பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
சிவபெருமான், திரிபுரத்தை நகைத்தெரித்தமையால், `சிலை தொட்டாய்` என்றது போர் செய்வாரது தன்மை பற்றி வந்த பான்மை வழக்கு. `தேவரும், மக்களும் ஆகிய எல்லார்க்கும், அவர் வேண்டியவற்றை அருள்செய்யும் அருளாளனாகிய, உனக்கு ஆளாகி யதனை மறுத்துரைத்தேன்` என இரங்கிக் கூறுவார், திரிபுரம் எரித்தமையையும், பகீரதனுக்காகக் கங்கையைத் தாங்கினமையையும் எடுத்தோதியருளினார். சொல்லுவாரது தேற்றாமை, சொன்மேல் ஏற்றப் பட்டது. `செக்கர்` என்பது ஆகுபெயராய், சடையைக் குறித்தது.