ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக் கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர் யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக.
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை - ஒலித்து நிறையும் நீர் சூழ்ந்த திருவதிகை. அங்குத் (தக்கயாகத்தில்) துன்பம் விளைப்பதில் ஒப்பிலாத யானையின் ஈர்மை பொருந்திய உரித்த தோலைப் போர்த்தாய்! புறங்காடே அரங்கமாகத் திருக்கூத்து ஆடவல்லாய். வீரமுழக்கத்தொடு கயிலைமால்வரையைத் தூக்க முயன்ற அரக்கனான இராவணனை அம்மலையின் கீழ் அகப்பட்டு நசுக்குறச் செய்து, அவனது சாமகானத்தைக் கேட்டுத் திருவுளம் இரங்கித் திருவருள் அளித்த அதனை ஈண்டு எண்ணுகிலாய். (எண்ணுவையேல்) வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் மற்று யாது நிகழ்ந்தாலும் என் துன்பங்களானவற்றை விலக்கிடுவாய். எண்ணாமையால் விலக்கியிடுகிலாய் எழுந்தாலும் என்க. உம்மை தொக்கது.