யானைத் தோலை மேலாடையாக இறுக்கி உடுத்து, தன் கழல்களின் ஒலி ஏனைய இயங்களின் ஒலியோடு கலந்து ஒலிக்க, கையில் தீயை ஏந்தி, பெருமை வளர்கின்ற பருத்த தோள்களை மடித்து அவைகள் அசையுமாறு, பிறைமதியைச் சடையில் அணிந்து மானின் பார்வை போன்ற பார்வையளாகிய மேம்பட்ட சிறந்த ஒளியை உடைய முகத்தவளாகிய உமாதேவி விரும்பிக்காணுமாறும் தேவர் கூட்டம் தலை தாழ்த்து வணங்குமாறும் திருக்கூத்தாடுகின்ற மேம்பட்டவனாகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
இத்திருத்தாண்டகம், இறைவரது ஆடற் சிறப்பின்கண் ஈடுபட்டருளிச் செய்தது. கருமான் - யானை. ` வருதோள் ` எனவும், ` அருமுகம் ` எனவும் இயையும். மானம் - பெருமை. ` மடித்து ` என்பது. ` மட்டித்து ` என விரிக்கப்பட்டது. வீக்கி - கட்டி.