இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண் குரங்குகளோடு கூடி, மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும் கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் எழுந்தருளியிருந்து, செலுத்தத்தக்க மாலாகிய இடபத்தின் மேல் காட்சிதரும் அடிகளே! இராவணனின் தருக்கினை அழித்து உடன் அவனுக்கு அருள் வழங்கிய ஆக்கத்திற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
வருக்கம் - இனம், கடுவன் - ஆண் குரங்கு, மந்தி - பெண் குரங்கு, தரு - மரம், மாந்திய - தின்ற, துரக்கும் - துரத்தும். (பிறவினை) துரந்த, துரந்து எனல் தன்வினையாட்சி. அருகிய வழக்கு. வருவீராகிய அடிகேள் என்று விளித்து, இராவணனது ஆற்றலை அழித்து அருள்கொடுத்த ஆக்கத்தைப் பற்றி இதில் வினாவினார்.