தக்கூத்து`` என்பதில் அது, அல்வழிக்கண் வந்த சாரியை.
இதனால், திருக்கூத்துக் கண்ட அளவிலே ஆனந்தம் விளைக்கும் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 18
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்(கு) உண(வு) உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.
பொழிப்புரை :
சிவானந்தத்தை அடைந்தவர்கட்கு உளவாகும் மெய்ப்பாடுகள் உடல் நிற்கலாற்றாது தள்ளாடி வீழ்தல் முதலியன வாம். (இந்நிலை எய்தினாரை, `ஆவேசம் வரப்பெற்றவர்` என்பார்.) இனிய உணவுகளால் விளையும் மகிழ்ச்சி அவற்றை உண்டபின்பே உண்டவர்க்கு உளவாகும். ஆயினும் யாவராலும் புகழப்பெறும் திரு வம்பலத்தில் சிவன் செய்யும் கூத்துக் கண்டவுடனே கண்டவர்க்குப் பெருமகிழ்வை உண்டாக்கும். (எனவே, திண்டாடி வீழ்தல் முதலியன கண்டார்க்கும் உண்டாவனவாம்.) இனி அதனைக் கண்டார்க்கே யன்றிக் கண்டவர் அக்கூத்தின் இயல்பைச் சொல்ல, அதனைக் கேட்டவர்க்கும் அத்தகைய மகிழ்வை அக்கூத்து உண்டாக்கும்.
குறிப்புரை :
`திண்டாடுதல்` என்பது நிலையாகாமல் தளர்ந்து வீழ்தலைக் குறிக்கும் நாட்டுப்புற வழக்கு. ``சிவானந்தம்`` என்பது அதனால் உண்டாகும் மெய்ப்பாட்டினைக் குறித்த ஆகுபெயர். பின் மூன்று அடிகள் வேற்றுமையணி பெற்றன. `இன்பம் பயத்தலால் இனிய உணவும், திருக்கூத்தும் ஒக்குமாயினும், இனிய உணவினும், திருக்கூத்துத் தனித்ததொரு சிறப்புடையது` என்பதாம். மேற்காட்டிய, ``உண்டார்கண் அல்லது`` என்னும் திருக்குறளும் அவ்வணியை உடையதே - `மகிழ்ச்சி கண்டவர்க்கு மட்டுமன்று; கேட்டவர்க்கும் உளதாம்` என்பதை இம்மந்திரம் கூறிற்று. `கண்டார்க்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது. ``குணம்`` என்றது நிகழ்ச்சிகளை.
இதனால், மேற்கூறிய அற்புதத்தினும் அற்புதம் ஒன்று கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 19
அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
அங்குசம் சூலம் கபால முடன் ஞானம்
தங்கு பயமுன் தருநீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.
பொழிப்புரை :
சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துங்கால், நான்கு கைகளோடே நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துங்கால் அவற்றில்,) தீயகல், உடுக்கை, உருத்திராக்க வடம், பாசம், அங்குசம், சூலம், பிரம கபாலம் என்பவற்றுடன் ஞானத்தின் பயனாகிய அஞ்ஞானத்தை நீக்குதலைக் குறிக்கும் நீல மலரையும் ஏந்தி, உமையம்மை ஒருபால் நிற்க ஆடுவான்.
குறிப்புரை :
நீல மலர் கரிய நிறத்தை உடையதாய் இரவில் முகிழ்த் திருந்து, கதிரவன் தோன்ற மலர்வது ஆதலின், அஃது ஆணவத்தில் அறியாமை எய்திக்கிடந்து, திருவருள் தோன்ற அது நீங்கி அறிவு நிகழ்தலைக் குறிப்பால் உணர்த்தும். இதனை நாயனார் எடுத் தோதவே, ஏனையவை பற்றிய குறிப்புக்களும் உணரப்படும். அவை நெருப்பு அழித்தல் தொழிலையும், வினையை எரித்தல் தொழிலையும், உடுக்கை ஒலியைப் பிறப்பித்துப் படைத்தல் தொழிலையும், மாயையை உதறித் தள்ளுதலையும், அக்கமாலை ஞானோபதேசம் செய்தலாகிய அருளல் தொழிலையும், குலம் இச்சா ஞானக்கிரியா சத்திகளுடன் கூடி அனைத்தையும் நடத்துதலையும், பிரம கபாலம் தனது நித்தியத் தன்மையையும் குறிக்கும். தேவி திருவருளைக் குறித்தல் வெளிப்படை. பயம் - பயன். `சிவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவித்துக்கொள்க. கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும் கூத்துக்கோல வருணிப்பில்,
``ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண்கையாய், கேளினி``
என எட்டுக் கையே கூறப்பட்டது.
இதனால், ஒருவகை நடனக்கோலம் வகுத்துணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 20
ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக்
கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர தேயத்தே
ஆடிய நந்தி புறம்அகத் தானே.
பொழிப்புரை :
கூத்துப் பதினொன்றின் உறுப்புக்கள் எல்லாம் முறையாகக் கூடிய பாதத்தில் அணியப்பட்டுள்ள சிலம்பும், கையில் கொண்டுள்ள உடுக்கையும் ஒலியை எப்பொழுதும் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறாக, மேலானவற்றிற்கெல்லாம் மேலான இடத்தில் ஆடுபவனாகிய சிவன் எல்லா உலகிலும் உள்ள உயிர்களின் அகத்தும், புறத்தும் ஆடுகின்றான்.
குறிப்புரை :
ஆடல் பதினொன்றாவன, `அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்` என்னும் நின்றாடல் ஆறும், `துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை` என்னும் வீழ்ந்தாடல் ஐந்துமாம். இவற்றிற்கு உரிய உறுப்புக்கள் முறையே ஆறு, நான்கு, நான்கு, ஐந்து, ஆறு, ஐந்து, ஐந்து, ஆறு, நான்கு, நான்கு, நான்கு, இரண்டு. இவற்றின் இயல்பெல்லாம் ஆடல் நூலுள் (பரத சாத்திரத்தில்) சொல்லப்படும். சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக்காதை உரைகளில் சிறிது காண்க. `எல்லா ஆடலும் எல்லாரும் வல்லராகார்; சிலர் சிலர் சில சிலவே வல்லவராவர்; சிவன் எல்லா ஆடலும் வல்லன்` என்பதும் `ஆயினும் அவ்வாடல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஆவன்` என்பது கூறியவாறு `நாதம் நீடிய` என மாறுக. நீடிய - நீடின. நேயம் - விருப்பம். அது விரும்பப்படும் இடத்தைக் குறித்தது.
இதனால், `சிவன் ஒருவனே ஆடல் வல்லான்` ஆகும் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 21
ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட
இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட
அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
பொழிப்புரை :
சிவவேதங்கள் ஒன்பதும், பிராசாத கலைகள் பதினாறும், சமயங்கள் ஆறும் ஒருங்கு ஆடும்படியும், உயிர்கள் இன் புறும் இடமாகிய ஏழ்அண்டத்துள் சிறப்பாக நிலவுலகில் ஏழு தீவுகளும், அவற்றினும் சிறப்பிற் சிறப்பாக பரத கண்டத்து ஐம்பத்தாறு நாடுகளும் ஆடும்படியும் உயிர்கள் மாட்டு அருள் உடையோனாகிய சிவன் ஆனந்தத்தை விளைக்கும் திருக்கூத்தைத் தில்லையில் ஆடுகின்றான்.
குறிப்புரை :
நில உலகத்தைச் சிறப்பாகக் கூறினமையால், கூத்து முன் அதிகாரத்திற்போந்த தில்லைக் கூத்தாயிற்று. சிவ பேதங்கள் ஒன்பதாவன, நவந்தரு பேதங்கள். அவை ஆடுதலாவன, தாம் கருதி யவற்றை நிகழ்த்துதல், `பிராசாத கலைகள்` என்றது அவற்றின் அதி தேவர்களையும் `சமயங்கள்` என்றது அவற்றை மேற்கொண்டவர்களை -யுமாம். ஒன்பது முதலிய மூன்றும் ஞான வாயிலாதல் பற்றி அவற்றை முன்னர்க் கூறினார். ``அன்பனும்`` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், தில்லையில் உள்ள ஒருவன் ஆட, அனைத்தும் ஆடுதலாகிய அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 22
ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழினை நாடகத் தேஇசைந் தானே.
பொழிப்புரை :
ஏழ் நரம்புகளில் ஏழு வகையாய்த் தோன்றி, அவற்றிற்குப் பொருந்திய ஏழ் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு, அந்த ஏழ் எழுத்துக்களில் ஒன்றே ஏற்றத்தின் தொடக்கமும், இறக்கத்தின் முடிவுமாய் நிற்க அமையும் ஏழு பண்களினாலும் பாடப்படுகின்ற நன்னெறியை எங்கள் சிவபெருமான் ஏழிசைகளோடு கூடிய தனது கூத்திலே பொருந்தி ஆடுகின்றான்.
குறிப்புரை :
ஏவு வகைகளாவன, `குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்` என்பன. இவற்றிற்குப் பொருந்திய எழுத்துக்களாவன முறையே `ஆ` முதல், `ஔ` ஈறான நெட்டெழுத்து ஏழுமாம். இவற்றை,
``களையறு குரலே துத்தம்,
கைக்கிளை உழையி னோடே,
இளியொடு, விளரி, தாரம்
என்ப ஏழிசையின் நாமம்``.
``ஆங்குள ஆ,ஈ ஊ,ஏ,
ஐ,ஓ,ஔ என்னும் ஏழும்
தீங்கிலா அக்க ரங்கள்
செப்பும்ஏ ழிசைக்குந் தானே``9
என்னும் சூடாமணி நிகண்டாலும் உணர்க. முற்காலத்தில் இருந்த யாழின் முன்னேற்றமாக வீணை தோன்றினாற்போல, முற்காலத்தில் இருந்த இசையின் பெயர்கள், இசையின் எழுத்துக்களின் முன்னேற் -றமே, ``சட்சம் இடபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நீடாதம்` என்னும் பெயர்களும், `ச,ரி,க,ம,ப,த,நி` என்னும் எழுத்துக் களும் என்க. எழுத்துக்களில் முதலாவதினின்று இசை மெல்ல மெல்ல உயர்ந்து உச்சத்தை அடையும்பொழுது அந்த எழுத்தே சொல்லப் பட்டு, மீண்டும் அதினின்றும் மெல்ல மெல்ல இறங்கி முடிவடையும் பொழுதும் அந்த எழுத்தே சொல்லப்படுதல் பற்றி, ``ஏழினில் ஒன்று ஆய், இழிந்தமைந்து ஒன்றாய்`` என்றார். ஆதல் - மேன்மேல் உயர்தல். பண்கள் ஏழாவன, கோடிப்பாலை, செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை, விளரிப்பாலை` என்னும் ஆதாரப் பண்கள். `இவற்றினின்றும் பிறக்கும் பிறவிப் பண்கள் நூற்று மூன்று` எனவும் `மற்றும் திறங்கள்` எனவும், `திறத்திறம்` எனவும் கூறுவர். இவையெல்லாம் இசைத் தமிழ் நூல்களில் சொல்லப்பட்டன. அந்நூல்கள் பலவும் இறந்து போயின. சிலப்பதிகார உரைகளில் சிறிது காணப்படுகின்றன.
நமது சிவநெறிப்பொருள்கள் இயற்றமிழ்ச் செய்யுட் -களிலன்றியும், இசைத்தமிழ்ப் பாட்டுக்களிலும் இனிமை பெறச் சொல்லப்பட்டமையை, ``ஏழினிற் சன்மார்க்கம்`` என்றும், அப் பொருள்களெல்லாம் பெருமான் தனது கூத்தில் குறிப்பினால் தோன்ற ஆடுதலை, ``ஏழிசை நாடகத்தே இசைந்தானே`` என்றும் கூறினார்.
`இயைந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஏழது` என்பதில் `அது` பகுதிப்பொருள் விகுதி. அவ்விடத்து, ``எழுத்து`` என்றது சாதியொருமை. கூத்தின் வினையாகிய இசைதல் அதனைச் செய்வான் மேல் ஏற்றப்பட்டது.
இதனால், இசைத்தமிழ்ப் பாடல்களால் இனிமை பெற விளக்கப்படும் பொருள்கள் எல்லாம் திருக்கூத்தில் விளங்குதலாகிய அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 23
மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே
மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.
பொழிப்புரை :
(காலம், கதிர், மதி, சேய், மால், பொன், வெள்ளி காரி` என்னும் ஏழு கோள்களின் இயக்கம் பற்றிப் பலவகையாகப் பகுக்கப்படும். அவற்றுள் கதிரியக்க அளவில் அதற்கும், மதிக்கும் இடையேயுள்ள வழியளவு பதினைந்தாகப் பகுக்கப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு பகுதியும் `திதி` (ஸ்திதி-நிலை) எனப்படுகின்றது. மதி கதிருக்கு முன்னாக அகன்று செல்லும் நிலை பதினைந்தும் `முற்பக்கம் பூர்வ பட்சம் - மதியது ஒளி மிகுந்து வருதலால் சுக்கில பட்சம்` என்றும், மதி கதிரை அணுகிப் பின்னாக வருதலால் `அபர பட்சம்` என்றும், மதியது ஒளி குறைந்து வருதலால் கிருட்டினபட்சம் என்றும் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு பட்சத்திலும் உள்ள திதிகள் மூன்று வட்டங்களாக வகுக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள ஐந்து திதிகளும் முறையே `நந்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை` எனப்பெயர் சொல்லப்படும். எனவே, ஒன்று, ஆறு, பதினொன்றாம் திதிகள் நந்தையும் இரண்டு, ஏழு, பன்னிரண்டாம் திதிகள் பத்திரையும், மூன்று, எட்டு, பதின்மூன்றாந் திதிகள் சயையும் நான்கு, ஒன்பது, பதினான்காம் திதிகள், இரித்தையும், ஐந்து, பத்து, பதினைந்தாம் திதிகள் பூரணையும் ஆகின்றன. இவ்வாறு.) பதினைந்து திதிகளும் ஐந்தாகத் தொக்கு நின்று பயன் தருதலையே ``மூன்றினில் அஞ்சாதி`` என்றார். மூன்று - மூன்று. வட்டம். அஞ்சு - நந்தை முதலிய ஐந்து சிறப்பு நிலை. இவையெல்லாம் கணி நூல்களில் (சோதிட சாத்திரங்களில்) காணப்படும்.
குறிப்புரை :
முந்நூற்றறுபது - ஓர் ஆண்டில் உள்ள நாள்கள். ஒரு திங்களுக்கு முப்பது நாள்களாகப் பன்னிரண்டு திங்களுக்கு 30X12=360. (சிறிதே ஏறிப் பெரும்பான்மையாக நாள்கள் முந்நூற் -றறுபத்தைந்தும் ஒரோவோர் ஆண்டில் முந்நூற்று அறுபத்தாறும் ஆகின்ற அவற்றைக் கணக்கில் கொள்ளாமல் ஆண்டிற்கு முந்நூற் றறுபது நாள்` என்றல் பொது வழக்கு.) இந்த நாள்கள் முந்நூற்றறுபதும் பன்னிரண்டு அடிநிலைப் பகுதிகளாய்த் தொக்கு நிற்கும். அவையே பன்னிரு திங்கள்களாம். அவற்றையே ``முதற் பன்னீர் மூலமாய்`` என்றார். முதல் - `முந்நூற்று அறுபது` என் எண் பெறுதற்கு முன்பு. `மூலம் பன்னிரண்டாய்` என மாற்றிக் கொள்க.
பன்னிரு திங்களும் `கார், பனி, வேனில்` எனப் பெரும் பான்மை மூன்றாகிப் பின் அவற்றுள் ஒவ்வொன்று இரண்டாகப் பருவங்கள் ஆறாகும். அவற்றையே ``மூன்றினில் ஆறாய்`` என்றார். இவற்றை ஆவணி முதலாக நந்நான்காகக் கொள்க. கார்ப்பருவத்தின் பின் இரு திங்களும் `கூதிர்ப் பருவம்` (பெருமழையின்றிச் சிறு தூற்றலும், துளியும் மிகுந்து தொல்லை தரும் பருவம்.) பனிப் பருவத்தின் முன் இருதிங்கள் முன்பனிப் பருவமும், பின் இரு திங்களும் பின்பனிப் பருவமும் ஆகும். முன் பனியில் குளிர் மிகுந்தும், பின்பனியில் குளிர் குறைந்தும் இருக்கும். `முன்பனி, பின்பனி` என்பன, பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகைகள். வேனிற் பருவத்தின் முன் இரு திங்களும் `இளவேனில் (வேனில் இளமையுடைத்தாய் வெப்பத்தை மிகத் தரும் பருவம்) எனவும், பின் இருதிங்கள் `முதுவேனில்` (வேனில் முதுமையை எய்தி வெப்பத்தை மிகத் தரமாட்டாத பருவம்) எனவும் சொல்லப்படும்.
அக்கம் - கண்; சிவனது கண்கள் மூன்று `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்கள். `மூன்று, அக்கத்தில் முடிய` என மாற்றுக. முடிதல் - அடங்குதல். பெரும்பாலும் முச்சுடர்களாலே காலம் பல வகை நிலையை அடைந்து பல விளைவுகளை உண்டாக்குதலை அறிக.
மூன்றிலும் ஆடினான் - ஏதேனும் ஒருகாலத்தில் உள்ளார்க்கு அக்காலத்தோடு, அதற்கு முன்னும், பின்னும் ஆகிய காலங்களிலும் ஆடினான். எதிர்காலம் பற்றி நோக்குங்கால் ``ஆடினான்`` என்பதைத் தெளிவு பற்றி வந்த வழுவமைதியாகக் கொள்க.
மோகம் மயக்கம்; திரிபுணர்ச்சி. இஃது ஆணவ மலத்தின் காரியம். அந்தக் கூத்து - அந்தத்தை உண்டாக்கும் கூத்து. எனவே, `உயிர்களின் ஆணவ மலத்தை நீக்குதற்கே இவ்வாறு சிவன் அனவரத தாண்டவத்தைச் செய்கின்றான்` என்பதாம்.
``ஆகி, ஆய், ஆய், ஆய், ஆக`` என்பவற்றிற்கு, `காலம்` என்னும் எழுவாயும், ``ஆடினால்`` என்பதற்கு, `சிவன்` என்னும் எழுவாயும் வருவிக்க. முந்தியே - அனாதி தொட்டே.
மேல் இட வரையின்றி எங்கும் ஆடும் அற்புதம் கூறப்பட்டாற்போல, இதனால், கால வரையின்றி என்றும், எப்பொழுதும் ஆடும் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 24
தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.
