திருப்புகலூரில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரைச் சந்தித்தபொழுது
திருவாரூர்த் திருவாதிரைச் சிறப்பைச் சொல்லி யருளியதற்கு அப்பதிகமே
சான்றாக உள்ளது. ``அத்தன் ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம்`` என்று
முடியும் தொடர் திருவாதிரைச் சிறப்பைத் தெரிவிக்கிறது.
திருவீழிமிழலையில் திருஞானசம்பந்தரும் திருநாவுக் கரசரும் நாடோறும்
படிக்காசு பெற்றுத் தொண்டர்க்கு அமுதளித்தனர் என்பதும்,
திருஞானசம்பந்தர்க்கு வாசியுள்ளகாசும், திருநாவுக் கரசர்க்கு
வாசியில்லாக்காசும் இறைவனால் அளிக்கப்பெற்றன என்பதும்,
திருஞானசம்பந்தர் வாசிதீரப்பாடிக் காசுபெற்றார் என்பதும் வரலாறு.
(தி.5. ப.50. பா.7)
நம்பியாண்டார் நம்பிகள் ஆளுடையபிள்ளையார் திரு வந்தாதியில் இதனைக்
குறித்துள்ளார்.
கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக்
குவலயமே``.
-தி.11ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி. 80
சேந்தனார் திருவீழிமிழலைத் திருவிசைப்பாவிலும் இச் செய்தியைக்
கூறியுள்ளார்.
- தி.9 திருவிசைப்பா. 57
திருமறைக்காட்டில் வேதங்கள் அடைத்த கதவைத் திரு நாவுக்கரசர்
``பண்ணினேர் மொழியாள்`` என்று தொடங்கித் திறக்கப் பாடியதும்,
திருஞானசம்பந்தர் அடைக்கப் பாடியதும் வரலாறு.
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே`` (தி.5. ப.10.
பா.1)
``சரக்க இக்கத வம்திறப் பிம்மினே`` (தி.5. ப.10.
பா.11)
நம்பியாண்டார் நம்பிகள் திருவந்தாதியிலும் இச்செய்தி
குறிக்கப்படுகிறது.
திணியன நீள்கத வம்திறப் பித்தன`` -தி.11 திருத்.
திருவந்தாதி. 25
வாய்மூருக்குவா என்றழைக்கப்பெற்றது :
திருமறைக்காட்டுத் திருமடத்துள் உறங்கிக்கொண்டிருந்த திருநாவுக்கரசரைத்
திருவாய்மூருக்கு வருக என்றழைத்ததும் அங்கே காட்சி வழங்கியதும்
வரலாறு.
``உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி
என்னை வாவென்று போனார்`` (தி.5. ப.50.
பா.2)
``எங்கேஎன்னை இருந்திடம் தேடிக் கொண்டு
அங்கே வந்தடை யாளம் அருளினார்........
திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று
போனார்`` (தி.5. ப.50. பா.1)
``தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன்
அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேன்என்றார்``
(தி.5. ப.50. பா.3)
``கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்``
``ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ``
``செந்தமிழ் உறைப்புப்பாடி
அடைப்பித் தாரும் நின்றார் மறைக்கவல்
லரோதம்மை``
(தி.5. ப.50. பா.4, 7, 8)
``பாட அடியார் பரவக்கண்டேன்......வாய்மூர்
அடிகளை நான்கண்ட வாறே`` (தி.6. ப.77. பா.1)
உண்ணா நோன்பு மேற்கொண்டது :
பழையாறை வடதளித் திருக்கோயிலுள் இருக்கும் இறைவரை ஒளித்து சமணர்
தம் பாழியாகக்கொண்டிருந்தனர். திருவாக்கரசர் அங்குச் சென்றபோது மீண்டும்
அக்கோயிலுள் சிவபிரானைத் தரிசித்தாலன்றி உண்பதில்லை என
விரதங்கொண்டதும், அரசன் கனவில் இறைவன் தோன்றி மீண்டும் கோயில்
எடுக்கச் செய்ததும், சமணர்களை அழிக்கச் செய்ததும் வரலாறு.
