பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன், தேவர்கள் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன். அலைகள் மடங்கி வீழும் கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற காய்கதிர், மதியம், பிறவும், ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
மூவா மருந்து - மூப்பாகாமைக்கு ஏதுவாய மருந்து ; அமிழ்தம். மறிகடல் - அலைவீசும் கடல். குலவரை - சிறந்த மலை ; இவை எட்டுத் திசைகளில் திசைக்கு ஒன்றாகச் சொல்லப்படுவன. தாரகை - விண்மீன் ; திரிசுடர்கள் - திரிகின்ற சுடர்கள் ; இரண்டு சூரிய சந்திரர்.