நீல நிறத்தைப் பொருந்திய கரிய திருக் கழுத்தினர் ( திருநீலகண்டர் ). அழகிய நெற்றிக் கண்ணினர். திரிசூலம் பற்றியவர், காடுடைய சுடலைப் பொடி பூசியவர், சடையினர், சீலம் மிக்கவர் ஆகிய தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது நினைந்து சேர்தலால். திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே ! நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய். உன்னுடைய காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம்.
இத்திருப்பாடல், தில்லைக்குச் செல்லுங்கால், திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு எதிர்வந்து தில்லைவாழந்தணர்கள் சிவகண நாதர்களாகத் தோற்றம் அளித்த உண்மையை உணர்த்திற்று.
நீலத்து - நீலமணியைப் போல், ஆர் - பொருந்திய, கரிய - கருமையையுடைய. நீலம், கறுப்பு, பச்சை இவற்றுள் ஒன்றைப் பிறிது ஒன்றாகக் கூறும் வழக்கு உண்மையை ` பச்சைப் பசுங் கொண்டலே ` ( மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். பா.1) என்று வருவதாலும் அறிக. மிடற்றார் - கண்டத்தையுடையவர், பற்று சூலத்தார் - கையில் சூலம் பற்றியவர், சேர்தலால் பற்றுக் கோடாக, நாங்கள் சேர்ந்தமையாலும், உன காரணம் கூறுதும் - எல்லாவற்றிற்கும் நீயே காரணனாம் தன்மை களைக் கூறுவோம். கோலத்தாய் அருளாய் - அழகையுடையவனே, உன் சிவந்த திருவடி மலர்களைத் தொழ எமக்கு அருள்வாயாக. சேவடி ( யைத் ) தொழ அருளாய் எனக் கூட்டுக. ` அவனருளாலே அவன் தாள் வணங்கி ` என்றல் கருத்து. நீலகண்டம், முக்கண், சூலம், திருநீற்றுப் பூச்சு, வார்சடை இக்கோலத்தோடும் தில்லைவாழந்தணரைத் தாம் கண்டமை குறித்தருள்கிறார். இதனைச் சேக்கிழார் பெருமான் ` நீடும் திருத்தில்லை யந்தணர்கள் நீள் மன்றுள் ஆடும் கழற்கு அணுக்க ராம்பேறு அதிசயிப்பார் ` ( பெரிய. திருஞா. பா - 168) என்று தொடங்குவது முதலிய பாடல்களில் குறித்தருள்வது காண்க.