அருள்மிகு கற்பகவல்லியம்மை உடனுறை கபாலீசுவரர்
மரம்: புன்னை மரம்
குளம்: திருக்குளம்
பதிகம்: மட்டிட்ட -2 -47 திருஞானசம்பந்தர்
முகவரி: மயிலாப்பூர்
சென்னை மாவட்டம் 600004
தொபே. 044 24641670
உமாதேவியார் மயில் உருவமாய் இறைவனைப் பூசித்த காரணம்பற்றி இப்பெயர்பெற்றது. இது மயிலாப்பு என்றும் தேவாரத்தில் கூறப்பெற்றுள்ளது. மயிலார்ப்பூரோ? மயில் யாப்பூரோ?
சென்னையின் தென்பகுதியில் விளங்குவது இத்தலம். சென்னைக்குத் தெற்கே 6 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. சென்னையின் நகரப் பேருந்துகளில் அனைத்து இடங்களிலிருந்தும் மயிலாப்பூர் செல்லலாம்.
இறைவரது திருப்பெயர் கபாலீசுவரர். இறைவியார் திருப்பெயர் கற்பகவல்லியம்மை.
தலவிருட்சம் புன்னைமரம். வடக்குப் பிராகாரத்தில் இருக்கிறது.
இது வாயிலார் நாயனார் அவதாரஞ்செய்த திருப்பதி. சிவநேசச் செட்டியாருடைய மகளாகிய பூம்பாவை அரவு கடித்து இறந்தபோது, அவர் தந்தையார், அம்மையாரது உடலை எரித்து எலும்பையும் சாம்பலையும் புது மட்பாண்டத்தில் வைத்திருந்தார். அங்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் ``மட்டிட்ட புன்னையங் கானல்`` என்று தொடங்கும் பதிகம் பாடி, அவரது எலும்பைப் பெண்ணுருவாக்கியருளினார். இராமபிரான் வழிபட்டு, ஐப்பசி ஓணநாளில் பிரமோற்சவம் நடத்துவித்தார்.
பங்குனிமாதத்தில் அறுபான்மும்மை நாயன்மார்களுடைய திருவிழா, சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. ஊரின் பெயர் மயிலாப்பூர். அங்குள்ள கோயிலுக்கே கபாலீச்சரம் என்று பெயர்.
மயிலாப்பூர், மயிலாப்பு என்று வழங்கப்பெற்றிருப்பது, அப்பர் சுவாமிகளது திருஒற்றியூர்த் திருத்தாண்டகம் ஆறாம் திருப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அப்பகுதி,
``வடிவுடைய மங்கையுந் தாமுமெல்லாம்
வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப்புள்ளே``
என்பதாகும். இதையே
``மங்குல் மதிதவழும் மாடவீதி
மயிலாப்பி லுள்ளார் மருகலுள்ளார்``
எனக் கோயில்புக்க திருத்தாண்டகத்திலும் காணலாம்.