``தலையெ லாம்பறிக் கும்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தால்மறைக்
கொண்ணுமோ``
``ஆளுறா ஆயிரம் சமணும் அழிவாக்கினான்``
``மூக்கினான் முரன்றோதியக் குண்டிகை
தூக்கினார் குலந் தூரறுத்தே தனக்கு
ஆக்கினான்`` (தி.5. ப.58. பா.9,2)
பொதிசோறு பெற்றது :
திருநாவுக்கரசர் திருப்பைஞ்ஞீலி செல்லும்போது வழிநடை வருத்தமும் பசியும்
தீர இறைவன் பொதி சோறு அளித்ததும், திருப்பைஞ்ஞீலி வரை அழைத்துச்
சென்று மறைந்ததும் வரலாறு. சேக்கிழார் பெருமான் ``ஆடல் புரிந்தார்
அடியேனைப் பொருளா அளித்த கருணை யெனப் பாடல் புரிந்து``
திருநாவுக்கரசர் வணங்கி னார் என்று குறிப்பிட்டுள்ளார். திருப்பைஞ்ஞீலித்
திருப்பதிகம் ஒன்றே உள்ளது. அதில் இக்குறிப்பில்லை. ஆகையால்
இத்திருப்பதிகம் கிடைக்கவில்லை என்றறிகின்றோம். கோயம்புத்தூர் திரு.
சீ.கே.எஸ். அவர்களும் இதனைக் குறித்துள்ளார்கள்.
கயிலைக் காட்சி :
திருக்காளத்திமலையில் இறைவனைத் தொழுத திருநாவுக் கரசர்க்குத்
திருக்கயிலாய தரிசனம் செய்யவேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.
``கனத்தகத்தான் கயிலாயத் துச்சி உள்ளான் காளத்தி யான் அவன் என்
கண்ணுளானே`` என்று காளத்தியிலிருந்தே பாடிப் பரவினார். அங்கிருந்து
திருக்கயிலாய யாத்திரை சென்றதும் இறைவன் இன்னும் சிலகாலம்
தமிழ்மாலை பாடவேண்டுமென்ற கருத்தால் திருநாவுக்கரசரைத்
திருவையாற்றில் தோன்றச்செய்து கயிலைக் காட்சி காட்டியருளியதும்
வரலாறு.
கயிலைக் காட்சியை அப்பர் நேரிற் கண்டு அதன் இயல்பு களை உள்ளவாறு
பாடியருளியதை திருப்பதிகக் குறிப்புக்கள் நன்கு உணர்த்தும். மேலும்
காடொடு நாடும் மலையும் கைதொழது போற்றிச்சென்ற திருநாவுக்கரசைரைப்
பெருமான் தவமுனிவராய் வந்து பொய்கையில் மூழ்கும்படிச் செய்து
திருவையாற்றில் தோன்றச்செய்து கயிலைக் காட்சி வழங்கியருளிய
இவ்வரலாற்றினை,
``ஏடுமதிக் கண்ணியினானை ஏந்திழையா
ளொடும்பாடிக்
காடொடு நாடும் மலையும் கைதொழுதாடா
வருவேன்``
(தி.4. ப.5)
எனவும்,
``யாதும் சுவடுபடாமல் ஐயா றடைகின்றபோது
காதல் மடப்பிடியோடும் களிறுவருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன
கண்டேன்``
(தி.4. ப.3. பா.1)
``நெடுநீரில் நின்றேற நினைந்தருளி
ஆக்கினவா றடியேனை ஐயாறன்``
``நெடுநீரில் நின்றேற நினைந்தருளி
உருக்கினவா றடியேனை ஐயாறன்`` (தி.4. ப.91. பா.3,
4)
எனவும் கூறிய தொடர்களால் நாம் நன்கு அறியலாம்.
திருவையாற்றில் தென்கயிலை என வழங்குவதும், அப்பர் அடிகள் கயிலைக்
காட்சி கண்ட திருவிழாக்கள் முதலிய இத்தலத்து நிகழ்தலும்
அறிதற்குரியன.
திருப்புகலூரில் :
திருநாவுக்கரசர் புகலூர்ப்பெருமான் திருவடிகளையே சரணெனக் கொண்டு
உழவாரத்தொண்டு செய்து திருப்பதிகங்கள் பாடித் தங்கியிருந்தார்.
