ஒப்பற்ற துணைவன், அடியவர்களின் துயரைப் போக்கும் அமுதம் போன்றவன். பரந்த இவ்வுலகில் பிறப்பெடுத்த பின்னர் உடன்தோன்றும் துணைவர், ஏனைய சுற்றத்தார், செல்வம் இவற்றிலுள்ள பாசத்தை நீத்து, பெரியபுலன்களின்மேல் செல்லும் மனத்தை அடக்கி, மகளிரோடும் படுக்கையில் நுகரும் சிற்றின்பப் பயனை அடியோடு நீக்கி, ஏனைய தெய்வங்களோடு பொதுவாக நினைப்பதனை விடுத்துத் தன்னையே விருப்புற்று நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
அருந்துணை - ஒப்பற்றதுணை. அருமருந்து - கிடைத்தற்கரிய மருந்து ; அமிழ்தம். ` தோன்றி ` என்பது ` தோன்றிய பின்னர் ` எனப்பொருள்தரும். வரும் துணை - உடன்தோன்றும் துணைவர். பற்று - செல்வம். வான்புலன் - பெரிய புலன்களின் மேற் செல்லும் மனம். புலன்கட்குப் பெருமை கடக்கலாகாமை. தன்னைப் பொதுநீக்கி ` நினையவல்லார்க்கு ` என மாற்றியுரைக்க. பொது நீக்கி நினைதலாவது, கடவுளர் பலருள் ஒருவனாக நினையாது, அவர் எல்லார்க்கும் தலைவனாக நினைதல். மெய்யுணர்வு வாய்க்கப் பெற்றார்க்கன்றி அது கூடாமையின், ` வல்லோர்க்கு ` என்று அருளிச் செய்தார். பெருந்துணை - யாதொன்றற்கும் வேறு துணை நாட வேண்டாது, எல்லாவற்றிற்கும் யாண்டும் உடனாய் நின்று உதவும் துணை. இறைவன் அத்தகையோனாதலை, அமணர் இழைத்த தீங்குகள் பலவற்றினும் நாவரசர் கண்டருளினமையை நினைவு கூர்க.