பொழிப்புரை :
கற்பக மலர் மாலையை அணிந்த முடியை உடைய தேவர்களது தலைமேல் இருப்பனவாகிய, மாணிக்கம்போலும் சிவபெருமானது இருபாதங்களும், தகுதி வாய்ந்த அணியாகிய அன்பை உடையவர்களது உள்ளத்திலே விளங்கும் கற்பகத் தருவும், சிந்தாமணியும் ஆகும். ஆயினஉம் அவன் உலகத்தைக் கடந்தே யிருக்கின்றான்.
குறிப்புரை :
`கற்பகத்தரு இரந்தவற்றைக் கொடுக்கும்; சிந்தாமணி பெற நினைத்தவற்றைக் கொடுக்கும். உலகத்தைக் கடந்து நிற்கின்றவன் அன்பர்கள் உள்ளத்தில் கற்பகத் தருவும், சிந்தாமணியும் போல இருத்தல் கருணையினாலேயாகலின், அவன் மேற்கூறியவாறு எங்கும், எஞ்ஞான்றும் ஆடுதல் கருணையினாலே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
`தாமமூடி` என்பது, ``தாமுடி`` எனக் குறைந்து நின்றது. அதனால் தேவர்களது தலையினது உயர்வு குறிக்கப்பட்டது. `உறை தாளிணை` என இயையும். `உறை மாமணி` என இயைத்தலும் ஆம். ``தாள்`` என்பது, கால் முழுவதையும் குறிக்க ``அடித் தாள்`` என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகையாய், பாதத்தைத் குறித்தது.
இங்கு ``அணி`` என்றதை, ``ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி``* என்பதிற்போலக் கொள்க. ``கடந்து நின்றான்`` என்பதற்கு, `அவன்` என்னும் சுட்டு வருவிக்க.
இதனால், ஞானம் கடந்து நின்றவன் சிலரது உள்ளங்களிலே விளங்கி, எண்ணியவற்றை எண்ணியாங்கு முடிக்கும் அற்புதம் கூறும் முகத்தால் அவனது கூத்து அற்புதமும் உணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 25
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை
பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.
பொழிப்புரை :
அனைத்தையும் படைத்தவனாகிய சிவன் அடி பெயர்த்து ஆடினால், அவனால் படைக்கப்பட்ட அகலிடங்கள் அனைத்தும் தாமாகவே ஆடும். (இயங்கும் `அவன் ஆடாவிடில் அவையும் ஆடா; இயங்கா` என்பது கருத்து.) இதை அறிந்த சிவன் அவை ஆடும் பொருட்டுத் தான் ஆடுமளவும் எங்கள் அறிவுகள் அறிதலைச் செய்யும். (`அவன்` ஆடாவிடில் எங்கள் அறிவுகளும் அறிதலைச் செய்யா` என்பது கருத்து.) இது பற்றி அவன் கருணை கூர்ந்து எங்கும், எப்பொழுதும் ஆடுகின்றான். அப்பொழுது அவனது சுற்றமாகிய பல பூதங்களும் களிப்பினால் ஆடுகின்றான். நாங்கள் இன்பம் அடைந்ததும் அவன் சோதியாய் விளங்கி நின்று ஆடுதலைக் கண்டேயாம்.
குறிப்புரை :
``புரிந்தவன், தெரிந்தவன்`` என்பன வினை யாலணையும் பெயர்கள். `அவன் புரிந்து ஆடில்` எனவும், `அவன் எரிந்து ஆடல்` எனவும் மாற்றி வைத்துரைக்க. `சிந்தையும்` ஆடும் என, இறந்தது தழுவிய எச்ச உம்மையும் அதனை முடிக்கும் சொல்லும் வருவிக்க. எரிதல் - ஒளி வீசுதல். `யாம் இன்புற்றவாறு ஆடல் கண்டு` என எடுத்து முடிக்க. ``இன்புற்றவாறு`` என்பதிலும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால் திருக்கூத்தினால் அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் அனைத்தும் செயற்படும் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 26
ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர்
ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.
பொழிப்புரை :
எப்பொருட்கும் முதல்வனாகிய சிவன் கூத்தனாய் நிற்றலைக்கண்டு, அதன் உண்மையை அறியும் அறிவு இல்லாதவர்கள், அக்கூத்தினை அவன் எவையோ சில பயன்களைப் பெற வேண்டி ஆடுகின்றான்` எனப் பிதற்றுவார்கள். (`எப்பொருட்கும் முதல்வ னாகியவனுக்குப் பிறர்பால் பெற வேண்டியது யாதுளது` என்பது கருத்து.) அவன் நடம் செய்தபின் உண்மை யாவராலும் அறிதற்கு அரிதேயாம். யாரேனும் அவ்வுண்மையை அரிவார் களாயின், `அவனுக்கு இயல்பாய் உள்ள கருணையின் விளைவே அவனது கூத்து` என்பதே அவ்வுண்மையாய் முடியும்.
குறிப்புரை :
`ஆராயினும்` என்பது, `ஆரும்` எனத் தொகுத்தல் பெற்று நின்றது. `அறிந்தால்` என்பது, ``அறிந்த பின்`` எனத்திரிந்து நின்றது. குணத்தை, ``சத்தி`` என்றார். `அருட் சத்தி ஆம்` என முன்னே கூட்டி முடிக்க. செய்கையின் உண்மையை, ``செய்கை`` என்றும் சத்தியின் விளைவ ``சத்தி`` என்றும் உபசரித்தார். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், சிவனது திருக்கூத்துச் சிறிதும் தன்பொருட்டாகாது, பிறர் பொருட்டேயாகின்ற அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 27
ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்(து)
அன்புறு கோணம் அசிபதத்(து) ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட
அன்புறும் எந்தைநின்(று) ஆடலுற் றானே.
பொழிப்புரை :
தனித்தனி ஒன்பது, ஒன்பது பகுதிகளையுடை யனவும், `தத், துவம்` என்னும் இரு சொற்களால் குறிக்கப் படுவனவும் ஆகிய, `பதி, பசு` என்னும் இரண்டும் `அசி` என்னும் சொல்லில் இணையும்படியும், அதற்கு முன்னே பசு துன்பத்தைச் செய்கின்ற திரோதான சத்தியின் வசப்பட்டு எங்கும் பிறந்தும், வாழ்ந்தும் சுழலும் படியும் பசுக்களின் கருணையுடையவனாகிய எம்தந்தை சிவன் ஆடல் தொழிலைப் பொருந்தி நிற்கின்றான்.
குறிப்புரை :
என்றது, `உயிர்கட்கு `பிறப்பு, வீடு` என்னும் இருநிலைகளையும் `தருதற்காக ஆடுகின்றான்` என்றபடி. வீடு சிறந்தமை பற்றி முற்கூறப்பட்டது. வீட்டைத் தருவது ஞான நடனம். பிறப்பைத் தருவது ஊன நடனம். `ஒன்பதும் ஒன்பதும் ஆம் கோணம்` எனவும், `இருபதத்து உற்ற கோணம்` எனவும் தனித்தனி இயைக்க. அவற்றுள் முன்னையது பதியையும், பசுவையும் தனித்தனி நவகோண சக்கரமாக உருவகம் செய்ததாம். பதியின் ஒன்பது பகுதிகள் நவந்தரு பேதம். பசுவின் ஒன்பது பகுதிகள் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றில் ஒவ்வொன்றிலும் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மும்மூன்று உட்பிரிவுகளாம். அவையெல்லாம் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன. அன்புறுதல், ஒன்றையொன்று நேசித்தல். `அசி` பதம் சீவன் சிவன் ஆதலைக் குறிப்பது என்பதும் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. ``ஒன்பதொ டொன்பது`` என்பதில் உள்ள ஒடு எண் ஒடு. ``ஆடிட, ஆட`` என்னும் எச்சங்களும் எண்ணின்கண் வந்தன.
இதனால், உயிர்களின் பல நிலைகளும் நிகழ்தற்பொருட்டுச் சிவனும் பல நிலைகளில் நின்று ஆடுதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 28
தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட
வைத்த சராசரம் ஆட மறைஆட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
பொழிப்புரை :
முன் மந்திரத்தில் கூறியபடி பசு பல நிலைகளில் செயற்படும்படி சத்தி ஆடுதலால், சிவனும் அதற்கு இயையப் பல நிலைகளில் நின்று ஆடுகின்றான்.
குறிப்புரை :
ஐந்தொழிற்கும் முதல்வன் சதாசிவன் ஆதல்பற்றி அவனை வேறு பிரித்துக் கூறினார். சித்தம் - உயிர்களின் அறிவு. சராசரம் - பிறப்பு வகைகள். ``சிவசத்தி தான் ஆட`` என்பதை மூன்றாம் அடியின் ஈற்றில் வைத்து, `அவள் ஆட, அத்தனும் ஆனந்தக்கூத்து ஆடினான்` என முடிக்க. காரியப்பொருளில் வந்த ஏனை, `ஆட` என்னும் எச்சங்கள். `சிவசத்தி தான் ஆட` என்பதனோடு முடிந்தன. `தான்` இரண்டும் அசைகள். சத்தி, இங்கு ஆதி சத்தி.
இதனால், திருக்கூத்துக்கள் யாவும் சத்தியின் நிலைகட்கு ஏற்ப நிகழ்த்தப்படுதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 29
இருவரும் காண எழில்அம் பலத்தே
உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருளுரு வாகநின் றாடலுற் றானே.
பொழிப்புரை :
உண்மையில் அருட்சத்திக்கு உள்ளே சென்று அடையப்படுபவனாய் ஆனந்தத்தைப் பொழியும் சிவன் இவ்வுலகில் `பதஞ்சலி, வியாக்கிரபாதர்` என்னும் முனிவர் இருவர் எப்பொழுதும் கண்டு களிக்கும்படி, உருவம் `அருவம், உருஅருவம்` என்னும் மூன்று திருமேனிகளில், அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.
குறிப்புரை :
``இருவரும் காண்`` என்றதனால், இங்குக் கூறிய அம்பல தில்லை அம்பலம் ஆயிற்று. அங்கு உருவம், கூத்துக் கோலம். அருவம், ஆகாசத்தைச் சுட்டும் இரகசியம். உருஅருவம், `திருச்சிற்றம்பலம் உடையார்` என்னும் இலிங்கத் திருமேனி. சித்தன் - அடையப்படுபவன். மூன்றாம் அடியை முதலில் வைத்து உரைக்க.
இதனால் தில்லைம்பலக் கூத்தின் அற்புதம் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 30
சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின்
அவம் ஆட ஆடாத அம்பர ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.
பொழிப்புரை :
சிவ முதற்பொருள், தான் செய்வோனாய் நின்று சங்கற்பிக்க, அச்சங்கற்பந்தானே சத்தியாகிப் பலவகையில் நிற்க, அதனால் உலகத்தில் தீயனயாயும் நிலைகெட்டு நீங்கும் நிலையை எய்த, உலகில் அசைவற்றதாக எண்ணப்படுகின்ற ஆகாயமும் ஒலி அலைகளைத் தோற்றுவித்துச் செயற்பட, புதிது புதிதாய்த் தோன்றி யமைகின்ற தத்துவங்கள் நிலம் முதல் நாதம் ஈறாக நின்று செயற்பட எப்பொழுதும் ஆடும் இவ்வுண்மை வேதாந்தத்திலும், சித்தாந்தத் திலுமே காணப்படும்.
குறிப்புரை :
`பிறவற்றில் காணப்படாது` என்றதாம். அஃதாவது, `புறச் சமயிகள் இதனை உணரார்` என்றதாம். ஈற்றில் உள்ள ``சிவம்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. முதற்கண் உள்ள `சிவம் என்பது செய்வோன்` என்னும் பொருட்டாய் நின்றது. அதன்கண், `சிவமாய்` என ஆக்கம் வருவிக்க. ``சிவம் ஆட`` என்பதில் ஆடுதல், சங்கற் பித்தல், ``நாதாந்தம்`` என அந்தம் கூறவே, நிலமாகிய ஆதியும் பெறப் பட்டது. ``வேதாந்த சித்தாந்தம்`` என்பது உம்மைத் தொகை. `உள்ளது` என்பதில் இறுதிநிலை தொகுக்கப்பட்டு, ``உள்`` என நின்றது.
இதனால், திருக்கூத்தின் அற்புத நிலை வேதாந்த சித்தாந்தங்களிலே விளங்குதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 31
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும்
நாதப் பிரம சிவநட மாமே.
பொழிப்புரை :
உயிர் தத்துவங்கள் அனைத்தையும் `தான் அல்ல` என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணர்தலும், பின்பு, `தான், அறிவித்தால் அறியும் தூல சித்தாவதல்லது, தானே அறியும் சூக்கும சித்தன்று` எனத் தனது உண்மையை உணர்ந்து, அதனானே, `தானே அறிந்தும், உயிர்கட்கு அறிவித்தும் நிற்கும் சூக்கும சித்துத் தலைவனாம் சிவன்` என அறிதலும், இவ்வறிவு வேதாகமங்களாகிய அபர ஞானங்களாய் இல்லாது, அவற்றைக் கடந்த அனுபவமாம் பரஞானமாகப் பெறுதலும் ஆகிய இவையெல்லாம் தனக்கு ஒரு மூலம் இல்லாது தானே மூலமாய் நிற்கும் சதாசிவ மூர்த்திக்கு மேலே நாதமாய் நின்று `நாதப்பிரமம்` எனப்படுகின்ற ஆதி சிவனது நடனத்தின் பயனேயாகும்.
குறிப்புரை :
``அந்தம்`` என்பன கடந்த நிலையைக் குறித்தன. தாது - மூலம். ஐந்தொழில்களில் இறுதியான அருளலைச் செய்வோன் சதா சிவன் ஆதலை நினைக. ``மெய்ச் சிவம்`` என்பதில் சிவம், சிவத்தைத் தரும் சிவாகமம். சத்தப் பிரம வாதிகள் சடமாகிய நாதத்தையே `நாதப் பிரமம்` என்பர். அது பொருந்தாது; நாதத்தை அதிட்டித்து நிற்கும் சிவனே நாதப்பிரமம் என்பார் `நாதப் பிரம சிவன்` என்றார். இந்தச் சிவன் அநாதி சிவனாகிய பரம் சிவத்தினின்றும் தோன்றிய ஆதி சிவன் ஆதலையறிக. நடத்தின் பயனை, ``நடம்`` என உபசரித்தார்.
இதனால், சுத்தாவத்தை பராவத்தைகள் யாவும் திருக்கூத்தின் விளைவாதல் கூறப்பட்டது. இவ் அவத்தைகள் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன.
பண் :
பாடல் எண் : 32
சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.
பொழிப்புரை :
சரியை முதலிய இறப்பில் தவங்களை நிரம்பச் செய்த உயிரைப் பாசங்கள் அப்பொழுதே விட்டு நீங்குதலால், அவ்வுயிர் சிவன் முதலிய ஐவரால் உண்டாகும் அலமரல் நீங்கும்படி, தவத்தின் வடிவாய் விளங்கும் சிவன் எங்கும் தானாய்த் திருக்கூத் தியற்றுவன். அக்கூத்துத் தவத்தால் விளைந்த ஞானத்தின் பயனாக அதற்கு உரியோர் பொருட்டுச் செய்யப்படுவதாகும்.
குறிப்புரை :
மூன்றாம் அடியை முதலில் வைத்து `பசுவினின்றும்` என உருபு விரிக்க தனித்து. தனித்தலால், எங்கும் தான் ஆக-தனது வியாபக நிலை தோன்றும்படி. அஃதாவது, `எங்கும் சிவமாய்த் தோன்றும்படி` என்பதாம். `அது ஞானக் கூத்து` எனச் சுட்டு வருவித்து தவமாம் சிவானந்தத்தோர்க்கு` என உருபு விரித்து முடிக்க.
சிவமாதி ஐவர், சிவ தத்துவம் முதலிய சுத்த தத்துவம் ஐந்திலும் நிற்கும் முதல்வர்கள். இவர்கள் பந்தத்தில் உள்ள உயிர்களை அவற்றி னின்றும் நீங்குதற்கு ஆவன செய்வாராயினும், அச்செயல் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல் அப்பொழுது துன்பமாய் தோன்றுதல்போல அலமரலை விளைக்குமாகலின், அந்நோய் நீக்கத்தை, அவரால் விளையும் திண்டாட்டம் நீங்குதலாகக் கூறினார். `திண்டாட்டம்` என்னும் நாட்டுப்புற வழக்கு, 2736 ஆம் மந்திரத்திலும் வந்தது.
இதனால், திருக்கூத்து வகைகளுள் ஞானக்கூத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 33
கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத்
தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.
பொழிப்புரை :
`தேவர் என்பார் அனைவரும் தனது முன்னிலையில் ஒருங்கு கூடி வணங்க இருப்பவனும் அவர் அனைவருமே அழிந்து இல்லையாகிய காலத்திலும் தான் அழியாது ஒருவனாய்த் தனித்திருப் பவனும், உள்ள காலத்திலும் உயிர் வருக்கத்துட் பட்டார் யாவரும் `எம்மில் வேறாம் தன்மையுடையவனே`, (தலைவனே) என அந்தப் பெயரைச் சொல்லித் தேட நிற்பவனும் தனது முக்கண்கள் சுழலுதலால், உலகத்தார் முன் விளங்குகின்ற, `ஞாயிறு, திங்கள், தீ` என்னும் முச்சுடர்களும் சுழலும் படி ஆடகின்றவனும் ஆகிய அவன் என்னை ஆட்கொண்டவாறு வியப்பிற்குரியது.
குறிப்புரை :
கூடுதல், தன் பயனைத் தோற்றுகின்றது. ``தேவர்கள்`` என்பதை, ``கூட`` என்பதனோடும் கூட்டுக. `வீடவும்` என்னும் சிற்பபும்மை தொகுத்தலாயிற்று. விகிர்தன் - வேறுபட்டவன். மூன்றொளிகள் ஆடுதல் கூறினமையால் அவன் ஆடுதல் பெறப்பட்டது. `வியப்பிற்குரியது` என்பது சொல்லெச்சம்.
இதனால் ஆடல் வல்லானது அற்புத நிலை கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 34
நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நீதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.
பொழிப்புரை :
வேதாந்தத்திலே விளங்குகின்ற நம் சிவன், நாத தத்துவத்தையும் கடந்த முதல்வன். அவனை இந்தப் பூமியிலே இங் குள்ளவர்கள் தெளிவாகக் கண்டு ஆனந்தத்தை அடைகின்றார்கள். அது பற்றி அவன் அவர்களிடத்து வைத்த கருணையும், நடுவு நிலைமையும் முரணாகிவிடவில்லை; நேரொன்றியே நிற்கின்றன. அவ்வாறு உள்ளது அவன் இப்பூமியில் இயைந்து நிற்கின்ற நிலை.
