தலைவாயில

மூன்றாம் திருமுறை - நால்வர் காலம் - தொடர்ச்சி...|  1 | 3 |

இராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை வட்டம் - ஏனாதி என்ற ஊரில் சமீபத்தில் கிடைத்த கல்வெட்டு, (நன்றி - திரு. நடன காசினாதன், இயக்குநர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை. நன்றி - திரு. முத்துக்கோனார், மதுரை வரலாற்றுப் பேரவை.) பின்வருமாறு :

1. ............. து அறிந்தோ

2. தர்விழுமையுந் நோம்மை .......

3. றிவாபெய் -- நேராத நேர்ப்பேரூர் (ண்)

4. டிர்நெய்வேலிப் போரார் வென்நேர்ந்தர் பொழிகுருதி

5. நீரா நிலமகளை ஆட்டிய கோன் மாந்தார் நேரிர்கு

6. லமகள் ஆட்டினீரை கூ(ற்) றுல வொரு கால் பொலங்

7. கருசில் நூல் கலப்ப ஒரு காற் துலாபாரம்

8. புக்கான் பொரு காற்சிலை வேந்தனற்றோர் வாடத்தென்

9. புலிஊர் (சென்றிக்) குலை வேழங்கைப்படுத்த கோமா

10. ணணிருலகளவு மாபாய விரிந்து வானுரிஞ் சற்றரிதா

11. ரமாபோல குளிருந்தன்மைத் தோன்றிதாள் நடவாபோ

12. ரீ யானை உலங்குணி (மே) மா நூட்டிய கூடற் கோமாறனே கூறு

13. ஷ்ரீ சேந்தன் மாறன்

14. அரிகேஸரி

15. முள்ளி நா

16. ட்டு அரிகேசரி

17. நல்லூர் தச்ச

18. ன் சடயன் பூ

19. தன் எழுத்து

கடல் கோமாறன் - நெல்வேலிப்போர் வென்றவன் - சேந்தன் மாறன் அரிகேசரி - ஆகிய இச்செய்திகளால் - இக்கல்வெட்டு நின்றசீர் நெடுமாற நாயனாராகிய பாண்டி மன்னனுடையது என்பதை எளிதில் அறியலாம். மன்னன் துலாபாரம் செய்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இச்செய்தி செப்பேடுகளிலும், கீழே சொல்லப்படும் வைகைக்கரைக் கல்வெட்டிலும் சொல்லப்பட்டுள்ளது. சேந்தன் மாறன் என்றால் சேந்தனின் மகன் மாறன் என்பது பொருள். முள்ளிநாட்டு அரிகேசரி நல்லூர் என்பது இக்காலத்தில் அம்பாசமுத்திரம் அருகில் கிரியம்மா புரம் என்று வழங்குகிறது. இவ்வூர் அரிகேசநாதர் கோயில் கல்வெட்டு களில் இறைவனின் பெயர் முள்ளிநாட்டு அரிகேசரி நல்லூர் அரிகேசரி ஈஸ்வரமுடைய நாயனார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (A.R.EP. 455 of 1916) இக் கோயில் மாறவர்மன் அரிகேசரியின் பெயரால் கட்டப்பட்டது என்பதை நன்கு உணரலாம்.

வைகைக்கரைக் கல்வெட்டும் இம்மன்னனுடையதே. (E.I. XXXVIII No. 4; இதில் சேந்தன் மற்று என்று தவறாகப் படித்து உள்ளனர். சேந்தன் மாறன் என்பதுதான் சரியான வாசகம் என்பதை சாசன ஆய்வு பக்கம் 32இல் உள்ள புகைப்படத்தில் காணலாம். இப்போது இக்கல்வெட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சி அகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.) கல் வெட்டு மன்னனை சேந்தன்மாறன் என்று குறிப்பிடுகிறது. சேந்தனின் மகனாகிய மாறன் என்பது இதன்பொருள். மன்னனின் ஆட்சி ஆண்டு 50 இல் மன்னனின் பெயரால் அரிகேசரியான் என்னும் மதகு (நீர்மடை) கட்டப்பட்டது கூறப்படுகிறது. எண்ணற்ற துலாபாரமும், கோதானமும், இரண்ய கர்ப்ப தானமும் மன்னன் செய்தனன் என்றும் கூறப்படுகிறது. அக்ரகாரங்கள் பலவும் ஏற்படுத்தப்பட்டன. மங்கலா புரம் என்ற ஊரையும் மன்னன் நிர்மாணித்தான். (இதே மங்கலா புரத்தில்தான் இவன் மகன் ரணதீரன் சாளுக்கியரை வென்றான் என்பதை முன்பு கண்டோம்.)

