தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.
`நினைப்பேன்` என எதிர்காலத்தால் அருளற் பாலதனைத் திட்பம்எய்துவித்தற்பொருட்டு, `நினைக்கின்றேன்` என நிகழ்காலத்தால் அருளினார். `பொன்னே` முதலிய ஏகார எண்களின் இறுதியில் தொகுக்கப்பட்ட, `இவற்றை` என்பதனை விரித்து, `உந்தி` என்பதனோடு முடிக்க. `பொருது` என்பதற்கு, `கரை` என்னும் செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது.
இத்திருப்பாடல், `இனிப் பிழைசெய்யேன்` என்றுகூறி, முன்பு செய்த பிழையைப் பொறுக்குமாறு வேண்டி அருளிச்செய்தது.