குறிப்புரை :
`நாத தத்துவம்` என்பது கடைக்குறைந்து `நாதத்துவம்` என நின்றது. இனி `நாதத்தின்மை` எனக்கொண்டு `சுத்த மாயை` எனினும் ஆம். சிறப்பும்மையும்; `கடந்த` என்பதன் ஈற்று அகரமும் தொகுத்தலாயின. ``மறை`` என்றது அதன் முடிவை. `மறை நம்பி நாதத்துவமும் கடந்த ஆதி` என்க. இதனை அனுவதித்து ஓதினார், அவன் மிகக் கீழ்த் தத்துவத்தின்கண் விளங்கிநிற்கும் எளிமை யுணர்த்தற்கு. பூ - பூமி. `பூத் தத்துவம்` என ஒற்று மிகாமை வடநூல் முடிவு. பொலிந்து, `பொலிய` என்பதன் திரிபு. இன்பம் எய்துதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. `நேசத்துவம்` என்பது, எதுகை நோக்கித் திரிந்தது. நேசம் இறைவனுடையது இன்பம் எய்துவார் பலராகலின், அவர்மேல் வைத்த நேசமும் பலவாகச் சொல்லப்பட்டது. நீதி, ``மோகம் அறுத்தவர்க்கே முத்தி கொடுப்பம்`` எனச் சொல்லி வைத்த நீதி. அது பேதப்பட்டாமை, அவனது காட்சியாலே மோகம் அற்றமையினாலாம். ஆகவே, அவரது நிலைமை அவ்வாறாகும்படி அவன் இவ்வுலகில் இயைந்து நிற்கின்றான்` என்பதாம். இனி, `நேதியும்` என்பதே பாடமாகக் கொண்டு ஏற்குமாறு உரைப்பர்.
``பின்னி நின்றான்`` எனப் பொதுப்படக் கூறினாரேனும் இங்குச் சிறப்பாகக் கூத்தனாய் நிற்றலைக் கூறுதலே கருத்தென்க. இன்பம் எய்துதல் அதனானே சிறக்க நிகழ்தலின்.
இதனால், திருக்கூத்தினால் சிவநெறி உண்மை அற்புதமாக விளைதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 35
ஆனந்தம் ஆனந்தம்` என்பர் அறிவிலார்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின்
ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.
பொழிப்புரை :
``பேரின்பத்தை அடைய வேண்டும், அடைய வேண்டும் என்று, அஃது இருக்குமிடத்தை அறியாத பலர் அதனைத் தேடி அலைகின்றனர், ஆயினும் பேரின்பம் இவ்வுலகில் சிவன் செய்யும் திருக்கூத்திலே இருத்தலை யாரும் அறிதல் இல்லை. அறிவார்களாயின், அக்கூத்து, உலக இன்பம் அனைத்தும் கெடும்படி பேரின்பமாய் நிகழும்.
குறிப்புரை :
``ஆனந்தம்`` பலவற்றில் ஈற்றடியின் முதலில் நின்ற ஒன்று தவிர ஏனைய யாவும் சிறப்புப் பற்றிப் பேரின்பத்தையே குறித்தன. அடுக்கு, இடைவிடாமை பற்றி வந்தது. `வேண்டும்` என்பது சொல்லெச்சம். ஆனந்தத்தைத் தருதல் பற்றி நடனத்தையே ``ஆனந்தம்`` என உபசரித்துக் கூறினார். `அறுதல் விடயானந்தம் - ஐம்புல இன்பம்` என்க.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய அற்புதத்தை அறிய மாட்டாதாரது நிலை இரக்கத்திற்குரியதாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 36
திருந்தநற் `சீ` என் றுதறிய கையும்
அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும்
பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும்
திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.
பொழிப்புரை :
சிவனது திருக்கூத்தினைக் காணுங்கால். அதில் உதறிய கையை, மாயையை, `சீ` என்று உதறும் கையாகவும், வீசி அணைத்த கையை, அடியவனை, `வா` என்று அழைத்து அருள் வழங்கும் கையாகவும், சார்ந்தவிடத்து, `அஞ்சற்க` என அமைந்த கையை, `இனிதிருக்க` எனத்தேற்றம் தரும் கையாகவும், தீ ஏந்திய கையை, வினைகள் கெடத் திருவருள் வழி நிற்கச் செய்யும் கையாகவும், ஊன்றிய திருவடியை மலத்தை மிதித்து நிற்கும் திருவடியாகவும் காணுதல் வேண்டும்.
குறிப்புரை :
திருவைந்தெழுத்தில் உள்ள எழுத்துக்களின் சிலேடை தோன்ற உண்மை யுணர்த்தியவாறு. உதறுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. இங்குக் கூறியவற்றில் அமைந்துள்ள எழுத்துக்களை வருகின்ற மந்திரத்துள் ``உதறிய கை, அணைத்த கை, `இய` என்ற கை`` - என உடம்பொடு புணர்த்து ஓதப்பட்ட பொருள்கள் இனிது விளங்க வெளிப்படையாக உரைக்கப்பட்டன. ``தீ, நிலை`` என்பன ஆகுபெயர்களால் அவற்றையுடைய கையையும், அடியையும் குறித்தன. ``ம்`` என்றது, மலத்தை அதன் முதலெழுத்துக் குறிப்பாற் கூறினார். `மவ்வை மிதித்தல்` என ஒரு சொல் வருவிக்க. வேண்டும் இடங்களில் எல்லாம் `ஆக` என்பது வருவித்து, அவற்றை ``ஆகும்`` என்பதனோடு முடிக்க. ``திருந்து அத் தீ ஆகும்`` என்பதை, `அத் தீ திருந்து ஆகும்` என மாற்றி உரைக்க. திருந்து - திருந்துதல்; அஃதாவது, தற்போதத்தால் வினைகளைச் செய்யாது திருவருள் வழி நிற்றல். முதனிலைத் தொழிற்பெயர் ``இய`` என்றது, `இயல்` என ஏவியதனைக் குறித்தது. ``ஆகும்`` என்பதைப் பின்னரும் கூட்டுக.
இதனால், திருக்கூத்தினை உண்மையில் தரிசிக்கும் முறைகளுள் ஒரு வகை முறை கூறப்பட்டது.
``மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி,அருள் தான்எடுத்து - நேயத்தால்
ஆனன்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதந் தான்``.*
என்னும் உண்மை விளக்க வெண்பாவை இங்கு ஒப்பு நோக்கி உணர்க.
பண் :
பாடல் எண் : 37
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே.
பொழிப்புரை :
கூத்தப் பிரான் திருவுருவத்தில் உடுக்கை வீச்சு, அமைப்பு, நெருப்பு இவைகளையுடைய நான்கு கைகளையும், ஊன்றிய திருவடியையும் முறையே `சி, வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களாகக் கண்டு துதித்து வணங்குக.
குறிப்புரை :
``சேர்க்கும் துடிசிகரம்; சிக்கெனவா வீசுகரம்;
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம்; அடிக்கீழ் முயலகனார்
தங்கு மகரமது தான்``*
என்னும் உண்மை விளக்க வெண்பாவினைக் காண்க. திருவைந் தெழுத்து இவ்வாறு சிகாரம் முதலாக அமைவது சூக்கும பஞ்சாக்கரம் ஆகும் என்பதனை நினைவூட்டுதற் பொருட்டு, ``உரு இல் சிவாயநம`` என்றார். உரு இன்மை அருவம்; சூக்குமம். இனி நகாரம் முதலாக அமையும் தூல பஞ்சாக்கர வடிவத்தை அந்நூல்,
``ஆடும் படிகேள்; நல் அம்பலத்தான்; ஐயனே,
நாடும் திருவடியி லேநகரம் - கூடும்
மகரம் உதரம்; வளர்தோள் சிகரம்;
பகருமுகம் வா;முடிய; பார்``9
என்பதனால் விளக்கிற்று. அதனை நாயனார் இங்குக் குறித்திலர். அஃது உலகப் பயனையே விளைத்தலின். கரு, ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது. உடம்பு, முயலகனது. அன்றி, அம்மந்திரம் கிடைத்திலது என்றலும் ஆம். `கருவின்கண்` என `மேல்` என்னும் பொருட்டாகிய ஏழாவது விரிக்க.
இதனால், முன் மந்திரத்தில் சிலேடை வகையான் குறித்த சூக் கும பஞ்சாக்கர முறை வெளிப்படையாக இனிது விளங்கக் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 38
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.
பொழிப்புரை :
கூத்தப் பிரானது திருவுருவில் தோன்றும் குறிப்பைக் கூறுமிடத்து, உடுக்கையால் ஒலியை உண்டாக்கல் படைத்தல் தொழிலை யும், நெருப்பை ஏந்தியிருத்தல் அழித்தல் தொழிலையும், மேல் எடாமல் உறுதியாக முயலகன்மேல் ஒருகாலை ஊன்றியிருத்தல் மறைத்தல் தொழிலையும், மற்றொரு காலை உயரத் தூக்கியிருத்தல் அருளல் தொழிலையும் இவ்வாறாக ஐந்தொழிலையும் உணர்த்தும் என்க.
குறிப்புரை :
மேல், ``திருந்த நற் `சீ` என்றுதறிய கையும்`` என்றதில் உணர்த்தப்பட்ட குறிப்பு முத்தர்கட்கான ஞான நடனக் குறிப்பு` எனவும், இது, பெத்தர்கட்கான `ஊன நடனக் குறிப்பு` எனவும் உணர்க. இதனையும்,
``தோற்றம் துடியதனில்; தோயும் திதி அமைப்பில்;
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்; - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்; முத்தி
நான்ற மலர்ப்பதத்தே; நாடு``3
என உண்மை விளக்க நூல் கூறுதல் காண்க. `ஊன்று` என்னும் முதனிலை வலித்தல் பெற்று, ஈற்றில் `அம்` ஏற்று, `ஊற்றம்` என வந்தது. ஊற்றமா - உறுதியாக. இஃது இம்மந்திரத்தில் ஆக்கம் இன்றி வந்தது. அணைத்தல் - (முயலகன் முதுகில்) சேர்த்தல். ``அரன்`` என்றது. இங்குக் கூத்தப் பெருமானையே. அப்பெயர் சொற்பொருட் பின்வருநிலையாய்ப் பின்னரும் வந்தது. ``ஊற்ற அணைப்பு`` என ஊன்றிய திருவடியைக் கூறினமையால், பின் வந்த ``அடி`` தூக்கிய திருவடியாயிற்று.
இது பெத்தர்க்கான குறிப்பாயினும், ஐந்தொழில் செய்தல் முதல்வனுக்கு இலக்கணமாதல் சிறப்பு நோக்கியும், இறுதியில் அருளல் அமைந்திருத்தலாலும் இதனையும் இங்கு நாயனார் கூறினார் என்க. ``அறையின்`` என்பதை முதலிற் கொள்க.
இதனால், கூத்தப் பெருமானது வேறொரு வகைக் கூத்தின் குறிப்பு உணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 39
நீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக்
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன்
மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.
பொழிப்புரை :
அக்கரங்கள் ஐம்பதைக் குறிக்கும் சுடர்கள் மேல் எல்லாம் விளங்குகின்ற, முதல் ஒளியாகிய ஓங்காரமாம் திருவாசியுள், அவ்வோங்காரத்தின் உள்ளொளியாய் விளங்கும் கூத்தப் பெருமானது கூத்தினை எப்பொழுதும் காண்கின்ற அழகிய கண்களை யுடைய சிவகாமியம்மை அந்தக் கண்களினாலே மூவர் மூர்த்திகளும் பெருமானது மூன்று கண்களினின்றும் தோன்றும் வண்ணம் பார்த்தாள். (உடனே அவர்கள் தோன்றினார். பின்பு அவர்களுக்கு வழிகாட்டுதற் பொருட்டுப்) பல வேதங்களையும் பாடி உணர்த்தினாள்.
குறிப்புரை :
`அதனால் உலகம் நடைபெற்று வருகின்றது` என்பது குறிப்பெச்சம்.
``ஓங்கார மேநல் திருவாசி; ஆங்கதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்``9
என்னும் உண்மை விளக்கப் பகுதியை இங்கு ஒப்பிடுக. `படைப்புக் காலத்தில் சிவன் தன்னிடத்தினின்றும் சத்தியை, `இலலிதா` என்னும் பெயருடன் தோற்றுவிக்க, அவள் தனது மூன்று கண்களினின்றும் மும்மூர்த்திகளைத் தோற்றுவித்து, அவர்களை முத்தொழில் புரியுமாறு அருளினாள்` என்பது படைப்பு முறைகள் பலவற்றில் ஒருமுறையாகச் சொல்லப்படுகின்றது.8 அம்முறை இங்கு ஒருவாறு குறிக்கப்பட்டது. கூத்தப் பெருமான் உலகத்தை நடத்தும் முறையைக் கூறியவாறு. `உள்ளொளியாகிய கூத்தன்` என்க. ``இடை`` என்பதைப் பெயராக வைத்து, முதல்வனிடையினின்றும் செல்லப் பார்த்தனன்` என்க. செல்லுதல் - தோன்றிச் செயல்புரிதல்.
இதனால், `மும்மூர்த்திகளும் கூத்தப் பெருமான் தனது சத்தியால் தோற்றுவித்து நிறுத்தி, ஒடுக்கப்படுபவர்களே` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 40
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து)
அந்தர வானத்தின் அப்புரத் தப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.
பொழிப்புரை :
மேல், ``சுந்தரக் கூத்து`` எனக் கூறப்பட்ட கூத்தினைச் செய்யும் சிவன் இங்குள்ளவர்களுக்கு `ஓம்` என்னும் அந்த ஒரு மந்திரத்திலும், அதற்கு மேலாய திருவைந்தெழுத்து மந்திரத்திலும் நிறைந்து நின்று அருள்புரிகின்றான் என்றாலும், உண்மையில் அவன் அவற்றைக் கடந்து, எல்லா அண்டங்களுக்கும் அப்பாற்பட்டே யிருக்கின்றான். ஆகையால், `அவன் இன்ன தன்மையன்தான்` என்று யார் வரை செய்து கூற இயலும்!.
குறிப்புரை :
`நந்தி` என்பது சிவன் பெயர்கள் பலவற்றில் ஒன்று. அது முதலாக வந்த மூன்றும் சுந்தரக் கூத்தனையே குறித்தமை வெளிப் படை. மந்திரம் ஒன்று, பொது நோக்கில் பிரணவமும், சிறப்பு நோக்கில் திருவைந்தெழுத்துமாம். கூத்தப் பெருமான் அவற்றின் வடிவாய் நிற்றல் இங்கு விளக்கப்பட்டது. `மருவியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``ஓர் ஊரன் அல்லன் ... ... ... இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று எழுதிக் காட்டொ ணாத னாகிய``9 அவன், இங்கு மந்திரவடிவாய் நின்று ஆடல் புரியும் அருட் பெருமையை அறிந்து, அன்பு செய்து உய்தல் மக்கட்குக் கடன் என்பது கருத்து.
இதனால் திருக்கூத்தின் அருமை அறிந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
பண் :
பாடல் எண் : 41
சீய குருநந்தி திருவம் பலத்திலே
ஆயுறு மேனி யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.
பொழிப்புரை :
ஆசிரியராய் உள்ளார் அனைவர்க்கும் அவ் ஆசிரியத் தலைமையை அருளிய இயற்கை ஆசிரியத் தலைவன் சிவபெருமானே. அவனே திருவம்பலத்தில் கூத்துக் கோலமும் கொண்டு ஆடுகின்றான். அதனால் அவனது திருமேனியின் தன்மை ஆய்ந்துணரத்தக்கது. அதனை அவ்வாறு ஆய்ந்துணர்ந்தவர் யாரும் இல்லை அதன் தன்மையாவது, நெருப்புப் பார்வைக்குச் சிவப்பு நிறத்தையும், உண்மையில் வெளுப்பு நிறத்தையும் உடையதுபோல இருதன்மைப்பட்டது. அதனை உணர்ந்தால் அவனைச் சார்ந்து அவனுள்ளே இரண்டறக் கலந்துவிடலாம்.
குறிப்புரை :
சீயம் - சிங்கம். இது தலைமை பற்றி வந்த உவமை. நந்தி ஆய் உறு மேனி என்க. ஆதல் - பொருந்துதல். மீட்டும் வந்த ``ஆய் உறு மேனி`` என்பது `அது` என்னும் சுட்டுப் பெயர் அளவாய் நின்று, ஆகுபெயரால் அதன் தன்மையைக் குறித்தது. ``ஆரும் அறிகிலர்`` என்றதனால், ஆய்ந்துணரற்பாலதாதல் பெறப்பட்டது. `தீ வெளுப்போடு செம்மை உறும் அத்தன்மை` என இயைக்க. தீயைப் பார்ப்போர் அனைவரும்` அது சிவப்பானது` என்றும் கருதுகின்றனர். `ஆயினும் தீ உண்மையில் வெளுப்பானதே` என நியாய நூலார் நிலை நாட்டுவர். இன்றைய அறிவியலாரும் `ஏழு நிறங்களின் சேர்க்கையே வெண்மை` என்பர். கூத்தப் பெருமானது சத்தி, `திரோதான சத்தி, அருட் சத்தி` என இரண்டாதல் பற்றி `சத்தி வடிவான அவனது மேனி இரு தன்மையுடையது` எனஅறார். திரோதான சத்தியால் பெத்தத்தையும், அருட்சத்தியால் முத்தியையும் உயிர்கட்கு அவன் அருளுகின்றான்; அவ்வருட்செயல் திருக்கூத்தினால் நிகழ்கின்றது என்க. ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து` என எச்சப்பொருள் தந்தன.
இதனால் திருக்கூத்து இரு சத்திகளால் இருவேறாகச் செய்யப் பட்டு, இருவகைப் பயனை விளைத்தல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 42
தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே.
பொழிப்புரை :
சத்தி சிவனின் வேறன்று ஆதலால், சிவன் உயிர்களைக் கடந்து `நிற்றல் போலவே சத்தியும் உயிர்களைக் கடந்து நிற்கும் (`இந்நிலையில் சிவன், `பரமசிவன்` என்றும், சத்தி, `பராசத்தி` என்றும் சொல்லப்படுவர். எனினும் அந்தச் சத்தி) பரமசிவனுக்கும், அவனுக்குக் கீழே உள்ள உயிர்கட்கும் முறையே ஐந்தொழில் செய்தலிலும், போக மோட்சங்களை அடைதலிலும் இச்சையையும், அவற்றிற்கு ஆவனவற்றை அறியும் அறிவையும், அறிந்தவாறே ஆற்றும் செயலையும் தந்து, உலகத்தை நடத்தும். நடத்துமிடத்து அஃது `ஆதி சத்தி` எனப் பெயர் பெறும். (`திரோதான சத்தி` எனப்படுவதும் இதுவே.) இவ்வாறு உயிர்களை நடத்துதலே திருக்கூத்து இயற்றுதல் ஆதலின் அக்கூத்தின் பயனாக உயிர்கள் திருவருளைப் பெறும் தன்மையை எய்துமாயின், அந்த ஆதி சத்தியே அருட்சத்தியாய் அவைகட்கு இறைவனுடைய திருவடியில் அன்பைப் பெருக்கும்.