பொறிவாயில் ஐந்தவித்த அவருடைய பற்றற்ற நிலையை இறைவன் பலவாறு
வெளிப்படுத்துகின்றான்.
பெண்ணாசை, பொருளாசை இவற்றிலும் தூய்மையுடையார் என்பதை உலகம்
அறிய உழவாரம் செய்யும் இடங்களில் பொன்னும் மணியும் தோன்றச்செய்தும்,
ஊர்வசி முதலான அரம்பையரை ஆடச் செய்தும் இவை இரண்டாலும் இவர்தம்
உளஉரத்தைப் புலப்படுத்து கின்றான் இறைவன்.
``பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் ...
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே`` (தி.6.
ப.27. பா.1)
நம்பியாண்டார் நம்பிகள் இவ்வற்புத நிகழ்ச்சியைத் திரு ஏகாதச மாலையில்
(பா.2) விவரித்துள்ளார்கள்.
``திருநாவுக் கரசடி யவர்நாடற் கரியவர்
தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப்
பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்
உழவாரப் படைகையில் உடையான்வைத்
தனதமிழ்
குருவாகக் கொடுசிவன் அடிசூடத் திரிபவர்
குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே``
திருப்புகலூரில் இறைவன் திருவடியடையும் முன்னுணர்வு தோன்றப் பல
பதிகங்களைப் பாடியுள்ளார் அப்பர்.
``தன்னைச் சரணென்று தாளடைந் தேன் தன்
அடியடையப்
புன்னைப் பொழிற்புகலூ ரண்ணல்செய்வன
கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத்
தேழ்நகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத்
திருத்திடுமே``
(தி.4. ப.105. பா.1)
``உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர்மேவிய
புண்ணியனே`` (தி.6. ப.99. பா.10)
கல்வெட்டுக்களில் :
இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தென்னவன் மூவேந்த
வேளான் என்பவன் (கி. பி. 1013 -14) திருநாவுக்கரசர் திருவுருவத்தை
எழுந்தருளுவித்துத் திருவிளக்கு அணிகலன் முதலியன அளித்துள்ள செய்தி
குறிப்பிடப்படுகிறது.
``பாதாதிகேசாந்தம் இருபத்து இருவிரலே இரண்டுதோரை உயரத்து இரண்டு
திருக்கை உடையராகக் கனமாக எழுந்தருளுவித்த திருநாவுக்கரசர் பிரதிமம்
ஒன்று; இதனொடுங் கூடச்செய்த எண் விரலே ஆறுதோரைச் சம சதுரத்து
நால்விரல் உயரத்து பீடம் ஒன்று`` என்பது கல்வெட்டு வாசகம். மேலும்,
தஞ்சைப் பெரியகோயிலில் திருமுறை ஓதுதற்கு நாற்பத்தெட்டுபேரும் உடுக்கை
கொட்டி மத்தளம் வாசிப்பார் இருவரும் நியமிக்கப்பெற்றிருந்த செய்தி
பிறிதோர் கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கல்வெட்டுக்களிலிருந்து இராஜ
ராஜசோழன் காலத்தும் இராஜேந்திர சோழன் காலத்தும் சமயாசாரியர்
வழிபாடு சிறந்திருந்த செய்தி அறியலாம்.
திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவவதாரத் தலமாகிய திருவாமூர்ப் பசுபதீசுவரர்
ஆலயத்தில் குலோத்துங்கன் I காலத்தில் இரவீசுவரம் உடையார் கோயிலில்
தாபித்திருக்கும் திருநாவுக்கரைய தேவர் திருக்கோயில் திருப்பணிகளுக்குத்
திருமுனைப்பாடி நாட்டுக் கிழாமூர் மக்கள் ஒரு வேலி நிலம் விற்று அளித்த
செய்தி காணப்படு கிறது. மேலும் பிற்காலத்து, திருவாமூர்க்கு அருகில் முத்து
ரெட்டியார் என்பவர் (1933-1934) மூன்றுகாணித் தோப்பு ஒன்றை விளக்கு
வைப்பதற்காக அளித்துள்ளார்.
