எல்லாம் வல்லவன், கங்கையைத் தாங்கிய நீண்ட சடையன். ஒரு பக்கத்தில் காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன். பொருள் அற்றவருக்கும், தாங்குவார் இல்லாது வருந்துபவருக்கும், அருளுபவன். தன்னைத் தவிர வேறு எவரும் தனக்கு ஒப்பில்லாதவன். தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன். திருவாரூரிலும் உகந்து தங்கியிருப்பவன் ஆகிய எம்பெருமானை நாம் எல்லாருக்கும் மேலானவன் என்று அறிந்தோம். ஆதலின் அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
கற்றான் - எல்லாம் வல்லவன் ; இஃது இயற்கையைச் செயற்கைபோலக்கூறும் பான்மை வழக்கு. இனிக் கல் தானை எனப்பிரித்து அடையாக்குவாரும் உளர். கல்தானை - கல்லாடை ; காவியுடை. வலஞ்சுழி சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. உம்மை, ` தில்லையேயன்றி ` என எச்சஉம்மை. ஆரூரும் என்புழியும் இவ்வாறே கொள்க.
அற்றார் - பொருளற்றார் ; அலந்தார் - களைகண் இல்லாதார் ; இவர்க்கு அருள்செய்தலைக் குறித்தருளியது, இம்மை நலங்கள் அருளுதலை அறிவுறுத்தற் பொருட்டு. ` அறிந்தோம் அன்றே ` என்பதனை இறுதிக்கண்வைத்து, ` அதனால் ` என்பது வருவித்துரைக்க. ` மற்றாருந் தன்னொப்பார் இல்லாதான் ` என்றருளியது, தனக்குவமை இல்லாதான் என்றருளியவாறு. கடவுட்பொருள் இரண்டாவது இல்லை என்றவாறு. பலராகக் கூறப்படும் கடவுளர் அனைவரும் உயிர்களாதலை விளக்குதற்கு, ` வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்பெற்றானை ` என்றருளிச் செய்தார். ` ஏத்தும் பெற்றானை ` என்பது பாடமாயின், பெற்றத்தான் ( இடபத்தை யுடையவன் ) என்பது குறைந்து வந்ததென்க.