குறிப்புரை :
எனவே, `இதுவே திருக்கூத்தின் முடிந்த பயன்` என்ற தாயிற்று. ``தான்`` இரண்டும் சிவன். இரண்டாவதில், `தானே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. தானேயாதலாவது பிறி தொன்றையும் பற்றாது தனித்து நிற்றல். தற் பரை - தனக்கு மேலாய் நிற்பவள். ``தன்`` என்றது உயிரை. இச்சை ஞானங்களைக் கூறவே, இனம் பற்றிச் செயலும் கொள்ளப்பட்டது. `ஞான இச்ை\\\\u2970?` என்னும் உம்மைத் தொகை செய்யுள் நோக்கி பின்முன்னாய் நின்றது. `ஆதியாய்ப் பேதங்களை நடத்தும், அங்ஙனம் நடத்துதலாகிய நாடகத்தை நடித்து நேயத்தது ஆம்` என முடிக்க. தனது உண்மை யியல்பில் மாற்றம் எய்தாமையைக் குறிக்க இவற்றை, `நாடகம்` என்றார். நேயத்தது - நேயத்தைப் பெருக்குவது. உயிர்களது உள்ளத்தின் செயலை அவற்றின்மேல் வைத்து, ``அருள் ஆனால்`` என்றார்.
இதனால், திருக்கூத்தின் செயல் வகைகளையும், பயன் வகைகளையும் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 1
உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.
பொழிப்புரை :
உயிர்களின் அறிவிலே சிவன் `ஓம்` என்னும் பிரணவ வடிவாயும், அதனால் உண்டாக்கப்படுகின்ற உணர்வு வடிவாயும், அவ்வுணர்வில் தோன்றுகின்ற அற வடிவாயும் விளங்குகின்றான். அவனை அங்கு அம்முறையானே சென்று தலைப்படும் இடம் அருள் வெளியேயாம்.
குறிப்புரை :
ஒருவன் - ஒப்பற்றவன். ``அங்கி`` என்றது ஒளியை. அஃது உணர்வேயாம். உணர்வுகள் நாதத்தானே உளவாதல் மேலெல்லாம் சொல்லப்பட்டது. ``நீதி`` என்றது அறத்தை. `அது தானும் அற உணர்வை` என்க. `நாதம், பொருள் உணர்வு, அவற்றுள் அற உணர்வு, திருவருட் பேறு இவை காரண காரியமாய் முறையானே நிகழும்` என்பதும், `அவற்றுள் திருவருட் பேறே முடி நிலை` என்பதும் கூறியவாறு. ஆகவே, `திருக்கூத்தினைக் கண்டு, இம்முறையானே திருவருளைப் பெறுக` என்பது குறிப்பெச்சமாயிற்று. ``உறல்`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய், உறும் இடத்தைக் குறித்தது. `உடல்` என்பது பாடம் அன்று.
இதனால், ஆகாசப் பேறே முடிநிலைப் பேறாதலும், அதற்குமுன் உள்ள படிநிலைப் பேறுகளும் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 2
பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.
பொழிப்புரை :
சிவன் (உடலில் உயிர்போல எப்பொருளிலும் கலந்து நிற்கும் கலப்பினால்) பெரிய பூமியாயும், அப்பூமிபோன்ற பல உலகங்களையும் அடக்கி நிற்கும் அண்டங்களாயும் இருப்பினும் அவை அனைத்தையும் கடந்த திண்ணிலமாகிய அருள் வெளியிலே விளங்குபவனாய்த்தான் இருக்கின்றான். அதனாற்றான் அவன் எல்லாவற்றையும் தாங்கும் பெரிய பூமிபோல. எல்லாவற்றையும் தாங்கும் ஆற்றலையும் ஒருவராலும் சென்று அணுகுதற்கரிய இடத்தையும் உடைய முதற்கடவுளாய் இருக்கின்றான்.
குறிப்புரை :
`ஆகையால், அவனை அவ்வருள்வெளியில் சென்று தலைப்படவே முயலவேண்டும்` என்பது குறிப்பெச்சம், ``கொள்கை`` என்றது உண்மையை. தாள் - ஆற்றல். ``அரு நிலமாய் நின்ற ஆதிப்பிரான்`` என்றது உடம்பொடு புணர்த்தல் ஆதலின் அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. குருநிலம், அருநிலம் இரண்டும் ஆகுபெயராய், அதன்கண் உள்ளவனைக் குறித்தன. குரு - திண்மை; பேராற்றல்.
இதனால், அருள் வெளியது சிறப்புக் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 3
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.
பொழிப்புரை :
அகண்ட ஒளியாகிய சிவ சொரூபத்தையும் தான் கண்ணாற் காணும் போல ஞாயிறு, திங்கள், பிறகோள்கள், விண்மீன் ஆகிய ஒளிகளைப் போலவே உடன் வைத்து எளிதில் கண்டு விட்டதாக, உடம்பாற் பெற்ற சிற்றறிவு கொண்டு பிதற்றுலாகிய சிறுமையை, அதனை விழுங்கி நிற்கின்ற அருள் வெளிக்குள்ளே ஒளியாகிய சிவ ஒளிக்குள் மறைந்து நிற்கச் செய்வதே, சீவன் தான் பெற்றுள்ள `சீவன்` என்னும் அப்பெயரைப் போக்கும் செயலாகும்.
குறிப்புரை :
அஃதாவது, `சிவமாகின்ற செயலாம் என்றபடி. `அண்ட ஒளியையும்` என உருபு விரிக்க. உம்மை, இழிவு சிறப்பு. பிதற்றுதல், அறிந்தோர் நகைக்கும்படி, அறிந்ததாக எங்கும் சென்று கூறுதல். பிதற்றுதலாகிய சிறுமையை ``பெருமை`` என்றது எள்ளற் குறிப்பு. அனைத்தையும் விழுங்கியுள்ள (அடக்கியுள்ள) வெளி அருள்வெளி. ``ஒளித்தது, குலைத்தது`` என்பன தொழிற் பெயர்கள். `ஒளிக்குள் ஒளித்தலைச் செய்யாமல் வேறுநின்று கூறுவன எல்லாம் வெறும் பிதற்றல்களே என்பதாம்.
இதனால் ஆகாசப் பேறல்லன எல்லாம் பேறாகாகமை கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்(டு)
உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.
பொழிப்புரை :
உயிர்கட்குப் புறத்தே பெறப்படும் பயனாகிய மகளிரது இன்பத்தைப்போல, அகத்தே பெறப்படும் பயனாய் விளையும் இன்பமாய் நிற்பது, எல்லாவற்றிற்கும் முதலாயும், மேலாயும் உள்ள பேரொளிப் பொருள். அஃது அயன், மால் முதலியோர்க்கும் அறிய வாரா நிலைமையதாயும், மேலாய நெறியின் பயனாயும் பரவொளியின்கணுள்ள ஒரு பொருளாகும்.
குறிப்புரை :
ஈரிடத்தும், `பயனாய்` என ஆக்கம் விரிக்க. பின்னர் ``உள்ளே`` என்றமையால், முன்னர், `புறத்தே` என்பது பெறப்பட்டது. இன், உவம உருபு. ``உறும்`` என்பது முற்று. ஈற்றில் உள்ள ``அது`` என்பதை, ``சோதி`` என்பதன் பின்னர்க் கூட்டுக. நெறியின் பயனை, ``நெறி`` என்றார்.
இதனால், ஆகாசப் பேறே பேரின்பப் பேறாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 5
அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும்
அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.
பொழிப்புரை :
உயிர்களின் அறிவுக்கறிவாய் நிற்கின்ற, `சிவம்` என்னும் ஒளியுடைப் பொருளையும், அதனை விட்டு நீங்காது தாதான்மியமாய் நிற்கும் ஆற்றலாய் எங்கும் பரவி நிற்கும் `இச்சை, ஞானம், கிரியை` என்னும் முச்சுடர்களையும் ஒருவன் தன்னின் வேறாக வைத்துச் சுட்டி உணராமல் அவற்றினுள்ளே அடங்கி ஒன்றாகி, அந்நிலையினின்றும் நீங்காதிருப்பானாயின், அவன் காலத்திற்குக் காலமாய் விளங்குவான்.
குறிப்புரை :
``காலத்தைக் கடந்து நிற்பான்`` என்பதாம். காலத்தைக் கடந்து நிற்றல் கூறவே, இடத்தைக் கடந்து நிற்றலும் தானே பெறப்பட்டது. ``ஒளி`` இரண்டனுள் முன்னது, ஒளியை உடையதனைக் குறித்தது. வலம் - வல்லமை; ஆற்றல், வலத்தினில் - `வல்லமை` என்னும் நிலைமையில் உள்ள. `பெயரொளி` என்பது ``பேரொளி`` என மருவி வந்தது. பெயர்தல் - பரவுதல். `வலத்திற் பெயரொளி மூன்றும்` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். `அத்தன் அடிக்குள் அடங்கிடில்` என முன்னே கூட்டுக.
இதனால், `பரவெளி காலத்தைக் கடந்தது` என்பதும், அஃது அதுவேயாய் அடையத்தக்கது` என்பதும் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 6
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து)
ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.
பொழிப்புரை :
ஐந்து தத்துவங்களாய் நிற்கும் சுத்த மாயை யினையே ஐந்து தலைகளையுடைய பாம்பாக ஆடைபோல் அணிந்து, அந்தத் தத்துவங்களிலே நிற்கின்ற சிவன் அவையாகிய சுத்த மாயை யிடத்தவனாய், `அமரர்` என்னும் பெயருக்கு, முகமனாக அன்றி, உண்மையாகவே உரிய சிவலோகத்தார்க்குத் தலைவனாவான். இன்னும் அவன் அத்தத்துவங்கட்கு அப்பாற்பட்ட பர வெளியில் நிற்றலையே விரும்பி நிற்பினும் இங்குள்ளார் பொருட்டு இப்பூதா காசமாகியும், அதன்கண் விளங்குகின்ற ஒளியாகியும் இருக்கின்றான்.
குறிப்புரை :
ஏகாசம் - மேலாடை; உத்தரீயம். மேலாடையே, ஆடி அசைதல் பற்றி, `ஆடை` எனவும், இடையில் இறுக உடுத்தப்படுவது, `உடை, உடுக்கை` எனவும் சொல்லப்படும். இரண்டாம் அடியை முதலில் கூட்டி உரைக்க. முதற்கண் உள்ள ``ஆகாசம்`` சுத்த மாயை. வண்ணம் - வடிவம். அதிட்டானம் `வடிவம்` எனப்படுதலை, ``சுத்த தத்துவம் சிவன்றன் சுதந்திர வடிவமாகும்``3 என்னும் சிவஞான சித்தியாலும் உணர்க. அமரர் - மரியாதவர்; இறவாதவர். இது தேவர்கட்கு முகமனாகிய பெயரே என்பதை,
``அச்சுதன், அயன், அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சம் படு முகமனே யானபோல்``l
என்னும் கந்த புராணச் செய்யளாலும் அறிக. குலம் - கூட்டம். கொழுந்து தலைவன். இதன்பின் ``அப்புறம்`` என்பதை இயைக்க. ``ஆகாசம்`` மூன்றும் முறையே சுத்தமாயை, பரவெளி, பூதாகாசம் இவற்றைக் குறித்தன. இவையெல்லாம் ஒருங்குதோன்ற அப்பர், ``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி``9 என்று அருளிச் செய்தார். ``ஆகாச சரீரம் பிரஹ்ம``8 என்பது உபநிடதம். அமர்தல் - விரும்புதல். ``அங்கி`` என்றது ஒளியை. காசம் - ஒளி, அது, `ப்ர` என்னும் இடைச்சொல்லை முதலிற் பெற்று, `ப்ரகாசம்` எனவழங்கும். ஒளிக்கு இடமாதல் பற்றியே, `ஆகாசம்` எனப் பெயர் பெற்றது.
இதனால், ஆகாசங்களது சிறப்புணர்த்தும் முகத்தால் பராகாசத்தினது சிறப்புணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.
பொழிப்புரை :
`சேதனம், அசேதனம்` என்னும் இருவகை உலகங்களும் இயங்குமாறு உளங்கொள்கின்ற உள்ளொளியாகிய சிவன் தன்னைச் செலுத்தியபோது, குயில்போலும் குரலையுடைய அருட்சத்தி அவனோடே குலாவி உலாவுதலால், எனது உள்ளம் அவனது ஒளியைப் பெற்று, இருள் நீங்கிப் பிரகாசிக்கின்றது.
குறிப்புரை :
உயிர்த்தல், உயிர்த்தன்மை பெற்று உணர்தல். எனவே, அதனைச்செய்வது சேதனமாயிற்று. ஆகவே, பின்னர் ``உலகம்`` என்றது அசேதனத்தையாயிற்று. பின் வந்த உயிர்த்தல், திருவுளங் கொள்ளுதல். `உயிர்க்கின்றவாற்றையும், உலகத்தையும் ஒக்க உயிர்க் கின்ற உள்ளொளி` என்க. சேர்தல். தன் காரியம் தோற்றி நின்றது. உலாவி - உலாவுதலால். `பரவெளியாவது அருட்சத்தியேயாதலின் உயிர் உடம்பொடு கூடியிருக்கும் பொழுதும் அஃது அந்தப் பரவெளியைச் சேர்தலாற்றான் ஒளியுடையதாய்த் திகழ்கின்றது` என்பது உணர்த்தியவாறு.
இதனால், சீவன் முத்தியும் பர வெளியிருப்பேயாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 8
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்(து)
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.
பொழிப்புரை :
சிவன் தன்னைச் சாராமல் உலகத்தைச் சாரின் அவர்களை விட்டு மிகச் சேயனாய் நீங்கி நிற்பன். உலகத்தைச் சாராது தன்னைச் சாரின், அவர்களை விட்டு எப்பொழுதும் நீங்கான். முதற்கண் மின்னல் ஒளி போலத் தோன்றிப் பின்னர்ப் பேரொளியாகி விளங்கு கின்ற பரவெளியாம் அவனை வணங்கினால் அவன் கூறியவாறு நீங்காது நின்று அமுதத்தைப் பொழிவான். அதனை உண்டு தேக்கி மகிழலாம்.
குறிப்புரை :
``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்``* என்னும் முறைமையால், `சிவன் பொதுவாகவே யாவர்க்கும் தலைவனாயினும் அவன் சிறப்பாகத் தலைவனாய் நிற்றல் தன்னைச் சார்ந்தவர்க்கே` என்பதை முன்னிரண்டடிகளில் உணர்த்தி `அவனைச் சார்ந்து பயன் பெறுக` எனப் பின் இரண்டடிகளில் அறிவுறுத்துகின்றவ், `அவனைச் சார்தல் பர வெளியிலாம்` என விளக்கினார். `ஒளியும், சோதியும் ஆம் வெளி` என்க. வெளியில் உள்ளவனை ``வெளி`` என்றார். ``நந்தி`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. அகல்கிலனாகிய நாதன்` என்க. `நாதன், பதி` என்பன பொருட் பின்வரு நிலையணி.
இதனால், `உண்மைச் சிவப்பேறு பர வெளிப்பேறே` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 9
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யேசென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.
பொழிப்புரை :
(பதிப்புக்களில் வருகின்ற அதிகாரத்தில் மூன்றாவதாய்க் காணப்படும் இம்மந்திரம் இங்கிருத்தற்குரியது.)
எழுவகைப் பிறப்புக்களில் மேற்பிறப்பை எய்தினவராகிய தேவர்கள் அமுதுண்ண வேண்டித் தான் அதற்கு முன்னே தோன்றிய விடத்தை உண்டதனானே, `எல்லாரினும் மேலானவன் சிவன்` என்பது இனிது விளங்கும். இன்னும்,
``அப்புறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னை,
அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை``*
என்று அருளிச்செய்தபடி, அமுதத்தை உண்டவர் சாவவும், தான் நஞ்சுண்டும் என்றும் ``சாவா மூவாச் சிங்கமாய்`` இருத்தலாலும் அவனது மேன்மை தெளிவாகும். அறிவும், ஆற்றலும் உடையாரினும் அருளுடையாரே மேலானவர் ஆதலாலும், அவ்வருட் பெருக்கம் தன்னையடைந்தார் அமுதுண்ண வேண்டித் தான் நஞ்சத்தை உண்டமையானே தெற்றென விளங்குதலாலும் ``மிக்கார் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டவன் மேலவன்``* ஆகின்றான். அவனைத் தக்கார் உரைத்த தவநெறியில் சென்று அடைந்தால் அங்ஙனம் அடைந் தவர்களைத் தானாம் வண்ணம் அருளுவான். ஆகையால் அவரது பொன்போலும் மொழியால் விளக்கப்படும் ஞானத்தை `இதுவோ ஞானம்` என இகழ்கின்றவர்களை விட்டு விலகும் உபாயத்தை நீங்கள் ஆராய்ந்து அறிவீர்களாக.
குறிப்புரை :
``பணியின் அமுதம் பருகலும் ஆமே`` என மேற் கூறியதனை அனுபவமாக நிறுவியவாறு. `இம் மேலவனை (பராகாசத் தவனை) இகழ்வாரை நீங்குமாற்றையறிதலே ஞானோதயத்தின் முதல் நிலையாகும் என இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
பண் :
பாடல் எண் : 10
புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.
பொழிப்புரை :
(`ஆகாசமாவது யாது` என்பார்க்கு, `ஆகாசமாவது ஏனை யெல்லாப் பொருள்கட்கும் இடம் தருவது` என்பது விடையாயின், பிற பொருளுக்கு இடம் தருவன யாவும் ஆகாசமாம். அந்நிலையில் பூதங்களில் ஒன்றை மட்டும் `ஆகாசம்` என்றல் இடுகுறியாம். அவ்வாறன்றிக்) காரண வகையால் நோக்கின் `புவனங்கள்` என்றும், `உலகங்கள்` என்றும் சொல்லப்படுவன புற ஆகாசங்களாம். எல்லாப் பொருள்களும் அறிவினுள் அகப்பட்டுத் தோன்றுதலால் நம் அறிவுகள் அக ஆகாசங்களாம். நமது அறிவுகளையும் அகப்படுத்தி நிற்பது சிவனது அறிவு ஆதலின் அஃது உள்ளுக்குள் ஆகாசமாம். அதனை அகப்படுத்தி நிற்பது வேறொன்றில்லை ஆகலின் அதுவே பரமாகாசமாம். அந்த ஆகாசத்தை இந்த உலகிலே பெறுதல் அழகிய `சமாதி` என்னும் நிலையாகும்.
