திருமேனியில் தோய்ந்த அழகிய கொன்றை மாலையை யுடையவனே ! தீ ஏந்திய திருக்கையனே ! தேவ தேவனே ! அம்பிகை பாகமுடைய பகவனே ! பலி ஏற்றுத் திரியும் பாண்டரங்கக் கூத்தனே ! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்றவனே ! மழுவாளை ஏந்தியவனே ! நச்சுத் தீயையுடைய அரவக் கச்சணிந்த திருவரையினனே ! உன் அடியவரை வினைகள் அடையா. ( ஆதலின், உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை இல்லை என்றவாறு.)
ஆகம் - மார்பில், தோய் அணிகொன்றையாய் - தோயும் அழகிய கொன்றை மாலையை யுடையவனே ! அனல் அங்கையாய் - உள்ளங்கையில் அனல் ஏந்தியவனே ! அமரர்க்கு அமரா - தேவ தேவனே ! ( அமரர் - தேவர் ; மரணம் இல்லாதவர்.) பகவா - பகவனே ! ஐசுவரியம், வீரியம், ஞானம், புகழ், திரு, வைராக்கியம், என்னும் இவ்வாறு குணங்களையும் உடையவன் பகவன். அது சிவபெருமானையன்றி, மற்றெவரையுங் குறிக்காது. மாகம்தோய் - ஆகாயத்தை அளாவிய. பொழில் - சோலை, மல்கு - வளம் நிறைந்த, அழல் நாகம் - விடத்தையுடைய பாம்பு. தோய் - சுற்றிய, அரையாய் - இடுப்பையுடையவனே ! ( அரை - அளவையாகு பெயர் ) உன் அடியவரை வினை நண்ணாதனவாகும்.