பெருமையாய் உள்ள நிலையிலேயே சிறுமையாக வும், பெண்ணாய் இருக்கும் நிலையிலேயே ஆணாகவும் இவ்வாறு உலகியலுக்கு வேறுபட்டவனாய் இருந்து என்னுடைய பிறப்பு இறப்புக்களைப் போக்கிய பெரிய ஞானவடிவினனே! கருமையாய் இருக்கும் நிலையிலேயே வெண்மையாய் இருப்பவனே! கயல்மீன் போன்ற கண்களையுடையவளாய், இமயமலைத் தலைவனான இம வானுடைய மகளான உமாதேவிக்குப் பற்றுக்கோடாக உள்ளவனே! மேம்பட்டனவாகிய நான்கு வேதங்களும் உன்னை உள்ளவாறு அறியமுடியாமல் பேரொலி செய்து புகழும் தலைவனே! அம்பலத்தில் காட்சி வழங்கும் அமுதே!நீ ஒருவனாகவே இருந்து எல்லாப் பொருள் களிலும் அந்தர்யாமியாய் ஊடுருவி நிற்கும் உன்னை அடியவனாகிய யான் பலவாறு என்சொற்களால் புகழுமாறு நீ என்னுள் இருந்து செயற்படுவாயாக.
பெருமையின் - பெருமையாய் உள்ளநிலையிற்றானே. கருமையின் ஒருமையின் என்பவற்றிற்கும் இவ்வாறு உரைக்க. ஆய் என்றதனை, `சிறுமை` என்றதற்கும் கூட்டுக. வெளி - வெண்மை. களைகண்ணே என்பதில் ணகர ஒற்று விரித்தல். களை கண் - பற்றுக்கோடு `கொழுநன்` என்பதும் இப்பொருட்டு. மறை என்றது பெயராகலின், சாரியை உள்வழித் தன்னுருபு கெட்டது. (தொல். எழுத்து 157) எனவே, `அருமையையுடைய மறை` என்பது பொருளாயிற்று.