குறிப்புரை :
`அதனைப் பெறவே முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம். புவனங்களாவன அவ்வவ் அண்டங்களைப் புரக்கும் கடவுளரது இடங்களாம். அவர்களது காப்பிற்கு உட்பட்ட அண்டங்களில் உலகங்கள் உள்ளன. ஆதி அறிவு - முதல் அறிவு. அது கருவிகளால் உண்டாகும் பாச அறிவாம். ``அறிவு`` என்பதை, ``சிவத்து`` என்பதற்கும் கூட்டுக. `அதற்கு மேலானது ஒன்று இல்லை` என்பதே ``செஞ்சுடர்ச் சோதி`` என்பதனால் குறிக்கப்பட்டது. இதற்கு `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ஈற்றில் நின்ற ஆகாசம், அதனைப் பெறும் பேற்றினைக் குறித்தது. தான், அசை. அழகு, இங்கு நிரம்பிய இயல்பைக் குறித்தது. சமாதி, `யோக சமாதியும் ஞான சமாதியும்` என இருவகைத்து. ஞான சமாதியே ஞான நிட்டையாகும்.
இதனால், ஆகாசப் பேறுகள் பலவற்றுள் முடிநிலையான ஆகாசப் பேறே பேறாதல் கூறி முடிக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 1
மன சந்தியில் கண்ட மன்நன வாகும்
கனவுற ஆனந்தங் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப
இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.
பொழிப்புரை :
மனம் புறக் கருவிகளோடு கூடிப் புறப்பொருளைப் பற்றும் நனவு நிலை (அவ்விடத்து இன்பமும் சிறிது உளதாயினும்) பொதுவாகத் துன்ப நிலையேயாதலும், அந்த மனம் புறத்திற் செல்லாது அகத்தே அடங்கிய கனவு, உறக்கம் முதலிய நிலைகள் இன்ப நிலையாலும் அனுபவமாக அறியப்படுவன. அந்த முறையை ஆராய்ந்து பார்த்தால், `இன்பமாவது, கருவி கரணங்களின் மேற் செல்லுதலை ஒழிதலே` என்பது விளங்கும். அவ்வொழிவினை எய்தியவன் அடையும் இன்பங்கள் இரண்டு. (உலகின்பம், வீட்டின்பம் என்பன.)
குறிப்புரை :
``கனவுற ஆனந்தம்`` எனப் பின்னர்க் கூறினமையால் முன்னர் `நனவு துன்பமாகும்` என்பது பெறப்பட்டது. வினவுதல் - ஆராய்தல். மீது - கருவி கரணங்களின் மீது. `மீது செல்லுதல்` என ஒருசொல் வருவிக்க. ஒழிவு - ஒழிதலையுடைய நிலை. பெத்த நிலையில் உளதாகும் இம்முறைமையை உவமையாகக் கொண்டு உணரும் உவம உணர்வால் `முத்தி நிலையின் இயல்பையும் உணரலாகும்` என்பார். ``இனம் உற்ற ஆனந்தி ஆனந்தம் இரண்டு`` என்றார். இனம், `ஆனந்தம்` என்னும் சாதி, ஆனந்தி ஆனந்தத்தை எய்தும் உயிர். `அஃது எய்தும் ஆனந்தம் இரண்டு என்க. முன்னர்க் கூறியவாற்றால் `அவ்விரண்டு இவை` என்பது விளங்கலின், வாளா, ``இரண்டு`` என்று போயினார். வீட்டிற்கு நேர் வாயிலாகிய `ஞானம் தோன்றுதல் கருவி கரணங்களினின்று நீங்குதல்` என்றபடி. உலகில் விழிப்புத் துன்பமாகவும், கனவும், உறக்கமும் இன்பமாகவும் உணரப்படுதல் வெளிப்படை. இது பற்றி ஏகான்ம வாதிகள் சகல சுழுத்தியையே, `பிரமானந்த நிலை` என்பர்.
இதனால், ஞானோதயத்தின் முதற்படி கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 2
கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன்என்(று) ஆட்பட்ட தல்லால்
கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.
பொழிப்புரை :
சிவபெருமானை, மந்திரம் 337-இல் கூறியவாறு, `பிரமன் தலையைக் கிள்ளிக் கையில் ஏந்தியவன்` எனவும் மந்திரம் 340-இல் கூறியவாறு `யானையை உரித்தவன்` எனவும், `தக்கனுடைய சாபத்திற்கு அஞ்சி வந்து அடைக்கலம் புகுந்த சந்திரனைத் தலையில் அணிந்து காத்தவன்` எனவும் மற்றும் இவ்வாறு வரும் வரலாறுகள் பலவற்றால் உயர்ந்தோர் புகழ்ந்து கூறிய சொற்களால் அவனையே, `அரியவன்` என்றும், பெரியவன் என்றும் துணிந்து யான் அவனுக்கு ஆட்பட்டதல்லது, அவனை யான் நேரில் `கறுப்பன்` என்றோ, `சிவப்பன்` என்றே பார்த்து உணர்ந்ததில்லை.
குறிப்புரை :
இது, நாயனாரது தொடக்க நிலையைக் கூறியது. ஏனெனில், சிவனை நிருவிகற்பமாக உணர்ந்ததையே கூறிற்று ஆதலின்,
``அன்றும திருஉருவம் காணாதே ஆட்பட்டேன்!
இன்றும் திருஉருவம் காண்கிலேன்-என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்,
எவ்வுருவோ நின்னுருவம் ஏது``3
என்ற அம்மை திருவாக்கு, `சிவன் உருவிலன்` என்பதை உணர்ந்திற்றாதலின் அஃது இதனின் வேறு என்க.
இதனால், `அனுபூதிமான்கள் அருளிச்செய்த திருமொழியை ஐயுறாது பற்றுதலே ஞானத் தோற்றத்தின் முதல் நிலை` என்பது கூறப்பட்டது. ஞான சம்பந்தரும்,
``ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி,
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்;
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே``l
பண் :
பாடல் எண் : 3
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.
பொழிப்புரை :
ஆணவ இருளால் அறிவை இழந்த நின்ற உயிருக்கு அந்த ஆணவ இருளைச் சிறிதே நீக்கும் விளக்குப் போல்வன மாயா காரியங்களாகிய தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகள். அறிவை விளக்கி நிற்கும் கருவிகளாகிய அவைகளையே `அறிவாகிய தான்` என உயிர் மயங்குகின்றது. அம்மயக்கம் நீங்கி, அவ்வுடம்புகளைத் தனக்கு வேறாக நீக்கி, அறிவு விளக்காம் தன்னைத் தான் உணர்ந்து, பின் தன் அறிவிற்குள்ளே அறிவாய் விளங்கும் திருவருளை விளங்கச் செய்து, பின் அந்தத் திருவருளாகிய விளக்கினுள் தானாகிய விளக்கினை, வெயிலின்முன் உள்ள பகல் விளக்குப்போல அடங்கி விளங்கச் செய்யவல்லவர்க்கு அந்தத் திருவருளாகிய ஒளியை உடையவனாகிய சிவனது இன்பக்கடலைப் பெறுதல் கூடும்.
குறிப்புரை :
``விளக்கு``ப் பலவற்றுள் முதலாவது, மாயா காரியமாகிய உடம்புகள். இரண்டாவதும், மூன்றாவதும், ஆறாவதும் உயிரினது அறிவு. ஏனையவை திருவருள். கழல் - திருவடி, அஃதே சத்தி; அஃது அறிவாயும் இன்பமாயும் இருக்கும். அறிவாய் இருத்தல் முன்பு ``விளக்க`` எனக் கூறப்பட்டமையால், இங்கு, ``கழல்`` என்றது இன்பத்தையாம்.
இதனால், ஆசிரியரது அருள்மொழி வழியே தத்துவ சுத்தி, ஆன்ம தரிசனம், சிவ தரிசனம், சிவ யோகம் என்பன முறையாக நிகழ்தலே ஞானோதயத்தின் வளர்ச்சியாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.
பொழிப்புரை :
பொருள்களின் பொதுமையை மட்டும் உணர்ந் தொழியாது, அவற்றின் மெய்ம்மையை உணர்ந்தவரிடத்தில்தான் மெய்ப்பொருளாய் உள்ள சிவனும் விளங்கியிருப்பான். மெய்ம்மையை உணராதவரிடத்தில் அவன் விளங்குதல் இல்லை. ஆகவே, மெய்யுணர்வி சிறப்பினை உணர்ந்து அதனை ஒருவன் பெற்றுவிட்டால், உடனே சிவன் அவனிடம் வந்து விளங்குவான்.
குறிப்புரை :
``தத்துவம்`` என்றது மெய்ம்மையை; பொருள்களின் பொதுமையை மட்டும் உணர்தலாவது. வானவில் தோன்றினஆல், `இது மிக அழகிதுய பல நிறங்களைக் கொண்டு விளங்குகின்றது இஃது எங்கிருந்து வந்தது? அதிசயம்! அதிசயம்! என்று இவ்வளவில் உணர்தல் போல்வது. மெய்ம்மையை உணர்தலாவது, வானவில்லைக் கண்டபொழுது, இஃது ஓர் உண்மையான வில் அன்று. பெருவட்டமாகிய சூரியனது வடிவில் ஒரு பாதியின் பிரதிபலனம். நமக்குப் பின்னால் ஓரிடத்தில் மழை பெய்கின்றது. அதற்கு அப்பால் சூரியன் பிரகாசிக்கின்றான். அவனிடத்தில் உள்ள பல நிறக் கதிர்களும் மழைத்துளிகளின் இடையே ஊடுருவி, நமக்கு முன்னால் பிரதிபலித்தலால் இந்தப் பலநிற அரைவட்டம் நமக்கு வில்போலத் தோன்றுகின்றது. இஃது உண்மையில் வில் அன்று. பின்னால் பெய்கினஅற மழை நின்றால் இந்தப் பிரதிபலனமும் மறைந்து விடும் என இவ்வாறு அதன் உண்மையை உணர்தல் போல்வது. இந்த உண்மை உணர்வே மெய்யுணர்வே - தத்துவ ஞானம். பொது உணர்வும், ஐய உணர்வும், திரிபுணர்வும் `ஞானம்` எனப்படா. `அஞ்ஞானம்` என்றே சொல்லப்படும். ஆகவே, அந்த அஞ்ஞானம் உள்ள இடத்தில் சிவன் விளங்கமாட்டான். `கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன்``* என்னும் ஞானசம்பந்தர் திருமொழியில், ``கல்லா நெஞ்சு`` என்பது, `ஞானத்தைக் கல்லாத நெஞ்சு` என்றும், `கற்றாலும் கல்லுப்போல நின்று உருகாத (கல் ஆம் நெஞ்சு) நெஞ்சு` என்றும் இருபொருளையும் தருவது. ``கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை``* என்னும் திருவாசகத் தொடரில் ``கல்லா மனம்`` என்பதும் அத்தகையது. மூன்றாம் அடியில் வந்த `அறிதல்,` அதன் காரியத்தை உணர்த்தி நின்றது. தத்துவத்தை உணரும் முறையே முன் மந்திரத்தில் சொல்லப்பட்டது.
இதனால், ஞானமாவது `தத்துவ ஞானமே` என்பதும், அதன் இன்றியமையாச் சிறப்பும் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 5
விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பினின் நூறும் ஆரமு தாகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.
பொழிப்புரை :
பசிய பொன்போல விளங்கும் தனது விரிந்த சடையின்கண் குசும்ப மலரின் வாசனை கமழ நிற்கின்ற சிவன் ஆகாயத்தைப்போல எல்லாப் பொருளையும் தன்னுள் அடங்கக் கொண்டிருக்கின்ற உண்மை ஞானத்திலிருந்து கசிந்து ஊறுகின்ற அரிய அமுதமாவான்.
குறிப்புரை :
என்றது, `உதயமான ஞானம் பின் முறுகி வளரச் சிவானந்தம் பெருகும்` என்றவாறு. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``ஒன்ற`` என்பது உவம உருபு. `சிவஞானம் ஆகாசம் போன்றது` என்பது முன் அதிகாரத்தில் விளக்கப்பட்டது. அசும்பின் - அசும்பாக. அசும்பு - கசிவு. குசும்ப மலர். `செந்துருக்க மலர்` என்பர்.
இதனால், தத்துவ ஞானத்தின் சிறப்பும் பயனும் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 6
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்
ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.
பொழிப்புரை :
முத்து, வைரம், பவளம், கட்டியான பசும்பொன், மாணிக்கம் ஆகியவற்றில் உள்ள ஒளிகளைப் போல அண்டங்களால் வேறறக் கலந்து நிற்கின்ற ஞான ஒளியை நீவிர் அவற்றினின்றும் வேறுபடுத்திப் பெறுவீர்? சொல்லுமின்.
குறிப்புரை :
`அதனை அவ்வாறு அவ்அண்டங்களில் வைத் துணர்தலே அதனைப் பெறுதலாகும்` என்றபடி. அவ்வாறு உணர்தலைச் ``சுத்த பராயோகம்`` எனத் துகளறு போதம் கூறும்.8 இவ்வுணர்வின் நிலையையே, ``மரத்தை மறைத்தது மாமத யானை`` என்னும் மந்திரத்தில், ``மரத்தில் மறைந்தது மாமத யானை`` என்றும், ``பரத்தில் மறைந்தன பார்முதல் பூதம்`` என்றும் கூறினார். கட்டியை, ``தொத்து`` என்றார். `மாணிக்கத்தின் தூவொளி ஒத்து` என மாறிக் கூட்டுக.
இதனால், ஞானக் காட்சியின் இயல்பு கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.
பொழிப்புரை :
(`நான்` என்று உணர்கின்ற என்னையன்றி, எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இல்லை என்று இறுமாந்திருந்த எனக்கு, `தான் என்று ஒருவன் இருக்கின்றான்`` என்று ஞான குரு உணர்த்த, அவர் உணர்த்திய முறையில்,) `நான்` என்கின்ற எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இருத்தலை முறையான ஆய்வினால் ஆராய்ந்து உணர்ந்தேன். அங்ஙனம் அவனது இருப்பை, மட்டும் உணர்ந்த யான், எனது இயல் பிற்கு வேறாக அவன்தான் கொண்டிருக்கின்ற இயல்பு யாது` என ஆராயும் பொழுது அவன் என்னின் வேறாய் இல்லாது, என்னில் யானாகவே கலந்து நிற்றலையும், முதற்கண், `நான் அன்றித் `தான்` என்று ஒருவன் இல்லை` என யான் உணர்ந்திருந்த அந்த உணர்வையும், பின்னர், `என்னின் வேறாய், `தான்` என்று ஒருவன் இருக்கின்றான்` என்று உணர்ந்த உணர்வையும், இது பொழுது `என் இயல்பு யாது, அவன் இயல்பு யாது` என ஆராயும் ஆராய்ச்சி உணர்வையும், அந்த ஆராய்ச் சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற் கின்றான்` என உணர்ந்த உணர்வையும், அந்த ஆராய்ச்சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற்கின்றான்` என உணர்ந்த உணர்வையும் `தந்தவன் அவனே` என்னும் உணர்வையும் அவனே அருளினான். அதனஆல், நான், `நான்` என என்னை உணர்தலை அறவே ஒழித்து, அவனை மட்டுமே உணர்ந்து நிற்கின்றேன்.
குறிப்புரை :
தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகளையே `நான்` என உணர்தல் பாச ஞானம். அஃது இங்குக் குறிக்கப்படவில்லை. பின்னர், `அவ்வுடம்புகள் அனைத்தும் சடம் ஆதலின் அவை சித்தாகிய நானல்ல` எனத் தன்னை உணரும்பொழுது, பாசத்தினும் மேம்பட்ட தனது மேம்பாடு விளங்குகின்ற நிலையில், `நானே பரம்பொருள்; எனக்கு மேலாய் ஒரு பரம்பொருள் இல்லை` என உணர்தல் பசு ஞானம். `அதுவும் அஞ்ஞானமே` எனவும், `உன்னின் வேறாய், உனக்கு மேலாய், இதற்குமுன் உனக்கு உண்டான பாச ஞானத்தையும், இப்பொழுது உண்டாகிய பசு ஞானத்தையும் உள் உணர்வினுள் உணர்வாய் இருந்து நல்கியவன் அவனே` என ஞானகுரு உணர்த்த, அதனால், பாசங் களையோ, எனது உணர்வையோ கண்ணாகக் கொள்ளாமல், அவனது உணர்வையே எனது உணர்விற்குக் கண்ணாகக் கொண்டு நோக்கிய பொழுது `நான்` என என்னை உணர்கின்ற உணர்வு தலைக்காட்டாமல், `அவன்` என்னும் உணர்வே மேலோங்கி நிற்பது பதிஞானம். அந்தப் பதிஞானத்தையே இங்கு உணர்த்தும் முக்ததால் பசுஞானம் விலகும் முறையும் உணர்த்தப்பட்டது. நாடுதல் - ஆராய்தல்.
``ஞான முதல்வன்`` என்பதில் ஞானம்,உயிரினது உணர்வு. அவ்வுணர்விற்கு முதல்வனாதலாவது, உயிரின் உணர்வு கேவலப் பட்டு மூடமாய்க் கிடந்ததனை முதற்கண் கருவி கரணங்களோடு கூடி பாச ஞானமாய் நிகழச் செய்து, பின்பு ஆராய்ச்சியால் அதனைப் பசு ஞானமாய் நிகழப் பண்ணி, முடிவில் பதி ஞானமாய் நிகழச் செய்தல். இவற்றுள் முன்னை இரண்டும் பெத்த நிலையும். பின்னது முத்தி நிலையுமாகும். பெத்த நிலையைத் திரோதான சத்தியாலும், முத்தி நிலையை அருட்சத்தியாலும், சிவன் செய்கின்றான். `நானும் நானென்று நினைத்தலை ஒழிந்தேன் என மாற்றியுரைக்க.
பாச ஞானம் உள்ளபொழுது அதற்குப் பசுவும், பதியும் புலன் ஆதல் இல்லை. பசுஞானம் உள்ளபொழுது பாசமும் பசுவும் புலன் ஆதல் இல்லை. பதிஞானம் வந்தபின் பாசமும், பசுவும் புலன் ஆதல் இல்லை. ஒவ்வொரு நிலையில் சிற்சில பொருள்கள் புலனாகாமை பற்றி, `அவைகள் அறவே இல்லை என வாதிடுதல் அறியாமையின் பாலதாம். ஆகவே, பாரமார்க்கத்தில் (உண்மை நிலையில்) பசு பாசங்கள் புலனாகாமை பற்றி, `பதி ஒன்றே உளது; ஏனைய இரண்டும் இல்லை. அவை பொய்` என்றல் உண்மையாமாறில்லை.
