அருள்மிகு அழகம்மை உடனுறை வயிரத்தூண்நாதர்
மரம்: பனை
குளம்: கொள்ளிடப் பேராறு
பதிகங்கள்: களையும்வல் -2 -9 திருஞானசம்பந்தர்
காலையார் -3 -28 -திருஞானசம்பந்தர்
அங்கையாரழலன்ன -3 -48 திருஞானசம்பந்தர்
நீறேறுதிருமேனி -6 -39 திருநாவுக்கரசர்
அலையடுத்த பெருங் -6 -40 திருநாவுக்கரசர்
பொன்னார் -7 -24 சுந்தரர்
முகவரி: திருமழபாடி அஞ்சல்
அரியலூர் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம், 621851
தொபே. 04329 292890
சேரர் கிளையினராகிய மழவர் பாடி செய்து கொண்டிருந் தமையால் இப்பெயர் பெற்றது. பாடி = தங்குமிடம். பாடி எனினும் பாசறை எனினும் ஒக்கும். சிவபெருமான் மழுநிர்த்தஞ்செய்த தலமாதலால் மழுவாடி ஆயிற்று என்பர்.
இது திருவையாற்றிற்கு வடமேற்கே சுமார் 6 கி.மீ. தூரத்தில் கொள்ளிடப்பேராற்றின் வடகரையில் இருக்கின்றது. அரியலூர், திருவையாறு, திருச்சியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. (காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்று).
இறைவரின் திருப்பெயர் வயிரத்தூண்நாதர். இத்திருப் பெயரை, இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான். ``மலை யடுத்த மழபாடி வயிரத்தூணே``, ``மறைகலந்த மழபாடி வயிரத் தூணே`` முதலான தொடர்களில் எடுத்து ஆண்டுள்ளனர். இதை வட மொழியில் வஜ்ரஸ்தம்பேசுவரர் என்று கூறுவர். பிரமனுலகத்திருந்த சிவலிங்கத்தைப் புருஷா மிருகம் இங்குக் கொண்டுவந்து எழுந்தருளு வித்தது. அதை மீளவும் கொண்டுபோதற்காகப், பிரமதேவர் அதைப் பெயர்த்து எடுக்க முயன்றார். அதை எடுக்க முடியாத பிரமன் `இது வயிரத் தூணோ` என்று வியந்தமையால் இப்பெயர் பெற்றது. இறைவியாரின் திருப்பெயர் அழகம்மை.
தீர்த்தம் கொள்ளிடப்பேராறு.
தலவிருட்சம் பனை.
இந்திரன், திருமால் இவர்கள் வழிபட்டுப் பேறு எய்தினர். திருநந்திதேவர் திருவையாற்றிலிருந்து எழுந்தருளி - சுயசை அம்மை யாரை மணஞ்செய்துகொண்ட தலம். சுந்தரமூர்த்தி நாயனார், திரு வாலம்பொழிலில் எழுந்தருளியிருக்க, மழபாடி இறைவன், அவரது கனவில் தோன்றி, `மழபாடிக்கு வர மறந்தனையோ`` என்று கூற, உடனே சுந்தரர் ``பொன்னார் மேனியனே`` என்று தொடங்கும் பதிகம் பாடி வழிபட்ட பதி. திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, திருநாவுக்கரசுநாயனார் திருத்தாண்டகப் பதிகம் இரண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்களைக்கொண்ட பெருமையுடையது.
இத்தலத்திற்கு ஷ்ரீ கமலை ஞானப்பிரகாச தேசிகர் அவர்களால் இயற்றப்பட்ட தலபுராணம் ஒன்று இருக்கின்றது. அது இனிய எளிய தமிழ் நூல். அச்சில் வெளிவந்துள்ளது.
நந்தியெம்பெருமானின் திருமணத்திருவிழா ஒவ்வொரு ஆண்டிலும் பங்குனி மாதத்தில் நடைபெறுகின்றது.