திருவதிகைக் கோயிலில் குலோத்துங்கன் வாகீசர் மடத்திற்கு நிலம் அளித்த
செய்தியும், அவ்வரசன் காலத்தில் அதிராசமாங்கலிய புரத்துக் குடிமக்கள் 4800
குழி நிலத்தைத் திருநாவுக்கரசர் மடத்தில் அன்னதானமளித்தற்கு
வழங்கியருளிய செய்தியும் கூறப்படுகிறது. குலோத்துங்கனின் போர்ப்படைத்
தலைவனாகிய கருணாகரத் தொண்டைமான் செய்த திருநாவுக்கரசர்
ஆலயத்தைத் திருப்பணி செய்த விவரம் பாடல்களால்
குறிக்கப்பெற்றுள்ளது.
``ஈசன் அதிகையில்வா கீசன் எழுந்தருள
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்
விளைவித்த வேணாடும் வெற்பனைத்தும் செந்தீ
விளைவித்தான் தொண்டையர் மன்``
என்பது அக்கல்வெட்டுப் பாடல்.
திருவாரூர், தியாகேசர் திருக்கோயிலில் குலோத்துங்கன் II காலத்தில் மூவர்
திருவுருவங்களைத் தாபித்து நிலதானம் அளித்த செய்தி காணப்படுகிறது.
கல்வெட்டில் வடமொழி வாசகத்தில் திருநாவுக்கரசரை வாக்கதிபதி என்று
குறிக்கப்படுகிறது.
திருப்புகலூரில் திருநாவுக்கரசர் கோயிலுக்கு இராஜராஜன் I நித்திய பூஜைக்கு
நிபந்தம் அளித்துள்ளான். இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் குளிச்செழுந்த
நாயனார் என்று வரும் பெயர் கயிலைகாணச் சென்று தடாகத்து மூழ்கி எழுந்த
காரணத்தால் அப்பரடிகளைக் குறிப்பிடும் பெயரெனக் கொள்ளலாம். மேலும்
திருமுறை ஓதுவார்க்கு நிபந்தமளித்த செய்தியும் காணப்படுகிறது. மேலும்
திருவீழிமிழலை, திருமயானம், தீர்த்தநகரி, திருக்கச்சூர், திருப்புத்தூர்,
கோயிலூர், சூலமங்கலம், கீரனூர் முதலிய தலங்களில் திருநாவுக்கரசர் தொடர்
பான செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.
இராஜராஜசோழன் II காலத்தில் திருவலஞ்சுழியிலும், குலோத்துங்கன் III
காலத்தில் திருக்கச்சூரிலும், குலோத்துங்கன் III காலத்து சித்தூரிலும்,
இராசேந்திரன் III காலத்தில் கோயிலூரிலும், ஜடாவர்மன் வீரபாண்டியன்
காலத்தில் சேரமாதேவியிலும், வீரபாண்டியன் காலத்து தீர்த்தநகரியிலும்,
விக்கிரம பாண்டியன் காலத்தில் திருப்புத்தூரிலும், பராக்கிரமபாண்டியன்
காலத்தில் சூல மங்கலத்திலும் திருநாவுக்கரசர் திருவுருவப் பிரதிஷ்டை திரு
விழாக்கள் முதலியன நிகழ்த்திய செய்தியும் நிலதானம் முதலிய வழங்கிய
செய்தியும் குறிக்கப்பெற்றுள்ள.
திருவீழிமிழலை, திருவதிகை, திருவான்மியூர், திருக் குறுக்கை பூதக்குடி முதலிய
இடங்களில் அப்பரடிகளுக்குத் திருமடம் இருந்த செய்தி கல்வெட்டுக்களில்
காணப்படுகிறது.
திருநாவுக்கரசர் திருப்பெயரை மக்கள் பெயராகவும் திரு வீதியின் பெயராகவும்
அளவு கருவிகளின் பெயராகவும் வழங்கி வந்தமையும் கல்வெட்டுக்களில்
காணலாம்.
உ
சிவமயம்
திருநாவுக்கரசர் பெருமை
தருமை ஆதீனப் புலவர், பல்கலைக்கல்லூரி
முதல்வர்,
சித்தாந்த சிரோமணி, சித்தாந்த ரத்நாகரம், மதுரகவி,
முதுபெரும்புலவர்.
