நரசிம்ம மூர்த்தியாய் இரணியகசிபுவினுடைய மார்பை நகத்தால் பிளந்த திருமாலுக்கு அருள் செய்த வள்ளன்மையை உடையவனே! மயக்கமாகிய அஞ்ஞானத்தை உடைய அசுரர்கள்தம் இருப்பிடமாகக் கொண்ட மூன்று மதில்களும் வெந்து சாம்பலாகுமாறு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இவர்ந்த, காளையை வாகனமாக உடைய வீரனே! வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனுடைய செருக்கு அழியுமாறு மேம்பட்ட கயிலைமலைக்கீழ் அவனை வருத்திய பொன்னம்பலத்து அரசனே! விடம் தங்கிய நீலகண்டத்தையுடைய எங்கள் அழகனே! உன்னைத் தொண்டனாகிய அடியேன் விரும்புமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.
மடங்கல் - சிங்கம்; நரசிங்கம். கனகன் - `இரணிய கசிபு` என்னும் அசுரன். இவ்வடி, சரப வரலாற்றைக் குறித்தல் கூடும். மருளார் - மருட்சியையுடையவரது. திரிபுரத்தசுரர் துர்போதனையால் மயங்கிச் சிவநெறியைக் கைவிட்டவராதல் அறிக. வைதிகத் தேர் - வேதத்தைக் குதிரையாகக் கொண்ட தேர். ஏறு சேவகன் - மிக்க வீரத்தை யுடையவன். அரக்கன் - இராவணன். அரட்டு - செருக்கு. இரு வரை - பெரிய மலை. `அருட்டிரு வரைக்கீழ்` எனவும் பாடம் ஓதுவர். விடங்கன் - அழகன்.