எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையாகிய துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ? தில்லைமாநகரிலே திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாததொர் அடிமைபூண்ட எனக்கு அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யவல்லன அல்ல.
அல்லல் - ஆகாமியமாகிய எதிர்வினை. அருவினை - நுகர்ந்தாலன்றித் தீர்த்தற்கரிய பிராரத்தவினை. தொல்லை வல்வினைத் தொந்தம் - பிராரத்த வினையநுபவம் உள்ள அளவும் உள்ள முயற்சியின் விளைவாய்ப் பருவத்தில் இன்ப துன்பங்களைப் பயக்கத்தக்க இருவினை எனப்படும் சஞ்சிதம். துவந்துவம் - இரட்டை. நல்வினை தீவினை, அறம் மறம், இன்பம் துன்பம் என்னும் இரட்டை களையும் அவைபோல்வனவற்றையும் வடமொழியில் துவந்துவம் என்பர். அது தமிழில் தொந்தம் என்று வழங்குகிறது. ` என்புள்ளுருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பங்களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து முன்புள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே ` ( தி.8 குலாப்.3) என்னும் திருவாசகத்தில் துவந்துவங்கள் தூய்மை செய்தல் சஞ்சித வினையையும், இருவினையையும், ஈடழித்தல் ஆகாமியத்தையும், துன்பங்களைதல் பிராரத்தத்தையும் குறித்தல் காண்க.
` தொண்டன் ` என்பது பாடமாயின், வல்வினையாகிய அடிமை எனக்கொள்க. இருவினை இறைவன் ஆணையின் வரும் என்பது சாத்திரம். பரமுத்தியிலும் ஆன்மா முதல்வனுக்கு அடிமையாதலின் ` எல்லையில்லதோர் அடிமை ` என்றருளிச் செய்தார். ` மீளா அடிமை ` ( தி.7. ப.95. பா.1) என்னும் நம்பியாரூரர் வாய்மொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.