``வேதசாத் திரம்,மிருதி, புராணகலை ஞானம்,
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வானஎலாம் பாச ஞானம்;
நணுகி ஆன்மா இவை கீழ் நாட லாலே
காதலினால் `நான் பிரமம்` என்னும் ஞானம்
கருது பசுஞானம்``
-சுபக்கம், சூ-9,2.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளால் இவ்வியல்புகளையெல்லாம் தெற்றென உணர்க.
இதனால், ஞானங்களின் வகைகளை உணர்த்தும் முகத்தால், `உண்மை ஞானம் இது` என்பது உணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 8
ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.
பொழிப்புரை :
ஞானமாகிய உயர்நெறியில் முதற் கண்ணதாகிய ஞானத்திற் கிரியையாவது, நிலம் முதல் நாதம் ஈறாய்ச்சுட்டி அறியப் படுகின்ற அனைத்தையும் `சடம்` எனவும், அவற்றில் அவையேயாய்க் கலந்து ஒன்றி நிற்கின்ற உயிரை, `சித்து` (அறிவு) எனவும் இவ்வாறு இரண்டன் தன்மைகளும் வேறு வேறாதலை ஆராய்ச்சியால் உணர்ந்து, அங்ஙனம் உணர்கின்ற உயிர் அவை யனைத்தையும் தள்ளித் தன்னை அவற்றின் வேறாக உணர்தலாம்.அப்பால் ஞானத்தில் யோகமாவது, தான் சடத்தின் வேறாதலை யுணர்ந்தபின் மீட்டும் அவற் றின்கண் வீழ்ந்து தன்னை அவையாக மயங்காமல், உயர்நிலையில் நிற்றலாம். (உயிர் எப்பொழுதும் தனித்து நில்லாது ஆகையால் தனக்குத் தாரகமாகிய திருவருளில் நிற்றலே சடத்தில் வீழாது நன்னிலைக்கண் நிற்றலாகும் என்பது கருத்து. `நன்மை` என்றது திரு வருளையேயாம்.) இனி ஞானத்தில் ஞானமாகிய முடிநிலையாவது, நாதத்தின் துணையில்லாமலே பொருள்களை நன்குணரும் நிலையாம்.
குறிப்புரை :
இங்குச் சரியை கிரியையுள் அடக்கப்பட்டது. `சரியையே யன்றி யோகமும் சில இடங்களில் கிரியையில் அடக்கப் -படும்` என்பது, `கிரியையென மருவும் அவையாவும் ஞானம் கிடைத் -தற்கு நிமித்தம்``8 என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறியலாம்.
``கேட்டலுடன், சிந்தித்தல், தெளிதல், நிட்டை
கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்``3
யோகம், ஞானத்தில் ஞானம்` எனப்படும். இங்கு ``மோனம்`` என்பதும் ஞானத்தோடு ஒருபொருட் சொல்லாய் வந்தது. கேட்கவும், சிந்திக்கவும், தெளியவும் படுவது குருமொழி. ``அந்தம்`` இரண்டில், முன்னது `முடிவு` என்றும், பின்னது நீங்கிய நிலை` என்றும் பொருள் தந்தன. `நான் அறிவு என்று ஓர்தல்` என மாற்றியுரைக்க. ``பின்னர் அறிவு என்று ஓர்தல்` என்றதனால், முன்னர், `நாதாந்தம் சடம் என்னும் நன்னெறி` என்பது பெறப்பட்டது. ஓர்தல் - ஆராய்தல்; சிந்தித்தல். சரியையைக் கிரியையுள் அடக்கினாராகலின், அதற்கேற்பக் கேட்டலைச் சிந்திதலுள் அடக்கி, ஓர்தலையே கூறினார்.
கேட்டல் முதலிய நான்குமே `தசகாரியம்` எனப் பத்தாக விரித்துணர்த்தப்படும். `எத்தகையோர்க்கும் நாதம் இல்லையேல் பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகாது` என்பதை `நாதம் இல்லாமலே பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகுமாயின் அதுவே முத்தி நிலையாம்` என்பதையும்,
``மூவகை அணுக்க ளுக்கும்
முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில்
விளங்கிய ஞானம் இன்றாம்;
ஓவிட விந்து ஞானம்
உதிப்பதோர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்றன்
சேவடி சேர லாமே`` -சுபக்கம் - சூ, 1.26.
என்னும் சிவஞான சித்தியால் அறிக. நன்னெறிக்கு வாயிலாதல் பற்றி கிரியையே இங்கு ``நன்னெறி`` எனப்பட்டது. `அறிதற் கருவி` என்னும் பொருளதாகிய `வேதம்` என்பது, இங்கு `அறிவு` என்றே பொருள் தந்தது.
இதனால், ஞானத்தின் படிநிலைகள் உணர்த்தப்பட்டன.
பண் :
பாடல் எண் : 9
உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம்
உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.
பொழிப்புரை :
பிறவித் துன்பத்தினின்றும் தப்ப வல்லவர்கட்கு அவர்தம் உயிர்போலச் சிறந்த நிற்பன சிவஞானமும், அதனால் அறியப்படுகின்ற சிவமாகிய கடவுளுமாம். அவர்கள் புறத்தே பரந்து சென்று அலையாமல் அகத்தே ஒடுங்கி அமைதியுறுதற்குத் துணை யாவது பிரணவ மந்திரம். அம்மந்திரத்தின் வழியாக அவர் அகத்தே ஒடுங்கி, அறிவினுள் அறிவாய் நிற்கும் சிவத்தை அடைவார்கள்.
குறிப்புரை :
பிரணவ யோகத்தாலே அறிவு, அறிவினுள் அறிவை அறிந்து அடங்குதல், மேல் `பிரணவ சமாதி` முதலிய அதிகாரங்கலில் விளக்கப்பட்டது. அங்ஙனம் அடங்கினவர்களே சிவஞானமாகிய கண்ணைப் பெற்றுச் சிவனை நேரே கண்டு அடைவார்கள். `சிவன் பிறப்பிலியாதலின், அவனையடைந்தோரும் பிறவியிலராவர்` என்பது கருத்து. ``முக்குணங்கள்வாய் மூடா ஊடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்``9 என்பதனாலும் இதனை அறியலாம். ``ஒடுக்கம்`` என்பது அதற்காம் கருவியை உணர்த்திற்று.
இதனால், சிவஞானமே ஞானமும், சிவமே பரமும் ஆதலை வலியுறுத்தி, `உய்தி வேண்டுவார் அந்த ஞானத்தால், அந்தப் பொருளை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 10
காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.
பொழிப்புரை :
(பிறபொருள்களை அறிதல்போல அறிவால் அறியாது, அறிவிறந்தே அவனை அறிதல் வேண்டும்.) அவ்வாறு அறிவார்க்கு அவன் அவர்தம் அறிவினுள் அறிவாய் விளங்கி, தேவர்கள் கடலைக் கடைந்து வருந்திப்பெற்ற அமுதம்போல வருந்தாது பெறப்பட்ட அமுதமாய்ப் பேரின்பத்தை விளைப்பான். அங்ஙனமாயின், (பெற்றதைச் சிறிதாயும், பெறாததைப் பெரிதாயும் கருதும் பழைய பழக்கத்தின்படி அவனைப் பேணாதொழிவார்க்கு அவன் முன்போல அயலவனாய் விடுவான். ஆதலால், அவ்வாறின்றிப்) பின்னும், பின்னும் பேணி ஒழுகுவாரை விட்டு அவன் நீங்குதல் இல்லை. ஆனந்த வடிவினன் ஆதல் பற்றி, `நந்தி` எனப்பெயர் சொல்லப்படுகின்ற அவன் அன்புடையார்க்கே அவ்வாறு உடனாய் நிற்பன்.
குறிப்புரை :
காணுதல், இங்கு அறிதல். ஆகவே, ``கண்ணின் மணி`` என்றதும், அறிவினுள் அறிவாயிற்று.
``நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்``3
என்றபடி, பெற்றதைப் பேணாதிழத்தல் பேதையார் செயலாதலின் ``பேண வல்லார்க்குப் பிழைப்பிலன்`` என்றார். பிழைத்தல் - தவறுதல். ஆணம் - ஆன்பு. ``ஆணம் இல் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக் - காண மிலாதார் கடுவணையர்``l என்றது காண்க.
`ஆணம் பெய்ய` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், தலைப்படுதலேயன்றிப் பேணுதலும், அன்பு செய்தலும் ஞானத்தினஅ பயனாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 11
ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி
ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.
பொழிப்புரை :
``ஓம்`` என்று எழும் இசையோசையின் உள்ளீடாய் நிற்கும் எழுத்தோசையாகிய நாதம் போல, சுத்த மாயா உலகத்தில் வாழும் ஞான ஒளியினர் உயிர்க்குயிரான பரம்பொருளாக என்றும் விரும்பப்படுபவன் எங்கள் சிவபெருமான். அவனது அருள் சத்தி நிபாதர் அல்லார்க்கு ஞானம் இல்லாமையால் சேயனவாயினும் சத்திநிபாதராய் ஞானத்தைப் பெற்றவர்க்கு அவர்தம் அகத்தே விளங்குவனவாம்.
குறிப்புரை :
``மேல் நின்ற தேவர்`` என விதந்தோதினமையால் அதற்கு இதுவே பொருளாகும். `விழுப்பொருளாகிய எம்பெருமான் அடி` என இயைக்க. ஆய்நின்ற - ஆய்வின்கண் நின்ற ஆய்வு, இங்கு ஞானம். முன்னிரண்டடிகள் இன எதுகையும் பின்னிரண்டடிகள் ஆசெதுகையும் பெற்றன.
இதனால், `ஞானியரே சிவனை இம்மையிலும் பெற்று விளங்குவர்` என்பது உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் வைத்துக் கூறி முடிக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 1
எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத்
தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.
பொழிப்புரை :
(காரியங்கள் ஒடுங்குதற்கு இடமாதல் பற்றிக் காரணங்கள் `பாழ்` எனப்படும். அதனால்,) ``எப்பாழும் பாழாம் யாவுமாய்`` என்றது, எக்காரணங்களும் ஒடுங்குதற்குக் காரணமாய் உள்ள பரம காரணங்கள் எல்லாமாகி` என்றதாம். உலகிற்குக் காரணம் தத்துவங்கள். அவை தோன்றி ஒடுங்குதற்கு இடமான பரம காரணங்கள் சுத்த மாயையும், அசுத்த மாயையும். ஓராற்றால் பிரகிருதி மாயையும் பரம காரணமாகக் கொள்ளப்படும். கலப்பினால் மெய்ப்பொருள் அம்மும்மாயையாகியும் நிற்கும். ஆயினும் மாயைகளின் தன்மே வேறு; மெய்ப்பொருளின் தன்மை வேறு ஆதலின் பொருள் தன்மையால் மெய்ப்பொருள் அம்மாயைகளின் வேறாகியும் நிற்கும்.
குறிப்புரை :
இனி இரண்டாம் அடியிற் கூறப்பட்ட பாழ்கள் பரம காரணத்தைக் குறியாது, அவற்றினின்றும் தோன்றிப் பிறவற்றிற்கும் காரணமாகின்ற இடைநிலைக் காரணங்களாம் தத்துவங்களைக் குறித்தன. மேல் உள்ள மூன்று தத்துவங்களாவன, `இலய தத்துவம், போக தத்துவம், அதிகார தத்துவம்` என்பன. அவை முறையே இரண்டும், ஒன்றும், இரண்டும் ஆக ஐந்தாம் முதல் இரண்டும் சிவம், சத்தி. இடை ஒன்று சாதாக்கியம். இறுதி இரண்டு ஈசுரம், சுத்தவித்தை. கீழ் உள்ள மூன்று தத்துவங்களாவன, `காரண தத்துவம், கஞ்சுக தத்துவம், குணதத்துவம்` என்பன. காரண தத்துவம், மாயா தத்துவம், கஞ்சுக தத்துவம், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், இவ்வைந்தில் அடங்கும் குண தத்துவம் சித்தம் முதலிய இருபத்து நான்கு. முன்னுதல் - நினைத்தல்; சங்கற்பித்தல். அஃதாவது மும்மாயைகளினின்றும் இம் மூவகைத் தத்துவங்களும், பின் அவற்றின் காரியங்களும் `இவ்விவ்வாறு தோன்றுக` எனவும் `இத்துணைக் காலம் நிலைபெற்றுச் செயலாற்றுக` எனவும், `இனி இப்பொழுது ஒடுங்குக` எனவும் சங்கற் பித்தல். இதனானே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழில்களும், அவற்றிற்குக் காரணமாம் மறைத்தல் தொழிலும் அவற்றின் காரியமாய் அருளல் தொழிலும் நடைபெறும். ``இப்பாழும்`` என்றதனோடு இயைய இன்னவாறும்` எனவந்த எண்ணும்மை தொகுத் தலாயிற்று. `இங்குக் கூறிய காரணங்களில் ஒன்று` என்றோ, அவையல்ல வாயின் `வேறு இன்ன தன்மையது` என்றோ ஒன்றதனோடு சார்த்திச் சொல்ல ஒண்ணாத இயல்பினது, பொதுவாக, `அது` எனச் சுட்டிச் சொல்லப்படும் மெய்ப் பொருள். ஆயினும் அதனைப் பற்றி உணர் வார்க்கு அது பேரின்பப் பொருளாய், உயிரினது அறிவுக்கு மேலான அறிவாய், ஆனந்தமாய் உள்ளது.
`சத்திய ஞானம்` என்றது, `சத்துச் சித்து` என்றபடி. எனவே, மெய்ப் பொருளின் உண்மை இயல்பு, `சத்துச் சித்து ஆனந்தம்` என்றதாயிற்று. சத்து என்றும் ஒருபடித்தாய்த் திரிபின்றியிருத்தல். சித்து - அறியாமை சிறிதும் இன்றி அறிவேயாய் இருத்தல். ஆகவே, அறிவிக்க. வேண்டாது தானேயறிதலும், ஒரு காலத்து ஓரிடத்து ஒன்றை மட்டும் அறிதல் என்பதின்றி, எக்காலத்தும், எவ்விடத்தும் எல்லாப் பொருளையும் அறியும் அறிவாதலும் தானே பெறப்பட்டது. ஆனந்தம் - துன்பக் கலப்பு இன்மையால் எஞ்ஞான்றும் வரம்பின்றி விளையும் இன்பமாதல். தற்பரம் - தனக்கு (உயிர்கட்கு) மேல், தன், சாதியொருமை. ``தான்`` என்பது தேற்றப்பொருளில் வந்தது.
``அது`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``ஆகும்`` என்றது, இயற்கையைச் செயற்கைபோலக் கூறும் இலக்கணையாய் உளதாதலைக் குறித்தது.
`காரணப்பொருள்கள் அனைத்திலும் தான் அவையேயாய்க் கலந்தும், பொருள் தன்மையால் வேறாகியும் நின்று தனது சங்கற்ப மாத்திரையானே ஐந்தொழிலை நடாத்துவதாயினும் மெய்ப்பொருள் பிறிதொரு பொருளோடு சார்த்தி, `இன்ன தன்மையது` எனச் சொல்ல ஒண்ணாத இயல்பினையுடையது. சத்தாய்ச் சித்தாய், ஆனந்தமாய் இருத்தலே அதன் உண்மையியல்பு` என்பது இம்மந்திரத்தின் திரண்டபொருள். பின்பு ``கீழுள முப்பாழ்`` என்றதனால் முற்கூறிய முப்பாழ் `மேல் உள` என்பது பெறப்பட்டது.
``ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்கு
ஒன்றும் குறியொன் றிலாமையினால் - ஒன்றோடு
உவமிக்க லாவதுவுந் தான்இல்லை; ஒவ்வாத்
தவமிக்கா ரே இதற்குச் சான்று``8
என்னும் திருக்களிற்றுப்படியாரைக் காண்க.
இதனால், மெய்ப்பொருளின் பொதுவியல்பு சிறப்பியல்புகள் தொகுத்துக் கூறப்பட்டன.
பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் ``தொம்பதம் தற்பதம்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்தில் `முத்துரிய` அதிகாரத்தில் வந்தது.
பண் :
பாடல் எண் : 2
மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது
இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம்
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.
பொழிப்புரை :
சிவனது சத்தி `பரா சத்தி` என்றும், `ஆதி சத்தி` என்றும் இரண்டாய் இருக்கும். (பராசத்தியே அருட் சத்தியும், ஆதி சத்தியே திரோதான சத்தியும் ஆகும்.) அவையிரண்டும் வேறு வேறல்ல. அஃது எது போல்வது எனின், மணியின்கண் (இரத்தினங் களில்) அதனிடத்தே நின்று அதனையே விளக்கி நிற்பதும், வேறிடத் திலும் சென்று பிற பொருள்களைப் பற்றுவதும் ஆகிய ஒளி செய்கையால் இரண்டாதல் அல்லது பொருளால் இரண்டாகாமை போல்வது. மணியொளி மணியையே விளக்கி நிற்குமிடத்து `பிரகாசம்` என்றும், பிற பொருள்மேல் பாயுமிடத்து `காந்தி` என்றும் சொல்லப்படும். (காந்தியே சோபை) இனி ஆதிசத்தியும் `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாம். ஆதி சத்தி இவற்றின் வேறல்ல வாயினும் அதனையும், பரை ஆதியின் வேறல்ல வாயினும் அதனை -யும் வேறு வேறாக வைத்து எண்ணினால், `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` எனச் சத்திகள் ஐந்தாகும். அதுவும் எதுபோலும் எனின், குவளை மலரின் குணம் ஒன்றேயாயினும் அதனை, பொலிவு, சிறப்பு, நிறம், மணம்,அழகு` என இவ்வாறு வேறுவேறாக உணர்வது போலும். சத்தி குணமும், சிவன் குணியும் ஆகலின், குணமாகிய சத்தி வேறுபாடு ஐந்தனோடு குணியாகிய சிவம் ஒன்றையும் கூட்டி எண்ண மெய்ப்பொருள் ஆறு கூற்றதாம்.
குறிப்புரை :
மன் சத்தி - நிலையாய் உள்ள சத்தி; மூல சத்தி. அது பரா சத்தி. இது காலத்தைக் கடந்தது. அதனால் அநாதி. இதினின்றும் ஒரு காலத்தில் தோன்றுவது ஆதி. மணியினது `ஒளி, சோபை` என்பவற்றை ``மன் சத்தி, ஆதி`` என்பவற்றோடு நிரல் நிறையாக இயைக்க. ``சத்தி`` என்பதை ஆதிக்கும் கூட்டுக. ஒளியாகிய `அன்னதோடு, சோபையாகிய அன்னதோடு` எனத் தனித் தனி இயைக்க. ``ஒப்ப`` என முற்று. மிடல் - சத்தி ``ஒன்றா மாறாது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `மிடல் ஒன்றாமாறு, உற்பலம் ஒண்மை முதலியன ஆமாறுபோலும்` என முடிக்க. உற்பலம் - குவளை. அது முன்னர் பொருளாகு பெயராய் அதன் மலரையும், பின்னரும் அவ்வாகுபெயராய், அதன் குணத்தையும் குறித்த இருமடியாகுபெயர். ஒண் - ஒண்மை. சீர் - சிறப்பு. அது மலர்களுள் மேலானதாகப் புகழப் படுதற்றன்மை. ``சோபை`` என்பதன்பின், `ஆனவாறு` என்பது எஞ்சி நின்றது. ``ஆறும் ஆனது`` என்னும் உம்மை, `ஒன்றானதேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``ஆனது`` என்னும் பயனிலைக்கு, `மெய்ப்பொருள்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது.