வித்துவான் முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்
திருமுனைப்பாடி நாட்டுத் திருவாமூரில் சைவ வேளாளர் குலத்தில்,
குறுக்கையர் குடியில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் தோன்றியவர்.
திலகவதியார்க்குப் பின் வந்தவர். `மருள் நீக்கியார் என்ற பெயரினார். கலை
பலவும் நிரம்பக் கற்றவர். இருவரும் பெற்றோரை இழந்தனர்.
திலகவதியாரை மணக்க இசைந்த கலிப்பகையார் சோழ மன்னன் படைத்
தலைவர். அவர் சென்று வடநாட்டு மன்னரொடு நெடுநாள் போர் புரிந்து
துறக்கம் உற்றார். அதை அறிந்த திலகவதியார் தாமும் இறக்கத்
துணிந்தபோது, மருள்நீக்கியார் விழுந்து வணங்கி, `அன்னையும் அத்தனும்
அகன்ற பின்னையும் நான் உம்மை வணங்கப் பெறுதலினால் உயிர் தரித்தேன்.
இனி என்னைத் தனியாகக் கைவிட்டு ஏகுவீர் எனில், யானும் உமக்கு முன்னம்
உயிர் நீப்பன்` என்று மொழிந்து இடருள் முழுகினார். திலகவதியாரும்
`தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா`, இறப்பை விலக்க, உயிர்
தாங்கி, அம் பொன் மணி நூல் தாங்காது, அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி,
மனைத்தவம் புரிந்திருந்தார். சிவபெருமான் திருவடிக்கண் அன்பு பூண்டு,
திருவருள் நெறி ஒழுகி வாழ்ந்தார்.
மருள்நீக்கியார் சமண் சமய நூல்களைக் கற்றார். அச் சமயத்தைச் சார்ந்தார்.
சமணர்க்குத் தலைவராய்த் தருமசேனர் எனப் புகழ் பெற்று விளங்கினார்.
திருவதிகையில் திருத்தொண்டு புரிந்துறையும் திலகவதியார், தம் தம்பியார் பர
சமயமான படுகுழியில் வீழ்ந்து கெடுவதை ஆற்றாராய்,
திருவீரட்டானேசுவரரை நாள்தொறும் வேண்டி, அக் குழியினின்றும் சைவ
சமயப் பேரின்பக் கரையில் ஏற்றியருளப் போற்றினார். `சூலை நோய் தந்து
ஆட்கொள்வோம் கவலாதே` என்று கனவில் அருளினார் அதிகைப்பிரானார்.
அவ்வாறே அவர்க்குச் சூலை நோய் உண்டாயிற்று. மந்திரம் முதலியவற்றால்
நீக்க முயன்றனர். நோய் மேன்மேல் மிகுந்ததே அன்றிக் குறைந்திலது. மிக
வருந்தித் தமக்கையார்க்குச் சொல்லி அழைத்துவர ஆள்விட்டார். அவர் அங்கு
வாரேம் என்றார். மருள்நீக்கியாரே தமக்கையார்பால் ஏவலன்
துணைக்கொண்டு வந்தார்; கண்டார்; வணங்கினார்.
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப், பெருவாழ்வு வந்ததெனப்
பெருந்தகையார் பணிந்து ஏற்று உருஆர அணிந்து. உற்ற இடத்து உய்யும் நெறி
தரும் அவர், முன் செல்லப் பின்சென்று, திருவீரட்டானத்திறைவர்
பெருங்கோயிலைத் தொழுது வலங் கொண்டு இறைஞ்சி நிலமிசை விழுந்தார்.
தம்பிரான் திருவருளால் தமிழ்மாலைகள் சார்த்தும் உணர்வுற்றார். குருவருள்
கிடைக்கப் பெற்றார்.
`கூற்றாயினவாறு விலக்ககிலீர்` எனத் தொடங்கும் திருப் பதிகம் பாடினார்.
