அருள்மிகு பிரமவேதவித்யாம்பாள் உடனுறை திருவெண்காட்டீசர்
மரம்: ஆல மரம், அரச மரம், கொன்றை மரம்
குளம்: முக்குளங்கள் - சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பதிகங்கள்: கண் காட்டும் நுதலானும் -2 -48 திருஞானசம்பந்தர்
உண்டாய் நஞ்சை உமை -2 -61 திருஞானசம்பந்தர்
மந்திரமறை மறையவர் -3 -15 திருஞானசம்பந்தர்
பண் காட்டிப் படிஆய -5 -49 திருநாவுக்கரசர்
தூண்டு சுடர் மேனித் – 6-35 திருநாவுக்கரசர்
படம் கொள் நாகம் -7-6 - சுந்தரர்
முகவரி: திருவெண்காடு அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609114
தொபே. 04364 256424
ஆக்கூரிலிருந்து சீகாழி செல்லும் பெருவழியில் பேருந்து மூலம் அல்லிவிளாகத்தில் இறங்கிக் கிழக்கே 4.5 கி.மீ.தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். இது காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும். மயிலாடுதுறை, சீகாழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இறைவர் திருப்பெயர் திருவெண்காட்டீசர், சுவேதாரண் யேசர். இறைவி திருப்பெயர் பிரமவித்யாநாயகி.
தீர்த்தம்: முக்குளங்கள் - சூரிய தீர்த்தம், அக்கிநி தீர்த்தம், சந்திரதீர்த்தம்.
இக்குளங்களில் நீராடி வழிபடுகிறவர்கள் பிள்ளைப்பேற்றை அடைவார்கள். அவர்ளைத் தீவினைகள் அடையா. இச்செய்திகளை இத்தலத்துக்குரிய,
``பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயன தோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே``
என்னும் திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் (பண் - சீகாமரம், பாட்டு. 2.) இனிது தெளிவு படுத்தும்.
இதற்கு திருப்பெண்ணாகடத்தில் அச்சுதகளப்பாளர் என்பார் ஒருவர் புத்திரப்பேறின்றி இருந்தார்.
அவர் தமது ஆசாரியர் அருணந்தி சிவாசாரியர் அருளியபடி, திருமுறையில் கயிறுசாத்தினர். சாத்திய பொழுது ஞானசம்பந்த சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய ``பேயடையா பிரிவெய்தும்`` என்னும் மேற்குறித்த திருப்பாடல் தோன்றிற்று. அதிலுள்ள ``வெண்காட்டு முக்குளநீர் தோய் வினையார் பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம்பெறுவர். ஒன்றும் ஐயுறவேண்டாம்`` என்னும் பொருளை அறிந்து மகிழ்ந்து, திருவெண் காட்டிற்குத் தம் மனைவியாரோடு சென்று, முக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார்.
இங்ஙனம் வழிபட்டுவரும் நாள்களில் ஒரு நாள் இறைவன் அவரது கனவில்தோன்றிச் சைவ சித்தாந்தத்தை நிலைபெறச் செய்யக்கூடிய ஒரு புத்திரனை நீ அடைவாய் என்று சொல்லி மறைந் தருளினார். அவ்வாறே அவர் புத்திரப்பேற்றை அடைந்தார். இக் குழந்தையே சைவசித்தாந்த பரமாசாரியராக விளங்கிய மெய்கண்ட தேவர் ஆவர்.
தலவிருட்சம்: ஆலமரம்; கொன்றைமரம்.
உள் பிராகாரத்தில், அகோரமூர்த்தி கையில் சூலத்துடன் எழுந்தருளியிருக்கின்றார். அவர்க்கு எதிரில் காளியின் சந்நிதி உள்ளது.
சிதம்பரத்தில் இருப்பதுபோலவே இங்கு நடராஜர் பெருமையுடன் விளங்குகின்றார். இப்பதியில் வெள்ளானை பூசித்துப் பேறு பெற்றது. இதை,
``வெள்ளானை வேண்டும்வரம் கொடுப்பர்
வெண்காடு மேவிய விகிர்தனாரே``
என்னும் அப்பர் பெருமானின் இத்தலத் தேவாரப் பகுதியாலும்,
``அயிரா வதம்பணிய மிக்கதனுக்
கருள்சுரக்கும் வெண்காடு``
என்னும், ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியாலும் அறியலாம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, அப்பர் பதிகம் இரண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் இருக்கின்றன.
சைவ எல்லப்ப நாவலர் தலபுராணத்தை இயற்றியுள்ளார். அது அச்சில் வெளிவந்துள்ளது.