இதனால், மெய்ப்பொருள் `தானும், தன் சத்தியும்` என இரு கூற்றாகப் பின் சத்தி காரணமாகப் பல கூற்றதாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 3
சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.
பொழிப்புரை :
சத்தி, சிவம் இவற்றது இயல்பைச் சொல்லுமிடத்து முறையே பர ஞானமும், அதனால் தரப்படுகின்ற முடிவில் பொருளும் ஆகும். இனிச் சிவம் பிறிதொன்றிலும் இல்லாத, தனி ஒரு பேரானந்தப் பொருளுமாம். அந்தச் சிவத்தின் மேனிலைச் சத்தியே பக்குவான் மாக்களை ஆட்கொள்ளுதற்கு இந்நிலவுலகில் வந்து உலாவச் செய்கின்ற குரு வடிவும் ஆகும். இங்குக் கூறிய பரஞானம், முடிவின்மை, ஆனந்தம், ஆன்மாக்களை ஏற்ற பெற்றியால் ஆட்கொள்ளும் பேரருள் என்பனவற்றுக்கு முன் மந்திரத்திற்கூறிய குவளை மலரே உவமையாம்.
குறிப்புரை :
``சாற்றுங்கால்`` என்பதனை, ``சிவம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. உய்த்தல் - தரப்படுதல். ``அனந்தம்`` என்பதிலும் எண்ணும்மை விரித்து, எஞ்சிநின்ற `ஆம்` என்னும் பயனிலையை வருவிக்க. அனந்தம் - முடிவின்மை. முடிவு காலம். இடம் இரண்டு பற்றியது. காலம் பற்றிய முடிவின்மை` நித்தியத்துவத்தையும், இடம் பற்றிய முடிவின்மை பூரணத்துவத்தையும் விளக்கும். நித்தியத்துவமே மெய்ம்மையும், பூரணத்துவமே பெருநிறைவும் ஆகும். மெய்ப் பொருள் `மெய்யாயும், அறிவாயும், முடிவிலதாயும் உள்ளது` என்பதை தைத்திரீய உபநிடதம், ``சத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம``8 எனக் கூறிற்று. சத்தி தன்னிலையில் நிற்குங்கால் `சொரூப சத்தி` என்றும், பிறவற்றோடு தொடர்புற்று நிற்குங்கால் `தடத்த சத்தி` என்றும் சொல்லப்படும். `அவற்றுள் சொரூப சத்தியே அருளுருவாய் வந்து ஆட்கொள்ளும்` என்பது பின் இரண்டடிகளில் கூறப்பட்டது. முன் மந்திரத்திற்கூறிய உற்பல உவமையை, `பூவண்ணம், பூவின் நிறம் போல மெய்ப்போத இன்ப மாவண்ண மெய்கொண்டவன்``3 என்னும் பரஞ்சோதி திருவிளையாடலாலும் அறிக.
இதனால், `மேற்குறித்த சத்தி சிவங்களாவன இவை` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை
தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில்
மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.
பொழிப்புரை :
மேல் உவமையாகக் கூறிய குவளை மலரின் நிறம், பொலிவு, மணம், அழகு என்பன அம்மலரின் வேறாகாததுபோல உயிர் சிவனிடத்தில் வேற்றுமையின்றி ஒன்று பட்டு நின்றால், `சிவாய` எனவும், `சிவத்துவமசி` எனவும் சொல்லப்படும் மகாவாக்கியங் களின் பொருளாய் உள்ள சிவனது அனந்த சத்தி, அலுத்த சத்தி முதலிய எண்குணங்களும் உயிரினிடத்து விளங்கி நிற்க, உயிர் சிவனாகியே நிற்கும்.
குறிப்புரை :
உரு - அழகு. `உற்பலத்தில்` என ஏழாவது விரிக்க. `தரமாய்` என ஆக்கம் விரிக்க. மருவுதல், அறிந்து நிற்றல். முப்பதங் களில் இரண்டொன்றையே முதற்குறிப்பாகக் கூறி, மகா வாக்கியங் -களை நினைப்பித்தார். சொரூபம், இங்குப் பொருள். சிவனது எண் குணங்களில் இரு குணம் `சத்தி, என்னும் பெயராற் சொல்லப் படுதலின். அவை முதலிய குணங்களைச் ``சத்தியாதி`` என்றார். முன்னர் `உயிர்` என்றதனைப் பின்னர் ``நின்றான்`` என ஆடூவறி சொல்லாற் கூறியது வடமொழி மதம் பற்றி. சிவத்திற்கும், உயிருக்கும் இடையே உள்ள தொடர்பு குணிக்கும், குணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு போன்றது அன்றாயினும் வேற்றுமையின்றி நிற்றல் மாத்திரைக்கு அத்தொடர்பினை உவமையாகக் கூறினார்.
இதனால், உயிர் ஞானத்தால் மெய்ப்பொருளாகிய சிவமாம் நிலையை எய்துதல் கூறப்பட்டது. அந்நிலையை எய்திய வழி உயிரும் மெய்ப்பொருளாதல் பற்றி இஃது இவ்வதிகாரத்தில் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 5
நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.
பொழிப்புரை :
சிவனை அன்பால் நினைதற்குப் பக்குவம் வேண்டும். அது வாய்க்கப் பெற்று, அவனை அன்பினஆல் நினைந்தும், வணங்கியும், புகழ்ந்து பாடியும் நின்றால் ஒன்றிலும் அகப் படாத அவனை நம்முள்ளே அகப்படுத்திக் கொள்ளலாம். எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமானும் எனக்கும் பக்குவம் வாய்த்தமையை அறிந்தே தமது அருளை வழங்கிச் சிவனை நினைக்கச் செய்தார்.
குறிப்புரை :
என்றது, `நினைத்து வணங்கவும், புகழ்ந்து பாடவும் செய்தாரா` எனவும், `அதனால், நான் சிவனை இப்பொழுது என்னுள்ளே அகப்படுத்தியுள்ளேன்` எனவும் கூறியவாறு. நெகிழ்வது மனம். வணங்குவது உடம்பு. புனைதல், ``பூமாலை புனைந்து ஏத்துதலையும், புகழ்ந்து பாடுதலையும்``l ஒருங்கே குறித்து நின்றது. புகழ்ந்து பாடுதல், ஆசிரியன்மார் அருளிச் செய்த பாடல்களையும்,தாமே பாடும் பாடல் களையும், அவை அவன் அருள்வழியே அமையும். `நாயனார் இந் நூலால் அவனைப் புகழ்ந்து பாடினார்` என்க,
``ஆர்வல்லார் காண அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து``3
எனவும்,
``இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கெழுந் தருளுவ தினியே``1
எனவும்,
``அழலார் வண்ணத் தம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``2
எனவும் இவ்வாறு அருளிச்செய்ப ஆதலின், அவனைப் பொதியலும் ஆகும்`` என்றமை பொருந்துவதாதல் காண்க. உம்மை சிறப்பு. நந்தி பெருமான் தம் அருளை வழங்கியது, நினைவிற்கு எட்டாதவனை நினைக்குமாற்றையும், வணங்குமாற்றையும், பூப்புனையுமாற்றையும், புகழ்ந்து பாடுமாற்றையும் விளக்கியருளியது. `அவர் அவற்றை அருளிச் செய்யாராயின், யான் எதனை அறிவேன்` என்பது கருத்து.
இதனால், `மெய்ப்பொருளை யுணர்தலும், அடைதலும் பக்குவ காலத்தில் குருவருள் வாய்க்கப் பெறுதலாலே` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 6
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.
பொழிப்புரை :
முன் தந்திரத்திற் கூறிய முத்துரியத்துள்
நிலையிற் புக்கபொழுது, பாலுந்தேனும் கலந்த கலப்பின்கண் உள்ளதும், கனிந்த பழத்தின் சாற்றில் உள்ளதும், மிகத் தூயதாகிய தேவரது அமுதத்தில் உள்ளதுமாகிய இனிமைகள் போன்ற ஓர் இனிமை அவ்வுயிரினது உடம்பில் உள்ள மயிர்க்கால்கள்தோறும் தேங்கி நிற்கும்.
குறிப்புரை :
`பாலொடு தேன் ஆகும் மதுரமும், பழத்துள் இரதம் ஆகும் மதுரமும்` என ``ஆகும் மதுரம்`` என்பதை ஏனையவற்றிற்கும் கூட்டுக. வாலிய - தூய. பேரமுது, தேவர் அமுது, ``துரியம் பொடிபட உள்புக`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பொடிபடல் - விலகுதல். சீலம் - தன்மை, என்றது இங்கு இனிமையை மயிர்க்கால் தோறும் தேக்குதலை.
``வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன்``*
என்னும் திருவாசகத்தாலும் அறிக.
இதனால், இங்கு எடுத்துக்கொண்ட ஆனந்தத்தின் இயல்பு விளக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்துப் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.
பொழிப்புரை :
சிவன், `இறவா நிலை` எனப்படும் அபர முத்தி நிலையையும், அந்நிலைக்கு ஏற்புடைய சுத்தமாயா புவனங்களையும் கடந்து, அவ்விடத்தை அடைந்த தன் அடியார்களோடே கூடி, அவர்கட்கு ஒப்பற்ற தலைவனாய் இருப்பவன். (எனவே, `நிரதிசய சுத்த போகத்தையே தருபவன்` என்றதாம்.) ஆயினும் அவன், பவழம் போன்ற இதழையும், அதற்குள்ளே அரும்பும் முத்துப்போன்ற நகையினையும், அதற்குள்ளே மெல்ல மிழற்றுகின்ற இனிய சொல்லையும் உடைய மாதராளாகிய, கெடுதல் இல்லாத ஞான சொரூபியைத் துணையாகப் பற்றி நிற்கின்றான்.
குறிப்புரை :
`அதனால், பலவகைப்பட்ட மாயா போகங்களை வேண்டுவார்க்கு அவற்றையும் தருகின்றான்` என்பதாம். தமர் - அடியார். ``விண்வத்துக் கொட்டும் வண்ணத் தமரர்`` என்றாற்போல மகர ஈறொழிந்த ஏனையீறுகளின் முன்னும் சிறுபான்மை அத்துச் சாரியை வருதல் அறிக. `தமரிடத்து நின்ற` என ஏழாவதன் பொருள் பட விரிக்க. `அண்டம் கடந்து நிற்பவன், ஆயினும் தமரிடத்து நிற்பவன்` என்க. ``தனியைமன்`` என்றது, `சிவன்` என்னும் நிலையையும் , ``சோதி தொடர்ந்து நின்றான்`` என்றது, `சத்தன்` என்னும் நிலையும் குறித்தனவாம். இதனால், மெய்ப்பொருளின் இரு நிலைகள் விளங்கும். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், `ஞான ஆனந்தமேயன்றி ஊன ஆனந்தமும் மெய்ப்பொருளால் ஆவதே` என்பது உணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 8
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.
பொழிப்புரை :
`மத்தியாலவத்தை` எனப்படும் சகலத்திற் சகலமாகிய மாசகலத்திலே முப்பத்தாறு கருவிகளுள் யாதொன்றும் ஒடுங்காது எழுச்சியுற்றிருப்பினும் தான் அவற்றின் வசப்படாது, அவற்றை வேறு நிறுத்தி, அங்ஙனம் நிறுத்தியதனால் கேவலாவத்தை வந்துவிடாதபடி அதனையும் நீக்கிச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையை அடைந்து, பின் `அதுவும் சீவச் செயலேயாம். என அதனை நீக்கிப் பரா வத்தையை எய்தியவழியே பந்தம் முற்றும் நீங்கிய நிலையாகும். அந் நிலையை அடைந்து, `சீவன்` என்னும் நிலைமை மாறி, `சிவம்` என்னும் நிலைமையை அடைந்து, அதனால் சத்திய ஞானானந்தத்தை அடைந்தவனே நிறைவான ஞானத்தை அடைந்தவனாவான்.
குறிப்புரை :
``மத்திமம்`` என்றது மத்தியாலவத்தையை. `மத்திமத் தின்கண்` என ஏழாவது விரிக்க. ``மாற்றி`` என்றதும் `நீக்கி` என்றதே. `பிறழ்வுற்றுச் சிவமாகி` என மாறிக்கூட்டுக. ``சார்ந்தான்`` என்பது வினையாலணையும் பெயர். `சார்ந்தானே ஞானி` என ஏகாரத்தை மாற்றி வைத்துரைக்க.
இதனால், சத்திய ஞானானந்தமே நிறைஞானத்தின் பயனாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 9
சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானனந் தத்தே
துவமார் துரியம் சொரூபம தாமே.
பொழிப்புரை :
பயன் இலதாம் பிறவியிற் செலுத்துகின்ற மும்மலங்களும் நீங்கி உயிர் சிவமாதற்பொருட்டு உண்மையான மூன்று துரிய நிலைகளைப்பிற பற்றுக்கள் நீங்குதற் பொருட்டுப் பற்றினால், தவத்தின் பயனான சத்திய ஞானானந்தம் கிடைக்கும். அந்நிலையில் அந்த ஆனந்தத்தையுடைய பொருளும் காட்சிப்படும்.
குறிப்புரை :
``சிவமாம் மும்மலந்தீர`` என்பதனைப் பின்முன்னாக நிறுத்தி, `மும்மலந்தீர்ந்து சிவமாக` விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. பவம் - உண்மை. துரியம், `பாழ்` எனப்பட்டது. `துரிய நிலையில் ஆனந்தம் தோன்ற, அதனானே அதனையுடைய பொருள் உண்மை தோன்றும்` என்றபடி. சொரூபம், `வந்து` (பொருள்) எனவும் பொருள் தரும். ஆனந்தம் தோன்ற, அஃதே பற்றி அதனையுடைய பொருளை உணர்தல், அருணோதயம் உண்டாக, அஃதே பற்றி ஞாயிற்றை உணர்தல் போலும்.
இதனால், துரியத்தை எய்தி, அதில் ஞானானந்தத்தை உணர்ந்து, அதனானே பொருளை உணர்க` என்பது கூறப்பட்டது. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
பண் :
பாடல் எண் : 1
பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத் தணைந்துநின் றானே.
பொழிப்புரை :
`குருமார்களில் எல்லாம் மேலான குருவாகிய ஞான குருவே எங்கும் நிறைந்த பரம்பொருளாவான்` என்பது நன்கறியப் பட்டது. அதற்கேற்ப அவன் தன் மாணாக்கனை விட்டு நீங்காது, அவன் செல்லுமிடமெல்லாம் சென்று நிலையாகப் பொருந்தி, கண்ட பொருள்களில் எல்லாம் அது அதுவாகும் இயல்புடைய அவனது ஆன்ம சொரூபத்தினுள் அஃது அவ்வாறாகாமல் நிலைபெற்று விளங்கும் அறிவின்பப் பொருளாய், அடைதற்கரிய துரிய நிலையில் கிடைத்திருப்பான்.
குறிப்புரை :
என இவ்வாறு குருவின்மேல் வைத்துக் கூறினா ராயினும், ஞான குருவின்பால் ஞானத்தைப் பெற்ற நன்மாணாக்கர் எங்கும், எப்பொழுதும், எவ்வாற்றானும் அக்குருவை மறவாது அவனைச் சிவமாகவே அறிவினுள் கண்டு ஆனந்திப்பர்` என்பதே கருத்து. `அக்காட்சி வெறும் கருதுகோள் காட்சியன்று; உண்மைக் காட்சியாய்ப் பயன் தரும் காட்சியே` என்பதைத் தெளிவித்தற் பொருட்டே இம்மந்திரத்தைக் குருவின்மேல் வைத்து இவ்வாறு அருளிச்செய்தார். `எங்கும் ஆம் பரமாகி` என்க. ``ஆகி`` என்பது பெயர். ஒழிவு - விட்டு நீங்குதல். `எங்கணும் ஒழிவற்று திரம் உறச் சேர்ந்து` என மாற்றிக் கொள்க. நிரவுதல் - அது அதுவாய் வசப்பட்டு நிற்றல். `நீடும் சொரூபமாய்` என ஆக்கம் வருவிக்க. ``துரியத்து நின்றான்`` என்றதனஆல், `ஞானிகள் துரியத்தினின்றும் கீழ் இறங்கார்` என்க. துரியம் முதலிய அவத்தைகளின் இயல்பு முன் தந்திரத்தில் கூறப்பட்டது.
இதனால், `அடையத் தக்க பொருள் ஞான குரு உருவமே` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 2
குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.
பொழிப்புரை :
மண் தன்னை அழிக்கும் தன்மையுடைய நீரினுள் அழியும், அவ்வாறே நீரும், காற்றும் முறையே நெருப்பினுள்ளும் ஆகாயத்தினுள்ளும் அழியும். எனவே, இப்பொருள்களுள் அடங்கியிருப்பவர் அல்லன் சிவன். அவன் பூமியையும் கடந்து மேற்போகியும் அளவின்றியிருப்பவன். (``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர் - போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``* அவனை ஒரு சிறுகுடிலுள் அடக்கி வைத்துக் கண்ணாற் கண்டு, காலால் வலம் வந்து, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி இன்புறுதல் எளிதாயிருக்க, அம்முறையை யறியாமல் யான் அல்லல் உறுகின்றேன்.
குறிப்புரை :
என்றது, அறிவிலாதார் செயலைத் தம்மேல் வைத்து அருளிச் செய்து இரங்கியவாறு. `குவலயம் குலைக்கின்ற நீரில்` என மாற்றி, அதன்பின்னும், ``ஆகாசம்`` என்பதன் பின்னும் `அழியும்` என்பன வருவிக்க. வரைத்தல் - அளவுட்படுத்தல். `படுத்தப்படுவது குருவுருவம்` என்க. என்றாற்போலும் திருமொழிகளால் ஞான குருவின் அருமையில் எளிமையை ஆய்ந்துணர்க. வலம் செய்தல் கூறவே, இனம் பற்றி ஏனையவும் கொள்க.
இதனால், அடைதற்கரிய பொருளை எளிதில் அடையும் முறை கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 3
அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.