வைகைக்கரைக் கல்வெட்டு கிரந்தமும், வட்டெழுத்தும் கலந்து உள்ளது. எழுத்தின் அமைதி 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. சொல்லப்பட்டுள்ள செய்திகளால் இக்கல்வெட்டும் நின்றசீர் நெடுமாற னாகிய பாண்டி மன்னனது என்பதில் சிறிதும் ஐயமில்லை. மன்னன் சைன மதத்தவனாகக் காட்சி அளிக்கவில்லை. சைவ சமயத்திற்கு மாறிய பிறகு இக்கல்வெட்டு வெட்டப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எளிதில் அறியலாம். ஆட்சி ஆண்டு 50 எனக் கொடுக்கப் பட்டுள்ளது. சைவ சமயத்தைத் தழுவிய பின்பு மன்னனும் நெடுங் காலம் வாழ்ந்திருந்தான் என்று சேக்கிழார் பெருமானும் கூறுவர். தொகுத்து நோக்கினால், இம்மன்னன் கி.பி. 630 இலிருந்து 680 வரை ஆட்சி புரிந்திருக்கலாம் எனக் கொள்ளலாம்.

அரிகேசரியின் கொள்ளுப்பாட்டன் கடுங்கோன் என்னும் பாண்டியன் ஆவான். இவன் களப்பிரர்களை ஒழித்தவன். கடுங்கோன் முடிசூடிய காலத்தைச் சற்றேறக் குறைய கி.பி. 550 என்று கொள்ள லாம். இக்காலமே மதுரையில் களப்பிரர் ஒழிக்கப்பட்ட காலம்.

களப்பிரர் என்பார் கருநாடகத்திலிருந்து வந்த ஒரு சாரார். இவர்கள் மதுரையைப் பிடித்து ஆட்சி புரியலாயினர். மதுரைக்களப் பிரர் சைனர். சோழமண்டலம், தொண்டை மண்டலம் ஆகிய பகுதி களில் வாழ்ந்த களப்பிரர் பௌத்தர். இதன் விரிவான ஆய்வை திரு. மு. அருணாசலம் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரையில் காண்க. (Journal of The Madras University - Section A Humanities - Volume L I No. 1 - January 1979)

திருஞானசம்பந்தர் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இதுவரை வந்த ஆய்வின் பயனாய் இவர் காலத்தை கி.பி. 640 முதல் 656 வரை என்று கொள்ளலாம். இவரது காலத்தில் திருநாவுக்கரசரும் வாழ்ந்தார். ஆளுடைய பிள்ளையான ஞானசம் பந்தர் வயது முதிர்ந்த நாவுக்கரசரை "அப்பரே" என்று மரியாதையாக அழைப்பர். நாவுக்கரசர் 80 வயது வரை வாழ்ந்ததாகக் கருதப்படு கிறது. எனவே திருநாவுக்கரசரின் காலம் சுமார் 580 - 560 எனக் கொள்வதில் தவறில்லை. வேறுபல சரித்திர நிகழ்ச்சிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அவை அறிந்த செய்திகளாதலால் விரிவுக்கு அஞ்சி விடுக்கிறேன்.

