கரிய யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தியவன். விருப்பம் மருவிய பொலிவினை உடைய காஞ்சி நகரத்தின் ஏகம்பம் என்ற திருக்கோயிலை உகந்து எழுந்தருள்பவன். அடியவர்களை அண்மித்திருப்பவன். தம் முயற்சியால் அறிய முயலும் தேவர்களுக்கு அளவிட முடியாதவன். நிலவுலகத்தவரும் வானுலகத்தவரும் தன்னை வணங்குமாறு கூத்தினைப் பயில்கின்ற ஒளி உருவன் ஆகி எண்ணற்ற திருநாமங்களை உடையவன். அத்தகைய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
ஆரேனும் - உலகியலில் குலம் முதலியவற்றால் எத்துணை இழிந்தவராயினும் ; இவர்கட்கு இறைவன் அணியனாய் நின்றமையை உண்மை நாயன்மார் பலரது வரலாற்றில் காண்க. ` ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் - ஆரேனுங் காணா அரன் ` என்பது. ( திருக்களிற்றுப்படியார் - 15.) அடியவர் - உடல் பொருள் ஆவி எல்லாவற்றாலும் தம்மை இறைவற்கே யுரியவராக உணர்ந்தொழுகுவார். அளவிலான் - வரையறைப் படாதவன் ; அகண்டன் என்றபடி. ` நடம் ` என்பது ` நட்டம் ` என விரிக்கப்பட்டது. பரஞ்சுடர் - மேலான ஒளி. ` ஒளி என்பது அறிவே ` என மேலும் ( தாண்டகம் -1) குறிக்கப்பட்டது. ` பெயர் ` என்பது, ` பேர் ` என மருவிற்று. காமரு - விரும்பப்படுகின்ற. பூ - அழகு.