நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து கொள்ளுதற்குத் திரியும் பிளந்த வாயை உடைய நாரைப் பறவைகள், நாள்தோறும், பல இடங்களிலிருந்தும் வந்து தங்கும் பொழில்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், துள்ளுகின்ற மான் கன்றை ஏந்திய செங்கையை உடைய சிவபிரானே! பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சிவந்த சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய வியத்தகு செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து அலையும் நாரைகள் நாள்தொறும் சோலையில் தங்கும் வளமுடையது சீகாழி. நாரை பகுந்த (பிளந்த)வாய் உடைமையால் பகுவாயன புள்ளு என்றார். `வெண் குருகும் பகுவாயன நாரையும் திரைவாய் இரைதேரும் வலஞ்சுழி` (தி.2.ப.2.பா.2) என்றது காண்க. உணவும் இரையும் ஒன்றல்ல என்பதை `இழிவறிந்துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்` (குறள். 946) என்றதனால் அறிக. செஞ்சடைமேல் நீர்ப்பெருக்கை வைத்த வியப்பைச் சொல்வீர் என்று துள்ளுகின்ற மான்கன்றை ஏந்திய செங்கையையுடைய சிவபெருமானை நோக்கி வேண்டுகின்றார். காட்டில் இருக்கத்தக்க மானைக் கையிலும் கையில் இருக்கத்தக்க (கமண்டல) நீரைச் சடைக் காட்டிலும் ஏந்தியது வியப்பு. இதில் கங்கையைத் தாங்கிய ஆற்றலை வினாவினார்.