சுந்தரர் காலம்:

சுந்தரரின் காலத்தை அறியப்புகுமுன் பல்லவ மன்னர்களின் காலத்தைப் பற்றியும் சிறிது குறிப்பிடவேண்டி உள்ளது. திருநாவுக் கரசர் காலத்துப் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவான். அவனுக்குபின் ஆண்ட பல்லவ மன்னர்கள் வருமாறு:

1. முதலாம் மகேந்திரவர்மன் 600-630

2. முதலாம் நரசிம்மவர்மன் 630-668

3. இரண்டாம் மகேந்திரவர்மன் 668-670

4. பரமேஸ்வரவர்மன் 670-700

5. இரண்டாம் நரசிம்மவர்மன் 700-728

மூன்றாம் மகேந்திரவர்மன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன்

720-728 728-730

ராஜசிம்மன்

பல்லவ மன்னர்களில் இரண்டாம் மகேந்திரவர்மன் (எண் - 3), ராஜசிம்மனாகிய இரண்டாம் நரசிம்மவர்மன் (எண் - 5) ஆகிய மன்னர்களின் செப்பேடுகள் இரண்டில் வானிலைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளின் துணைக் கொண்டு, பல்லவர் களின் கல்வெட்டுகள், செப்பேடுகள், சாளுக்கிய மன்னர்களின் கல் வெட்டுகள், செப்பேடுகள் இவைகளின் துணைக்கொண்டும், மேலே காட்டியுள்ள பட்டியலை ஆய்வாளர் கணக்கிட்டுத் தந்துள்ளனர். பல்லவர் சரித்திரத்திற்கு இண்டிகா தொகுதி 20 இல் கட்டுரை எண் 11இலும், எபிகிராபிகா இண்டிகா தொகுதி 32 இல் கட்டுரை எண் 9இலும் வெளிவந்துள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப் பட்ட அறிய, பலருக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் காலத்தை ஆராயப் புகுந்த பல அறிஞர்களுக்கு சில குழப்பங்கள் ஏற்பட்டன.

நிற்க, விஞ்ஞான ரீதியாக பல்லவர் காலம் கணிக்கப்பட்டுள்ள மேல்வரும் பட்டியலைக் கொண்டு சுந்தரர் காலத்தைக் காணலாம்.

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில், "கடல் சூழ்ந்த உலகம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கற்கு அடியேன்" என்கின்றார். காடவர் கோன் என்றால் பல்லவ மன்னன் என்று பொருள். "உலகம் காக்கின்ற பெருமான்" என்று நிகழ்காலத்தில் கூறுவதால் அப்பல்லவ மன்னனும், சுந்தரரும் சமகாலத்தவர்கள் என்பதை எளிதில் அறியலாம். கழல் என்பது மன்னனுக்கு உரிய அடைமொழி. சிங்கன் என்பது மன்னனின் இயற்பெயர். பல்லவர் களுக்கு, சிங்கன் என்ற பொதுப்பெயரைக் கூறி விட்டபடியால் மீண்டும் ஒருமுறை சிங்கன் என்ற பொதுப் பெயரைக் கூற நியாய மில்லை. எனவே இங்கு சிங்கன் என்று சுந்தரர் குறிப்பது அவர் காலத்தில் வாழ்ந்த பல்லவ மன்னனின் இயற்பெயர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

திருநாவுக்கரசருக்கும் சம்பந்தருக்கும் காலத்தால் பிற் பட்டவர் சுந்தரர். இப்பிற்பட்ட காலத்தில் சிங்கன் என்று பெயர் தரித்த பல்லவ மன்னன் ஒருவனே ஆட்சி புரிந்தவன். அவன் ராஜசிம்ம னாகிய இரண்டாம் நரசிம்மவர்மன் ஆவான். அவனது காலம் கி.பி. 700 முதல் 728 வரையிலாகும். சுந்தரர் இக்காலத்தில் வாழ்ந்தவர் ஆவர். பின்வரும் ஆய்வும் இக்கருத்துக்குத் துணைநிற்கும்.

ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் தன் பெயரால் ராஜசிம்மேஸ்வரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். அதுவே இன்றைய கைலாச நாதர் கோயில். இக்கோயிலில் இம்மன்னனது கல்வெட்டுகள் வட மொழியில் உள்ளன. மன்னனுக்கு இறைவன் அசரீரியாக உணர்த்தி னான் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. (South Indian Inscriptions - Tamil and Sanskrit - Volume 1 Page 14 Line 7) எண்ணற்ற எதிரிகளைத் துகளாக்கிய இம்மன்னன் சைவ சித்தாந்தப் பாதையில் நின்றவன் என் றும் கூறப்பட்டுள்ளது. இவனது வீரத்தையும், சிவபக்தியையும் கூறும் இவ்வடமொழிக் கல்வெட்டுகள் மிக விரிவானவை. (Above Volume Page 8 to 22) இடமின்மையால் விரிவுக்கு அஞ்சி விடுகின்றேன்.

