தக்கனுடைய மேம்பட்ட மனிதத் தலையும், வேள்வித்தலைவனுடைய வலிய தலையும், தாமரை மலரில் உள்ள நான்கு முகத்தவனாகிய பிரமனுடைய ஐந்தாம் தலையும், ஒரு சேரத் துண்டமாகி உருளுமாறு ஒளி பொருந்திய அழகிய புருவத்தை நெறித்து வெகுண்ட, அழித்தற்றொழில் உடையவனே! சங்குமணிகள் மேலே அணியப்பெற்ற புலித்தோலை ஆடையாக அணிந்து, அம்மணிகளும் தோலாடையும் பலபடியாக அசையுமாறு பொன்னம்பலத்தில் ஆடும் அழகனே! எத்தகைய தவ வலிமை உடையவரும் தம் முயற்சியால் அணுகமுடியாதபடி உள்ள உன்னை உன் அடியவனாகிய நான் தொடர்ந்து வருமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.
இத்திருப்பாட்டின் முதல் இரண்டடிகளுட் போந்த பொருளை,
தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ
(தி.8 திருச்சாழல் - 5)
எனவும்,
நாமகள் நாசி சிரம்பிர மன்பட (தி.8 திருவுந்தியார் - 13)
எனவும் திருவாசகத்துள்ளும் போந்தமை காண்க. `எச்ச வன்தலை` எனவும் பாடம் ஓதுப. புருவம் நெறித்தருளிய என்றது, `வெகுண்ட` என்றவாறு. `புலித்தோல் ஆடைமேல் அக்குஅணி ஆடஆட ஆடும் சொக்கன்` என்க. அக்கு அணி - எலும்பு மாலை. சொக்கன் - அழகன். தொடர்தல் - இடை விடாது பற்றுதல்.