அருள்மிகு பரிமளசுகந்தநாயகி உடனுறை கல்யாணசுந்தரேசுவரர்
மரம்: குத்தாலம்
குளம்: பதும, சுந்தர தீர்த்தங்கள், காவிரி
பதிகங்கள்: வரைத்தலைப் -2 -98 திருஞானசம்பந்தர்
பொருத்திய -4 -42 திருநாவுக்கரசர்
மின்னுமா -7 -74 சுந்தரர்
முகவரி: குத்தாலம் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609801
தொபே. 04364 235225
துருத்தி என்பதற்கு ஆற்றிடைக்குறை என்பது பொருள். இவ்வூர், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காவிரியின் நடுவுள் இருந்தது. ``பொன்னியின் நடுவுதன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தியானை`` என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியால் இச்செய்தியை அறியமுடிகிறது.
குத்தாலம் என்னும் ஒருவகை ஆத்தி மரத்தைத் தல விருட்ச மாகக் கொண்டுள்ளமையால் இது மரத்தின் பெயரால் குத்தாலம் என்று வழங்கப்பெறுகின்றது. இதைக் குற்றாலம் என்றும் வழங்குவர்.
குத்தாலம் என்பதே மருவிக் குற்றாலம் என்று வழங்குகின்றது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம்வேறு, இது வேறு .
இது மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், குத்தாலம் தொடர்வண்டி நிலையத்திற்கு 1.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள 37 - ஆவது பதி. மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து வழியில் செல்லும் பேருந்துகளில் இவ்வூருக்குச் செல்லலாம்.
இறைவரின் திருப்பெயர் ,`சொன்னவாறு அறிவார்`; வீங்கு நீர் துருத்தி உடையார்; கற்றளிமகாதேவர் என்பன. வடமொழியில் உத்தர வேதீசுவரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் அரும்பன்ன வனமுலை அம்மை. வடமொழியாளர் மிருது முகிழாம்பிகை என்பர். திருவேள்விக்குடிப் பதிகத்தில், சம்பந்தர் இவ்வூர் அம்பாள் பெயரை ``அரும்பன வனமுலை யரிவையோடொருபக லமர்ந்தபிரான்`` என்று அருளியிருக்கின்றார்.
தீர்த்தம் காவிரி, வடகுளம் என்பன.
இவற்றுள் வடகுளம் என்பது. கோயிலினுள் வடபாலில் இருக்கின்றது,
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்திற்கு எழுந்தருளி, தம் மேல் உற்ற பிணி வருத்தத்தைத் தீர்த்தருளுமாறு சிவபெருமானை வேண்டினார். ``வடகுளத்துக்குளி`` என்று சிவபெருமான் மொழிந் தருள, சுவாமிகளும் வேதமெல்லாம் தொக்க வடிவாய் இருந்த துருத்தி யாரைத் தொழுது, அக்குளத்தில் மூழ்கினார். அக்கணமே பிணி நீங்கி, மணியொளிசேர் திருமேனி ஆயினார். இச்செய்தியைச் சேக் கிழார் குறிப்பிட்டுள்ளார். சுவாமிகளும் இவ்வூர்ப்பதிகத்தில் ``என் உடம் படும் பிணியிடர் கெடுத்தானை`` எனக் குறிப் பிட்டுள்ளார்கள்.
அக்கினி வருணன் முதலானோர் பூசித்துப் பேறு பெற்றனர். தலத்தைப்பற்றிய நூல்: திரிசிரபுரம் மகாவித்துவான். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இத்தலத்திற்குப் புராணம் எழுதியுள்ளார்கள். இது அச்சில் வெளிவந்துள்ளது. மூவர்களும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
இத்தலம் தருமை ஆதீனஅருளாட்சியில் உள்ளது. இவ்வூரில் விக்கிரமசோழீச்சரம், ஒங்காரேச்சரம், மன்மதேச்சம் என்னும் கோயில்கள் இருக்கின்றன. அவைகள் பாடல் பெறாதவைகள்.
இத்தலத்தைப்பற்றி ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய வெண்பா பின்வருமாறு:-
வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.