பெரிய புராணத்தில் கழற்சிங்க நாயனார் புராணத்தில் கூறப் படும் பல்லவனும் வடபுல மன்னர்களை வென்றவன் என்றும், சிவ பக்தி கொண்டு சிவதர்மங்களும் தொண்டுகளும் செய்தவன் என்றும் கூறப்பட்டுள்ளது. அவையாவும் ராஜசிம்மனுடைய கல்வெட்டுகளில் - வடமொழிக் கிரந்தங்களில் விரிவாய்ச் சொல்லப்பட்டுள்ளன.

சுந்தரர் பூசலார் நாயனாரையும் குறிப்பிடுகின்றார். பூசலார் நாயனாரின் வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் விரிவாக எடுத் துரைப்பார். பூசலார் அவதரித்த திருத்தலம் திருநின்றவூர். அவர் சிவபெருமானுக்குக் கோயிலெடுக்க நினைத்தார். ஆனால் அவரிடம் பொருள் இல்லை. ஆகவே தன் மனத்திலேயே சாத்திர விதிப்படி கோயில் அமைத்தார், மனதில் கட்டியகோயிலுக்குக் கடவுள் மங்கலம் என்னும் மருந்து சாத்துதல், குடமுழுக்கு விழா ஆகியவற்றுக்கு நன்னாள் அமைத்தார்.

இஃது இவ்வாறு இருக்க, காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் கச்சிக் கற்றளி எடுத்தான். இறைவன் திருமேனியைத் தாபிக்கவும் நாள் வகுத்தான். ஆனால் அதற்கு முதல் நாள் இறைவன் மன்னனின் கனவில் தோன்றி "நின்றவூர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த நன்றுநீடு ஆலயத்து நாளை யாம் புகுவோம். நீ உன்னுடைய நாளை மாற்றி அமைத்துக்கொள்" என்று அருளினார்.

மன்னனும் மறுநாள் பூசலாரைக் கண்டு வணங்கி இறைவன் கனவில் உரைத்ததைக் கூறினான். பூசலாரும் தாம் மனதில் கோயில் கட்டியதையும், குட முழுக்கு விழாவிற்கு அன்றுதான் நன்னாளாக நினைத்ததையும் கூறினார். மன்னனும் பூசலாரும் இறையருளில் மூழ்கிப் பேரின்பம் அடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் முதன் முதல் கச்சிக் கற்றளி எடுப்பித்தவன் இராஜசிம்மனே. அவனுக்கு அசரீரியாக இறைவன் உணர்த்தியதாகக் கல்வெட்டும் கூறுகிறது. இவை பூசலார் நாயனார் புராணத்துடன் ஒத்து இருப்பதும் கணிக்கத்தக்கது (S.I.I. XII Introduction page III - 'This is evidently an allusion to Periyapuranam wherein it is stated that the Pallava king was directed to postpone the consecration of this temple so that the Lord might be present elsewhere at a similar ceremony conducted in the mental plane by Saint Pusalar). தொகுத்து நோக்கினால், சுந்தரரும் காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டிய இராஜசிம்ம பல்லவனாகிய கழற்சிங்கனும், பூசலார் நாயனாரும் சமகாலத்தவர் என்பதை எளிதில் உணரலாம். எனவே சுந்தரர் காலத்தை கி.பி. 700 முதல் 728 வரை எனக் கொள்ளலாம்.

