நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே, விடையேறியவனே, நெற்றிப் பட்டம் அணிந்தவனே, பூத கணங்கள் இசை பாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே, ( அறிதற்கரிய ) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே ! இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ ? கூறியருள்க.
பாரிடம் - பூதம். நட்டம் - நடனம். நவிலுதல் - பழகுதல். ` நட்டம் பயின்றாடும் நாதனே ` மறையோர் - வேதங்களை ஓர்கின்ற. ஓர் நல்லவர் - மறையோராகிய நல்லவர் எனலுமாம் : நல்லவர்,. சரியை கிரியா யோகங்களைச் செய்து பெறும் நன்னெறியாகிய ஞானத்தைப் பெற்றவர்.
கொட்டம் - நறுமணம் ` கொட்டமே கமழுங் கொள்ளம் பூதூர் ` எனப் பின்னும் வருதல் காண்க. நுதற் பட்டம் நெற்றியில் அணியும் ஓர் அணி. ` பட்ட நெற்றியர் நட்டமாடுவர் `. வீரர் அணிவது ` நுதலணியோடையிற் பிறங்கும் வீரப் பட்டிகை ` என்பதாலறிக . இசை பாடுவ - பாரிடம் ஆ ( க ) - பாரிடம் இசை பாடுவன ஆக. பாரிடம் - பூதங்கள். நட்டம் நவில்வாய் - திருக்கூத்தாடியருள்வீர். ` ஆளும் பூதங்கள் பாடநின்றாடும் அங்கணன் என வன்றொண்டப் பெருந்தகையார் அருளிச் செயலும் காண்க. நல்லவர் - நல்லொழுக்கின் தலைநின்றவராகிய தில்லைவாழந்தணர். நன்னெறியாகிய ஞானத்தை யுடையாருமாம். இவை மேவியது என்னை கொலோ ? - என்று வினவுகின்றார், அவை பெண் விருப்புடையான் போற் பெண்ணோடு கூடியிருத்தலும், ஊர்தியாக ஏறு ஏறுதலும், அணிவிருப்புடையான் போல் நெற்றிப் பட்டம் அணிந்தமையும், கண்டார் அஞ்சத்தக்க பூதங்களோடு கூடியாடுதலும், உலகில் எத்தனையோ தலங்களிருக்கத், தில்லைச்சிற்றம்பலத்தை இட்டமாக விரும்பியதும் அறிக.