பொழிப்புரை :
அயன், மால் முதலிய தேவர்கள் முதலாக எங்குள் ளவர்களும் இறைவனை, `அவன் பரமாகாசத்தில் இருக்கின்றான், ஆயினும் ஏத்துவார்க்கு அருள்புரிகின்றான் என அவனைக் காணாமலே கருதிநின்று ஏத்துவார்கள். ஆயினும் எங்கட்கு அவன் குருஉருவாகி எதிர் வந்து எங்களோடு நீங்காது உறைகின்றான்.
குறிப்புரை :
`அதனால் நாங்கள் அவனை நேரிற்கண்டு வலம் வந்து வணங்கி, ஆடிப்பாடி, அளவளாவி மகிழ்கின்றோம்` என்பது குறிப் பெச்சம். ``அங்கு நின்றான்`` என்பதனை, ``இறைவன்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. `தேவர்கள் முதலாக` என ஒரு சொல் வருவிக்க. ``தனி நாயகன், புவனாபதி`` என்னும் பெயர்கள் இரண்டன் உருபு ஏற்று, ``ஏத்துவர்`` என்பதனோடு முடிதற்கு உரியன; செய்யுள் நோக்கி வேறுபட்டு நின்றன. ``எம் இறை`` என்றது, குருவாகி வந்து அருள் புரிந்த உரிமை பற்றி. பொங்குதல், கூர்தலாகிய உள்ளது சிறத்தலே யாகலின் அதனை இங்கு, ``பொங்கி`` என்றார். ``பொங்கி நின்றான்`` எனப் பண்பின் வினைப் பண்பின்மேல் ஏற்றப்பட்டது. கூர்ந்தது அருள். `அது கூர்ந்து, குருவுருவாய் வந்தது` என்பதாம். புவனங்களை ``புவனா`` என பெண்பாலற் கூறினார். அன்னதொரு வழக்குப் பற்றி,
இதனால், அருட் குருவின் சிறப்பு உணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
சமையச் சுவடும் தனைஅறி யாமல்
கமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர்
அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.
பொழிப்புரை :
ஒவ்வோர் உயிரும் தன்னைத் தான் அறியக் கடமைப் பட்டவை. அவற்றை அவ்வாறு அறியச் செய்யாமல் மயங்கச் செய்வன, புறச் சமய நூல்களும், அடக்கம் இன்றி, வேண்டியவாறே ஒழுகத் தூண்டும் காமம் முதலிய குற்றம் எட்டும், அவற்றுக்குக் காரணமான ஆணவ மலமும் ஆகும். அவை முற்றாக நீங்குமாறு ஞான குருவைப் பிரியாது அவரது நிழல்போல உடன் இருப்பவர் வானவர்க்கும் தலைவராவர்.
குறிப்புரை :
சுவடு - எழுத்தின் வரிவடிவம். அவற்றை உடையது சுவடி. எனவே சுவடிகளில் உள்ள எழுத்துக்களை, ``சுவடு`` என்றார். `தனை அறியாமற் செய்யும்` என ஒரு சொல் வருவித்து, அதனை முதலிற் கூட்டுக. கமை - பொறுமை. அஃது அடக்கத்தைக் குறித்தது. `ஆணவ மலத்தின் காரமயம் எட்டு` என்பதை,
``... ... ... ... விகற்பம், கற்பம்,
குரோதம், மோகம், கொலை, அஞர், மதம், நகை``3
என்னும் இருபா இருபஃதால் அறிக. இவற்றுள் `மோகம்` என்பதனையே தலையாயதாக எடுத்து, ``காமம்`` என்றார். இனி, காமம் முதலிய அறுபகைகளோடு, `மண், பொன் இரண்டு கூட்டி, `எட்டு` என்பாரும், `இடும்பை, அசூயை, இரண்டு கூட்டி `எட்டு` என்பாரும் உளர். திமிரம் - இருள்; அணவ மலம். ``செயல்`` என்றது எட்டொழிந்த பிறவற்றை அவை மறைப்பு. திரிப்பு முதலியன. `தெளிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `குருவுடன்` என்பது அதிகாரத்தால் வந்தது. தலைவராதல், மேல் நிலையில் நிற்றல்.
இதனால், சொரூப உதயத்தாலே உயிர் தூய்மை பெறுதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 5
மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.
பொழிப்புரை :
`முக்குணங்களால், `அயன், அரி, அரன்` எனச் சொல்லப்படும் மூவருள், `தனி ஒருவன்` எனச் சுட்டப்படும் அரன், குணம் பற்றி ஏனையிருவரோடு ஒத்தவனாகச் சொல்லப்படினும் ஏனையிருவர்போலச் சகலனாகாது, பிரளயாகலருள் பக்குவம் உற்ற வனாய், சிவனை மறந்து, `தானே முதல்வன்` என மயங்கும் மயக்கம் இன்றிச் சிவனையே முதல்வனாகத் தெளிந்து அவன் பணியையே ஆற்றுபவன் ஆதலின் வேற்றியல்புடையனாதல் போல முத் துரியத்திலும் சீவனும், சிவனும் ஒரு பெற்றியராய் நின்ற போதிலும் பல வகையில் சிவன் சீவனின் வேறு பட்டவன்` என்று சிவநூல்கள் செப்பும்.
குறிப்புரை :
முதல் உரு - காரணமூர்த்தி. தனது வலப்பாகத்தினின்று அயனையும், இடப்பாகத்தினின்று அரியையும் தோற்றுவித்தலால் அரன் காரண மூர்த்தியாயினன். இவனே சீகண்ட உருத்திரன். `முதல் உரு ஆயதனால்` என உருபு விரிக்க. அணு - உயிர். ``அணுப் பரன்,`` சேய - சேய்மையில் உள்ள. ``சிவம்`` என்பது, `சுத்தம்` என்னும் பொருளதாய் நின்றது. கேவல சகலங்களைக் கடந்து நிற்றலின் சுத்தாவத்தைகள் சேய வாயின. `முத்துரியம்` முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `ஒரு சீர் பெற ஏயும் நெறி` என்க. ஏய்தல் - பொருந்துதல்.
`அணுவும், பரனும் ஏயும் நெறி, மூவகைத் தெய்வத்து ஒருவன் வேறாயது` என இயைத்து முடிக்க. முதல் அடி இன எதுகை பெற்று வந்தது.
இதனால், `சொரூப உதயத்துச் சிவ சீவர்கள் அருள் நிலையால் சமமாயினும், பொருள் நிலையால் வேறானவர்களே` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 6
உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.
பொழிப்புரை :
சிவன் தான், தனக்கு ஓர் உடம்பில்லாமலே பல உயிர்கட்கும் பல்வேறு வகையான உடம்புகளைப் படைத்துக் கொடுக்கின்றான். தனக்கு ஒரு காரணம் இன்றித் தானே அனைத் திற்கும் காரணமாய் உள்ளான். எந்தப் பொருளின் தன்மையும் தன்னைப் பற்றாது தான் அனைத்துப் பொருளிலும் தாமரை இலையில் தண்ணீர் போலப் பொருந்தி நிற்கின்றான். ஆகவே, அவனது நிலை யாவராலும் அறிய ஒண்ணாத பெருமறையாய் இருத்தலின், அம்மறையை அறிந்த நல்லா சிரியன் வழியாக அன்றித் தாமே நேராக அவனை அடைதல் யாவர்க்கும் இயலாது.
குறிப்புரை :
``கரு`` என்றது காரணத்தை. மருவுதல் பற்றுறப் பற்றல். மாயம், இங்கு மறைவைக் குறித்தது, அதனையுடைய தன்மையை உணர்த்திற்று.
``கருவினா லன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினா லன்றியே உருவுசெய்தான்`` (திருமுறை - 3.35.3.) என்னும் ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியை இம் மந்திரத்தோடு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், `உண்மைச் சொரூபமாம் சிவனது தோற்றத்திற்கு முற்பட்ட நிலை குருவினது தோற்றம்` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
உருவம் நினைப்பவர்க்(கு) உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.
பொழிப்புரை :
குருவின் உருவத்தை உள்ளத்தில் உள்கியிருப்பவர் கட்கு அங்குச் சிவ சோதியே பிரகாசிக்கும். அவர்கள் ஊழிக் காலம் நிலவுலகில் வாழ்வர்; பின்பு சிவலோக வாழ்வினரும் ஆவர். அங்ஙன மாகவும் குரு உருவத்தின் சிறப்பை அறிந்து அதனை உள்ளத்தில் உள்குவோர் உலகத்தில் எத்துணைப் பேர்!
குறிப்புரை :
உருவம், அதிகாரத்தால் குரு உருவேயாயிற்று. `மணி மந்திர ஔடதங்களாலும், மற்றும் அடயோகம் முதலிய உழைப்புக் களாலும் அடையும் பயனை ஞான குருவால் அடையலாம்; ஆனால் ஞான குருவால் அடையும் பயனை வேறு வழியால் அடைய இயலாது` என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார்.
``மந்திரத்தால், மருந்துகளால், வாய்த்தஇயோ கத்தால்,
மணியிரத குளிகையினால், மற்றும் மற்றும்
தந்திரத்தே சொனைமுறை செய்ய, வேத
சகலகலை ஞானங்கள், திரிகால ஞானம்,
அந்தமிலா அணிமாதி ஞானங்கள் எல்லாம்
அடைந்திடும்; ஆசான் அருளால் அடிசேர் ஞானம்
வந்திடும்; மற்றொன்றாலும் வாரா தாகும்;
மற்றவையும் அவன்அருளால் மருவு மன்றே``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க. இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், சொரூபத்தியானத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 8
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப்
பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.
பொழிப்புரை :
முன் மந்திரத்தில், ``உள்ளுறும் சோதி`` எனப்பட்ட அந்த மேலான ஒளி என் உள்ளத்துள்ளே தோன்றியவுடன் நான் அதனைச் சிக்கெனப் பிடித்தேன். பிடித்தபொழுது முதற்கண் அஃது என்னுள்ளே அடங்கப் பின்பு நான் அதனுள்ளே தோய்ந்தேன். தோயத் தோய, அஃது எல்லையின்றி விரியக் கண்டேன்.
குறிப்புரை :
`பதியாகும் பரஞ்சோதியை` என மாறிக் கூட்டி உரைக்க. உதயம் உள்ளத்துள் ஆதலின், `முதற்கண் அஃது என்னுள் படிந்தது` என்றும், விறகினின்றும் தோன்றிய தீ பின் அவ்விறகைக் கதுவுமாறுபோல, ஆன்ம அறிவில் தோன்றிய சிவஒளி பின்பு அவ்வறிவை விழுங்கி நிற்றல் பற்றி, `பின்பு நான் அதனுட் படிந்தேன்` என்றும், முன்பு சுட்டுணர்வாய் நின்ற ஆன்ம அறிவு பின்பு வியாபக அறிவாய் விரியுந்தோறும் சிவஒளி அவ்வறிவிற்கு வியாபகமாயே விளங்குதல் பற்றி, `அதனைப் பறையக் கண்டேன்` என்றும் கூறினார். பறைதல் - பறத்தல். அஃது இங்கு வியாபித்தலைக் குறித்தது. இனி, `பறைதல், சொல்லுதல்` எனக் கொண்டு, அஃதாவது, தன்னியல்பை அறிவித்தல்` என்பாரும் உளர். தன், சாரியை. ``பறைய`` என்னும் செயவென் எச்சம், `பறையும்பொழுதில்` எனக்காலம் உணர்த்தி நின்றது. இதனுள்ளும் முன் மந்திரத்திற் போந்த அணியே வந்தது.
இதனால், சொரூப உதயத்தின் படிநிலைகள் கூறப்பட்டன.
பண் :
பாடல் எண் : 9
சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக் குரவன் சுகோயத் தானே.
பொழிப்புரை :
கவர்ச்சியான வடிவம், நிறம், மணம் முதலிய பிற பண்புகள் ஆகியவற்றை இயல்பாகவே கொண்டிருத்தலாலே குவளை மலர்கள் பிற மலர்களினும் கிடைத்தற்கரிய சிறந்த மலர்களாகக் கருதப்படுகின்றன. அதுபோலவே, `சத்தியம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்னும் மெய்ப்பொருள் இயல்புகளைத் தனது ஞானமாக அடைந்த உண்மைக் குருவே வீட்டின்பத்தைத் தர வல்லவனாவான்.
குறிப்புரை :
குவளை மலரையே எல்லா மலர்களினும் சிறந்த மலராக நாயனார் கூறிவருதலை மேலேயும் சில மந்திரங்களிற் கண்டோம். அதற்குக் காரணம், அது தீக்கைக் காலத்தில் அணியப் படுதல் பற்றிப்போலும்! ``சொரூபம்`` இரண்டில் முன்னது வடிவம். பின்னது உண்மை. உருவம் - நிறம். `தொன்மை` என்பதில் விகுதி தொகுக்கப்பட்டது. `தொல்லாக` என ஆக்கம் வருவிக்க. இயல்பை, ``தொன்மை`` என்றார். விழுங்குதல், கொண்டிருத்தல். ``விழுங்கி`` என்னும் எச்சம் காரணப் பொருளில் வந்தது. `உற்பலம் அரியன ஆமாறு போல` என மாற்றிக் கொள்க. சத்தியம் முதலிய நான்கு மெய்ப்பொருளின் இயல்பாதல் மேலேயும் கூறப்பட்டது.
இதனால், `சிவனைப் போல, `சொரூபம்` எனச் சொல்லத் தக்கவன் உண்மையான ஞான குருவே` என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 10
உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
கரையற்ற சத்திஆதி காணில் அகாரம்
மருவுற் றுகாரம் மகாரம தாகி
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.
பொழிப்புரை :
(`சொரூபம்` என்பதைப் பொதுப்பட இயல்பு` - என வைத்துக் காணும்பொழுது அது, `மேனிலைச் சொரூபம், கீழ்நிலைச் சொரூபம்` என இரண்டாகும். அவற்றுள்) சிவனது மேனிலைச் சொரூபம் சொல்லைக் கடந்தது; இன்ப உருவானது. அநாதி; சிவமாவது கீழ்நிலைச் சொரூபம். `அகார உகார மகாரம்` என்னும் பகுதிகளாயும், அங்ஙனம் பகுக்கப்படாத தொகுதியாயும் உள்ள தாரக மந்திரத்தின் உள்ளொளியாகும். ஆதி; சத்தியாவது.
குறிப்புரை :
`உரையற்ற` எனப் போந்த இரண்டில் முன்னது ``மோனம்`` என்பதனை விளக்கியது. பின்னது `வெளிப்படச் சொல்ல வாராதது` என்னும் பொருட்டாய் ஓங்காரத்தைக் குறித்தது. உள் ஒளி - அதனால் சுட்டப்படும் பொருள். `தாரகம்` என்பது இடைக்குறைந்து நின்றது, `கீழ் நிலைச் சொரூபமும் அளவுட் படாதது` என்றற்கு, ``கரை -யற்ற`` என்றார். `மருவுற்ற` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
சொல்லைக் கடந்ததாய், இன்பமாய் அநாதியாய், `சிவம்` என நிற்பவனே, ஆராயுமிடத்து, அகார உகார மகாரங்களின் பொருளாயும், அவை ஒருங்கு தொக்க `ஓம்` என்பதன் பொருளாயும், ஆதியாயும் `சத்தி என நிற்பான்` என்பது இம்மந்திரத்தின் பொருள். சிவம் மேல்நிலைச் சொரூபம். சத்தி கீழ்நிலைச் சொரூபம். இவ் விரண்டையும் அனுபவமாக உணர்ந்தவனே ஞானகுரு. அவனே `சொரூபம்` எனப்படுவான். கீழ்நிலைச் சொரூபத்தை மட்டும் உணர்ந்தவன் கிரியா குரு. அவனும் ஓராற்றால் `சொரூபம்` எனப் படுவான் என்றற்கு இது கூறினார். கூறவே, கீழ்நிலைச் சொரூபத்தைத் தானும் உணராதவன் குருவாகாமை விளங்கும்.
இதனால், மேல்நிலைச் சொரூப உதயமே சொரூப உதயமாதல் அன்றிக் கீழ்நிலைச் சொருப உதயமும் ஓராற்றால் சொரூப உதயமாதல் கூறப்பட்டது.
இதனையடுத்துப் பதிப்புக்களில், ``தலைநின்ற தாழ்வரைமீது தவம் செய்து`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து `வாய்மை` அதிகாரத்தில் வந்தது.
பண் :
பாடல் எண் : 11
ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நாமென லாமே.
பொழிப்புரை :
பாச ஞான பசு ஞானங்களால் எளிதில் அறியப் படும் பொருள்கள் யாவும் நமக்குப் புறத்தே நிற்பனவாக, அந்த ஞானங்களால் அறிதற்கரிய பொருள் நம்மின் வேறாகாது நம் உள்ளே யிருத்தலை நான் அறிந்தேன். மேலும், அந்தப் பொருள் நம்மை விட்டு நீங்குதற் காரணத்தையும் நான் `இது` என அறிந்தேன்; நீங்கிப் போன அது மீட்டும் வந்து புகுதற் காரணத்தையும் `இது` என அறிந்தேன். இனி நான் `யான், எனது` எனச்செருக்கு மாட்டேன்; அந்தப் பொருளை யன்றி வேறொரு புகலிடமும் எனக்கு இல்லை. இந்நிலைமை, `முன்பு தானாய் இராது நாமாகவேயிருந்த முதல்வனும் நாமே` எனத் தக்கதாய் உள்ளது.
குறிப்புரை :
`அரும்பொருள் அகத்தின் ஆமாறு அறிந்தேன்` எனவே, எளிய பொருள்கள் புறத்தேயிருத்தல் பெறப்பட்டது. போதல் - நீங்குதல். அது விளங்காது மறைந்திருந்தைம அதற்குக் காரணம். ஆன்ம அறிவு `யான் எனது` எனச் செருக்கினமை. புகுதல், மறைவின்றி வெளிப்பட்டு விளங்குதல். அதற்குக் காரணம் அச்செருக்குக்கள் இன்றி, அடங்கி ஒடுங்கினமை. முன்பு செய்த குற்றங்களை இனிச் செய்யமாட்டேன்` என்பார். ``ஏமாப்பதில்லை. இனி ஓர் இடமில்லை`` என்றார். பெத்த காலத்தில் முதல்வன் வேறு விளங்காது, உயிர்களாயே நின்றதனை, ``நாம் ஆம் முதல்வன்`` என்றும், முத்தி காலத்தில் உயிர் வேறு விளங்காது முதல்வனாயே நிற்றலின், ``முதல்வனும் நாம் எனலாம்`` என்றும் கூறினார். இதனை மெய்கண்ட தேவர்,
``அவனே தானே யாகிய அந்நெறி
ஏக னாகி``8
என்றார். தம்மோடு தம் மாணாக்கரையும் உளப்படுத்த, ``நாம்`` என்றார்.
இதனால், சொரூப உதயத்தின் முடிநிலை இயல்பு கூறி முடிக்கப்பட்டது.