மாணிக்கவாசகர் காலம்:

நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல்வரகுணன் 786 இல் முடிசூடினான். இவனது கல்வெட்டுக்கள் 43 ஆம் ஆட்சி ஆண்டுவரை கிடைக்கின்றன (S.I.I. XIV No. 41 - Eruvadi Nanguneri Taluk.). எனவே இவனது ஆட்சி 11இல் முடிவடைந்தது. அவ் வாண்டிலிருந்து வரகுணனின் மகனான ஷ்ரீவல்லபனின் ஆட்சி துவங்குகிறது எனலாம். வல்லபன் தனது 18 ஆம் ஆட்சி ஆண்டில் (829) சிங்களத்தை வென்றான் (S.I.I. XIV No. 44 - Erukkangudi Sattur Taluk) செப்பேடுகளும் ஷ்ரீவல்லபனின் சிங்கள வெற்றியைக் குறிப்பிடுகின்றன.

ஷ்ரீ வல்லபனிடம் தோற்ற சிங்களவர் வாளா இருக்கவில்லை. பாண்டிநாட்டின் மீது படையெடுக்க, தக்க சமயத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். இதனைச் சிங்களவர் ஷ்ரீ வல்லபனின் கடைசி காலத்தில் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். இச்சரித்திர நிகழ்ச்சி களை இலங்கைச் சரிதமாகிய மகாவம்சம் விரிவாய் எடுத்துரைக்கிறது.

மகாவம்சத்தில் கூறப்படும் செய்தி வருமாறு: இலங்கையில் இரண்டாம் சேனன் கி.பி. 851இல் முடிசூடினான். இவன் காலத்தில் பாண்டி மன்னனின் மகன் ஒருவன் தன் தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். இலங்கை மன்னன் சேனாவின் உதவியை நாடினான். தக்க தருணம் இதுதான் என்று உணர்ந்த இலங்கை மன்னனும் தனது 9ஆம் ஆட்சி ஆண்டில் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடினான். மதுரை மன்னன் போர்க்களத்தில் இறந்தான். மன்னனின் மகனைச் சிங்களவர் மதுரை சிம்மாதனத்தில் ஏற்றினர். சிங்கள மன்னன் "மதுரா துனு" என்ற பட்டம் கொண்டான்.

இந்நிகழ்ச்சியின் காலம் கி.பி. 860 என்று மகாவம்சத்தால் அறியலாம். (South Indian Temple Inscription Volume III Part I Pages 37 and 102.). இப்போரில் இறந்தவன் ஷ்ரீ வல்லபனே. இவன் போரில் இறந்தவன் என்னும் செய்தியினைப் பாண்டியர் செப்பேடுகளும் உறுதி செய்கின்றன.

கி.பி. 860இல் மதுரை சிங்காதனத்தை அலங்கரித்தவன் ஷ்ரீ மாற ஷ்ரீ வல்லவனின் மகனே ஆவான். இவன் தந்தையோடு முரண் பட்டவன். சிங்களவரின் துணைக்கொண்டு அரசைக் கைப்பற்றியவன். தன் தந்தை போர்க்களத்தில் சிங்களவர்களால் கொல்லப்படுவதற்கும் காரணமானவன். இம்மகன் யார் என்பதை பின்னால் பார்ப்போம்.

பாண்டியர் செப்பேடுகளின்படி ஷ்ரீமாற ஷ்ரீவல்லபனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்ததவன் சடையவர்மனாகிய வர குணன் மகாராஜன். இவனை இரண்டாம் வரகுணன் என்று சரித்திர ஆய்வாளர் அழைப்பர். இவனது தம்பியின் பெயர் சடையவர்மன் பராந்தகன் வீரநாராயணன் என்பதாகும். அண்ணனும் தம்பியும் தங்கள் பாட்டனார் முதலாம் வரகுணனான நெடுஞ்சடையன் பராந் தகனின் பெயரைத் தரித்துள்ளனர் என்பது ஈண்டு நோக்கத்தக்கது.

இரண்டாம் வரகுணனின் நான்கு கல்வெட்டுக்கள் வானிலைக் குறிப்புக்களைக் கொடுக்கின்றன. அவைகளின் காலத்தைக் கீழே காணும் பட்டியலில் காணலாம்.

தலைவாயில்

மூன்றாம் திருமுறை - நால்வர் காலம் - தொடர்ச்சி...|  13 |