சூலை அகன்றது. திருவருள் பெறத் துணை யாயிருந்த சூலைக்குச் செய்யும்
நன்றியை நாடினார். சிவபிரான், செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடை
பாடியதற்குத் திருவுளம் மகிழ்ந்ததால், `நாவுக்கரசு என்னும் பெயர் வழங்குக`
என்று வானிலே உடலிலியொலியாக ஒரு வாய்மை எழுந்தது. அந்நாள் முதல்,
முப்பொறித் தூய்மையொடும் திருப்பணி செய்பவராய், சிவ சின்னம் பூண்டு,
தியானம் ஞானம் திருவாசகம் உழவாரம் எல்லாம் கொண்டு கசிந்துருகி
வழிபட்டு இன்புற்றிருந்தார்.
சமணர் துன்புறுத்த முயன்று, நீற்றறையில் இட்டனர். `ஈசன் அடியார்க்கு
ஈண்டு வருந்துயர் உளவோ`? `வீங்கிள வேனிற் பொழுது; தைவருதண்
தென்றல்; தண்கழுநீர்க்குளம்போன்று; மொய் ஒளி வெண்ணிலவு அலர்ந்து;
மாசில் வீணை யொலியினதாகி; ஈசன் எந்தை இணையடி நீழல் அருளாகிக்
குளிர்ந்தது அந்நீற்றறை. மாசிலாமதியும் மங்கையாம் கங்கைப் புனலும் மன்னி
வளர் சென்னியன் எனப் பேச இனியானை வணங்கி இனிதிருந்தார் நாவரசர்.
ஏழுநாள் கழித்து, பல்லவனும் சமணர் பல்லவரும் நீற்றறையைத் திறந்து
பார்த்தனர். வியந்தனர். இன்ப வெள்ளத்தில் முழுகி அம்பலவாணர் மலர்த்
தாளமுதுண்டு தெளிந்து உவந்திருந்த நாவரசரைத் தீய நஞ்சு கலந்த பாலடிசில்
உண்ணப் பண்ணினர். எந் நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு, இந்
நஞ்சும் அமுதாயிற்று. ஆனது அற்புதமோ? ஆளுடைய அரசரை மிதிக்க
யானையை ஏவினர். அது பாகனையும் சமணரையும் சுண்ணம் ஆக்கி, நம்
அண்ணலை வணங்கிப் போயிற்று. மந்தரகிரி போலும் அது மன்னனையும்
வருத்திற்று.
கற்றுணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினர் சமணர். சொற்றுணை வேதியன்
பொற்றுணைத் திருந்தடி தொழுது நீலக்குடியரன் நல்ல நமச் சிவாய நாமத்தை
நவிற்றி நன்றே உய்ந்தார் நாவரசர். மும்மலமான கல்லில் இருவினையான
கயிற்றால் ஆர்த்துப் பாவக்கடலிற் பாய்ச்சப் படும் மாக்களை முத்திக் கரையில்
ஏற்றியருளும் அத் திருவைந் தெழுத்து, நாவரசை இவ்வுவர்க்கடலின் ஆழாது
ஒரு கல் மேல் ஏற்றுதல் வியப்போ? திருப்பாதிரிப்புலியூரை அடுத்த கரையேற
விட்ட குப்பமே அவ்வுண்மையைத் தேற்றி நிற்குஞ் சான்றாகும். அத்
`தோன்றாத் துணை` யைத் தொழுது உண்மையை உணர்வார் உணர்க.
சொல்வேந்தர் திருவதிகையிற்சென்று வழிபட்டு வாழ்ந்திருந் தார். பல்லவ
மன்னன் பல்லவமும் நீங்கி நல்லவனாகி, நாயனாரை வணங்கித் தூயனும்
சைவனும் ஆனான். சமணருடைய மடம் கோயில் முதலியவற்றைச் சிவாலயம்
ஆக்கினான்.
``பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு
பாழிகளும்
கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்
சரம்எடுத்தான்``
நாவரசர் சிவதலம் பலவ்ற்றை அடைந்து வழிபட்டுப் பாடி னார். சமண்சார்பு தீர
நினைந்து வேண்டித் திருத்தூங்கானை மாடத்தில் `வடியேறு திரிசூலக் குறி`
`இடபம்` ஆகிய இலச்சினை திருத்தோளிற் பொறிக்கப்பெற்றார்.
