பாயிருள்... ரூபம் பரந்த இருளாகிய கேவலம் அதீதமாய் அவ்விடத்துண்டாகிய ஞானத்தைத் தானென்று காணுதல் ஆன்ம ரூபமாம் ; நீயும்... தான் நீ கண்ட ஞானத்துக்கே செயலெனக் கண்டு உனது செயல் சற்றேனுமின்றி நீயும் அந்த ஞானமுமாய் நிற்றல் ஆன்ம தரிசனமாம் ; போய்... வாறே அந்தச் சிவஞானத்தோடு ஒத்து நில்லாது பரையிற் போய் இவன் தன்மையாகிய போதப் பதைப்புக் கெட்டு அவன் தன்மையாய் அதில் அழுந்திச் சிவமெனும் பேறுபெற்றோமென்னும் பரமானந்தப் பொருளிற் போய்த் தரிசித்து அவ்விடத்துத் தான் தோன்றாது அந்தப் பரமானந்தப் பொருளோடு கூடி அதுவாய் விடில் ஆன்ம சுத்தியாமென்று சிவாகமங்களில் விதித்தவாறு இவ்வாறாம்.
‘பாயிருள் நீங்கி’ என்றது தத்துவங்களெல்லாம் நீங்க வருந் தன்னுண்மையாங் கேவலத்தைச் செம்பிற் களிம்பு போல் ஒன்றாய் நீரில் நிழற்போல் தோன்றாது இன்றளவும் நின்றது இதுவோவென்று தரிசித்து அதீதமாவதை. ‘நீயும்நின் செயலொன் றின்றிநிற்றல்’ என்றது ஞானசொரூபியாய் நின்ற நீயும் அந்த ஞானத்தோடொத்து உனது போதம் சற்றேனுமின்றி நிற்குமதை. ‘போய் இவன் தன்மை கெட்டு’ அவன் தன்மையா யென்றது தற்றெரிசனம் பண்ணிநின்ற உன்னிடத்திலே, மலரும் பக்குவம்வர மேலே மணம் பிரகாசித்தாற் போல, உன்னறிவிலே பிரகாசித்து நீ யொத்து நின்ற ஞானத்தை இதுவாகிலும் நமக்கு அறிவித்ததென்று தரிசித்துக் கண்பெற்றார் கண்ட கதிரொளிபோல மற்றொன்றையுங் காணாது உள்ளும் புறம்பும் இந்த ஞானம் பூரணமான பரையையும் தரிசித்துக் கண்ணிற் கதிரோன் கலந்தாற்போல தெரிசித்த பரையிலே வியாத்தமாய், விண்ணின் விகற்பமற மேவிய கால் நின்றது போலவும் திரையற்ற நீர்போலவும் விகற்பமற ஒன்றாய் நிற்கும் பராயோகமாய், அப்படித் திரையற்ற நீர்போல நின்று தெளிவு பெற்றுப் பராபோகமாய், உண்மை ஞானப் பயனாந் தசகாரியம் ஒன்றுமில்லாத சுழுத்தியில் உன்னைவிட்டு நீங்காமல் நிற்க நீ கண்ட பரை பஞ்சகிருத்தியஞ் செய்து உன்னை மோட்சத்திலே விடவேண்டுமென்று விரும்பின அதன் விருப்பத்தை மிகுதியும் நீ பொருந்தினதால் அதைப்போல நாமும் பஞ்சகிருத்தியஞ் செய்ய வேண்டுமென நின்ற சுத்த பராயோகமாய், அந்தச் சுழுத்தியிலுள்ள பரையினது விருப்பத்தி லழுந்தின மயக்கந் தீர்ந்து கண்ணுஞ் சூரியனும் போல உன்னையும் பரையையுங் கண்டு பரையினது கிரியையைப் பொருந்திப் பணிசெய்து நிற்கும் முத்திச் சாக்கிரமாய், சிவனையன்றிப் பரைசெய்யமாட்டாத பஞ்ச கிருத்தியத்துக்குப் பரைக்குக் கருவியாயிருந்த நமக்குப் பணிசெய்வதற்கும் ஒரு செயலுண்டோவெனப் பணிசெய்யாது விட்டுச் சாக்கிரா தீதமாய், இப்படிப் பணியையும் பணியறுதியையும் பாராது பஞ்ச கிருத்தியம் பண்ணுதற்குப் பரைக்குமேலும் ஒரு முதலுண்டோ அதெப்படி யறியப் போகிறோமென்று இச்சை கிரியை ஞானம் மூன்றையும் விட்டுப் பரையாதீதமாய், ஒன்றுங்குறியாது திகைக்குஞ் சுத்தாவத்தையிற் போய் இவன் தன்மையாகிய போதப் பதைப்பற்றுச் சோகம் பிறந்த போது சிவன் தனது தன்மையாஞ் சுகந்தோன்றுவதை. ‘பொருளிற் போய் அங்குத் தோன்றா தாய்விடில்’ என்றது இந்தச் சுகமும் சிவனுக்கு ஓர் இன்பசத்தியென்று கண்டு அது நீங்குஞ் சுகாதீதத்தின் உண்மையாஞ் சிவத்தைக் கிட்டி அதனாலே வரும் பரமானந்த வெள்ளப் பொருளிற் போய்த் தரிசித்து அவ்விடத்துத் தான் தோன்றாது அந்தப் பரமானந்தப் பொருளதுவாய்விடும் பரமானந்த யோகத்தையென விரித்துணர்ந்து கொள்க.
நீயும் நின் செயலொன்றின்றி யென்னும் உம்மை உயர்வு சிறப்பின் கண்ணும், நிற்றலே யென்னும் ஏகாரம் தேற்றத்தின் கண்ணும் வந்தன. இவன் தன்மைகெட்டு அவன் தன்மையாயெனச் சொல்லெச்சமாய் வருவிக்கப்பட்டது.