திருநீற்றை அணிந்த செந்நிறமான பவளமலை போல்பவனே! நிலைபெற்ற நெற்றிக்கண்ணை உடைய, நெருப்பின் நிறத்தினனே! பல்வேறுவகைப்பட்டனவாய் வரிசையாக அமைந்த இவ்வுலக இன்பங்களே வடிவானவனே! முத்தி இன்பம் தரும் வெள்ளம் போல்பவனே! மேருமலையை வில்லாக வளைத்த வீரனே! கங்கையை அணிந்த சடையை உடைய, எங்களுடைய வியக்கத்தக்க கூத்து நிகழ்த்துபவனே! அழகிய பொன்னம் பலத்து அரசே! காளையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உயர்த்திய, எம்மை அடக்கி ஆள்பவனே! உன்னை, அடியவனாகிய நான் கூடுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.
நீறு அணி பவளக்குன்றம், நெற்றிக்கண் உடையதோர் நெருப்பு என்ற இரண்டும் இல்பொருள் உவமைகள். நின்ற - நிலை பெற்ற. `நின்ற நெருப்பு` என இயையும். நெருப்பு என்றது, அஞ் ஞானத்தால் அணுகலாகாமைபற்றி, வேறு அணி புவனபோகம் - வேறு பட்ட நிரையாகிய உலகங்களில் உள்ள நுகர்ச்சிகள். யோகம் என்றது, `முத்தி` என்னும் பொருட்டாய் அந்நிலையில் விளையும் இன்பத்தைக் குறித்தது; எனவே, இவ்விரண்டாலும், இறைவன் பந்தமும், வீடுமாய் நிற்றலைக் குறித்தவாறாதல் அறிக. அற்புதம் - வியப்பு; புதுமை. `அம் பொன்னால் செய்த` என மூன்றாவது விரிக்க; தூயசெம் பொன்னினால் - எழுதி மேய்ந்த சிற்றம்பலம் என்று அப்பரும் அருளிச்செய்தார். இசைதல் - கூடுதல்.