தில்லைச்சிதம்பரத்தை வணங்கி எல்லையில்லா இன்புற்றார். திருக்காழியில்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வணங்கி, `அப்பர்` எனப் பெயர் உற்றார்.
ஆனந்தவுருவானார். அளவில்லாச் சிவதலங்களை வழிபட்டுத்
திருச்சத்திமுற்றத்தில் திருவடி சூட்ட வேண்டினார். திருநல்லூரில்
நனைந்தனைய திருவடி தலைமேல் வைத்தருளப் பெற்று நம்மையும்
வாழ்வித்தார். திங்களூரில் தம்மை மறவாது தம் திருவடியையே என்றும்
அன்பால் செப்பும் ஊதியம் கைக்கொண்ட அப்பூதியடிகளாரின் பிள்ளையான
மூத்த திருநாவுக்கரசு, நச்சராத் தீண்டி இறக்க, திருவருளைத் துணைக் கொண்டு
உயிர்ப்பித்தருளினார்.
திருவாரூர் முதலிய தலங்களைப் போற்றினார். திருஞான சம்பந்தர், முருக
நாயனார் முதலோரொடும் திருப்புகலூர் முதலிய வற்றை வழிபட்டார்.
திருவீழிமிழலையிற் படிக்காசு பெற்றுப் பஞ்சம் தீர்த்து மக்களை வாழ்வித்தார்.
திருமறைக்காட்டில் விண்ணோர் பூசித்துச் சார்த்திய திருக்கதவு திறக்கப்,
பண்ணினேர் மொழியாளுமை பங்கரைப் பாடினார். சோணாடு, நடுநாடு,
தொண்டைநாடு முதலிய வற்றில் உள்ள பல சிவதலங்களைப் பணிந்தார்.
திருக்கயிலையை வணங்கப் பெருமுயற்சிகொண்டு பேரிடர்ப்பட்டார்.
பந்தணவும் மெல்விரலாள் பங்கன் திங்களணி செஞ்சடையன் அந்தணன் ஆகிப்
போந்து, உரையாடி, பழுதிலாத் திருமேனியாக்கி, அழுதுருகிநிற்கும் ஐயரை
ஐயாற்றிற் சென்று பொய்கையிற் கயிலையைக் காண்க என்று ஏவி, அவ்வாறே
காட்டக் கண்டு களித்துப் பாடினார். அங்கு அது திருக்கோயிலாகி இன்றும்
இலங்குகின்றது.
திருப்பூந்துருத்தியிற் சென்று வழிபட்டுத் தங்கியிருந்தார். காழிவேந்தர்
பூழிவேந்தனை வாழ்வித்து மீண்டு அங்குற்றநாளில், சிவிகை தாங்கிப் புவியில்
ஓங்கினார். அவ்வூர்த் திருமடத்தில் வாழ்ந்தனர் இருவரும் சிலகாலம்.
பாவேந்தர் பாண்டிநாடடைந்தார். திருவாலவாய், திரு விராமேச்சுரம்
முதலியவற்றை வழிபட்டார். சோணாட்டை மீண்டும் உற்றார். திருப்புகலூரிலே
வழிபாடு செய்துகொண்டிருந்தபோது, உழவாரப்படையால் செதுக்கும்
இடங்களில், பொற்குவையும் நவமணிக்குவையும் தோன்ற அவற்றை ஓடும்
கல்லுமாக மதித்து வீசி யெறிந்தார் குறைவிலாத நிறைவினார். வானர மகளிர்
வந்து வானரச் செயல் பல புரிந்தனர். வாகீசர் மயங்காத மனத்தீசருமாய்
விளங்கி னார். மயக்கவலியின்றித் தியக்கம் எய்தி மீண்டனர் அம் மகளிர்.
திருப்புகலூரிலே இடையறாது வழிபட்டு மன்னிய அன்புறுபத்தி வடிவான
வாகீசர் பல பாடி, சிவாநந்த ஞானவடிவேயாகி, அண்ண லார் சேவடிக் கீழ்
அமர்ந்துள்ளார். அந்நாள் சித்திரைச் சதயத் திருநாள்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருவடி வாழ்க!