அதிகை... அம்மானே! இறந்தவர் மண்டை யோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும் துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம்.
திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! நீரும் மலரும் புகையும் (பிறவும்) கொண்டு நின்னை வழிபடுவதை மறந்தறியேன். தமிழ் மொழியில் அமைந்த நின்புகழோடு இசை பாடுதலை மறந்தறியேன். நன்கிலும் தீங்கிலும் உன்னை மறந்தறியேன். உன் திருப்பெயரை என் (புல்லிய) நாவில் வைத்துச் சொல்லுதலை மறந்தறியேன். இறந்த நான்முகனார் தலையிலே பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! (அடியேன்) உடலின் உள்ளே மிக்கு வருத்தும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய். அடியேன் வருந்துகின்றேன்.
சலம் - ஜலம். `பூவொடுதூபம்` `தமிழோடிசை` என்பன முறையே அருச்சனையிலும் தோத்திரத்திலும் உள்ளனவாய் உடனிகழ்வன ஆதலின், முதலடிக்கண் வந்த மூன்றனுருபு உடனிகழ்ச்சிப் பொருளவாயின. இருவினையும் பற்றி விளையும் இன்பத் துன்பங்களை நலம் (நன்கு) தீங்கு என்றருளினார். `உன்`, `என்` என்பவற்றின்கண் முறையே இறைமையாகிய மேலுக்கும் அடிமையாகிய கீழுக்கும் உள்ள வரம்பு ஒலித்தல் காண்க.
`மேலுக்கு நீவரம்பாயினை...... கீழுக்கு நான் வரம்பாயினேன்`. (சிவஞான பாலைய - கலம்பகம் 90) உலந்தார் - இறந்தவர்; வாழ்நாள் கடந்தவர். `உக்கார் தலைபிடித்து உண்பலிக்கு ஊர்தொறும் புக்கார்`(தி.4 ப.16. பா.4). `மாண்டார் தம் என்பும்` (தி.4 ப.16 பா.9) என்றதில் உள்ள வரலாறு வேறு.
உடல் வயிற்றைக் குறித்ததுமாம். அலந்தேன் - ஈண்டு நிகழ்வு உணர்த்திற்று. மறந்திருந்த குற்றமும் அதற்குக் காரணமும் பழம் பிறவிகளின் நிகழ்ச்சி. அதனை
`ஏழை மாரிடம் நின்று இரு கைக்கொடுஉண்
கோழை மாரொடும் கூடிய குற்றமாம்
கூழைபாய் வயற் கோழம் பத்தானடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே` (தி.5 ப.65 பா.8)
என்னும் திருக்குறுந்தொகையால் அறியலாம்.