அடியவர்களுக்காக அவர்கள் விரும்பிய வடிவம் கொள்பவனே! மேம்பட்ட தேவர்களின் தலைவனே! பண்புகளும் வடிவங்களும் இல்லாமையையே பண்பாக உடையவனே! காலத்தை உன் வயத்தில் அடக்கி இருப்பவனே! கங்கையின் தலைவனே! எங்களுக்குத் தலைவனாக அமைந்தவனாய்க் காலனுக்குக் காலனாக இருப்பவனே! மன்மதனை அழித்தவனே! விடத்தையே அமுதம் போல உண்டு, கூத்தாடும் இடத்தைப் பொன்மயமான கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே! உலகமே வடிவானவனே! தன்னுணர்வு இல்லாத அடியேன் பெரிய தவத்தை உடைய உனக்குத் தொண்டனாகி உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.
கோலம் - உருவம். குணம் குறி இறந்ததோர் என்பது, தாப்பிசையாய் இதனோடும் இயையும். குணம் குறிகள், ஆண்மை பெண்மைகளை அறிய நிற்பவனவாம். உருவமும், குணமும் உடைய வனை அவையேயாகவும், காலத்தின்கண் ஒற்றித்து நிற்பவனை, `காலம்` எனவும் கூறியவை, பான்மை வழக்கு. கோலமே முதலிய மூன்றாலும் உலகின் வேறுபட்ட தன்மையைக் கூறியவாற்றால், அத்தன்மையானே யாவர்க்கும் முதல்வனாதலைக் குறிக்க, மேலை வானவர் கோவே என்றார். இது, காலமே என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்கற்பாலது. `அமுதாக` எனவும், `கோயிலாக` எனவும் ஆக்கச்சொற்கள் வருவிக்க. ஞாலமே - உலகத்தில் அதுவாய்க்கலந்து நிற்பவனே. `தமியேன் தவம்` என இயையும். நற்றவம், சரியை, கிரியா யோகங்கள். தவத்தாயை - தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை. நணுகுதல் - சார்தல்.