மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே, விகிர்தனே, வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே, திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திருநடங் கொள்ளும் இடமாக விரும்பியவனே, நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம்.
வேயின் - மூங்கில் போல. ஆர் - பொருந்திய பணைத் தோளியோடு - திரட்சியாகிய தோளையுடையவளாகிய காளியுடன், ஆடலை வேண்டினாய் - ஆடுதலை விரும்பியவனே ! ( தோள் + இ ; இகரம் பெண்பால் விகுதி ) உண்ண இனித்து மரணத்தை யொழிக்கும் அமிர்தம்போல் ` சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும் பெருமான் ஆனவனே !`
தீயின் ஆர்கணையால் - தீயாகிய அம்பினால், திரிபுரம் எரித்த அம்பின் நுனிப் பாகம் தீயாயிருந்தமையால், தீயினார் கணை எனப்பட்டது. அம்பின் அடிப்பாகம் காற்று ; நுனி தீ ; அம்பு திருமால் என்பவற்றை,
` கல்லானிழற் கீழாய்இடர் காவாயென வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
வல்லாய்எரி, காற்று, ஈர்க்கு, அரி, கோல், வாசுகி, நாண்கல்,
வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே `
( தி.1 ப.11 பா.6)
என்னும் இடத்தில் காண்க. மேயினாய் - மேவினாய். கழலே - திருவடிகளையே, எய்துதும் - அடைவோம்.