அரசிலி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெரியநாயகி உடனுறை அரசிலி நாதர்

மரம்: அரசமரம்
குளம்: அரசடித் தீர்த்தம்

பதிகம்: பாடல்வண் -2 -95 திருஞானசம்பந்தர்

முகவரி: ஒழிந்தியாப்பட்டு அஞ்சல்,
வானூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம், 604304
தொபே. 04147 235472

பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி கிளியனூர்) பேருந்தில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் இறங்கி கிழக்கே 2.கி.மீ சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். இது தொண்டை நாட்டுப்பதியாகும்.

அரசமரத்தை இறைவன் இல்லாக உடைமையின் இப்பெயர் பெற்றது என்பர். இது இக்காலம் ஒழிந்தியாப்பட்டு என்று மக்களால் வழங்கப்பெறுகின்றது.

இறைவன் திருப்பெயர் திரு அரசிலி ஆளுடையார் ஆலாலசுந்தரர் என்றும், திரு அரசிலி ஆளுடையார் என்றும்குறிக்கப்பெற்றுள்ளது.

இவ்வூர்க் கல்வெட்டுக்கள் அனைத்தும், சந்திவிளக்கு களுக்கும் திருநுந்தா விளக்குகளுக்கும் ஆடுகள் விடப்பட்ட செய்திகளை உணர்த்துகின்றன.

வாமதேவ முனிவர் பூசித்துப் பேறுபெற்றது. இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உள்ளது. குளம் பெரியது.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் உள்ள ஐந்து கல்வெட்டுக்கள் அரசியலாரால் படியெடுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் விக்கிரம சோழதேவர், குலோத்துங்க சோழதேவர் ஆகிய இருவரும் குறிப்பிடப்பெற்றுள்ளனர். விக்கிரம சோழதேவரின் ஆறாவது ஆண்டுக் காலத்தில் இவ்வூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மாநாடான விஜய இராஜேந்திர சோழவளநாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் தேவதானம் திருவரைசிலி என்றும், பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் ஓய்மாநாட்டுத் திருவரசிலி என்றும், பதினாறாவது ஆட்சியாண்டில் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மாநாடான விஜய இராஜேந்திர சோழவளநாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் திருவரசிலி என்றும் குறிக்கப் பெற்றுள்ளமையால், முன் இருந்த பெயர் மாற்றப்பட்டு, பின்னும் அதே பெயர் இடப்பட்டமை, யாது காரணத்தாலோ அறியக்கூடவில்லை. ஒரே கல்வெட்டுடைய குலோத்துங்கனது ஐந்தாவது ஆட்சியாண்டில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஓய்மா நாடான விஜய இராஜேந்திர சோழவளநாட்டுத் தனியூர் தேவதானம் திருவரசிலி எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.

திருவிரும்பை உடையார் திருமாகாளமுடைய நாயனார் கோயிலில் உள்ள கோமாறபன்மரான திரிபுவன சக்கிரவர்த்தி ஸ்ரீ விக்கிரமபாண்டிய தேவரின் இரண்டாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டில், இவ்வூர் (அரசிலி) ``ஜயங்கொண்ட சோழமண்டலத்து மாத்தூர்நாட்டு ஒழுகறையான குலோத்துங்க சோழ நல்லூர் திருஅரசிலி உடையார் ஆலால சுந்தரனார் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. ஒழுகறை என்னும் பெயரே பிற்காலத்தில் ஒழிந்தியாப்பட்டு என்று வழங்கலாயிற்று என்பர்.

பெருங்கொடை வள்ளலும், பத்துப் பாட்டினுள் மூன்றாவதாகிய சிறுபாணாற்றுப் படைத்தலைவனுமாகிய நல்லியக் கோடன்; ஓய்மாநாட்டினன் ஆவன். அரசிலி ஓய்மாநாட்டைச் சேர்ந்தது` அது தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் இருக்கின்ற தால் அப்பிரதேசம் ஓய்மாநாடாகும்.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902, 194 - 198. See also South Indian Inscriptions, Volume VII No. 821 - 825.)

 
 
சிற்பி சிற்பி