மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் `அடியவனல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
இத்திருப்பாடல் தம்மைப்பிறர் போலவும், இறைவனைப் படர்க்கையிலும் வைத்து அருளிச் செய்த திருக்கடைக்காப்பு. இதனையும் முன்னைத் திருப்பாடல்களோடு ஒத்த முறையிலே அருளிச் செய்தார். `இறைவனுக்கு முன்பே ஆளாகிய யான், அவ்வாறு ஆளாகாத பிறர்போல, `ஆளல்லேன்` என முரணிக் கூறியது பொருந் துமோ` எனப் பிறரை நோக்கி வினவித் தம் செய்தியைப் புலப்படுத்தும் முகத்தால், `நீவிரும் எனது வரலாற்றை உணர்ந்து, இப்பதிகத்தை ஓதின், அவனுக்கு ஆளாகி உய்வீர்` என அருளுதற் பொருட்டு.